Mar 17, 2020

மலையன்ன துன்ப வகைத்து (பஃறாழிசைக் கலிப்பா)

பொன்னன்ன வண்டே!நீ பூமோதி விளையாடி
என்னவளை எப்போதும் என்னினைவில் ஏற்றுகிறாய்!
இன்னகையள் எனைத்துயரில் ஏன்விட்டாள்? உரையாயோ?

ஈர்க்குச்சி போலுடலம் இளைத்தவளின் இன்னிதயம்
போர்க்குணத்த தாயிருக்கப் பொடியானேன் கணப்பொழுதில்

நோக்குகையில் நோக்கியெனை நோக்கமுள பார்வையினால்
தாக்கியழித் தாளவளே! தாங்குவனோ? நோய்கொண்டேன்

படுத்துறங்கப் போனாலும் பாய்விரிக்க மறந்தேனே
விடுத்தெழுந்து போனாலும் வீதிநிலா விரட்டுவதேன்?

உண்டுயிர்க்கும் எண்ணமிலா உடல்கிடக்கச் செய்தனளே
பெண்டுயிரை எண்ணியெண்ணிப் பேதையனாய் அலைவேனே

மூளையிலே எண்ணங்கள் மூளையிலான் என்றென்னை
வேளைதொறும் வைகிறதே! வேலையிலான் வேறென்றே!

முனிந்துலகம் மறந்தேனே முன்னின்ற காரிகையாள்
கனிந்துலகம் எனநின்றாள் எனநினைந்தேன் பொய்யாமோ?

எனவிங்குப்

புலம்பும் படியெனைப் புல்லனாய் ஆக்கிக்
கலங்கும் உளமொடு கைவிட் டனளே
மலையன்ன துன்ப வகைத்து.

No comments:

Post a Comment