செந்தமிழ்ச் சீரே உன்றன்
சீரடி போற்று கின்றேன்!
முந்திடும் பாவில் நிற்பாய்
முன்வினை யோடச் செய்வாய்!
அந்தமில் அமுத வூற்றே
அறிவினுள் இனிக்குந் தேனே!
வந்திடும் இன்னல் நீக்கி
வண்டமிழ் விதைப்பாய் தாயே!
என எப்போதும் தமிழன்னையின் நினைவாகவே இருப்பவர், பள்ளியில் மாணவர்களுக்குக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறு கொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர், மிகச் சிறந்த மரபு பாவலர், பாவலர் மா.வரதராசனார் மீதும் பைந்தமிழ்ச் சோலையின் மீதும் அளவில்லாப் பற்றுடையவர், பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் திரு அர.விவேகானந்தன் அவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தைச் சேர்ந்த அவர் 1982-ஆம் ஆண்டு நா.ரங்கநாதன் – முனியம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். கல்வியின் மீது தீராத காதல் கொண்ட இவர் முதுகலைத் தமிழும் (M.A.), ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.Phil), முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றார். அவருடைய துணைவியார் சுதாசினி அவர்கள். இவர்களுக்குச் செழியன், சுடர்விழி என இருமக்கள்.
இவருடைய தமிழ்ப் பணிகள்:
1. உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மாநிலத் துணைப் பொதுச்செயலராகப் பணியாற்றி வருகிறார்.
2. திருவண்ணாமலை உலகத் தொல்காப்பிய மன்றப் பொருளராகப் பணியாற்றி வருகிறார்.
3. தேவிகாபுரம் திருக்குறள் மன்றச் செயலராகப் பணியாற்றி வருகிறார்
4. டி.என்.எஸ்.பி.டி.ஏ ஆசிரிய அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டச் செயலராகப் பணியாற்றி வருகிறார்.
5. பைந்தமிழ்ச் சோலை தொடங்கப்பட்ட நாள் முதல் அதனுடன் இணைந்து பல்வகைப் பாக்கள் படைத்து வருகிறார். பைந்தமிழ்ச் சோலையைச் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு. பைந்தமிழ்ச்சோலை எண்பேராயத்தினரில் ஒருவராகவும், தமிழ்க்குதிர் மின்னிதழின் துணையாசிரியராகவும், திங்கள்தோறும் பைந்தமிழ்ச்சோலையின் அகவலரசர் போட்டி நடத்துவதிலும் பொறுப்பேற்று எண்ணற்ற பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
6. 2018ஆம் ஆண்டு பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலை மாவட்டக் கிளையை நிறுவி அதன் தலைவராகப் பணியாற்றி வருகிறார். திங்கள்தோறும் இலக்கியக் கூடலை நடத்துகிறார். அதன் வழியிலும் என்னாப்பு (Whatsapp) வழியிலும் அருந்தமிழ் யாப்பிலக்கணத்தைப் பயிற்றுவித்து ஆண்டு முடிவில் தேர்வு நடத்தி ஆண்டு விழாவில் பட்டம் வழங்கி மரபு கவிஞர்களை உருவாக்குகிறார். அவ்வாறு கவிஞர்கள் பாடிய பாக்களின் தொகுப்பைப் ‘பாவினம் பாடுவோம்’ எனும் நூலாக 2019ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
7. பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்.
8. சிற்றிதழ்களிலும் இணையத் தளங்களிலும் மரபு கவிதை மற்றும் எழுத்துப்பணி ஆற்றி வருகிறார். மரபு கவியரங்கங்களுக்குத் தலைமையேற்று நடத்துகிறார்.
9. பள்ளி மாணவர்களுக்கும் மரபு கவிதை எழுதும் ஆவலுடைய கவிஞர்களுக்கும் யாப்பு வடிவங்களை எளிமையான முறையில் அறிமுகப்படுத்துகிறார். சான்றாகப், பள்ளி மாணவர்களுக்கு வெண்பா எழுதக் கற்பித்து, அம்மாணவர்களே எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து “மொட்டுகள் தூவிய மகரந்தம்” எனும் நூலாக வெளியிட்டுள்ளார்.
10. நூல்கள் பலவற்றுக்கு அணிந்துரை, முகவுரை போன்றன வழங்கியும் பலருடைய நூல்கள் தயாரிப்பு, வெளியீட்டுப் பணிகளில் உதவியும் பிறரை ஊக்குவிக்கிறார்.
இவர் எழுதிய நூல்கள்:
இவருடைய கவிதைகள் இனிமையும் எளிமையும் தெளிவும் கருத்துச்செறிவும் வாய்ந்தவை. "இவர் படைக்கும் பாடல்கள் பனி விரட்டும் சூரியனாய் இக்குமுகச் சிக்கல்களைக் களையும் தீர்வாக அமைகின்றன" என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் இவருடைய படைப்புகளைப் பாராட்டுவார்.
1. அஞ்சிறைத்தும்பி (முத்துமீரான் விருது பெற்ற நூல்)
2. தூரிகைப் பூக்கள் (சிகரம் விருது பெற்ற நூல்)
3. பட்டுக்கிளியே வா வா! (சிறார் இலக்கிய விருது)
4. விரல்நுனி விளக்குகள் (பொதிகை மின்னல் இலக்கிய விருது)
5. ஆழ்வார்கள் காட்டும் திருவவதாரங்கள்
6. குபேர ஈஸ்வரர் அம்மானை
7. கதிர்முருகு
8. பாட்டு வழியில் பாவலர் வையவன்
9. இணையத் தமிழறிஞர் மு.இளங்கோவனார்
10. மொட்டுகள் தூவிய மகரந்தம்
11. பாவலர் பரம்பரைக் கவிஞர்கள்
12. பாவினம் பாடுவோம்
13. தமிழ்க்கணை
14. மாலவன் நூற்றந்தாதி
15. தெய்வப் புலவன் மும்மணிமாலை
பட்டங்களும் விருதுகளும்:
1. தமிழக அரசின் இளந்தமிழாய்வாளர் விருது.
2. தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறந்த படைப்பாளிக்கான விருது.
3. நல்லாசிரிய ரத்னா விருது.
4. பைந்தமிழ்ச் சோலை நடத்திய உலகளாவிய பாவலர் பட்டத்தேர்வில் உயர்சிறப்பு வகுப்பில் தேர்ச்சி, பைந்தமிழ்ச்செம்மல் பட்டம்.
5. பைந்தமிழ்ச்சோலை மாணவர்களுக்குப் பாவகைகளைச் சிறப்புறக் கற்பித்தமைக் காக நற்றமிழாசான் விருது.
6. விரைந்து கவிபாடும் திறனை ஆராய்ந்து அறிந்து பாராட்டித் தரப்படும் பைந்தமிழ்ச் சோலையின் சிறப்பான ஆசுகவி விருது.
7. பைந்தமிழ்ச்சோலையின் சந்தம் பாடுக, வண்ணம் பாடுக, முயன்று பார்க்கலாம் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கிய கடினமான யாப்புகளைப் படைக்கும் விதமாக நடந்த தேர்வில் வெற்றிபெற்று சந்தக்கவிமணி விருது.
8. இளமையிலேயே தமிழின்பால் நாட்டமும் பேரார்வமும் கொண்டு அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்ற பணியாகச் சாதிக்கின்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகிய பைந்தமிழ்க் குருத்து எனும் விருது.
9. வீறுகவியரசர் முடியரசன் நூற்றாண்டு விழாவில் மரபு கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வீறுகவியரசர் முடியரசன் விருது
10. தன்னம்பிக்கைச்சுடர், பைந்தமிழ்ப் பாவலர், கவிஞர் மாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள்
இவ்வாறு பல்வேறு தமிழ்ப்பணிகளைத் தலைமேற்கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும், தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும் பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத் தீங்கனி தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால் உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகானந்தர் வாழ்க மேவிய புகழோடே!
- பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்
No comments:
Post a Comment