Dec 10, 2018

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… - பகுதி 1

தமிழகழ்வன் சுப்பிரமணி

இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிப்பர். அவையாவன: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல். இவற்றைச் செய்யுள் ஈட்டச் சொற்கள் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

1. வடசொற்கள் தமிழுக்குவரும்போதுஎப்படிஎழுதவேண்டும்?

வடசொற்களைத் தமிழில் எழுதும்போது இரண்டு வகையான முறைகளைக் கையாளலாம்.

தற்சமம்: தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்த வடசொற்களை அப்படியே தமிழில் எழுதிக்கொள்ளலாம். எ.கா. கமலம், காரணம்.

தற்பவம்: தமிழில் இல்லாத வடவெழுத்துகளால் அமைந்த சொற்களை, வடவெழுத்துகளை நீக்கித் தமிழின் இயல்புக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். எ.கா. ஹரிஹரன் – அரியரன்.

இவ்வாறு எழுதப்படும் சொற்களைத் தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள் எனலாம். வடசொற்கள் மட்டுமன்றிப் பிறமொழிச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொல் இல்லாதபோது அம்மொழிச் சொற்களையும் அவ்வாறே தமிழ்ப்படுத்துதல் சரியெனலாம்.

2. தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள் தமிழுக்குத் தேவையா?

தேவையில்லை. இணையான தமிழ்ச்சொற்களை எடுத்தாளுதலே சிறப்பு. ஆனாலும் வேற்றுமொழிச் சொற்கள் மக்களின் பயன்பாட்டில் தவிர்க்க முடியாமல் இயல்பாய் உள்நுழையும். எது தமிழ்ச்சொல்? எது தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்? என்ற தெளிவிருந்தால் போதும்.

3. எந்தெந்த இலக்கணப் பகுதிகள் சரியான தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களை உருவாக்க உதவும்?

• மெய்ம்மயக்கம்
• மொழிமுதல் எழுத்துகள்
• மொழியிறுதி எழுத்துகள்
• வடசொல்லைத் தமிழ்ச் சொல்லாய் மாற்ற நன்னூல் கூறும் வடசொல்லாக்கம்.

4. மெய்ம்மயக்கம் என்றால்என்ன?

மயக்கம் என்பதற்கு இணக்கம் எனப்பொருள் கொள்ளலாம். மெய்யெழுத்துகளோடு எந்தெந்த மெய்யெழுத்துகள் இணங்கிப் பக்கத்தில் வந்துசேரும் எனக்கூறுவதே மெய்ம்மயக்கம் ஆகும்.

எடுத்துக்காட்டாக,

அம்மா - அ+ம்+ம்+ஆ – இதில் மகரமெய்யை அடுத்து ஒருமகரமெய் வந்துள்ளது.

தங்கை - த்+அ+ங்+க்+ஐ - இதில்ஙகரமெய்யைஅடுத்துஅதன்இனமானககரமெய்வந்துள்ளது.

இவ்வாறு ஒருமெய்யை அடுத்து அதேமெய்யெழுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். ஒருமெய்யை அடுத்து வேறுஒரு மெய்யெழுத்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

மெய்ய்மயக்கத்தைப் பின்வரும் அட்டவணை மூலம் அறியலாம்.

க் - க்–பக்கம்
ச் - ச் - பச்சை
த் - த் - பத்து
ப் - ப் – உப்பு
ட் - ட்,க்,ச்,ப் - தட்டு,உட்கு,வெட்சி,நுட்பம்
ற் - ற்,க்,ச்,ப் - கற்றல்,கற்க,பொற்சபை,வெற்பு

மேற்கண்ட வல்லின எழுத்துகளில் க, ச, த, ப ஆகிய நான்கு மெய்களும் தன்னை அடுத்து வேறொரு மெய்யெழுத்தை வரவிடாது. டகர, றகர மெய்கள் தன்னை அடுத்துத் தன்னையும் க, ச, ப ஆகிய மூன்றையும் மட்டுமே இணங்கி ஏற்றுக்கொள்ளும். ஆக, இவ்விதியின்படி, தற்போது வழங்கிவரும் பக்தி, சக்தி, சப்தம், சகாப்தம், ரத்னா, ரத்நா – இவையெல்லாம் தமிழ்ச்சொற்கள் அல்ல. அவை பத்தி, சத்தி, சத்தம், சகாத்தம், இரத்தினம் எனத் தமிழ்ப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டியவை. பெட்ரோல் என்று தமிழில் எழுதுவதும் தவறு.

இவ்வாறே மெல்லின, இடையின எழுத்துகளோடு மயங்கும் மெய்யெழுத்துகளுக்கான பட்டியலைக் கீழேகாண்க.

ங–ங, க- அங்ஙனம், திங்கள்
ஞ–ஞ,ச,ய- மஞ்ஞை, மஞ்சள், உரிஞ்யாது
ண–ண,ட,க,ச,ஞ,ப,ம,ய,வ- வண்ணம், தண்டு, கண்கள், வெண்சாந்து, வெண்ஞாண்,வெண்பா, வெண்மை, மண்யாது, மண்வளம்
ந–ந,த,ய- செந்நா, வெந்தயம், பொருந்யாது
ம–ம,ப,ய,வ- அம்மி, அம்பு, திரும்யாது, நிலம்வலிது
ன–ன,ற,க,ச,ஞ,ப,ம,ய,வ - கன்னி, கன்று, என்க, இன்சுவை, இன்பம், இன்மை
ய–ய,க,ச,த,ப,ஞ,ந,ம,வ,ங - வெய்யோன், பொய்கை, செய்தான், வேய்ந்தான், மெய்ம்மயக்கம், தெய்வம்
ர–க,ச,த,ப,ஞ,ந,ம,ய,வ,ங – ஆர்கலி, வார்சடை, நேர்த்தி, பார்ப்பு
ல–ல,க,ச,ப,ய,வ- வெல்லம், வெல்க, வல்சி, கால்வாய்
வ–வ,ய- பவ்வம்,தெவ்யாது
ழ–க,ச,த,ப,ங,ஞ,ந,ம,ய,வ–வாழ்க, போழ்து, தாழ்பு, வாழ்ந்தான், அகழ்வான்
ள–ள,க,ச,ப,ய,வ–பள்ளம், கொள்கை, கள்வன்

இவற்றில் ரகரமும், ழகரமும் தன்னோடு இணங்காது. எனவே செர்ரி, மிர்ரர் – இவை தமிழின் ஒலிப்பு இயல்புக்கு மாறானவை.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் தனிச்சொல் மட்டுமன்றி, இருசொற்கள் புணரும்போதும் இதேவிதிகளைப் பின்பற்றுதலைப் பார்க்கலாம்.

(தொடரும்)