Showing posts with label கவிதை - கவியரங்கம். Show all posts
Showing posts with label கவிதை - கவியரங்கம். Show all posts

Sep 10, 2023

நான் ஏணி பேசுகிறேன்

கவியரங்கத் தலைவர் வணக்கம்

யாப்புக் கென்ன குறையிங்கு?
   யாரும் கவிஞர் ஆகிடலாம்
தோப்புக் குள்ளே பலகுயில்கள்
   தோன்றும் வண்ணம் ஊக்கிடலாம்
காப்புக் காடாய் விளங்குகின்றார்
   கலைகள் வளர்க்க முனைப்புடனே
சேர்ப்புச் செய்வார் செம்மலவர்
   சேலம் பாலன் வாழ்கவையா!

அவையடக்கம்

தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்
யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏற்றி விட்ட ஏணியினை
   இனியும் வேண்டா என்றுரைப்பார்
எட்டி உதைப்பார் உதைத்தாலும்
   என்றன் மக்கள் இவரன்றோ?
காற்றில் விட்ட பட்டமது
   கயிற்றை அறுத்துப் பறக்குமன்றோ?
கண்கள் தூசு பட்டதுமே
   கண்ணீர்க் குளத்தில் தவிக்குமன்றோ?
மாற்றம் வாழ்வைப் புரட்டிவிடின்
   மக்கள் மனங்கள் திருந்துமன்றோ?
மற்றும் ஓர்வாழ் உள்ளதென்று
   மானம் துறந்து வழிசேரும்
ஊற்றி னைப்போல் பெருக்கெடுக்க
   உடைய இடமே சேருமன்றோ?
உண்மை உடைமை எதுவென்றங்(கு)
   உள்ளம் தெளிவு பெறுமன்றோ?                  1

எண்ணி எண்ணி உளம்நிறைத்தேன்
   ஏணி ஆனேன் ஏற்றிவிட்டே
எனக்கோ இன்னும் ஏமாற்றம்
   ஏனோ இந்தத் தடுமாற்றம்?
நண்ண வேண்டும் நல்வழியை
   நாளும் உணர்ந்து கைக்கொள்ளேன்
நட்டார் நலனே நலனென்று
   நட்ட மரமாய் நான்நின்றேன்
கண்ணே மணியே எனப்போற்றி
   கருத்தை அகத்தே நன்றேற்றிக்
கடலே அன்ன தமிழுணர்த்திக்
   கவிழ்ந்த கலமாய் ஆனேனே
அண்ணற் கெளிதா யகம்விளைத்தும்
   அண்ணல் என்றே பேர்பெற்றும்
அன்பே என்றன் வழியென்றும்
   அற்றேன் வாழ்க்கை பிறர்வாழ!                  2

என்றன் வாழ்க்கை இயல்பறிந்தார்
   என்றன் உள்ளப் பொருளுணர்ந்தார்
இன்றும் இல்லை இனியுமில்லை
   என்னும் நிலைமை வாராது
நன்றே உலக நலன்கருதி
   நலமே விளைக்கும் செவியுள்ளார்
பொன்றும் துணையும் வாழ்ந்திருப்பார்
   புவியில் புனிதர் பேறுபெற்றே
அன்றும் இன்றும் எப்பொழுதும்
   அறமும் பொருளும் நனிவிளக்கி
அகிலம் காக்கும் இலக்கியத்தை
   அள்ளிப் பருகி நலம்வாழ்வோம்
கன்று தாயை மறப்பதில்லை
   கவிதை அறத்தை மறப்பதில்லை
கவிஞன் உலகை வழிநடத்திக்
   கடமை செய்தல் வாழ்வாகும்                     3

Aug 21, 2022

செருவெல்க செந்தமிழே!

தமிழ்வாழ்த்து

தகவற் றொழினுட்பக் காலத்துத் தகவமைந்(து)
அகவும் அருந்தமிழே! ஆற்றலைக் காட்டிப்
பகலாய் விளங்குவாய் பார்வென்(று) ஆளுவாய்
மகக்கடன் வேறென்ன காப்போம் மனமார்ந்தே

பாவலர் மா. வரதராசனார்க்கு வாழ்த்து

வரத ராசர் மனங்கொள் நேசர்
வரமாய் வந்து மரபைக் காக்கும்
பரந்த மனத்தார் பண்பிற் சிறந்தார்
தரமாய்த் தமிழைத் தருவார் போற்றி

அவையடக்கம்

எவையடங்குங் காலத்தும் சுவையடங்காச் செந்தமிழின்
பகையடங்கச் செய்தற்குப் பாட்டாலே பரவுவோம்
அவையடங்கிக் கருத்துரைப்போம் ஆன்றோர் குறைபொறுப்பீர்
கவைத்தறிவு பெருகற்குக் கரையில்லா விளக்காவீர்

செருவெல்க செந்தமிழே!

எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பேரிடர்கள்
சத்தான செந்தமிழைத் தகர்த்தெறிய நின்றெதிர்த்தும்
அத்தனையும் பொடியாகி அகமழிந்து நிற்பதுகாண்
முத்தான செந்தமிழே முக்காலும் உலகாளும்                       1

கலந்தாலும் கலந்துகலந் தேபிரிந்தும் தனித்தமிழின்
குலந்தழைக்கும் குவலயத்தில் முன்னிற்கும் எழில்காணீர்
மலடில்லை மகப்பேறு பெற்றவளைத் தாயவளைத்
தலைதூக்கிக் கொண்டாடும் தமிழ்க்குலமே தமிழ்க்குலமே 2

தமிழன்றன் மறையெல்லாம் தான்மறைத்து வளர்ந்தாலும்
தமிழோசை யால்கெட்டுத் தவிக்கின்ற நிலைக்காகும்
அமிழ்தாகும் அவளுக்கு வேறேதும் இணையில்லை
தமிழோடு விளையாடத் தனித்திறமை வேண்டுமன்றோ 3

பாமரனின் நாக்கினிலே படியாவே பிறமொழிகள்
நாமறுக்க மாட்டாமல் நலம்விளைக்கும் தமிழ்மொழியே
ஏமமென எப்போதும் இருப்பதுவே இயற்கைமொழி
தீமையுற்றுப் பிறமொழிகள் செயற்கையினால் அழியும்மே 4

பலவாறாய்க் கிளைத்திருக்கும் மொழிக்கெல்லாம் தாயாகி
நிலையாக வீற்றிருப்பாள் நெஞ்சினிலே முக்காலும்
தலையிருக்க வாலாடும் தனித்திறமைக் கதையெல்லாம்
தலையிழந்து தரமிழந்து தாயின்றாள் தாம்பணியும் 5

செருவென்று வந்துவிட்டால் செருவென்று காட்டுபவர்
பொருவென்று பகைவர்தமைப் போயழிக்கும் வீரமிகு
திருச்செல்வர் பலவுண்டு திகைப்பேதும் தேவையில்லை
உருவழிக்க வியலாதே உண்மையென்றும் நிலைத்திருக்கும் 6

பல்குகின்ற துறையாவும் பாதையிடும் பெருந்திறமை
நல்குகின்ற தமிழ்த்தாயே! நானிலத்தை ஆள்பவளே!
செல்வமெலாம் நீயன்றித் தேர்வதிலை என்மனத்துள்
தொல்குடியன் எனப்பெருமை கொள்வேனே தொடர்ந்தகழ்ந்தே! 7


ஆரியமும் மகமதுவும் ஆங்கிலமும் ஆகிவரும்
பேரியக்கம் எல்லாஅம் பெரும்படையைக் கொண்டுவந்தும்
நீரியல்பைப் போன்ற நிலையான செந்தமிழின்
பேரிலக்க முத்தாழி முன்னிற்க முடியாதே!                                            8

Oct 5, 2021

உள்ளத் தனையது உயர்வு

தமிழ்வாழ்த்து

அள்ளக் குறையா அமிழ்த சுரபியாய்
உள்ளுதொறும் ஊறும் மணற்கிணறாய்த் - தெள்ளுதமிழ்த்
தாயே! விளங்கும் தனிச்சிறப் புற்றனை!
நீயே மகிழ்ச்சிக்கு நெய்

அவையடக்கம்

ஆசான் வரத ராசரை வணங்கினேன்
பேசாக் குழந்தை பேச விழைந்து
வீசா நின்ற விதைச்சொல் லுடையேம்
ஏசா தெம்மை ஏற்பீர் நன்றே

கவியரங்கின் நோக்கம்
நேரிசை ஆசிரியப்பா

அக்கினிச் சிறகுகள் ஆக்கி வைத்த
அன்பு மிகுந்த அறிவிய லாளர்
அன்னை நாட்டின் அரும்பெருந் தலைவர்
அப்துல் கலாஅம் ஐயா அவர்தம்
பிறந்த நாளை நினைவு கூர்ந்து                                 5
நிகழ்த்தப் பெறூஉம் நெடுநேரத் தொடராம்
பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் ஆகிய
இந்த நிகழ்வில் இனிதாய் இணைந்து
இந்தக் கவிதை அரங்கைத் தொடங்குவாம்
உள்ளத்து அனையது உயர்வெனக் கூறிய            10
வள்ளுவப் பெருந்தகை வாக்கை
உள்ளு வோமே உயர்வடை வோமே

தொடக்கக் கவிதை
நிலை மண்டில ஆசிரியப்பா

உள்ளத் தனையது உயர்வா கும்மே
உள்ளம் என்றால் என்னை? ஊக்கம்
வெள்ளம் வந்து மேலும் மேலும்
பள்ளம் நோக்கிப் பாய்தல் போலே
உள்ளத் தனையது உயர்வா கும்மே               5
உள்ளம் வேண்டும் உலையா முயற்சிக்கு
உள்ளம் வேண்டும் உடைய தொழிலுக்கு
உள்ளம் வேண்டும் உண்ணு தற்கும்
உள்ளம் இலையோ ஒன்றும் இல்லை
ஊக்கத் தளவே ஆக்கத் தளவாம்                     10
ஊக்கத் தளவே உலகம் உய்யும்
ஊக்கத் தளவே உண்மை விளங்கும்
ஊக்கம் இன்மை இன்மை வகுக்கும்
உள்ளத் தனையது உயர்வெனப் பாட
உள்ளத் துவகை யோடு மன்றம்                         15
ஏறி வந்தோம் ஏற்றம் உரைக்கப்
பதின்மர் இங்கே பங்கேற் கின்றோம்
உள்ளம் என்னும் ஊக்கம் பற்றிச்
சொல்லில் சுவைபடச் சொல்ல விழைந்தோம்
நல்ல கருத்தை நாடிக் கேட்டு                             20
வெல்லும் உலகை உருவாக் குவமே

1. வள்ளி முத்தே வருக வருகவே
முத்துக் கவிதை சொத்துக் குவிகை
பட்டுச் சிவிகை பாட்டுக் குவிதை
நட்டுக் காத்து நல்ல மரமாய்ச்
சொட்டுந் தேனாய்ச் சோலைக் குயிலே
வள்ளி முத்தே வருக வருகவே

சொல்லில் சொல்ல வியலாக் கருத்தும்
மெல்ல உருக்கி மெருகு தீட்டி
அள்ளித் தந்தீர் அருமை அருமை
வள்ளிமுத் தாரே வாழ்கபல் லாண்டே!

2. பால சுப்பிரமணியன் ஐயா
புதுவைத் தமிழ்ச்சங் கத்தின் செயலர்
புதுவது படைக்கும் புகழ்மிகு ஏணி
மதுவுக்குப் புதுவை என்பதை மாற்றி
மதுக்கவி தைக்குப் புதுவை என்று
மற்று மொருவர் வாய்ம லர்ந்தார்
பால சுப்பிரமணியன் ஐயா வருக
பாலன்ன நற்கவி படைத்துத் தருக

பாட்டுக்கு இங்கே போட்டியா என்ன?
காட்டுக் காட்டென்று காட்டி விட்டார்
அப்பப்பா
கட்டுக் கட்டாய்க் கவிதை மூட்டை
பட்டுத் தெறிக்குது பாரீர் பாரீர்
பால சுப்பிர மணியன் ஐயா
ஆல மரம்போல் ஆயிரங் கவிதை
மேலும் மேலும் தந்து தாங்குவீர்
வாழ்க வாழ்க வளமொடு வாழ்க

3. சதீஸ்குமார்
அருந்தமிழ் ஆற்றலை அகத்தில் புகுத்திப்
பெருமை கொள்ளப் பேரவா வோடு
புதுமை புகுத்த பிறந்த புயலே
மதுர மாயொரு கவிதை தருக
வருக வருக சதீஸ்குமார் வருக

தனித்திறங்கொள் சதீஸ்குமார் வாழ்க வாழ்க
சரஞ்சரமாய் அவர்தொடுத்த கவிதை வாழ்க
சாதனையைச் சடுதியிலே புரிந்தார் வாழ்க
தாதவிழ்பூ மலர்தல்போல் வாழ்க வாழ்க

4. பரமநாதன் ஐயா
இணுவில் என்னும் எழிலூர் பெற்ற
இனிய கவிஞர் பரம நாதரே!
முத்து முத்தாய்ப் பாடும் பைந்தமிழ்ச்
சொத்துக் குவையே! சோர்வுகள் நீக்கும்
முத்துப் ‘பரல்கள்’பட்டுத் தெறிக்கும்
வித்தகம் விளைக்கும் வீறுகொள் கவிஞரே!
வருக வருக அருங்கவி தருக

அழகாக ஒருகவிதை ஆக்கித் தந்தீர்
அதுவரமே என்கின்றேன் ஆகா ஆகா
மழைஇரண்டு வரமாக வாய்த்த தின்று
மகிழ்ச்சியிலே திளைக்கின்றோம் வாழ்க வாழ்க
வழங்குவதில் பெருங்குடமாய் வாய்த்தீர் வாழ்க
வாக்கினிலே இனியதையே வைத்தீர் வாழ்க
பழம்பெருமை மறவாத பண்பர் வாழ்க
பரமநாதன் ஐயாவே வாழ்க வாழ்க

5. விஜயலட்சுமி
உள்ளத் தனையது உயர்வே என்பதைத்
தெள்ளத் தெளிவாய்த் தேர்ந்த வாழ்வால்
அள்ளித் தருக அரங்கம் வருக
வெள்ளி மின்னல் உள்ளம் கொண்ட
விஜய லட்சுமி அம்மா வருக

சென்ற இடமெல்லாம் வெற்றி வெற்றி
சேர்ந்து வருமே செம்மை தருமே
அருங்கவி ஆக்கி அகிலம் தந்தீர்
பெருமை யோடு வாழ்க வாழ்க

6. கண்ணன்
இளைய சமுதாயம் இனிது வாழக்
களைவார் துன்பம் கவிதைக் கட்டால்
கண்ணின் மணியாய்க் கருத்துக் கொண்ட
கண்ணன் ஐயா வருக வருக
கனிச்சுவை தனிச்சுவை யாகத் தருக

இடிமுழக்கம் இதுவன்றோ எழுச்சிக் கவியே
இன்னும்யாம் கேட்பதற்கும் ஆவல் கொண்டோம்
படிமுறைமை நேரத்தைப் பார்த்துப் பார்த்து
பாயுமுளம் தேற்றியிருக் கின்றோம் ஐயா
விடியட்டும் உம்மாலே உள்ளம் வைத்து
விதைப்போமே ஊக்கத்தால் வீழ்ந்தி டாதே
நெடிதுபுகழ் நீர்பெற்று வாழ்க வாழ்க
நேயமுள பெருங்கவியே வாழ்க வாழ்க

7. அழகர் சாமி
பழகு தமிழின் செம்மையினைப்
பார்த்துப் பார்த்து நுண்ணறிந்தே
அழகு கவிதை படைப்பவரே
ஆற்றல் மிக்க பெரும்புலவர்
பழக இனியர் பண்பாளர்
பாக்கள் பாட வாருமையா
அழகர் சாமி அரங்கினிலே
அகிலம் போற்றும் அருங்கவியே

நன்றாய் நெய்த கவிதந்தீர்
நலமே விளைக்கும் கவிதந்தீர்
பொன்றாப் புகழொடு வாழியவே
பொங்கும் மகிழ்வொடு வாழியவே

8. ஷேக் அப்துல்லாஹ் அ
இறைமை இதயக் கோயிலில் இருத்தி
முறைமை தவறா முதுநல் லறிஞர்
நிறைமனம் கொண்ட நித்திலக் கவிஞர்
சிறுமை மனத்தார் சிறைவிட் டெழவே
ஷேக் அப்துல்லா
ஐயா வருக அருங்கவி தருக

உள்ளத் துணர்வை அடுக்கிக் காட்டிக்
கள்ளம் அகற்றிக் கனியாய் வாழ்வு
கொள்ளச் செய்தி சொன்னார் அன்னார்
வெள்ளம் போலே மகிழ்வொடு வாழ்க

9. விஜயகுமார் ஜனார்த்தனன்
கன்னி முயற்சியாய்க் களம்புகு காளையாம்
இன்னல் நீக்கியோர் இனிமையுள வாழ்வுக்குச்
சின்ன கவிஞனெனத் தேற்றி அவைவந்தார்
பென்னம் பெரிதான கவிதை தருவாரே
விஜயகுமார் ஜனார்த்தனன் அவர்களே வருக
வியக்கும் செந்தமிழ்க் கவிதை தருக

உள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணங் கட்கு
உருவத்தைத் தந்துவக்கும் நிலைக்குச் செய்தார்
உள்ளத்தின் ஊக்கத்தை உணர்ந்து கொள்ள
உண்மையினைத் தெரிந்துரைத்தார் வாழ்க வாழ்க

நிறைவு கவிதை
ஊக்குங் கவிதைகள் உளம்நிறை வுறவே
கேட்டோம் தெளிவோம் கேள்விக ளாலே
இயலாச் செயலென ஏதும் இல்லை
முயலாச் செயலால் முழுதும் வீணே
செயலாக் குவமே செம்மை சேரவே                       5
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் என்றார்
வள்ளுவப் பெருந்தகை வாழ்வில் ஊக்கத்து
அளவோ உயர உயர அவர்தம்
உயர்வும் மிகுமென உயர்ந்த கருத்தைத்
தெள்ளிதின் உரைத்த தெய்வம் அன்றோ           10
ஊக்கு விப்பார் ஊக்கு வித்தால்
ஊக்கு விற்பான் தேக்கு விற்பான்
என்பார் பெரியோர் எத்துணை உண்மை
உள்ளம் இலாதவர் எய்தார் செல்வம்
உள்ளுஞ் செயலை உறுதியாய்ச் செய்ய              15
விளங்கா திருந்ததும் பிடிபடும் அதனை
ஆய்ந்து நோக்கி அகம்சேர்ப் போமே
ஐயா அப்துல் கலாஅம் அவர்தம்
மெய்வழி நின்று மேன்மை யுறுவோம்
உய்வழி செய்வோம் உலகின் புறவே                       20

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

புனைபெயர்: தமிழகழ்வன்

படிப்பு: இளநிலை - தகவல் தொழில்நுட்பம், இளநிலை - தமிழிலக்கியம்

பணி: மென்பொறியாளன்.


கவிஞர் அழைப்பு (பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)

சுடராய் மின்னும் தமிழ்க்குதிரில் 

    சுழலும்  இவரின் பணியெல்லாம்  

இடர்கள் சுமையைக் கொடுத்தாலும்

    எழிலாய்  இதழ்கள் பளபளக்கும்

மிடுக்காய்க் கவிதை மழைபொழிவர்   

    விருப்பாய்க் கேட்க வாருங்கள்  

அடுக்காய்ப் பாக்கள் ஒளிரட்டும் 

    அரங்கம்  அதிர்ந்து நிற்கட்டும் 


பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் வருக 

தண்டமிழ்க் கவிதை தருக 


தமிழ் வாழ்த்து

அன்னைத் தமிழே! அமிழ்தாய் இனிப்பவளே!

உன்றன் அருளால் உயிர்வாழ்வேன் - என்றும்

இயக்குங் கதிரே! இருந்தென்றன் நாவில்

நயக்கும் படிமொழிய நாட்டு


ஆசான் வாழ்த்து

பாமணியால் பண்புடைத்தால் பைந்தமிழச் சோலையினால்

மாமனித! மன்னவனே! மாமணியே வாழியவே! 


கவியரங்கத் தலைமை வாழ்த்து

தூயநற் பாக்களால் துன்பம் துடைக்கின்ற

மாயஞ்செய் நிர்மலா மாதவத்தாள் வாழியவே!


அவையடக்கம்

தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்

யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!


கதவைத் திறந்து வை

எல்லை இலாத வெளியெங்கும் உம்முடைய

எல்லை விரித்தலுக் கேற்பனசெய் - முல்லை

அரும்பி அழகாகும் அம்மாலை போலத்

திருந்துக எண்ணத்தைத் தேர்ந்து 1


தேர்ந்தன எண்ணங்க ளாய்மட்டும் நில்லாமல்

ஆர்ந்தின்னும் சொல்லில் அமைத்தலொடு-நேர்ந்து

செயலாய் முறையாய்ச் செதுக்கத் திடமாய்

முயல்வாய் முயற்சி முதல் 2


முதலொடு திட்டம் முழுதும் வரைந்து

பதமாய்ப் பகுத்துப் பழக - விதமாய்க்

குறுக்கம் நெடிதெனக் கொள்க குறிக்கோள்

நறுக்கிச் செயலாற்று நன்கு 3


நன்கு விரிவுசெய் நல்லறிவை நானிலத்தின்

நன்மை விரிவுசெய் நாடியது - பொன்னும்

பொருளும் பெரிதுசெயப் போராடா தேயங்(கு)

இருளே இருக்கும் இரி 4


இரிப்பாய் முதலில் இதுவேண்டா இன்றென்

அரிப்பாய் அரிக்கும் பழக்கம் - சிரிப்பாய்த்

தொடங்கின்றே இல்லை தொடலாகா என்றும்

வடம்பிடிப்பாய் தேர்நகர வாய்ப்பு 5


வாய்ப்புகள் வாய்ப்பதில்லை வாய்திறவாதாருக்கு

வாய்ப்புகள் தானே வருவதல்ல - போய்ப்புகல்

போய்ப்புகல் இவ்விரண்டும் பொய்யாக்கா துன்வாய்ப்பை

ஏய்ப்புகள் ஏமாற்றி ஏறு 6


ஏற்றமே உன்வாழ்வில் எள்ளளவும் ஐயமில்லை

மாற்றம் மனக்கத வைத்திறக்க - ஊற்றாய்

உலக நலன்போற்றும் உன்றன் அறிவுக்(கு)

உலகம் தலைவணங்கும் ஓர்ந்து 7


ஓர்ந்துயரும் நோக்கம் உடைத்தாயி னுன்வாழ்வில்

ஆர்ந்துயரும் ஆக்கம் அதன்வழியில் – தேர்ந்தமைந்(து)

எல்லாம் இயங்குமுன் எண்ணம் வழிநடத்த

எல்லார்க்கும் நீயாவாய் எல். 8


வாழ்த்துப்பா ! (பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)

நல்ல வழிகள் பற்பலவும் 

    நயமாய் உரைத்தார் வெண்பாவில் 

வெல்லும் உலகில் வாழ்வதற்கு  

    விரைந்து வாய்ப்பைத்  தேடென்றார்  

எல்லை இலாத வெளியெங்கும் 

    எல்லை வகுத்துச் செய்யென்றார் 

சொல்லிச் சென்ற  செம்மலுக்குத் 

    தூவி விடுவோம் நல்வாழ்த்து  

Sep 30, 2020

வானம் தொடலாம் வா - கவியரங்கம்

பாவலர் மா.வரதராசனார் வணக்கம்

மாரி பொழிந்ததிரு மாவரதர் தாள்போற்றி
மாரி யெனப்பொழிய வேண்டுகிறேன் - ஊரில்
கவிஞன் எனவுலவக் காரணனாய் ஆயுங்
குவிநீண்மாங் காட்டுக் குயில்

முனைவர் அர.விவேகானந்தனார் வணக்கம்

அரங்கம் அதிர அருங்கவி செய்யும்
அரங்கவிவே கானந்தர் ஆற்றல் - வரமாம்
உரம்போற்றி வானத்(து) உயரந் தொடுவேன்
வரம்பாற்றிக் காக்க வரைந்து

பைந்தமிழ்ச் சோலையின் பெருமை

வானுயர்ந்த சோலையிலே நான்நடந்த பாதையெலாம்
தேனுகரும் வண்டாகத் தேடியதால் - நானுயர்ந்தேன்
பைந்தமிழை நன்குணர்ந்தேன் பாடிக் களித்திருப்பேன்
செய்தமிழைச் செவ்வனே தேர்ந்து

வானம் தொடலாம் வா

வானம் தொடலாம்வா வாவென்(று) எனையழைத்தீர்
நானும் தொடலாமே என்றிருந்தேன் - வானம்
தொடத்தான் முடியுமோ? தொட்டுப்பார் என்று
நடத்தான் வருவோம் நயந்து                                           1

வண்ணங்கொள் வெண்ணிலவே வான(ம்)விட்டு வாராயோ?
விண்ணிலே பாதையில்லை வீணனாய்க் - கண்ணிருண்டு
போவேனோ? காலம் பொதித்திருக்கும் உண்மையெலாம்
தேர்வேனே தேர்வேந்தன் நான்                                       2

முடிவில்லை வானோடு முந்தி முயல
முடிவில்லை தேட முயன்றான் - அடிவில்லை
தேடி அகழ்ந்தான் திறம்போற்று நம்பிக்கை
நாடிச் செயலே நலம்                                                            3

அகரம் அழியாச் சிகரம் வரதன்
தகரத் தமிழேஎ தங்கம் - பகர
இனிய தமிழின் இலக்கணங் கற்று
நனியுயர்வோம் வானம் நயந்து                                      4

வானமகள் நாண வழிதேடிச் செல்கின்ற
ஞானம் பிறந்துள்ள நற்காலம் - போன
பொழுதெலாம் நன்றென்று போற்றியுளங் கட்டி
விழுதெனத் தாங்கல் விடிவு                                               5

கேளடி கண்மணி கேள்வி முயல்வதால்
தாளடி வீழ்தல் தவிர்ப்பதே - கோளறு
மாவழியாம் உள்ளத்து வல்லமை பெற்றுயர்வாய்
போவழி இன்பம் பொதிந்து                                               6

மனந்திறந்து கூஉம் மணிக்குயிலாய்த் தோன்றிக்
கனவை நனவாக்கிக் காட்டு - மனமே
வழிச்செலுத்தி ஆக்கம் வகையாய்ப் படைக்கும்
விழிசெலுத்தி வேண்டியன வெல்                                    7

ஆயிர மாயிரம் அவ்வானம் தானீயும்
வாயிலில் வாய்ப்புகள் வந்திறங்கும் - போயிறங்கிச்
செய்தொழிலைச் செவ்வனே செய்க செயல்வீர!
மெய்யாகும் வாழ்க்கை விழைந்து                                  8

போகும் வழியறிந்து போகிறேன் மேலேயென்(று)
ஏகும் நிலையினை எட்டுக - தோகை
விரிமா மயில்போல் விசும்பை அறிக
உரியன ஏற்க உழைத்து                                                        9

காட்டுக் குயிலின் கனிந்த மனத்துளே
பாட்டுக்குப் பஞ்சமுண்டோ பாட்டுக்கு? - நாட்டுந்
திறமெலாம் பைந்தமிழ் தீட்டிய ஆறே
அறம்பொருள் இன்பம் அறிந்து.                                      10

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10 (ஏருக்குச் சீர் செய்வோம்)

கவிஞர் அழைப்பு

கணினிப் பணியில் இருந்தாலும்
   கன்னல் மொழியில் பாவனையத்
தணியா ஆர்வத் துடன்கற்றுத்
   சந்தங் கொஞ்சும் மரபினிலே
மணியாய்ப் பாக்கள் தீட்டுமன்ப!
   மன்றம் நின்று கவிபாட
வணக்கம் சொல்லி அழைக்கின்றேன்
  வருக வெங்கள் தமிழ்மகனே!!

அரங்க மதிர அருங்கவி தருக!!

தமிழ் வாழ்த்து

எண்ணும் போதே என்னுள்ளம்
   ஏற்கும் இன்பம் இன்றமிழே!
பண்ணும் போதே பாதைகளைப்
  பரப்பி நிரப்பும் பைந்தமிழே!
கண்ணும் கருத்தும் உன்மீதே
  கவிதை செய்யப் பணிக்கிறதே!
மண்ணும் விண்ணும் நீயென்பேன்
  வளர்க்கும் தமிழே வாழியவே!

தலைவர் வணக்கம், அவையடக்கம்

செவியரங்கை மகிழ்விக்கும் செந்தமிழைப் பாடுகின்ற
கவியரங்கத் தலைமைக்குக் கனிவான வணக்கங்கள்!
புவியரங்கம் முழுதுள்ள பொற்கவிஞர் தாள்போற்றிக்
கவியரங்கம் வந்துள்ளேன் கருணையோடு வாழ்த்துகவே!

ஏருக்குச் சீர் செய்வோம்

கார்தூக்கி வளம்பரப்பக் காணரிய நிலையினிலும்
ஏர்தூக்கிப் பார்தூக்கும் எழிலாளன் ஏழையெனல்
வேர்தூக்க நீரூற்றா வெங்கொடுமை யாமன்றோ?
சீர்துக்கிப் பார்ப்பதற்காய்ச் சீர்துக்கிப் பாடுவமே!1

பாடுபடும் உழவனுக்குப் பருவங்க ளேமுதலாம்
ஊடுபனி எந்நாளோ? உயந்தகதிர் எந்நாளோ?
நாடுங்கண் நாள்பார்க்கும் நல்லமழைக் காலமெது?
தேடுவது கிடைப்பதற்குத் தெளிவான மனம்வேண்டும் 2

வேண்டுமவன் உள்ளத்தில் விலகாத உறுதி;மழை
வேண்டுமள விருக்கவேண்டும் விழியாகக் காத்திருக்க
வேண்டுமவன் விழிப்போடு காத்திருக்க வேண்டுமன்றோ?
தூண்டுமுளத் தெண்ணத்தாற் றுளியேனும் சுரக்காதா? 3

சுரக்காதா அமுதமெனச் சோர்ந்திருத்தல் சரியாமோ?
கரவாது கலப்பையினைக் கைப்பிடித்து நேர்நிறுத்திப்
பரப்புக!மண் படரட்டும் பலப்பலவாய் விளைச்சலினை
வரமாக வழங்கட்டும் வையத்தார் வாழ்வதற்கே! 4

வாழ்வின்றி அழிவதுவோ? வளமாக்க வேண்டியன
தாழ்வின்றிச் செயல்வேண்டும் தடையாக வந்தபெரும்
பாழ்படுத்தும் செயற்கையினைப் பதரெனவே துணிந்தெறிவோம்
வீழ்த்துகின்ற வீண்செயலர் வினையொடித்து நாம்நடுவோம்! 5

நடுவதியார் நடுவதியார் நாளெல்லலாம் திரிந்தலைந்து
கெடுவதியார் எனும்நிலைமை கெட்டழிந்து போகட்டும்
தொடுவதியார் சேற்றினையே தொடத்தயங்கு வோர்தம்மைத்
தொடுவதியார் சோற்றினையே எனத்தடுத்துப் புரியவைப்போம் 6

புரியவைக்கச் சிறுவயதே புதையலென வயல்வெளியில்
திரியவைக்க வேண்டுவது தேவையெனக் குரல்கொடுப்போம்
அரியவகை எனவாக ஆகுமுனே உணவெதுவென்(று)
உரியவகை எடுத்துரைப்போம் உழுவதுவே உயர்வென்போம் 7

உயரத்தில் இருந்(து)ஆளும் ஒண்கதிரோன் வாழியவே!
இயற்றுங்கை ஏற்கின்ற ஏர்க்கலப்பை வாழியவே!
உயர்வடைந்த உள்ளத்தான் உழவன்தாள் வாழியவே!
துயர்தீர்க்க வருகின்ற தூநீர்கார் வாழியவே! 8

வாழ்த்துப்பா !

ஏர்தூக்கும் எழிலோனைச் சீர்தூக்கிப் பாவடித்த
இக்கவிக்கு நன்றிசொல்வோம் வாங்க வாங்க !
ஊரறிய உறவறிய பாரறிய இவ்வரங்கில்
உள்ளன்பாய் வாழ்த்துகளைத் தாங்க தாங்க !!

Nov 19, 2019

கவிதைப் பட்டிமன்றம்

ஈரோடு தமிழ்ச்சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் புதுமையான முறையில் பாவலர் மா.வரதராசனார் அவர்களின் தலைமையில் பைந்தமிழ்ச்சோலைப் பாவலர் குழுவினரின் கவிதைப் பட்டிமன்றம் நடைபெற்றது.

கவிதையின் வெற்றிக்குப் பெரிதும் காரணம்...

சொற்சுவையே...

கவிஞர் மன்னை வெங்கடேசன்
கவிஞர் வள்ளிமுத்து
கவிஞர் தமிழகழ்வன்

பொருட்சுவையே...

கவிஞர் விவேக்பாரதி
கவிஞர் சாமிசுரேசு
கவிஞர் சுந்தரராசன்

சொற்சுவையே... கவிஞர் தமிழகழ்வன்

அந்தமிழ்த் தாயைப் போற்றி
   அடிமலர் வணங்கு கின்றேன்
இந்தநல் அவையி ருக்கும்
   இன்சொலர் யாவ ரையும்
வந்தனம் என்று கூறி
   வணங்குகின் றேனே தேனின்
சந்தமார் கவிதை செய்யும்
   கவிஞரை வணங்கு கின்றேன் 1

ஈரோடு தமிழச் சங்கம்
   என்றென்றும் வாழ்க வென்று
சீராட்டிச் சீர்கள் கூட்டிச்
   சிந்தைசேர் இன்பம் எல்லாம்
வேராக்கி விளைக்கும் பாக்கள்
   வியன்றமிழ்ப் பெருமை பேசப்
பாராட்டிப் போற்று கின்றேன்
   பாலனைய பால னையா 2

புன்னகையைப் பொன்னகையாய்ப் புனைந்தி ருக்கும்
   பொழிலாசான் எழிலாசான் வரத ராசர்
பொன்னடியைப் போற்றுகிறேன் உண்மை பாடிப்
   புத்துலகம் படைக்கின்ற வெங்க டேசர்
நன்கவிந்த கவியாலே நலஞ்சேர்க்கின்ற
   நன்முத்துச் சொன்முத்து வள்ளி முத்து
மன்னர்கள் இங்கிருக்க மனம கிழ்ந்தேன்
   மங்காத தமிழாலே கவிதை செய்தேன் 3

எதிரணியில் நின்றெம்மை ஏய்க்கத் தானே
   எடுப்பாரே பொருட்சுவையென் றெண்ணி யெண்ணி
அதிரடியாய்க் கவிபாடும் விவேகங் கொண்ட
   அருளாள்வான் பாரதியே வாழ்க வாழ்க
புதிதாகச் சுவைகூட்டும் பாங்கில் பாடும்
   புதுமைமொழி சாமிசுரேசு வாழ்க வாழ்க
விதவிதமாய்க் கவிசெய்யும் அழகு வேந்தன்
   வித்தகரே சுந்தரரே வாழ்க வாழ்க 4

******
புவியில் மனிதன் போற்றிச் செய்யும்
கவிதை சிறக்கக் காரணம் எதுவோ?

சொல்லா? பொருளா? சுவைமிகுந் ததுவே
சொல்வீர் புலவீர்! சிந்தனை செய்தே!

சுவைபடச் சொல்க என்பதே வழக்கு!
சுவைபடப் பொருளுரை என்பதா வழக்கு?

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
அத்தகு சொல்லின் அருஞ்சிறப் புகளை
இத்தகு மவையில் இனிதாய் உரைப்பேன்

பெயரே வினையே இடையே உரியே
எனநால் வகைமை உடைய தாகும்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
எனவும் நான்கு வகைமைய தாகும்
ஒருசொல் கூறிப் பலபொருள் செய்தலும்
பலசொல் கூறி ஒருபொருள் செய்தலும்
திணைபால் இடமொடு காலம் உணர்த்தலும்
ஆகு பெயரும் வேற்றுமைப் படுத்தலும்
தோகை விரிக்கும் மயிலைப் போலத்
தொகைவிரி எனஇரண் டாக நிற்றலும்
சொல்லாண் மையின் சொக்கும் அழகே!

ஐயன் வள்ளுவன் அழகாய் உரைப்பார்
கேட்டார்ப் பிணிக்கும் தகைமை உடையதும்
கேளாரும் விரும்ப மொழிவதும் சொல்லே

சொல்லுதல் எங்ஙனம் சிறக்கும் என்றால்
சொல்லலின் குற்றம் நீக்கும்போதே
நின்று விளக்கம் வேண்ட விடுத்துக்
குன்றக் கூறலும் குன்றக் கூற
வேண்டிய பொருளை விரித்துக் கூறலும்
தாண்டிய பின்னும் தடுத்து மீண்டும்
கூறிய கூறலும் கொண்டன விடுத்து
மாறு கொள்ளலும் வழுவுடைச் சொல்லை
ஏற்றிக் கூறலும் இடந்தடு மாறலும்
போற்றத் தகாதன பொதித்து வைத்தலும்
ஒன்றை விடுத்து வேறொன்று கூறலும்
தொடங்கும் போது சரியே முடிவைத்
தொடும்போ(து) அழிந்து போதலும் தோன்றும்
சொல்லோ பயக்கா திருத்தலும் ஆகிய
பத்துக் குற்றம் பார்த்து நீக்கிச்
சுவைபடச் சொல்வர் சொல்லேர் உழவர்

பின்னும்

வெல்லும் சொல்லே உலகில் இலையெனச்
சொல்லும் அழகைத் தொகுப்பர் பத்தாம்
சுருங்கக் கூறலும் விளங்க வைத்தலும்
அருஞ்சொல் அறைய இன்பம் பயத்தலும்
நல்ல சொல்லை நாட்டலும் ஓசை
வெல்லம் போலே வேட்கை மிகுத்தலும்
நுண்மையும் நுவலும் முறைமையும் உலகம்
அண்ணுதற் கெளிதாய் அமைதலும் சிறந்த
பொருளைத் தருதலும் பொருள்பொதி சான்றோர்
அருள்வழி வைத்தலும் ஆகிய பத்தே

அவ்வழிச் சொல்லின் அழகை ஆய்ந்து
செவ்வழி செய்வார் செந்தமிழ்ப் புலவோர்
சொற்கள் பலவாய்க் கிளைத்துக் கிளைத்துச்
சொக்க வைக்கும் அழகைக் காண்பீர்
பொருளோ பலவாய்க் கிளைக்கக் கிளைக்கப்
பொருண்மை சிதைந்து புதைந்தே போகும்

சொல்ல வந்த கருத்தை மட்டும்
சொல்ல மெல்ல மறையும் அதனை
அழகை ஏற்றி அலங்கரித் தாலோ
பழகுதற் கினிமை பன்னெடுங் காலம்
அழியா திருக்கும் அதனை எண்ணி
எதனுள் புகுத்தி எப்படிச் சொல்ல
விதமாய் விளையும் உலகில் நிலைக்கும்
என்றாய்ந்(து) உரைத்தவை எழிலார் சொற்கள் 5

வில்லி னின்று பறக்கின்ற
   வீரி யங்கொள் அம்பைப்போல்
சொல்லைத் தேர்ந்து சொக்கிப்போய்ச்
   சுவையாய் உரைக்கும் புலவர்தம்
சொல்லால் இன்பம் கொண்டாடச்
   சுடராய் விளங்கும் உளக்கோயில்
எல்லை இல்லாப் பேரின்பம்
   எல்லாம் சொல்லால் அறிவீரே 6

பொருளில் எங்கே சுவையுளது?
   பொதிந்த பொருளை எடுத்துரைக்க
அருளும் சொல்லே! அஃதன்றி
   ஆக்கம் இல்லை அறிவீரே
மருளும் அருளும் யாவையுமிம்
   மனங்கொள் சொல்லின் துணையாலே
பொருளைத் தேடிச் செல்வோர்க்குப்
   பொருள்இல் பாட்டே முன்தோன்றும் 7

எழுத்தும் சொல்லும் இன்றி
   எப்படிப் பொருளு ரைப்பார்
எழுந்த சுவையா தென்றே
   எண்ணிப் பொருளைப் பார்த்தேன்
எழுந்த யாவும் சொல்லை
   எதிர்க்க வியலா துறையும்
அழுத்திச் சொல்வேன் ஐயா
   அழகு சொல்லே சொல்லே! 8

சொல்லை இடமாற்றிப் போட்டுச்
   சுற்றி விடச்செய்தால் போதும்
எப்படி?
கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப - வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை
இப்படிச்
சொல்லை இடமாற்றிப் போட்டுச்
   சுற்றி விடச்செய்தால் போதும்
இல்லை பொருளெங்கே என்பார்
   இறப்பார் பொருள்தேடி நாளும்
சொல்லைச் சீரமைத்து வைத்துப்
   சொக்கும் பொருள்கோளை வைத்துச்
சொல்லின் அரும்பெருமை ஏற்கும்
   சுழலும் புவிநாளும் ஐயா 9

பொருளில் விளங்கும் நயங்களினைப்
   பொதித்தல் சொல்லால் இயன்றிடுமா?
அருள்கூர்ந்(து) இந்தக் கதைகேளீர்
   அடர்ந்த காட்டில் இராமன்தான்
அருளும் குகனின் உள்புகுந்தான்
   அவனைத் தொடர்ந்த பரதன்மேல்
பொருந்தா திருந்து சினங்கொண்டு
   பொங்கும் குகன்சொல் கேட்பீரே 10

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ
தோழமை என்றுஅவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ

அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
உய்ஞ்சிவர் போய்விடி னாய்க்குக னென்றெனை ஓதாரோ

தகரப் பாட்டுக் கோர்தலைவன்
   தமிழைத் தாங்கி மகிழ்ந்தானே
அகர முதலாய் அவன்வாங்கி
   அகத்தில் ஏற்றி அழகாகப்
புகழும் வண்ணம் கவிசெய்தான்
   புலவன் சொல்லைக் கேட்போமா?
இகழ்தல் அவன்றன் போக்காமே
   இனிமை சேர்க்கும் சொல்லாலே 11

கருக்கூடி அப்பொழுதே பொழியும் மேகம்
   காளமேகம் மதுமேக மயக்கந் தானே
ஒரு கூத்தைக் கேட்டீரோ நச்சுப் பாம்பை
   ஒருகயிறாய் ஆக்கித்தான் பூண்ட நாதன்
தெருத்தெருவாய்ப் பிச்சையெடுத்து உண்ணச் சென்றும்
   தேர்ந்தெடுத்த காளம்மேளம் குஞ்ச ரத்தோ(டு)
இருந்தானே எனவஞ்சப் புகழ்ச்சி செய்தான்
   இதுவன்றோ சொல்வன்மை இன்பம் இன்பம் 12

தாதி தூதோ தீதென்றும்
   தத்தை தூ(து)ஓ தாதென்றும்
தூதி தூதும் ஒன்றென்றும்
   துத்தி தத்தாதே யென்றும்
ஆதி வரதன் அறைந்(து)ஆனார்
   அழகு காள மேகமென
நீதி உரைப்பீர் ஐயாவோ
   நிறைந்த சொல்லே சிறப்பென்று 13

நன்றி நன்றி எனக்கு இந்த
   நல்ல வாய்ப்பைத் தந்தமைக்கு
நன்றி நன்றி ஈரோட்டுத்
   தமிழச் சங்கப் பேரவைக்கு
நன்றி நன்றி பாலன்ஐயா
   நன்றி நன்றி வரதன்ஐயா
பொன்றும் வரையில் தமிழ்பேசிப்
   பொத்திப் பொத்திக் காப்போமே 14

Oct 14, 2019

சோலை விழா - திருவண்ணாமலை - கவிப்பொழிவு

கவிஞர் தமிழகழ்வன்

தமிழ் வாழ்த்து

மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி! 1

அவையடக்கம்

நன்கவி நற்கவி நாடியோர் முன்பென்
புன்கவி புகுமெனப் புகுந்தனன்; புலவோர்
இன்கவி இயற்றுவர்; எளிதினில் இயலா(து)
என்கவி இயற்றுவன்? எனைப்பொறுத் தருள்க 2

பைந்தமிழ்ச் சோலை

தமிழண்டா தமிழண்டா என்று சொல்வார்
தமிழ்மொழியை அண்டாவில் தூக்கிப் போட்டுத்
தமிழ்வளர்ப்போம் தமிழ்வளர்ப்போம் என்று சொல்லும்
தமிழறிஞர் பலருண்டு தமிழ்நன் னாட்டில்
அமிழ்தான தமிழ்மொழியின் வளமை யான
அடுக்கடுக்காய்க் காய்நகர்த்தி ஆடும் ஆட்டம்
இமைப்பதுவும் நொடிப்பதுவும் கணக்கா கும்மே
இதையறியான் எங்ஙனந்தான் தமிழ்வளர்ப்பான் 3

எழுத்தசைந்து சீராகித் தளைந்து நிற்கும்
எண்ணியெண்ணி அடிநிற்கும் தொடுத்த மாலை
கழுத்துக்குப் புகழ்சேர்க்கும் கவினைச் சேர்க்கும்
கணக்கறியா தியற்றுவது கவிதை யாமோ?
பழுத்ததமிழ் பாதைமாறிப் போதல் நன்றோ?
பாக்கள்ளைக் குடிப்பதற்குப் பணம்வேண் டும்மோ?
விழுவதுவோ? வீணரெனத் திரிதல் நன்றோ?
விருப்புற்று மரபினிலே கவிதை செய்வோம் 4

எனவெழுந்த பைந்தமிழச் சோலை இஃதே
எழிலாகப் பாவியற்றப் பயிற்சி தந்து
கனவுகளை நிறைவேற்றும் செம்மை செய்யும்
கடிதினிலே பாட்டியற்ற வைக்கும் சந்தம்
மனத்தினிலே பதிப்பிக்கும் வண்ணப் பாட்டு
மனம்பொருந்தப் பாடவைக்கும் மகிழ்ச்சி கூட்டும்
தனனதன தானான தடங்க லின்றித்
தந்துசுவை கூட்டுமுயிர் வாழ்வி னுக்கே 5

வாய்க்க ரும்பது வாய்தவக் கோளது
வாய்த்தி கழ்ந்திரு மாமழை மாமலை
வாய்க்கொ ழுந்தது மாமணி வாய்த்திரு
வாய்ச்சிந் துந்தமிழ் வானெனுஞ் சோலையே! 6
நின்றது நெஞ்சினில் நேயம்; விட்டெனைச்
சென்றது துயர்வழித் தேங்கல்; புலவரின்
மன்றினில் நிற்குமிம் மாயம் செய்தது
கன்றுளங் காட்டிய காவின் இனிமையே 7

இனியன வாகிய ஈயுஞ் சோலையே
நனிவளர் செம்மையை நல்குஞ் சோலையே
பனிநுனி நெடும்பனை பார்க்கும் சோலையே
தனித்திறம் கொண்டுளஞ் சாரும் சோலையே 8

பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மாலை
பார்ப்பவர் யாரையும் ஈர்க்கும்
ஐந்திலக் கணத்தின் அகத்தினை யெளிதில்
அறியநல் உய்வழி காட்டும்
நைந்துவி டாது செய்யுளின் திறத்தை
நானிலத் துக்குணர்த் தும்மே
பைந்தமிழ்ச் சோறு பகிர்ந்துணு மாறு
பண்பொடு படைத்துயர் வோமே! 9

நாடு நெஞ்சினை நாடிவி ரைந்தரு
நாவில் நேர்நிரை நாட்டியம் ஆடுயர்
சூடு பாமலர் சுந்தரத் தேனிலா
சுற்றும் பூமியில் கால்பட வேநிலார்
வீடு பேறளி வித்தக மாமறை
விந்தைப் பேரொளிப் பைந்தமி ழாமறை
காடு; செய்யுளச் செய்யுடம் சோலையே
கன்று போலுளம் கொண்டவன் மாலையே! 10

சோலையை ஆற்றுப்படுத்தல்

நற்றமிழ்ப்பாச் சுமந்துவரும் நல்லுள்ளத் தென்றலிடம்
"பொற்றமிழில் பாட்டிசைக்கும் புலவன்யார்?" எனக்கேட்டேன்
"அற்றமிலாப் பைந்தமிழின் சோலையென ஒன்றுண்டு
சிற்றுளியாய் வந்தாரும் சிறப்பாகப் பாவடிக்கக்
கற்பிக்கும் பெருஞ்செயலில் கனிவுதனைக் கனியாக்கி
நற்றுணையாய் நிற்கின்ற நல்லதமிழ்ச் சோலையிலே
கற்றுவரும் கனியாகக் கவிஞர்கள் பலருண்டு
முற்றுமுணர்ந் தாயாநீ முகிழ்ப்பவெலாம் எங்கிருந்து?" 11

பைந்தமிழ்ச்சோலை வாழ்த்து

நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே! 12

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே 13

காவலர் பூமி வாழ்க கதிரவன் மதியம் வாழ்க
நாவளர் சொற்கள் வாழ்க நகையுளங் கற்க வாழ்க
காவளர் கவிஞர் வாழ்க கனிந்துள கவிஞர் வாழ்க
பாவலர் மாலை வாழ்க பைந்தமிழ்ச் சோலை வாழ்க 14

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9 (என்னதவம் செய்தோம்)

கவியரங்கத் தலைமை :
மரபு மாமணி பாவலர் மா. வரதராசன்
முன்னிலை :
பாவலர் கருமலைத் தமிழாழன்


தமிழ்வாழ்த்து

எழுதி எழுதிக் குவித்தாலும்
என்றன் ஆவல் தீராதே
விழுது பலவாய் விழுந்திருந்து
வீற்றி ருக்கும் ஆல்போலப்
பழுதே இல்லாப் பைந்தமிழே
பாரில் சிறந்து வாழியவே
விழுமம் துடைக்கும் புலவர்கள்
வெற்றி பெற்று வாழியவே

தலைமை வாழ்த்து

பட்டி தொட்டி எவ்விடத்தும்
பாட்டுத் தொட்டி கட்டியதில்
இட்டுக் கட்டி இன்னிசையை
ஈட்டித் தந்தாய் வாழியவே
சொட்டும் பாக்கள் குடிக்கவந்த
சொக்கிப் போகும் சுரும்பானேன்
கட்டித் தேனே வீரியமாங்
காட்டுத் தேனே வாழியவே

முன்னிலை வாழ்த்து

தமிழாழம் காண்கின்ற ஆவ லாலே
தரணிக்குத் தொண்டியற்றும் நல்ல நோக்கத்(து)
அமிழ்தான செந்தமிழை அகத்தில் ஏற்றி
அழகான பாக்களினால் மகிழ்விப் பாரே
தமிழ்க்கடலில் பலகலங்கள் செலுத்து வாரே
தமிழ்முத்தம் தானெடுக்க எண்ணி ஆழ
அமிழ்ந்திருக்கும் தமிழாழன் ஐயா வாழ்க
அகிலத்தில் நின்பெருமை வாழ்க வாழ்க

அவையடக்கம்

காவளர்த்துக் கனியீயும் கண்கண்ட தெய்வமெனும்
மாவரத ராசர்தம் மாண்புடைய தமிழவையில்
பாவடையைச் செய்தளிக்கப் பகுத்துள்ளம் கொணர்ந்தேனே
பாவளங்கொள் அவையோரே பாவாடை பொறுத்தருள்வீர்

என்னதவம் செய்தோம்

யான்பெரியன் யான்கவிஞன் யானே எல்லாம்
யாதொன்றும் என்னாலே இயலும் என்று
மீன்போலே மின்னுகின்ற வீறு கொண்டு
மேதினியில் கவிஞர்கள் பலரும் உண்டு
நானென்னும் ஆணவத்தில் ஆடு கின்ற
நாவினிக்கத் தான்பாடும் கவிஞர் உண்டு
தான்கொண்ட முயலுக்கு மூன்றே கால்தான்
தடுமாறும் வாழ்வினிலே வீழ்ந்தார் அந்தோ

இந்நிலையில் கற்பதனை மறந்தார் கூடி
இறவாத புகழுடைய இன்ற மிழ்க்குச்
செந்நிலையைச் சேர்க்கின்றோம் என்றே எண்ணிச்
செருக்கோடு சீர்குலைத்தார் தளைம றந்தார்
வந்தெழிலைக் கூட்டுகின்ற தொடைம றந்தார்
வழக்கொழித்தார் வகையின்றிப் புதிதாய்ச் செய்தார்
நந்தமிழின் அருமையினை அறியா தாரால்
நலிவுற்ற செய்யுள்கள் வருந்தும் அன்றே

நைந்திருக்கத் தானாநம் செய்யுள் இந்த
நானிலத்தைத் திருத்துவதோ எவ்வா றென்று
செய்வதறி யாதேங்கிச் சிந்தை செய்தார்
செவ்வழியைக் கண்டறிந்தார் வரத ராசர்
கையற்றுக் கதறுகிற நிலையோ மாறிக்
கனிந்திருக்கும் பூத்திருக்கும் காய்த்தி ருக்கும்
பைந்தமிழச் சோலையிது பிறந்த வாறு
பைங்கனியின் சாறுதனைப் பிழிந்து தந்தார்

பல்வகையாய்ப் பாக்களுண்டு பாக்க ளோடு
படர்ந்திருக்கும் கொடியாக இனங்க ளுண்டு
சொல்வகைமைச் சுவையுண்டு சிந்தும் பாக்கள்
சோர்வகற்றி உயிர்த்திருக்க வைக்கும் சந்தத்(து)
இல்லத்தில் புகுத்தியதன் பின்னே வண்ணம்
எழில்சேர்க்கக் கற்பிப்பார் எல்லை இல்லாச்
செல்வங்கள் குவிந்திருக்கும் குதிரும் உண்டு
செழித்திருக்க என்னதவம் செய்தோம் யாமே
              - பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்

Jun 17, 2019

சங்க காலக் காதலும் எங்கள் காலக் காதலும் - கவியரங்கம்

கவியரங்கத் தலைமை 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்த்தாய் வேண்டல்

தெங்கிள நீராய்த் தித்தித் திருக்கும் 
    தண்ணிய செம்மொழியே
திங்களாய்ப் பாரில் தண்மை யொளியைத் 
    திகழ்ந்திடச் செய்பவளே
அங்கைக ளெடுக்குஞ் செயல்கள் விளங்க 
    அருள்மழை தான்பொழிவாய்
பொங்குநல் லுள்ளம் போகும் வழியின் 
    பொருளெனத் தான்வருவாய்!

முனைவர் அர. விவேகானந்தனார் வாழ்த்து

பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும் 
   பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத் 
   தீங்கனி தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால் 
   உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகா னந்தர் வாழ்க 
   மேவிய புகழோடே!

அவையடக்கம்

தேமொழி பாடத் தேடி வந்தேன் 
   தேர்வில் தூங்கிவிழும்
ஆமொழுங் கில்லா அறியா தவனாய் 
   அவையை நாடிவந்தேன்
தூமொழி யாக விளங்க வேண்டித் 
    தோய்ந்த சொல்லாலே
யாமொழி வேனோ? குற்றம் பொறுப்பீர் 
    யாதென் றெனக்குரைப்பீர்!

தொடக்கக் கவிதை

எங்கும் இயற்கை வளங்கொஞ்ச 
   எதிலும் இயற்கை மணம்வீசப்
பொங்கும் உளத்தால் தான்மகிழ்ந்து 
   புதுமை புகுத்தி அறிவியலும்
அங்கங் கேதான் புதைத்துவைத்தார் 
   அழகிய தமிழால் அவையியற்றி
எங்கும் தமிழைத் தான்பரப்பி 
   இனிமை யோடு வாழ்ந்திருந்தார்

சங்க காலத் தமிழர்கள் 
   சார்ந்த இயற்கை தனைப்போற்றிப்
பங்கு பிரித்தார் நிலமைந்தா
ம்
  பழகிய பூவைத் திணையென்றார்
அங்கங் கேகாண் பொருட்களினை 
   அழகாய் அவற்றுக்(கு) அடுக்கிவைத்தார்
இங்ங னந்தான் இயற்கையினோ(டு) 
   இயைந்த வாழ்வு வாழ்ந்தாரே

குறிஞ்சி என்றார் புணர்ந்திருந்தார் 
   கூட்ட மாக நிரைமேய்க்கும்
குறியாம் முல்லை காத்திருந்தார் 
   குலத்தாள் குடியி ருக்கையிலே
நெறியி லாது திரிந்தவனால் 
   நெருடும் ஊடல் மருதந்தான்
அறிவீர் இரங்கல் நெய்தலிலே 
   அவலம் பிரிதல் பாலையிலே

எங்கள் காலம் இணையத்தில் 
   எளிதாய்க் காதல் வளர்க்கிறதே
இங்கே எண்ணும் வேகத்தில் 
   எடுத்துச் சொல்ல முடிகிறதே
மங்காக் காதல் காலத்தால் 
   மாற்றம் கொண்ட வையெண்ணி
இங்கே உரைக்க ஈரிருவர் 
   எழுந்தார் அவர்சொல் கேட்போமே

1. ஜெய்சங்கர் ஐயா

செம்மொழித் தாயைப் போற்றித் 
   தென்னகப் பெருமை யாவும்
மும்மழை போலே வந்து 
   முகிழ்த்திரு சொல்லால் பெய்து
செம்மையாய்த் தமிழைப் பாடும் 
   ஜெய்சங்கர் ஐயா வருக
இம்மையில் இன்பம் கூட்டும் 
   இன்கவி தருக தருக

பெருமை தமிழ்க்குத் தேடியளி 
   பெரிய ஆசா னாய்த்திகழும்
திருவா ளர்க்கு வாழ்த்துரைப்பேன் 
   திறமை யாவும் தான்திரட்டி
அருமை யான நடையினிலே 
   அழகாய்க் கவிதை தான்செய்தார்
இருமை யுலகும் இவர்புகழை 
   எண்ணி வியக்கும் வாழியவே!

2. இரேவதி முருகதாசு ஐயா

படைக்கும் கவிதை ஒவ்வொன்றும் 
   பச்சை மரத்துப் பட்டாணி
தடைக்கல் தகர்த்துத் தடமாகத் 
   தாங்கும் சொற்கள் தேர்வாழ்க்கை
இடைஞ்சல் எதுவும் நெருங்கிடுமா? 
   இரேவதி முருக தாசையா
மடையைத் திறக்க வாருங்கள் 
   வாய்பார்த் திருப்போம் ஆசையா

அடடா அடடா இதுகவிதை 
   அறியா தவர்க்கும் இதுபுரியும்
தொடடா எல்லை என்றுள்ளம் 
   தொட்டுப் பார்க்கும் செங்கவிதை
அடையான் வீட்டுப் பேற்றின்பம் 
   அடைவான் அழகாய்க் கவிதந்தீர்
மடையைத் திறந்த சொற்களுக்கு 
   மகுடம் சூட்டி வாழ்த்துவமே

3. அமலா அம்மா

தமிழால்தான் தழைப்போம் என்று 
   தகுமாற்றை எடுத்துக் காட்டும்
தமிழ்த்தேனீ! தமிழே மூச்சாய்த் 
   தாங்குதலை எண்ணி எண்ணி
அமிழ்தனைய கவிதை செய்யும் 
   அமலாம்மா வருக வருக
குமிழுடைத்துக் குவல யத்துக் 
   கொடுப்பீரே கவிதை முத்தே

முத்துக் கவிதை நயத்தோடு 
   முகிழ்ந்த கவிதை பன்மடங்கு
சத்துக் கவிதை சரித்திரத்தைச் 
   சாற்றும் கவிதை தமிழுள்ளச்
சொத்துக் கவிதை சுகமளிக்கும் 
   சொக்க வைக்கும் கவிதையிது
வித்துக் கவிதை தனைத்தந்தீர் 
   வியந்தே உலகம் வாழ்த்திடுமே

4. மோகன் ஐயா
எண்ணத் தெழுந்த முத்துகளை 
   எளிய தமிழில் ஏற்றிவைத்துப்
பண்ணுக் கேற்பப் பெய்ததற்குப் 
   பட்டங் கட்டிப் பார்ப்பதுடன்
வண்ணம் தந்து வடிவமைத்து 
   வனப்புக் கொஞ்சத் தருவாரே
அண்ணல் மோகனத் தமிழ்நெஞ்சர் 
   ஐயா வருக கவிதருக

மின்னும் கவிதை மோகனத்தால் 
   மிரட்டும் கவிதை சொல்நயத்தால்
கன்னல் கவிதை கருத்துகளைக் 
   கருவாய்த் தாங்கும் கனிக்கவிதை
பொன்னும் பொருளும் ஈடாகாப் 
   போற்றற் குரிய நற்கவவிதை
இன்னல் நீக்கும் கவிதந்தீர் 
    இனிமை யோடு வாழியவே!

முடிவு கவிதை
காலை மாலையென் றறியாது 
   காதல் மொழியினில் உளகாள்வர்
சோலை போலவர் மனமகிழ்ந்து 
   சொக்கிக் காதலிப் பார்பாரீர்
காலம் மாறியும் மாறாத 
   காதல் மொழியினைக் கேளுங்கள்
கோலம் மாறியும் மாறாது 
   கொள்ளும் காதலைப் பாருங்கள்

சார்த லுக்காய்க் காத்திருப்பார் 
   சங்க காலக் காதலர்கள்
ஊரென் சொல்லும் உறவுகளும் 
   உரைப்ப தென்னை எனநினைக்கும்
பேரறி யேனே என்பாளே 
   பேதை யவனுக் காயேங்கி
ஊரறி யாமல் உடனேகி 
   ஒன்றி வாழ்வார் காதலரே

கடிதினில் காதல் வந்திடுமே 
   கருதி யவனை யுளங்கொள்வாள்
அடிசுடும் பாதம் அதுகாணாது 
   அவனோடு ஏகினள் அவளெங்கே
அடிசுட நடந்து தாயேங்கி 
   அவளைத் தேடிச் செல்வாளே
மடிச்சுமந் தாளின் மனக்கலக்கம் 
   மயக்கும் துயரம் தனைத்தருமே

காதல் நிகழும் களமெண்ணிக் 
   கணக்காய் வாழ்ந்தார் அக்காலம்
ஏதம் இல்லாக் காதலுக்காய் 
   ஏங்கி நிற்பார் எக்காலும்
காதங் காத மாய்ப்போகும் 
   கணக்கும் உள்ள(து) எக்காலும்
காதல் மட்டும் மாறாதே 
   காலம் மாறிப் போனாலும்

Feb 16, 2019

ஆசுகவிச்சுழல்

பைந்தமிழ்ச்சோலையில்  ஆசுகவிச்சுழல் என்னும் இணைய ஆசுகவியரங்கம் 10.02.2019 அன்று நடைபெற்றது.

முதல் அமர்வு:
தலைவர்: மரபுமாமணி பாவலர் மா வரதராசன்
தலைப்பு: அன்பைப் பொழிகுவாய் நன்னெஞ்சே!

கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

பெரும்புகழ் சேர்க்கும் அன்பே
பேதைமை களையும் அன்பே
அரும்பிய குழந்தை காட்டும்
அரும்பெனும் முறுவல் கண்டே
திருந்துதல் வேண்டும் வையம்
செழிப்பினைக் கூட்டும் உள்ளச்
செருக்கினை அடக்கும் வெள்ளப்
பெருக்கெனத் திகழும் அன்பே 1

அன்பிலா உள்ளத் தாலே
அவலமே மிஞ்சும் மிஞ்சும்
இன்பிலா வாழ்க்கை எங்கே
எதனையும் ஈயார் தேடித்
துன்பமே சூழ வாழ்வார்
துணையென யாரு மில்லார்
நன்மைகள் சேர்க்க மாட்டார்
நானிலம் போற்ற வாழார் 2

வாழ்க்கையென் சக்க ரத்தில்
வண்டியை ஓட்டு தற்குக்
காழ்ப்புகள் நீக்க வேண்டும்
காதலைப் பொழிவ தற்குப்
பாழ்படச் செய்விக் கின்ற
பணமது வேண்டா வேண்டா
ஆழ்மனம் சொல்லும் உண்மை
அன்பொடு வாழ நன்மை 3

நன்மைசேர்த் தின்பம் நல்கும்
நயமிகு வாழ்வை நல்கும்
என்பையும் பிறருக் கீவார்
இணையிலா அன்பு கொண்டார்
வன்மைசேர் பாலை தன்னில்
வற்றிய மரந்த ளிர்த்தல்
அன்பகத் தில்லா வாழ்க்கை
அறிகுவீர் அகிலத் தோரே 4
                          ★★★

Jan 15, 2019

சோலைக் கவியரங்கம் - 8 இப்படித்தான் விடியும்.

கவியரங்கத் தலைவர்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

கவியரங்கத் தொடக்கக் கவிதை

தமிழ் வாழ்த்து

புலவர்க்குத் தனையீந்த பொற்றமிழே! ஊற்றமிழ்தே!
சொலவியலாச் செம்மையினைத் தொண்டுமுதல் கொண்டுள்ள
பலகலைகள் வளர்த்தெடுத்துப் பன்னெடுங்கால் சிறப்பாகத்
தலைமுறையைத் தழைக்கச்செய் தண்டமிழே! வாழியவே!

சோலை வாழ்த்து

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே

பைந்தமிழரசு மரபு மாமணி 
பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து

மாவரத மாமணியே மாங்காட்டுத் தமிழ்முனியே
பாவரத்தைத் தருகின்ற பருகுந்தேம் பாவணியே
தா’வரத்தை’ எனக்கேட்க நாவளரும் முன்பேநீர்
ஆவலினைக் கூட்டியுயிர் அரும்பசிக்குச் சோறூட்டி
‘நீவளர்க’ எனவந்து நிற்கின்ற தனிப்பெருமை
யாவளத்தால் யாமுரைப்பேன்? எவ்வாறென் உளமுரைப்பேன்?
பாவளர்க! நிலம்வாழப் பன்னெடுநாள் பைந்தமிழின்
காவளர்க! நலம்வாழ்க! கனியுள்ளம் வாழியவே!

அவையடக்கம்

பேரறி வுடையன் என்றெண்ணிப்
   பேதைமை செய்யும் மூடன்போல்
சீரறி வுடைய பெரியோர்முன்
   சிற்றறி வுடையன் வாய்திறந்தேன்
காரறி வேயென் அறிவாகும்
   கருத்தினில் கவியில் பிழைத்தாலோ
பேரறி வாளர் பொறுத்தருள்க
   பிழைகளைந் தென்னை வளர்த்தருள்க

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து

அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை
... ஐயன் வள்ளு வன்போற்றி
வழங்குதல் கண்டு வரவேற்போம்
... வருக வருக புத்தாண்டே

இன்பம் பொங்கும் புத்தாண்டோ
... இரண்டா யிரத்தோர் ஐம்பஃது
முன்னோர் போற்றி வாழ்த்துவமே
... முறைமை போற்றி வாழ்த்துவமே

பழகு செய்யுள் அக்காலப்
... பழமை போற்று! பொங்கட்டும்
வழங்கு செய்யுள் இக்காலப்
... புதுமை சாற்று! பொங்கட்டும்

பொங்க லோடு புத்தாண்டு
... போற்றிப் பாடி வாழ்த்துவமே
எங்கும் செய்யுள் நிறையட்டும்
... இன்பப் பொங்கல் பொங்கட்டும்

கவியரங்கத் தலைமைக் கவிதை

புவிநிலவும் நிலைமை சொல்லிப்
... புதுமையினைப் படைக்க வேண்டிக்
கவியரங்கம் வந்தோர் வாழ்க
... கவியின்பம் சுவைப்போர் வாழ்க
குவித்திருக்கும் குப்பை யன்ன
... கொடுந்துயரம் போக்கி வாழத்
தெவிட்டாத தமிழைக் கேட்போம்
... செவியேறத் தமிழைக் கேட்போம்

நல்லெழுச்சி உள்ளத்தில் நிகழ வேண்டும்
... நல்லவொரு குமுகாயம் மலர வேண்டும்
நல்லதமிழ் செந்நாவில் ஏற வேண்டும்
... நாடுநம தென்றெண்ணி வாழ வேண்டும்
வல்லவனாய்ச் செய்செயலில் திகழ வேண்டும்
... மண்காக்கும் வளம்காக்கும் மானம் வேண்டும்
பொல்லாத செயல்யாவும் அழிய வேண்டும்
... பொன்னுலகம் எனுமாறு போற்ற வேண்டும்

அறமில்லாச் செய்கையினைச் செய்ய வேண்டா
... ஆற்றலினை உள்ளொளித்துத் திரிய வேண்டா
சிறைப்பறவை எனும்நிலைமை நமக்கு வேண்டா
... செறுத்துமனம் வெறுத்தொதுக்கித் திரிய வேண்டா
வறண்டிருக்கும் பாலையென வாழ்க்கை வேண்டா
... வன்முறைகள் ஒருநாளும் வேண்டா வேண்டா
கறுத்திருக்கும் உளம்வேண்டா கவிதை செய்வோம்
... கனவெனவே இருப்பவற்றை நனவாய்ச் செய்வோம்

எப்படித்தான் விடியுமென எண்ணி எண்ணி
... எழுந்தவுளத்(து) ஆதங்கம் எடுத்துக் கொட்டி
இப்படித்தான் விடியுமெனின் விடிவெ தற்கோ?
... இப்படித்தான் விடிவதுவோ? தவறே அன்றோ?
இப்படித்தான் விடிவதுவே சரியே ஆகும்
... இப்படித்தான் விடியுமென இடித்து ரைப்பார்
இப்படியாய் இருபதின்மர் எழுச்சி பெற்றிங்(கு)
... எப்படித்தான் உரைக்கின்றார் எழுந்து கேட்போம்

கவியரங்க நிறைவு கவிதை

வாழ்த்து

அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
இன்பம் சூழத் துயர்தீர
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
நன்ன யங்கொள் நங்கவிஞர்
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
... விடியா நிலையும் உண்டு
விடையைத் தேடிப் போவோம்
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
படிக்காது பணியாது பண்படாது பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால்
... கால்வைக் கின்ற செயல்களிலே
வெற்றி பெற்று விடிவதுவும்
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
உற்ற உளத்துத் தன்மையினால்
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

நன்றி!

புவியறி வுறவே போற்றும் அறத்தைச்
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

Oct 9, 2018

கலையாத கனவுகள்

திருவள்ளுவராண்டு 2049 - புரட்டாசித் திங்கள் 21-ஆம் நாள் (07.10.2018) அன்று பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுவின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை - தொடக்க விழா இனிதே நடைபெற்றது. அவ்விழாவில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு யான் மொழிந்த கவிதை
கவியரங்கக் கவிதை - கலையாத கனவுகள்
தமிழ் வாழ்த்து
செந்தமிழ்த் தாயே! சீர்வளர் சேயே!
அந்தமில் இன்பே! ஆழ்ந்தகழ் அன்பே!
சிந்தியல் தொன்மை சேர்புகழ் செம்மை!
வந்தனை செய்வோம் வாழிய ஆண்டே!                                                  1
பைந்தமிழ்ச் சோலை வாழ்த்து
நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே!               2
பைந்தமிழ்ச் சோலை நிறுவுனர் மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து
மாமணியே! மாமா மணியே! பைந்தமிழ்ப்
பாமணியே! பட்டென்(று) ஒளிரும் சுடரே!
தாமமணி தனிப்பெருஞ் செம்மலே! என்றினி
யாமணியப் பட்டங்கள் தாமளித்தாய் வாழியவே!                               3
பைந்தமிழ்ச் சோலை திருவண்ணாமலைக் கிளைத் தலைவர் முனைவர் அர. விவேகானந்தன் அவர்கள் வாழ்த்து
அஞ்சிறைகொள் தும்பியை அங்கையில் படைத்தளிக்கத்
தஞ்சிறைகொள் எண்ணமெல்லாம் தயங்காமல் எடுத்தளித்து
விஞ்சிறைகொள் பேருருவ மேன்மைமொழிந் தார்முனைவர்
அஞ்சிறைகொள் விவேகத்தால் ஆனந்தர் வாழியவே!                         4
அவையடக்கம்
சிற்றெறும்பு வாயதனின் சிறியதோர் உயிரைப்போல்
கற்றிருப்புக் கொண்டுள்ளேன் கவிபாட வந்தேனே
பற்றுள்ள தமிழாலே படர்ந்துள்ள தமிழோரே
குற்றங்கள் பொறுப்பீரே குமரனுக்கு அருள்வீரே                                    5
கலையாத கனவுகள்
அறிவ(து) அறிவென அகழ்ந்தே அகழ்ந்தே
அறிவை அழிக்கிலா ஆய்தம் செய்க!                                                        1
அறிக இலக்கணம் அதற்கோர் பொருளை
அறிந்தோன் அறிவழி அறிக அறிக                                                             2
நித்தம் அறிவில் தெளிவது பெரிது
சித்தம் உணர்ந்து சிறத்தல் பெரிது                                                            3
பஞ்ச மின்றிப் பாத்தறிந் தேநாம்
வஞ்ச மின்றி வாட்டம் களைவோம்                                                            4
எண்ணுதல் எல்லாம் இயற்றல் ஆகா
எண்ணிய திண்ணிய இயற்றுவம் மேலா                                                 5
கல்லா மையைக் களைய முயலும்
நல்லாண் மையைக் கடைப்பிடிப் போமே                                               6
இழக்க வேண்டியன இன்னா தருவன
பழக்க வேண்டியன படிப்பும் பண்பும்                                                      7
செய்செயல் யாவும் அறிவின் பாலே
உய்வழி யாவும் உளத்தின் பாலே                                                               8
அகத்தே இருக்கும் அகப்பேய் தன்னைப்
புறத்தே தள்ளு புதுவழி நாடு                                                                       9
அங்காத் தால்தான் அகரம் பிறக்கும்
அறங்காத் தால்தான் வாழ்க்கை சிறக்கும்                                            10
தோண்டிப் புதைப்பினும் சோர்ந்து போகாது
மீண்டும் எழத்துடிக்கும் மின்னுளம் வேண்டும்                                     11
கனவின் வேலை கண்டதும் முடியுமோ?
நனவென மாற்றலே நன்முடி வாகும்                                                       12
இதயக் கனவுகள் என்றும் மின்னப்
புதைத்து வைப்பாய் புதுநம் பிக்கை                                                       13
நினைந்து நினைந்து கனவுகள் தம்மைப்
புனைந்து புனைந்து புகுத்துவாய் உள்ளம்                                             14
மண்கல் லெனவிம் மாநிலம் எண்ணலாம்
கண்கள் பனிப்பக் காண்க கனவு                                                              15
துடிப்பு மட்டுமே இதயம் வேண்டும்
நடிப்பும் தவிப்பும் நமக்கு வேண்டா                                                         16
செல்வழி தன்னில் முள்ளிருந் தால்தான்
செவ்வழி யாகும் தவங்களை யாதே                                                         17
முட்டுக் கட்டையைத் தட்டி எறிந்து
கட்டுன் கனவைக் காலம் நடத்தும்                                                           18
மாற்றம் வேண்டும் மாற வேண்டும்
ஏற்றம் இறக்கம் எணம்சொற் செயலே                                                   19
முன்வந்(து) எதிரெழு முனைப்பொடு செயல்படு
என்வந்(து) என்செயும் ஏற்றம் உனக்கே                                                   20
                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 17, 2017

சோலைகவியரங்கம் 4 - புதுமைப் பொங்கல் பொங்குக

கவியரங்கத் தலைமை
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளி முத்து 

கவிஞர் அழைப்பு - வள்ளி முத்து
பலமுள் இருக்குமாம் பால்முகமும் காட்டும்
சிலநாரொ ளிக்கவுள்தித் திக்கும் - புலவோரே.!
நேரகழ்ந்து பார்த்தால்தான் நீரறிவீர் தீம்பலவும்
வேறல்ல சுப்ரமணி என்று

குமிழுடையும் சொற்களின்றி கொள்கைசூழும் பாவேந்தி
அமுதமன்ன பாக்களூடே ஆழ்கருத்தை ஆளுகின்ற
தமிழகழ்வ.! அருங்கவியே.! தைப்பொங்கல் பாடவாரும்.!
இமிழ்கடலாய் ஒலிக்கட்டும் இதயமீதில் இப்பொழுதே.!


தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து, அவையடக்கம்
பைந்தமிழ்ப் பாவுக் கடிமைசெய்
   பாவலர் ஆவல் வாழியவே
பைந்தமிழ்ச் சோலைக் கவியரங்கப்
   பாவலர் தலைவர் வாழியவே
பைந்தமிழ்ச் சோற்றை உண்டுள்ளம்
   பண்படும் நோக்கம் வாழியவே
பைந்தமிழ் சிறிதே உண்டவன்யான்
   பார்வையில் பிழைதீர்த்(து) அருள்வீரே!

பழைமை காக்கும்
புதுமைப் பொங்கல் பொங்குக

எதுபுதி(து) என்றன் மனத்தினிலே
   ஏறிய வேதனை; இன்றுள்ளம்
வெதும்பி உழவன் சாகின்றான்
   விளைச்சல் இன்றி நமக்கெல்லாம்
புதுமைப் பொங்கல் என்பதென்ன?
   புதிதாய்ப் பொங்க என்னுளது?
புதுப்பா னையில் புத்தரிசி
   பொங்கு வோமா இவ்வாண்டு?         1

புதுப்பித்து வாழ்வோம் என்ற
   புதுப்பித்துப் பிடித்தல் நன்றே
புதுப்பித்தல் என்ப தென்ன?
   பழைமையை மறந்தி டாமல்
புதுப்பானை ஆனால் கள்ளோ
   பழையதே என்று சொல்லப்
புதுமையைச் செய்தல் தானே
   பழைமையை மறத்தல் ஏனோ?        2

பழைமை அறிய முயல்கின்ற
   பாதை தன்னில் புதுமையினைத்
தழைக்கச் செய்வோம் நல்லுலகைத்
   தாங்கி நிற்கும் தூணாவோம்
பழைமை என்றால் என்னென்று
   பகுத்துக் காணாப் புற்றனத்தை
வழமை யாகக் கொள்கின்ற
   மடமைத் தனத்தைக் கைவிடுவோம்    3

பழைமைப் பொங்கல் பொங்கிடுவோம்
   பழனம் பண்பட் டிடவியற்கை
வழங்கும் இன்ப வளங்காப்போம்
   மழைநீர் சேர்த்து மண்காப்போம்
உழவைக் காப்போம் உயிர்காப்போம்
   உலகைக் காக்க முன்னெழுவோம்
வழமை மறவா திருந்தேநாம்
   வரும்பின் தலைமு றைகாப்போம்        4