Jan 15, 2019

சோலைக் கவியரங்கம் - 8 இப்படித்தான் விடியும்.

கவியரங்கத் தலைவர்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

கவியரங்கத் தொடக்கக் கவிதை

தமிழ் வாழ்த்து

புலவர்க்குத் தனையீந்த பொற்றமிழே! ஊற்றமிழ்தே!
சொலவியலாச் செம்மையினைத் தொண்டுமுதல் கொண்டுள்ள
பலகலைகள் வளர்த்தெடுத்துப் பன்னெடுங்கால் சிறப்பாகத்
தலைமுறையைத் தழைக்கச்செய் தண்டமிழே! வாழியவே!

சோலை வாழ்த்து

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே

பைந்தமிழரசு மரபு மாமணி 
பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து

மாவரத மாமணியே மாங்காட்டுத் தமிழ்முனியே
பாவரத்தைத் தருகின்ற பருகுந்தேம் பாவணியே
தா’வரத்தை’ எனக்கேட்க நாவளரும் முன்பேநீர்
ஆவலினைக் கூட்டியுயிர் அரும்பசிக்குச் சோறூட்டி
‘நீவளர்க’ எனவந்து நிற்கின்ற தனிப்பெருமை
யாவளத்தால் யாமுரைப்பேன்? எவ்வாறென் உளமுரைப்பேன்?
பாவளர்க! நிலம்வாழப் பன்னெடுநாள் பைந்தமிழின்
காவளர்க! நலம்வாழ்க! கனியுள்ளம் வாழியவே!

அவையடக்கம்

பேரறி வுடையன் என்றெண்ணிப்
   பேதைமை செய்யும் மூடன்போல்
சீரறி வுடைய பெரியோர்முன்
   சிற்றறி வுடையன் வாய்திறந்தேன்
காரறி வேயென் அறிவாகும்
   கருத்தினில் கவியில் பிழைத்தாலோ
பேரறி வாளர் பொறுத்தருள்க
   பிழைகளைந் தென்னை வளர்த்தருள்க

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து

அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை
... ஐயன் வள்ளு வன்போற்றி
வழங்குதல் கண்டு வரவேற்போம்
... வருக வருக புத்தாண்டே

இன்பம் பொங்கும் புத்தாண்டோ
... இரண்டா யிரத்தோர் ஐம்பஃது
முன்னோர் போற்றி வாழ்த்துவமே
... முறைமை போற்றி வாழ்த்துவமே

பழகு செய்யுள் அக்காலப்
... பழமை போற்று! பொங்கட்டும்
வழங்கு செய்யுள் இக்காலப்
... புதுமை சாற்று! பொங்கட்டும்

பொங்க லோடு புத்தாண்டு
... போற்றிப் பாடி வாழ்த்துவமே
எங்கும் செய்யுள் நிறையட்டும்
... இன்பப் பொங்கல் பொங்கட்டும்

கவியரங்கத் தலைமைக் கவிதை

புவிநிலவும் நிலைமை சொல்லிப்
... புதுமையினைப் படைக்க வேண்டிக்
கவியரங்கம் வந்தோர் வாழ்க
... கவியின்பம் சுவைப்போர் வாழ்க
குவித்திருக்கும் குப்பை யன்ன
... கொடுந்துயரம் போக்கி வாழத்
தெவிட்டாத தமிழைக் கேட்போம்
... செவியேறத் தமிழைக் கேட்போம்

நல்லெழுச்சி உள்ளத்தில் நிகழ வேண்டும்
... நல்லவொரு குமுகாயம் மலர வேண்டும்
நல்லதமிழ் செந்நாவில் ஏற வேண்டும்
... நாடுநம தென்றெண்ணி வாழ வேண்டும்
வல்லவனாய்ச் செய்செயலில் திகழ வேண்டும்
... மண்காக்கும் வளம்காக்கும் மானம் வேண்டும்
பொல்லாத செயல்யாவும் அழிய வேண்டும்
... பொன்னுலகம் எனுமாறு போற்ற வேண்டும்

அறமில்லாச் செய்கையினைச் செய்ய வேண்டா
... ஆற்றலினை உள்ளொளித்துத் திரிய வேண்டா
சிறைப்பறவை எனும்நிலைமை நமக்கு வேண்டா
... செறுத்துமனம் வெறுத்தொதுக்கித் திரிய வேண்டா
வறண்டிருக்கும் பாலையென வாழ்க்கை வேண்டா
... வன்முறைகள் ஒருநாளும் வேண்டா வேண்டா
கறுத்திருக்கும் உளம்வேண்டா கவிதை செய்வோம்
... கனவெனவே இருப்பவற்றை நனவாய்ச் செய்வோம்

எப்படித்தான் விடியுமென எண்ணி எண்ணி
... எழுந்தவுளத்(து) ஆதங்கம் எடுத்துக் கொட்டி
இப்படித்தான் விடியுமெனின் விடிவெ தற்கோ?
... இப்படித்தான் விடிவதுவோ? தவறே அன்றோ?
இப்படித்தான் விடிவதுவே சரியே ஆகும்
... இப்படித்தான் விடியுமென இடித்து ரைப்பார்
இப்படியாய் இருபதின்மர் எழுச்சி பெற்றிங்(கு)
... எப்படித்தான் உரைக்கின்றார் எழுந்து கேட்போம்

கவியரங்க நிறைவு கவிதை

வாழ்த்து

அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
இன்பம் சூழத் துயர்தீர
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
நன்ன யங்கொள் நங்கவிஞர்
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
... விடியா நிலையும் உண்டு
விடையைத் தேடிப் போவோம்
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
படிக்காது பணியாது பண்படாது பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால்
... கால்வைக் கின்ற செயல்களிலே
வெற்றி பெற்று விடிவதுவும்
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
உற்ற உளத்துத் தன்மையினால்
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

நன்றி!

புவியறி வுறவே போற்றும் அறத்தைச்
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

No comments:

Post a Comment