Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

புனைபெயர்: தமிழகழ்வன்

படிப்பு: இளநிலை - தகவல் தொழில்நுட்பம், இளநிலை - தமிழிலக்கியம்

பணி: மென்பொறியாளன்.


கவிஞர் அழைப்பு (பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)

சுடராய் மின்னும் தமிழ்க்குதிரில் 

    சுழலும்  இவரின் பணியெல்லாம்  

இடர்கள் சுமையைக் கொடுத்தாலும்

    எழிலாய்  இதழ்கள் பளபளக்கும்

மிடுக்காய்க் கவிதை மழைபொழிவர்   

    விருப்பாய்க் கேட்க வாருங்கள்  

அடுக்காய்ப் பாக்கள் ஒளிரட்டும் 

    அரங்கம்  அதிர்ந்து நிற்கட்டும் 


பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் வருக 

தண்டமிழ்க் கவிதை தருக 


தமிழ் வாழ்த்து

அன்னைத் தமிழே! அமிழ்தாய் இனிப்பவளே!

உன்றன் அருளால் உயிர்வாழ்வேன் - என்றும்

இயக்குங் கதிரே! இருந்தென்றன் நாவில்

நயக்கும் படிமொழிய நாட்டு


ஆசான் வாழ்த்து

பாமணியால் பண்புடைத்தால் பைந்தமிழச் சோலையினால்

மாமனித! மன்னவனே! மாமணியே வாழியவே! 


கவியரங்கத் தலைமை வாழ்த்து

தூயநற் பாக்களால் துன்பம் துடைக்கின்ற

மாயஞ்செய் நிர்மலா மாதவத்தாள் வாழியவே!


அவையடக்கம்

தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்

யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!


கதவைத் திறந்து வை

எல்லை இலாத வெளியெங்கும் உம்முடைய

எல்லை விரித்தலுக் கேற்பனசெய் - முல்லை

அரும்பி அழகாகும் அம்மாலை போலத்

திருந்துக எண்ணத்தைத் தேர்ந்து 1


தேர்ந்தன எண்ணங்க ளாய்மட்டும் நில்லாமல்

ஆர்ந்தின்னும் சொல்லில் அமைத்தலொடு-நேர்ந்து

செயலாய் முறையாய்ச் செதுக்கத் திடமாய்

முயல்வாய் முயற்சி முதல் 2


முதலொடு திட்டம் முழுதும் வரைந்து

பதமாய்ப் பகுத்துப் பழக - விதமாய்க்

குறுக்கம் நெடிதெனக் கொள்க குறிக்கோள்

நறுக்கிச் செயலாற்று நன்கு 3


நன்கு விரிவுசெய் நல்லறிவை நானிலத்தின்

நன்மை விரிவுசெய் நாடியது - பொன்னும்

பொருளும் பெரிதுசெயப் போராடா தேயங்(கு)

இருளே இருக்கும் இரி 4


இரிப்பாய் முதலில் இதுவேண்டா இன்றென்

அரிப்பாய் அரிக்கும் பழக்கம் - சிரிப்பாய்த்

தொடங்கின்றே இல்லை தொடலாகா என்றும்

வடம்பிடிப்பாய் தேர்நகர வாய்ப்பு 5


வாய்ப்புகள் வாய்ப்பதில்லை வாய்திறவாதாருக்கு

வாய்ப்புகள் தானே வருவதல்ல - போய்ப்புகல்

போய்ப்புகல் இவ்விரண்டும் பொய்யாக்கா துன்வாய்ப்பை

ஏய்ப்புகள் ஏமாற்றி ஏறு 6


ஏற்றமே உன்வாழ்வில் எள்ளளவும் ஐயமில்லை

மாற்றம் மனக்கத வைத்திறக்க - ஊற்றாய்

உலக நலன்போற்றும் உன்றன் அறிவுக்(கு)

உலகம் தலைவணங்கும் ஓர்ந்து 7


ஓர்ந்துயரும் நோக்கம் உடைத்தாயி னுன்வாழ்வில்

ஆர்ந்துயரும் ஆக்கம் அதன்வழியில் – தேர்ந்தமைந்(து)

எல்லாம் இயங்குமுன் எண்ணம் வழிநடத்த

எல்லார்க்கும் நீயாவாய் எல். 8


வாழ்த்துப்பா ! (பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)

நல்ல வழிகள் பற்பலவும் 

    நயமாய் உரைத்தார் வெண்பாவில் 

வெல்லும் உலகில் வாழ்வதற்கு  

    விரைந்து வாய்ப்பைத்  தேடென்றார்  

எல்லை இலாத வெளியெங்கும் 

    எல்லை வகுத்துச் செய்யென்றார் 

சொல்லிச் சென்ற  செம்மலுக்குத் 

    தூவி விடுவோம் நல்வாழ்த்து  

No comments:

Post a Comment