உழைப்பினால் உண்டாகும் உள்ள நிறைவு
பிழைப்பினால் குற்ற உணர்வு 331
உழைப்பினால் ஈட்டும் உயர்செல்வம் என்றும்
தழைத்தோங்கும் மேன்மேலும் சார்ந்து 332
உழைப்பால் உயர்ந்தார்க்(கு) உறுதுயர் இல்லை
மழையெனச் சேரும் வளம் 333
உண்மை உளத்தோ(டு) உழைக்கப் பெருஞ்செல்வம்
வண்மை வழங்கும் வளர்ந்து 334
அறவழி ஓடி அரும்பணி யாற்றும்
நிறைவாளர் நீடுவாழ் வார் 335
உடலுழைப்பும் உள்ளத் துழைப்பும் விளையக்
கடன்படா வாழ்வமையுங் காண் 336
உழைக்கான் உடைமை உடைந்தழியும் காக்க
உழைப்பே உயர்ந்த உரம் 337
பிழைபடு நெஞ்சன் பிறன்பொருள் வௌவன்
தழைக்கா தழிவான் தளர்ந்து 338
பிழைப்பென்று சொல்லிப் பிழைசெய்யும் நெஞ்சன்
சிறப்பழிந்து செல்வான் சிறை 339
கையூட்டுப் பெற்றுக் கணக்கழிப் பாருக்கு
மெய்யூட்டும் காலம் வரும் 340
No comments:
Post a Comment