Oct 9, 2018

கலையாத கனவுகள்

திருவள்ளுவராண்டு 2049 - புரட்டாசித் திங்கள் 21-ஆம் நாள் (07.10.2018) அன்று பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுவின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை - தொடக்க விழா இனிதே நடைபெற்றது. அவ்விழாவில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு யான் மொழிந்த கவிதை
கவியரங்கக் கவிதை - கலையாத கனவுகள்
தமிழ் வாழ்த்து
செந்தமிழ்த் தாயே! சீர்வளர் சேயே!
அந்தமில் இன்பே! ஆழ்ந்தகழ் அன்பே!
சிந்தியல் தொன்மை சேர்புகழ் செம்மை!
வந்தனை செய்வோம் வாழிய ஆண்டே!                                                  1
பைந்தமிழ்ச் சோலை வாழ்த்து
நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே!               2
பைந்தமிழ்ச் சோலை நிறுவுனர் மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து
மாமணியே! மாமா மணியே! பைந்தமிழ்ப்
பாமணியே! பட்டென்(று) ஒளிரும் சுடரே!
தாமமணி தனிப்பெருஞ் செம்மலே! என்றினி
யாமணியப் பட்டங்கள் தாமளித்தாய் வாழியவே!                               3
பைந்தமிழ்ச் சோலை திருவண்ணாமலைக் கிளைத் தலைவர் முனைவர் அர. விவேகானந்தன் அவர்கள் வாழ்த்து
அஞ்சிறைகொள் தும்பியை அங்கையில் படைத்தளிக்கத்
தஞ்சிறைகொள் எண்ணமெல்லாம் தயங்காமல் எடுத்தளித்து
விஞ்சிறைகொள் பேருருவ மேன்மைமொழிந் தார்முனைவர்
அஞ்சிறைகொள் விவேகத்தால் ஆனந்தர் வாழியவே!                         4
அவையடக்கம்
சிற்றெறும்பு வாயதனின் சிறியதோர் உயிரைப்போல்
கற்றிருப்புக் கொண்டுள்ளேன் கவிபாட வந்தேனே
பற்றுள்ள தமிழாலே படர்ந்துள்ள தமிழோரே
குற்றங்கள் பொறுப்பீரே குமரனுக்கு அருள்வீரே                                    5
கலையாத கனவுகள்
அறிவ(து) அறிவென அகழ்ந்தே அகழ்ந்தே
அறிவை அழிக்கிலா ஆய்தம் செய்க!                                                        1
அறிக இலக்கணம் அதற்கோர் பொருளை
அறிந்தோன் அறிவழி அறிக அறிக                                                             2
நித்தம் அறிவில் தெளிவது பெரிது
சித்தம் உணர்ந்து சிறத்தல் பெரிது                                                            3
பஞ்ச மின்றிப் பாத்தறிந் தேநாம்
வஞ்ச மின்றி வாட்டம் களைவோம்                                                            4
எண்ணுதல் எல்லாம் இயற்றல் ஆகா
எண்ணிய திண்ணிய இயற்றுவம் மேலா                                                 5
கல்லா மையைக் களைய முயலும்
நல்லாண் மையைக் கடைப்பிடிப் போமே                                               6
இழக்க வேண்டியன இன்னா தருவன
பழக்க வேண்டியன படிப்பும் பண்பும்                                                      7
செய்செயல் யாவும் அறிவின் பாலே
உய்வழி யாவும் உளத்தின் பாலே                                                               8
அகத்தே இருக்கும் அகப்பேய் தன்னைப்
புறத்தே தள்ளு புதுவழி நாடு                                                                       9
அங்காத் தால்தான் அகரம் பிறக்கும்
அறங்காத் தால்தான் வாழ்க்கை சிறக்கும்                                            10
தோண்டிப் புதைப்பினும் சோர்ந்து போகாது
மீண்டும் எழத்துடிக்கும் மின்னுளம் வேண்டும்                                     11
கனவின் வேலை கண்டதும் முடியுமோ?
நனவென மாற்றலே நன்முடி வாகும்                                                       12
இதயக் கனவுகள் என்றும் மின்னப்
புதைத்து வைப்பாய் புதுநம் பிக்கை                                                       13
நினைந்து நினைந்து கனவுகள் தம்மைப்
புனைந்து புனைந்து புகுத்துவாய் உள்ளம்                                             14
மண்கல் லெனவிம் மாநிலம் எண்ணலாம்
கண்கள் பனிப்பக் காண்க கனவு                                                              15
துடிப்பு மட்டுமே இதயம் வேண்டும்
நடிப்பும் தவிப்பும் நமக்கு வேண்டா                                                         16
செல்வழி தன்னில் முள்ளிருந் தால்தான்
செவ்வழி யாகும் தவங்களை யாதே                                                         17
முட்டுக் கட்டையைத் தட்டி எறிந்து
கட்டுன் கனவைக் காலம் நடத்தும்                                                           18
மாற்றம் வேண்டும் மாற வேண்டும்
ஏற்றம் இறக்கம் எணம்சொற் செயலே                                                   19
முன்வந்(து) எதிரெழு முனைப்பொடு செயல்படு
என்வந்(து) என்செயும் ஏற்றம் உனக்கே                                                   20
                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment