வேலை செய்யச் சொல்வதிலே
மேலா ளர்போல் தேர்தகையாள்
வேலை வாங்கிப் பழகிப்போய்
வெட்டி யாய்ச்சும் மாதானே
காலை யாட்டிக் கொண்டமர்ந்து
காலைத் தேநீர் கேட்கின்றீர்
சேலை யாட்டிச் சொன்னாளே
தேங்காய் உரித்து வாவென்று
1. மட்டை
மட்டை யோடு கிடக்கின்ற
மாதேங் காயைக் கண்டயர்ந்தேன்
தட்டை யுருண்டை நீள்வடிவந்
தாங்கி யந்தத் தேங்காயோ
கொட்டி வைக்கும் நெற்குவியற்
குதிரைப் போலத் தோன்றியது
வெட்டுங் கத்தி கொணர்ந்தவளோ
வியந்த வாயை மூடென்றாள்
2. நார்
கத்தி யால்வெட் டும்போது
கதறி யழுத வத்தேங்காய்
சித்தங் கலங்கி நிற்பதுபோல்
சிதறத் துகள்கள் வீசியதே
குத்தக் குத்த நார்பெருக்கிக்
குதலை மொழியாய் உதிர்த்ததுவே
எத்து ணைப்பற் றுடைமையினை
எடுத்துக் காட்டி நிற்கிறதே
3. காய்
கடிய மட்டை நார்விலகக்
காட்டும் வடிவோ முரணாகும்
குடுமித் தலையும் முக்கண்ணும்
குதுக லச்சி ரிப்போடு
விடிய விடியத் தெருக்கூத்தை
விரித்துச் செல்லும் திறமுடைய
கடியங் கார னைக்கண்முன்
காட்டும் அழகில் மயங்கிநின்றேன்
4.
பலகா லங்கள் பண்பட்டுப்
பகலோன் விசையாற் பிணைப்புற்ற
உலக உருண்டை தன்னச்சில்
உழலும் காட்சி பொருந்திவரும்
சலச்ச லக்கும் ஓடையிலே
தாவிக் குதிக்கும் மீன்கொத்த
அலகை நீட்டும் கொக்கைப்போல்
அந்தக் குடுமி இருந்ததுவே
5. ஓட்டின் நிறமும் வரிகளும்
அடர்ந்த மஞ்சள் நிறமொக்கும்
அதன்மேல் வரிகள் பலவாகப்
படர்ந்தி ருத்தல் உலகவரை
படத்தில் வடக்குத் தெற்காகக்
கடக்கும் கோடு போன்றிருக்கும்
கடக்க முடியா தமர்ந்திருந்தேன்
நடக்கு மாவுன் னிடம்வேலை
நாவா னயந்தா ளிதோவென்றேன்
6. தரம்
கெட்டித் தன்மை யறிதற்கும்
கெடாத தன்மை யறிதற்கும்
தட்டிப் பார்த்தேன் தேங்காயைத்
தரமா யுளதே தண்ணீரின்
மட்டத் தளவை யறிதற்கும்
வாய்ப்பென் றாட்டிப் பார்த்தேனே
ஒட்டா வுறவு போலின்றி
ஓட்டி னுள்ளே ஒருகுடும்பம்
7. குடுமி
பல்ல டுக்குத் தோல்மட்டும்
பாரென் காயம் என்பதுபோல்
சொல்ல டுக்கிப் பாட்டெழுதிச்
சொக்க வைக்கும் புலவர்போல்
மெல்ல டுக்கு நார்கொண்டே
மேனி காட்டும் குடுமியதாம்
வல்ல பிடிப்புக் கேற்றதுவாய்
வாய்த்த பெருமை யென்சொல்வேன்
8. பருப்பு
ஒற்றை அடியே போதுமென
ஒழுங்கா யுடைந்த திரண்டாக
மற்றைச் சீரைச் சொல்வானேன்
மாறாக் குணத்த னெனநிற்பான்
உற்ற பருப்பு வெண்ணிறமா
யுவகை காட்டப் பல்லிளிக்கும்
சுற்றி நிற்கும் சீனத்தின்
சுவரைப் போன்ற உருக்காட்டும்
9. நீர்
குழிந்த குளத்தில் நிறைநீராய்க்
குவிந்த நீரோ தண்ணியது
செழிய தாது கலந்ததனாற்
சேர்க்கும் இனிய சுவையினையே
வழியுங் கண்ணீர்த் துளியைப்போல்
வழிந்த வதனைப் பருகியதும்
அழியாத் துன்பம் அழிந்ததைப்போல்
அகத்தின் மகிழ்வால் வியந்தேனே
10. சில்
சில்லென் றிருந்த நீர்பருகிச்
சிறுவர் ஆடும் விளையாட்டுச்
சில்லைப் போன்று பெயர்த்தேனே
திருந்தாக் கள்வன் மனப்போக்காய்ச்
சொல்ல முடியா வடிவிலெலாம்
துண்டு துண்டாய்க் கண்டேனே
இல்லாள் வந்தாள் விரைந்துசெய
இயலா தாவென் றிடித்தாளே
- தமிழகழ்வன்
No comments:
Post a Comment