Jun 17, 2019

சங்க காலக் காதலும் எங்கள் காலக் காதலும் - கவியரங்கம்

கவியரங்கத் தலைமை 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்த்தாய் வேண்டல்

தெங்கிள நீராய்த் தித்தித் திருக்கும் 
    தண்ணிய செம்மொழியே
திங்களாய்ப் பாரில் தண்மை யொளியைத் 
    திகழ்ந்திடச் செய்பவளே
அங்கைக ளெடுக்குஞ் செயல்கள் விளங்க 
    அருள்மழை தான்பொழிவாய்
பொங்குநல் லுள்ளம் போகும் வழியின் 
    பொருளெனத் தான்வருவாய்!

முனைவர் அர. விவேகானந்தனார் வாழ்த்து

பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும் 
   பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத் 
   தீங்கனி தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால் 
   உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகா னந்தர் வாழ்க 
   மேவிய புகழோடே!

அவையடக்கம்

தேமொழி பாடத் தேடி வந்தேன் 
   தேர்வில் தூங்கிவிழும்
ஆமொழுங் கில்லா அறியா தவனாய் 
   அவையை நாடிவந்தேன்
தூமொழி யாக விளங்க வேண்டித் 
    தோய்ந்த சொல்லாலே
யாமொழி வேனோ? குற்றம் பொறுப்பீர் 
    யாதென் றெனக்குரைப்பீர்!

தொடக்கக் கவிதை

எங்கும் இயற்கை வளங்கொஞ்ச 
   எதிலும் இயற்கை மணம்வீசப்
பொங்கும் உளத்தால் தான்மகிழ்ந்து 
   புதுமை புகுத்தி அறிவியலும்
அங்கங் கேதான் புதைத்துவைத்தார் 
   அழகிய தமிழால் அவையியற்றி
எங்கும் தமிழைத் தான்பரப்பி 
   இனிமை யோடு வாழ்ந்திருந்தார்

சங்க காலத் தமிழர்கள் 
   சார்ந்த இயற்கை தனைப்போற்றிப்
பங்கு பிரித்தார் நிலமைந்தா
ம்
  பழகிய பூவைத் திணையென்றார்
அங்கங் கேகாண் பொருட்களினை 
   அழகாய் அவற்றுக்(கு) அடுக்கிவைத்தார்
இங்ங னந்தான் இயற்கையினோ(டு) 
   இயைந்த வாழ்வு வாழ்ந்தாரே

குறிஞ்சி என்றார் புணர்ந்திருந்தார் 
   கூட்ட மாக நிரைமேய்க்கும்
குறியாம் முல்லை காத்திருந்தார் 
   குலத்தாள் குடியி ருக்கையிலே
நெறியி லாது திரிந்தவனால் 
   நெருடும் ஊடல் மருதந்தான்
அறிவீர் இரங்கல் நெய்தலிலே 
   அவலம் பிரிதல் பாலையிலே

எங்கள் காலம் இணையத்தில் 
   எளிதாய்க் காதல் வளர்க்கிறதே
இங்கே எண்ணும் வேகத்தில் 
   எடுத்துச் சொல்ல முடிகிறதே
மங்காக் காதல் காலத்தால் 
   மாற்றம் கொண்ட வையெண்ணி
இங்கே உரைக்க ஈரிருவர் 
   எழுந்தார் அவர்சொல் கேட்போமே

1. ஜெய்சங்கர் ஐயா

செம்மொழித் தாயைப் போற்றித் 
   தென்னகப் பெருமை யாவும்
மும்மழை போலே வந்து 
   முகிழ்த்திரு சொல்லால் பெய்து
செம்மையாய்த் தமிழைப் பாடும் 
   ஜெய்சங்கர் ஐயா வருக
இம்மையில் இன்பம் கூட்டும் 
   இன்கவி தருக தருக

பெருமை தமிழ்க்குத் தேடியளி 
   பெரிய ஆசா னாய்த்திகழும்
திருவா ளர்க்கு வாழ்த்துரைப்பேன் 
   திறமை யாவும் தான்திரட்டி
அருமை யான நடையினிலே 
   அழகாய்க் கவிதை தான்செய்தார்
இருமை யுலகும் இவர்புகழை 
   எண்ணி வியக்கும் வாழியவே!

2. இரேவதி முருகதாசு ஐயா

படைக்கும் கவிதை ஒவ்வொன்றும் 
   பச்சை மரத்துப் பட்டாணி
தடைக்கல் தகர்த்துத் தடமாகத் 
   தாங்கும் சொற்கள் தேர்வாழ்க்கை
இடைஞ்சல் எதுவும் நெருங்கிடுமா? 
   இரேவதி முருக தாசையா
மடையைத் திறக்க வாருங்கள் 
   வாய்பார்த் திருப்போம் ஆசையா

அடடா அடடா இதுகவிதை 
   அறியா தவர்க்கும் இதுபுரியும்
தொடடா எல்லை என்றுள்ளம் 
   தொட்டுப் பார்க்கும் செங்கவிதை
அடையான் வீட்டுப் பேற்றின்பம் 
   அடைவான் அழகாய்க் கவிதந்தீர்
மடையைத் திறந்த சொற்களுக்கு 
   மகுடம் சூட்டி வாழ்த்துவமே

3. அமலா அம்மா

தமிழால்தான் தழைப்போம் என்று 
   தகுமாற்றை எடுத்துக் காட்டும்
தமிழ்த்தேனீ! தமிழே மூச்சாய்த் 
   தாங்குதலை எண்ணி எண்ணி
அமிழ்தனைய கவிதை செய்யும் 
   அமலாம்மா வருக வருக
குமிழுடைத்துக் குவல யத்துக் 
   கொடுப்பீரே கவிதை முத்தே

முத்துக் கவிதை நயத்தோடு 
   முகிழ்ந்த கவிதை பன்மடங்கு
சத்துக் கவிதை சரித்திரத்தைச் 
   சாற்றும் கவிதை தமிழுள்ளச்
சொத்துக் கவிதை சுகமளிக்கும் 
   சொக்க வைக்கும் கவிதையிது
வித்துக் கவிதை தனைத்தந்தீர் 
   வியந்தே உலகம் வாழ்த்திடுமே

4. மோகன் ஐயா
எண்ணத் தெழுந்த முத்துகளை 
   எளிய தமிழில் ஏற்றிவைத்துப்
பண்ணுக் கேற்பப் பெய்ததற்குப் 
   பட்டங் கட்டிப் பார்ப்பதுடன்
வண்ணம் தந்து வடிவமைத்து 
   வனப்புக் கொஞ்சத் தருவாரே
அண்ணல் மோகனத் தமிழ்நெஞ்சர் 
   ஐயா வருக கவிதருக

மின்னும் கவிதை மோகனத்தால் 
   மிரட்டும் கவிதை சொல்நயத்தால்
கன்னல் கவிதை கருத்துகளைக் 
   கருவாய்த் தாங்கும் கனிக்கவிதை
பொன்னும் பொருளும் ஈடாகாப் 
   போற்றற் குரிய நற்கவவிதை
இன்னல் நீக்கும் கவிதந்தீர் 
    இனிமை யோடு வாழியவே!

முடிவு கவிதை
காலை மாலையென் றறியாது 
   காதல் மொழியினில் உளகாள்வர்
சோலை போலவர் மனமகிழ்ந்து 
   சொக்கிக் காதலிப் பார்பாரீர்
காலம் மாறியும் மாறாத 
   காதல் மொழியினைக் கேளுங்கள்
கோலம் மாறியும் மாறாது 
   கொள்ளும் காதலைப் பாருங்கள்

சார்த லுக்காய்க் காத்திருப்பார் 
   சங்க காலக் காதலர்கள்
ஊரென் சொல்லும் உறவுகளும் 
   உரைப்ப தென்னை எனநினைக்கும்
பேரறி யேனே என்பாளே 
   பேதை யவனுக் காயேங்கி
ஊரறி யாமல் உடனேகி 
   ஒன்றி வாழ்வார் காதலரே

கடிதினில் காதல் வந்திடுமே 
   கருதி யவனை யுளங்கொள்வாள்
அடிசுடும் பாதம் அதுகாணாது 
   அவனோடு ஏகினள் அவளெங்கே
அடிசுட நடந்து தாயேங்கி 
   அவளைத் தேடிச் செல்வாளே
மடிச்சுமந் தாளின் மனக்கலக்கம் 
   மயக்கும் துயரம் தனைத்தருமே

காதல் நிகழும் களமெண்ணிக் 
   கணக்காய் வாழ்ந்தார் அக்காலம்
ஏதம் இல்லாக் காதலுக்காய் 
   ஏங்கி நிற்பார் எக்காலும்
காதங் காத மாய்ப்போகும் 
   கணக்கும் உள்ள(து) எக்காலும்
காதல் மட்டும் மாறாதே 
   காலம் மாறிப் போனாலும்

No comments:

Post a Comment