May 16, 2021

மணிக்குறள் - 46. மருத்துவச் சேவை

நோய்கண்டு நோயின் முதல்கண்(டு) அவையிரண்டும்
காய்வழி காண்பாரே காப்பு                          451

வருமுன்னர்க் காக்கும் வழிசொல்லும் வந்தும்
அருங்காப் பளிக்கும் மருந்து                        452

கொடுநுண்மி யாளக் குறையாத ஊக்கக்
கடுந்தவம் செய்வாரைக் காண்                   453

உடலாய்ந்து கூறி உறுநோயை நீக்கும்
கொடையாளர் தெய்வமே கொள்               454

எதிர்பாராத் தீநேர்ச்சிக்(கு) ஏற்பன செய்யும்
மதியாரைப் போற்றி மதி                               455

மருந்தும் கருவியும் மாறாத நுட்பம்
பொருந்தச்செய் வார்தம்மைப் போற்று 456

உற்றார் உழைச்சென்(று) உரிய மருந்தளிக்கும்
நற்றாய்க் கடனே கடன்                                 457

பதறி வருவார் பதற்றம் தணிக்கும்
இதமுளார் வாழ்வே இனிது                          458

விரைவூர்தி ஓட்டி உயிர்காக்கும் தோழப்
பெருந்தகை யாரை நினை                          459

ஆருயிர் காக்கும் அரும்பணி யார்தமக்(கு)
ஆரும் இணையில்லை ஆம்                        460

No comments:

Post a Comment