அருந்தமிழ் சொன்ன இலக்கணங் கட்குப்
பொருந்துநற் காட்டாங் குறள் 491
வாழ்க்கை முறையை வளமாய் நிறுத்தலான்
தாழ்வைத் தடுக்கும் மருந்து 492
நிலைதவறிப் போனாரை நின்றுதடுத் தாண்டு
மலையாக்கும் மாண்பை உடைத்து 493
குறளடி யாலே குவலயம் ஆண்ட
அறம்பொருள் இன்பம் அது 494
ஒருபொருண்மேற் பத்தடுக்கி ஒவ்வொன்றும் முத்தாய்ப்
பொருள்பொதிந் தாக்கினார் போற்று 495
எக்காலத் திற்கும் இனிதாய்ப் பொருந்துவழி
அக்காலத் தேவகுத்தார் ஆண்டு 496
காலங் கருதி இடத்தாற் செயச்சொல்லிப்
பாலம் அமைத்தார் படிக்கு 497
ஐயனே! ஆற்றல் அளிக்கும் திருக்குறளை
உய்யவே தந்தாய் உலகு 498
துணைநின்று தாங்கும் சுடர்விளக்கின் கோலாய்
இணைத்தாய் இனியமுப் பால் 499
சொல்லாக் கருத்துண்டோ? சொல்லிற் சுடரேற்றி
வெல்லக் கொடுத்தாய் விருந்து 500
No comments:
Post a Comment