Mar 1, 2011

பிதற்றல்

ஒன்றுமில்லை என்றுசொல்ல
இலக்கண மரபுகளையும்
இன்னிசைச் சந்தங்களையும்
இடையூறென்னும் துன்பங்களுக்கு
ஏன் ஆளாக்க வேண்டும்?


ஏதோ எழுதுவோம்
எண்ணங்களை!
இன்னும் தெளிவாய் அறிந்திராததைத்
'தெள்ளுதமிழ்' என்று சொல்லிக்கொண்டு
'செம்மொழி' எனும் போலிமகுடம் சூட்டிப்
பிதற்றல்களாய்ப் பதிவு செய்கிறேன்


காதல்கூடக் கரைந்துவிடும் வலியா?
மனிதனின் மனம்
எண்ணங்களின் கலவையாய்க்
குழம்பிப் போயிருந்தால்,
தர்க்கங்களின் தாக்குதல்களுக்கு
உள்ளாகியிருந்தால்,
அறிவுச் சுடரில் கருகிப் போயிருந்தால்,
மாறிமாறி வரும்
மழையும் வெயிலும் போலிருந்தால்
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


கரைந்துவிடுமானால் அது
காதல் அன்று
என்று வாதிட்டால்
காலங்காலமாய்
நெஞ்சங்களில் ஊறி,
இனி அழிக்கவே முடியாது என்றெண்ணி
உயர்ந்த காதல்,
உறுதிக் காதல்,
உத்தமக் காதல் என்று
பேரெடுத்தால்கூட,
மாறும் மனம் உள்ளவரை
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


இது வெறும் பிதற்றல்...
கவிதை என்று சொல்லிக்
கண்மூடித்தனமாய் இருந்துவிடாதே!
பாவம் தமிழ்!

No comments:

Post a Comment