Feb 27, 2012

மார்கழி

பாரெங்கும் பனிமூட்டமாய்ப்
பச்சைப் பசுமையாய்ப்
பகலவன் வரக் காத்திருக்கத்
துயில்கலையும் விண்மீன்கள்
துள்ளி எழுந்து ஒளிவீசித்
துன்பம் விலக்குதல் போல்

உயர்ந்த எண்ணங்கள்
உள்ளத்தில் ஊற
உயர்குரம்பில் தடம்பதித்துச்
செல்லும்போது அங்குச்
செழித்தோங்கு உயர்பனையைச்
சிறுபுல் நுனிப்பனி காட்ட

உயர்வும் தாழ்வும்
உலகில் எங்குளது?
உளத்திலே உளது...
உளத்தால் ஒன்றுபட்டு
உயர்செய்கை செய்வோம்

தோப்பிலே சிறுகுருவி
திந்தியுந் தொந்தன
தீந்தமிழ் பாட
எங்கேயுளது என
எட்டும் தூரம்வரை
இருவிழிகளால்
துழாவியே விடிந்த பொழுது
தூய்மைச் சூழலை
நினைவுக்குக் கொண்டுவரத்
துளிப்பனியாய்த் தலைநனைக்கத்
துன்பமெலாம் பறந்தோடித்
துவாரக புரி வரதனைத்
தொழுது செல்லும்
'நாரா யணனே
நமக்கே பறைதருவான்'
தேன்றமிழிசை செவியேறித்
தானும் தனதடி நகர்த்தி
ஆவலில் அகிலம் மறந்தேன்
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment