Sep 7, 2017

கதிரேசன் - மணிமேகலை (திருமண விழா அழைப்பு)

(கலி விருத்தம்)
வாழிய அண்டம் வாழிய கதிரோன்
வாழிய உலகம் வாழிய பாரதம்
வாழிய பைந்தமிழ் மணித்திரு நாடு
வாழிய உயிர்கள் உயர்நலம் பெறுகவே!

(தரவு கொச்சகக் கலிப்பா)
பருவதமா மலைநாட்டான் பருவதரா சன்குலத்துத்
திருமணமாம் விழாவிற்குத் திருமுருகன் திருவருளத்
தருவெனவாழ் குலங்காக்கக் குலத்திறைவர் அருள்சுரக்கப்
பெருந்திரளாய் வருமக்கள் உளமகிழ வாழ்த்துகவே!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அறம்பொருள் இன்பம் அறிய உரைத்த
திறங்கண்(டு) ஏத்தித் திகழிசை விளங்க
ஐயன் வள்ளுவன் ஆண்டு கொள்ளின்
வையத்(து) இரண்டா யிரத்து நாற்பத்(து)
எட்டே ஆகும்; எழுகதிர் ஓங்கக்
கட்டிய மரபு காட்டும் செவ்வழி
ஏவிளம்பி என்பார்; இறைகதிர் சிம்மம்
தாவிய திங்கள் தமிழுக்குப் பெயர
மடங்கல் என்பார்; மதிக்கணக்(கு) ஒன்ற
ஆவணி என்பார்; நாள்பதி னெட்டே;
மேவணி ஞாயிறு மீப்பெரு நன்னாள்;
நற்கிரி கோரியன் நாள்காட்டி யின்படி
ஆண்டோ இரண்டா யிரத்துப் பதினேழ்
ஆகும்; ஒன்பதாம் திங்கள் செப்டம்பர்;
நனிமகிழ் நன்னாள் மூன்றா கும்மே;
அந்நாள்
பன்னிரு நாள்வளர் பருமதி் கொண்ட
பின்னைய வெற்றிப் பிடிப்(பு)உத்தி ராடம்
மீனொளி சேர்ந்த மிகைஅமிழ்த யோகம்
வானொளிர் கதிரோன் கன்னிப் பகுதியில்
காலடி வைக்கும் காலை நேரம்
கோலங் கொள்ளும் ஆறு மணிமுதல்
ஏழரை மணிக்குள் நிகழும் மணமே!

(தரவு கொச்சகக் கலிப்பா)
தண்டமிழ்மா நிலந்தன்னில் தனிப்பெருமைக் காஞ்சிபுரம்
கொண்டவொரு பேரூராம் குமரன்வாழ் திருப்போரூர்
அண்டுபவர் உள்ளத்தைக் கொள்ளையிடும் பேரழகு
கொண்டவொரு சிற்றூராம் குளிர்படூஉர் வாழியவே!

(நேரிசை ஆசிரியப்பா)
அவ்வூர் நின்றசீர் அமரர் பெருமான்
இராஜி நாட்டார் இலட்சுமி அம்மாள்
இவர்தம் பேரனும், இன்மொழி வல்லார்
தவம்போல் தலைமைப் பண்புகொள் வேந்தர்
ஊராட்சி மன்றம் மீனவர் சங்கம்
பெற்றோர் ஆசிரியர் கழகம் எனப்பல
துறைகளில் தலைமைப் பொறுப்புகள் பலவும்
மேற்கொண் டொழுகு மேன்மை தங்கு
சங்கர் நாட்டார் வசந்தா அம்மாள்
இவர்தம் முதலாம் மகனும் ஆகிய
பொருநன் மலரினும் மெலிதென உளம்புரி
கருணையன் கலைபல கற்ற நிபுணன்
கதிரேசன் எனும்பெயர் தாங்கிய
திண்டோள் மறவன் திருநிறை செல்வனே!

(தரவு கொச்சகக் கலிப்பா)
அருந்தமிழர்த் திருநாட்டில் அகம்நினைக்க வீடருளும்
ஒருமுதல்வன் ஊரான திருவண்ணா மலையென்னும்
பெருவட்டத்(து) ஒருவட்டம் திருக்கலசப் பாக்கத்தே
அருள்சுரக்கும் பருவதஞ்சூழ் தென்மாதி மங்கலமே!


(நேரிசை ஆசிரியப்பா)
அவ்வூர் வாழ்ந்த அமரர் புகழ்சேர்
நாட்டு வைத்தியர் சோதிடர் ஆகிய
குமார சாமி சின்னம்மாள் இவர்தம்
பேத்தியும், பள்ளிக் கொண்டாப் பட்டுச்
சிற்றூர் தன்னில் குடியமர் சோதிடர்
நாட்டு வைத்தியர் சிலம்பு பம்பை
தெருக்கூத்(து) என்னும் அருங்கலை யாவும்
ஒருதனிச் சிறப்பின் உணர்ந்துய ராசிரியர்
சேகர் நாட்டார் பூமா தேவி
இவர்தம் இளைய மகளும் ஆகிய
பொன்மணி அருந்தமிழ் கற்றுளம் மகிழும்
நன்மணி மேகலை எனும்பெயர்
தாங்கிய தெரிவை திருநிறை செல்வியே!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அவரை
இருவீட் டினரும் ஒருங்கே கூடிச்
சுற்றமும் நட்பும் சூழ நின்று
நற்றவக் கற்பு மணம்செய் விக்க
முறைமை தழுவி முடிவு செய்தனர்
அவ்வழிக்
கருதுளத் தார்க்குக் கருணை புரியும்
முருகன் உறைதிருப் போரூர் அருகே
கால வாக்கம் கணேச மண்டபம்
தன்னில் நிகழும் திருமண விழாஅ;
நன்மைகள் பெருக நன்மணம் காணும்
மக்கள் தம்மை மனமார வாழ்த்தி
மிக்க மகிழ்வொடு விருந்தேற் றிடவே
வருக வருகவென வரவேற் கின்றோம் 
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment