Dec 6, 2020

மணிக்குறள் - 23. வரதட்சணை வேண்டாதே

சீர்கொண்டு வாவென்று சீர்குலைப்ப(து) ஐயகோ
போர்த்தும் புலித்தோல் பசு                           221

துணைநம்பி வந்தவளைத் துன்பத்தில் தள்ளிப்
பணம்நம்பிப் பாழாக்கல் பாழ்                    222

சீதனம் வேண்டுமெனத் தீங்கிழைத்துக் கொல்கின்றார்
வேதனை யன்றோ விடை                              223

வாழவந் தாளை வதைத்தல் முறையாமோ?
தாழத் துணிந்தாய் தணி                               224

மங்கையராய்த் தோன்றுதற்கு மாதவம் செய்தவரை
அங்கையில் தாங்குவோன் ஆண்              225

பொருள்வேண்டி வாழாதீர் புன்னகை போதும்
இருள்நீக்கி வாழ்க இணைந்து                   226

மணக்கொடை வேண்டா மனக்கொடை போதும்
பணத்துக்கு வேண்டாவே போர்                227

தட்சணை வேண்டித் தரங்குறைத்துக் கொள்ளாதே
நட்பென வாகி நட                                            228

பழக்கமெனப் பேசும் பழங்கதைகள் வேண்டா
வழங்கும் வரைமுறை மாற்று                    229

சீர்வரிசை கேட்டுச் சிரிப்பழித்து வாழாதீர்
சீர்வரிசைச் சான்றோரைச் சேர்               230

No comments:

Post a Comment