Aug 4, 2010

Micro Devil - குட்டிச் சாத்தான்

இது என் கல்லூரி நண்பன் ஒருவன் எனக்கு வைத்த பெயர். என் கல்லூரி நண்பர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். அவர்களோடு பழகுவதற்கு முன்புவரை நான் அதிகம் பேசி, யாரும் கண்டதில்லை. அவர்களோடு பேசிப்பேசி, அதிகம் பேச ஆரம்பித்து விட்டேன். பிறரை என்னாலும் நகைக்க வைக்க முடியுமோ என்று முயன்றதில் தோற்றுப் போனவன்தான் நான். (நான் அதிகம் மொக்கை போடுகிறேன் என்று கூறிவிட்டார்கள்!!!). இருந்தும் விடாமல் தொடர்ந்து மொக்கை போட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் வந்த வினைதான் இந்த Micro Devil என்ற பெயர்.

அதிலும் குறிப்பாக micro என்பதன் காரணம் என்ன தெரியுமா?
போக்கிரி படம் release ஆகி இருந்த நேரம். அந்த semester- ல Microprocessor பற்றிய பாடமும் படித்தோம். போக்கிரி படத்தில் ஒரு பாடல் வருமே...
'ஆடுங்கடா என்ன சுத்தி - நான்
அய்யனாரு(Aiyanaar) வெட்டுக்கத்தி'.
Microprocessor - ல ஒரு insrtuction INR (increament).
Aiyanaar - INR இரண்டையும் பொருத்தி வச்சி, INR - க்கு எதிர்மறையான DCR (decreament) - ஐப் போட்டு,
'ஆடுங்கடா என்ன சுத்தி - நான்
டீசியாரு(DCR) வெட்டுக்கத்தி'
அப்படின்னு பாடினேன். தேர்வுக்குப் படிக்கும்போதுகூட ஒரு நண்பன் இதை நினைத்துச் சிரித்து விட்டானாம். அதுக்காக ஒருத்தன் எனக்கு வச்ச பேருதான் இந்த 'MICRO DEVIL'.

Aug 3, 2010

SBS Raman

எனக்குப் புதிது புதிதாய்ப் பெயர் வைத்துக் கொள்ளப் பிடிக்கும். நான் ஒரு பெயராசை பிடித்தவன். ஒருமுறை SBS Raman என்று பெயர் வைத்துக் கொண்டேன். அதன் காரணத்தை இங்குப் பதிக்கிறேன்.

SBS?    எங்க அப்பா பேரோட முதலெழுத்தையும் அம்மா பேரோட முதலெழுத்தையும் என் பேரோட முதலெழுத்தையும் சேர்த்து SBS என்று வைத்துக் கொண்டேன். நல்லா இருக்குல்ல?


Raman?   அது ஒரு பெரிய்ய்ய்ய கதை. நான் கல்லூரி சேர்ந்த போது, வகுப்பு வருகைப் பதிவுப் புத்தகத்துல Subramani க்குப் பதிலா Subraman ன்னு தவறாகப் பதிச்சிருந்துச்சு. ஒவ்வொரு தடவ வருகைப் பதிவு கூப்பிடும்போதும் Subraman ன்னு தான் கூப்பிட்டாங்க. நான் என் பேரத் திருத்தச் சொன்னேன். பிறகு Subramani ன்னு கூப்பிட்டாங்க. ஆனா, அதற்கு அடுத்த மாதம் மறுபடியும் பழைய புராணம் தான். கல்லூரி அலுவகத்துக்குப் போயி, பேரத் திருத்தச் சொன்னேன். ஆனா பாவம் அதற்கு அடுத்த மாதமும் அதே கொடுமைதான். மீண்டும் மீண்டும் சொல்லியும் 'i' ஐத் தவற விடுவதே பொழப்பாப் போச்சு அவங்களுக்கு. எப்படியாவது கூப்பிட்டுட்டுப் போங்க... எத்தனை முறை சொல்லிப் பாக்குறதுன்னு விட்டுவிட்டேன். அப்படி இருந்த SUBRAMAN-ல் RAMAN தனியாத் தெரிஞ்சுச்சா... SBS RAMAN ன்னு வச்சிக்கிட்டேன்.

May 1, 2010

தப்புத் தப்பாய்த் தமிழ்

என்ன சொல்வது?
நெஞ்சு பொறுக்கவில்லை.

தமிழின் அடிப்படைச் சொல்லிலக்கணத்தை மறந்து, தப்புத் தப்பாய் எழுதும் தமிழர்களால் எங்ஙனம் 'செம்மொழி' என்று பெருமையடித்துக் கொள்ள முடிகிறது?

தொலைக்காட்சிச் செய்திகள், அறிவிப்புச் செய்திகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் என எங்குப் பார்த்தாலும், சொற்களுக்கு இடையில் தேவைப்படும் வல்லின ஒற்று எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவதே வாடிக்கையாய்ப் போய்விட்டது தமிழர்களுக்கு.

சொற்றொடர் என்பது ஒரு குடும்பம் போன்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் எனலாம். குடும்ப உறவுகள் வலுப்பட, அன்பு, பாசம் போன்றவை இணைப்புப் பாலமாக விளங்குகின்றன. தேவையான இடங்களில் அவ்வல்லின ஒற்றுகளை இணைத்து எழுதுவது, குடும்பத்தின் உறவுச் சங்கிலியை வலுப்படுத்துதல் போன்றதாகும்.

வல்லின ஒற்றுகளை விடுத்து எழுதுவது, குடும்ப உறவுகளில் அன்பு காணாமல் போவதைப் போன்றதாகும். அத்தகைய மனநிலையில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்குத் தமிழின் எழுத்தே சான்றாக உள்ளது.

கொடுமை
தமிழக முதல்வருக்குப் பாரட்டுவிழா நடத்தும் மேடை அறிவிப்புப் பலகையில் கூட இந்தத் தப்பைக் காணலாம் என்றால் தமிழ் எங்கு வாழ்கிறது? அது எப்படிச் செம்மொழியாகும்? என்று எனக்குப் புரியவில்லை.

                 பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா
                (பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா)
                    
                      தமிழ்_திரையுலகம்
                     (தமிழ்த்திரையுலகம்)

இப்படியெல்லாம் தமிழைத் தப்புத் தப்பாய் எழுதிவிட்டுத் 'தமிழ்ச்செம்மொழி' என்று பேசுவதில் என்ன பெருமை இருக்கிறது?

இந்தக் கொடுமையைக் கண்டிருக்கிறீர்களா? செம்மொழி மாநாட்டிற்காக ஆங்காங்கு எழுதப்பட்ட விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

                    உலக தமிழ் செம்மொழி மாநாடு
                   (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)

என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையை!

Jul 27, 2009

பேராசை பெருநட்டம்

பள்ளி நாட்களில் நான் கேட்ட சிறுவர்களுக்கான கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையைப் பாடலாக்கிப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதன் விளைவுதான் இது.


எலும்புத் துண்டைக் கண்டதாம்
      எண்ணம் கொண்ட நாயுமே
எலும்பைக் கவ்வி வாயிலே
      வைத்துக் கொண்டு சென்றதாம்

ஆற்றுப் பக்கம் சென்றுமே
      அதன்அ ருகிலே நின்றுமே
ஆற்று நீரில் கண்டதே
      அதுதன் உருவம் தன்னையே!

'தன்னைப் போன்று ஆற்றிலே
      தனியாய் ஒன்று உள்ளதே'
என்று நினைத்த நாயுமே
      எண்ணி மகிழ்ச்சி கொண்டதே!

பிம்ப நாயின் வாயிலே
      உள்ள எலும்புத் துண்டையே
கவ்வ நினைத்த நாயுமே
      வாயைத் திறந்து பார்த்ததே!
                                         - தமிழகழ்வன்

Jul 20, 2009

தாவரம்

தளிர்த்து வளரும் தாவரம் - மழைத்
துளியால் பலதரு மேவரம்

களித்து நடனம் ஆடிடும் - வகைக்
கனியை உயிர்கட் கீந்திடும்

குளிர்ச்சி நிழலைத் தந்திடும் - அடுப்புக்
குச்சியாய்ப் பயன்தர வெந்திடும்

புளிப்பு இனிப்புச் சுவையாக - வகைப்
பலவி ருப்பினுங் கவையாக

அளிக்கும் பயன்கள் பலவாகும் - அதில்
மாந்தர் அறிந்தது சிலவாகும்


தாவரம் பேசுவதாக
அழித்தி டாதீர் எங்களை - மிகு
அன்பாய்க் கேட்கிறோம் உங்களை

அசுத்தக் காற்றை எடுத்துமே - மிக
சுத்தக் காற்றைக் கொடுத்துமே

பலநன் மைகள் செய்கிறோம் - இங்கு
உங்கள் அருளால் உய்கிறோம்

என்று கேட்க வைத்துவிட்டீர் - நாங்கள்
எனினும் உங்கட் கருள்செய்வோம்
                                        - தமிழகழ்வன்

Jul 8, 2009

தலைவனும் மலரும்

ஒருமுறை என்னுடைய ஆசிரியர் திரு அன்பரசு அவர்கள், 'பெண்களை மலர்களோடு ஒப்பிட்டு வருணித்தல் போல ஆடவன் ஒருவனை மலர்களோடு ஒப்பிட்டு வருணிக்க முடியுமா?' எனக் கேட்டார். அப்போது எழுதிய செய்யுள்...

நிலைமண்டில ஆசிரியப்பா


தலைவா! உன்னைத் 'தாமரை' என்பேன்
தாவித் தாவித் தனித்தன்மை தேடுதலால்
இறைவா! நீதான் 'பாரி ஜாதம்'
இன்முகத் துடனே எனக்குனை ஈந்ததனால்
கார்மலை என்னும் 'குறிஞ்சிப்' புலமே
கவின்தமிழ்க் கந்தனை உள்ளுறை வித்தனையே!

பொருள்:
தாமரை -தா + மரை - தாவுகின்ற மான்
பாரி ஜாதம் = பாரி வள்ளலின் இனத்தைச் சேர்ந்தவன்
குறிஞ்சிப் புலம் = குறிஞ்சி மலர்களைத் தன்னகத்தே கொண்ட மலைப்பகுதி


'செய்யும் ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையைத் தேடுவதால் துள்ளுகின்ற உள்ளம் படைத்த மானைப் போன்றவனே! இன்முகத்துடன் எனக்கு உன்னையே தந்ததனால் நீ பாரி வள்ளலின் இனத்தைச் சேர்ந்தவன். 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் உறையும் இடம்' என்பதற்கேற்ப, உன் உள்ளம் எனும் உறுதி கொண்ட குறிஞ்சிப் புலத்தில் கந்தனை வைத்துப் போற்றுகின்றாயே!' எனத் தலைவி தலைவனின் இயல்புகளைக் கூறிப் புகழ்கிறாள்.
 

Jun 28, 2009

செங்கால் நாராய்!

நேரிசை ஆசிரியப்பா

செங்கால் நாராய்! செங்கால் நாராய்!
செங்காந் தண்ணுதல் தண்நெஞ் சங்கொள
எங்கோ வில்மன மெய்த வம்பாய்
எண்ணங்க ளோடி என்றும் தேடக்
கண்ணில் காணாக் கன்னியைக் காணா
தென்றும் வருந்தும் இளமட நெஞ்சம்
பொன்றும் வரையில் உணராது
சென்றிடு மோநீ சொல்வாய் நாராய்!


பொருள்: சிவந்த கால்களையுடைய நாரையே! செங்காந்தள் பூவைப் போன்ற நெற்றியைக் கொண்டவளை என் குளிர்ந்த நெஞ்சமானது கொள்ள, என் 'மனம்' என்னும் வில் எய்த 'எண்ணம்' என்னும் அம்பு, இலக்கை அடையாது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. அதனால் வருந்தும் என் இள மட நெஞ்சம் இறக்கும் வரையில் என்னவளை உணராது சென்றிடுமோ? சொல்வாயாக!

Jun 15, 2009

தோண்டும் புதையல்

தோண்டும் புதையல் அறிவாகும்
தோண்டத் தோண்டச் செறிவாகும்                      1

வேண்டும் வேண்டும் எனக்கேட்கும்
மீண்டும் மீண்டும் மனப்பாட்டு                               2

வேண்டும் இடத்தில் ஏற்றுவிக்கும்
விலையில் மகிழ்வைத் தோற்றுவிக்கும்          3

சிந்தையை ஒருமை செய்திடுவாய்
சீர்மைச் சீர்தனை எய்திடுவாய்                               4

நெஞ்சில் எண்ணம் நிலைக்கட்டும்
நேரிய பெருமை நிலைக்கெட்டும்                         5
                                      - தமிழகழ்வன்

Jun 6, 2009

பிள்ளையாரும் பிள்ளைகளும்

நிலைமண்டில ஆசிரியப்பா

சிறுகல் எடுத்துச் சிறுவர் இருவர்
உறுமுட் புதரில் ஓணானைப் பார்த்து
வீசினர் அதுபுதர் உள்ளே காய்ந்த
மாசில் குண்டு மணிக்கொடி மீதே
படவே மணிகள் 'படபட' வென்றே
விடவே சிறுவர் அதனை எடுத்துப்
"பிள்ளை யார்க்குப் பிழைதனைச் செய்த
கள்ளஓ ணானைக் கண்டே அடித்தோம்
கண்டாயா பிள்ளை யாரவர் தம்முடைக்
கண்களை நமக்குப் பரிசாய்த் தந்தார்"
என்றே எண்ணி இன்பங்கொண் டனரே!
                                            - தமிழகழ்வன்.

Mar 15, 2008

எல்லாமே எண்ணங்களால்

சிறுகரு வறையும் சிலசில் லறையும்
சிலபல உறவும் அதிற்பல துறவும்
நமக்கென வாய்த்தன நானிலந் தன்னில்
சிதறுண் டிருக்கவோ சிறப்புற் றிருக்கவோ
சிலபல சிந்தனை தீர்மா னிக்கும்
இயல்வன வெல்லாம் எண்ணத் தாலே
முயல்வன வெல்லாம் முனைப்பி னாலே