Jun 28, 2009

செங்கால் நாராய்!

நேரிசை ஆசிரியப்பா

செங்கால் நாராய்! செங்கால் நாராய்!
செங்காந் தண்ணுதல் தண்நெஞ் சங்கொள
எங்கோ வில்மன மெய்த வம்பாய்
எண்ணங்க ளோடி என்றும் தேடக்
கண்ணில் காணாக் கன்னியைக் காணா
தென்றும் வருந்தும் இளமட நெஞ்சம்
பொன்றும் வரையில் உணராது
சென்றிடு மோநீ சொல்வாய் நாராய்!


பொருள்: சிவந்த கால்களையுடைய நாரையே! செங்காந்தள் பூவைப் போன்ற நெற்றியைக் கொண்டவளை என் குளிர்ந்த நெஞ்சமானது கொள்ள, என் 'மனம்' என்னும் வில் எய்த 'எண்ணம்' என்னும் அம்பு, இலக்கை அடையாது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. அதனால் வருந்தும் என் இள மட நெஞ்சம் இறக்கும் வரையில் என்னவளை உணராது சென்றிடுமோ? சொல்வாயாக!

Jun 15, 2009

தோண்டும் புதையல்

தோண்டும் புதையல் அறிவாகும்
தோண்டத் தோண்டச் செறிவாகும்                      1

வேண்டும் வேண்டும் எனக்கேட்கும்
மீண்டும் மீண்டும் மனப்பாட்டு                               2

வேண்டும் இடத்தில் ஏற்றுவிக்கும்
விலையில் மகிழ்வைத் தோற்றுவிக்கும்          3

சிந்தையை ஒருமை செய்திடுவாய்
சீர்மைச் சீர்தனை எய்திடுவாய்                               4

நெஞ்சில் எண்ணம் நிலைக்கட்டும்
நேரிய பெருமை நிலைக்கெட்டும்                         5
                                      - தமிழகழ்வன்

Jun 6, 2009

பிள்ளையாரும் பிள்ளைகளும்

நிலைமண்டில ஆசிரியப்பா

சிறுகல் எடுத்துச் சிறுவர் இருவர்
உறுமுட் புதரில் ஓணானைப் பார்த்து
வீசினர் அதுபுதர் உள்ளே காய்ந்த
மாசில் குண்டு மணிக்கொடி மீதே
படவே மணிகள் 'படபட' வென்றே
விடவே சிறுவர் அதனை எடுத்துப்
"பிள்ளை யார்க்குப் பிழைதனைச் செய்த
கள்ளஓ ணானைக் கண்டே அடித்தோம்
கண்டாயா பிள்ளை யாரவர் தம்முடைக்
கண்களை நமக்குப் பரிசாய்த் தந்தார்"
என்றே எண்ணி இன்பங்கொண் டனரே!
                                            - தமிழகழ்வன்.

Mar 15, 2008

எல்லாமே எண்ணங்களால்

சிறுகரு வறையும் சிலசில் லறையும்
சிலபல உறவும் அதிற்பல துறவும்
நமக்கென வாய்த்தன நானிலந் தன்னில்
சிதறுண் டிருக்கவோ சிறப்புற் றிருக்கவோ
சிலபல சிந்தனை தீர்மா னிக்கும்
இயல்வன வெல்லாம் எண்ணத் தாலே
முயல்வன வெல்லாம் முனைப்பி னாலே

Dec 15, 2007

தூது

இதழிடை நின்ற இனிய பேச்சில்
நுதலிடை நின்று நெய்த நோக்கில்
அகத்திடை நின்ற அன்பின் நினைவில்
மிகக்கொள உணர்ந்த உணர்வின் மேன்மையை
மெல்லிழைத் தென்றல் மேனி தன்னில்
புல்லிழை நுண்மைப் புல்லிய அலைவில்
தூதினை விடுவேன் யானே
ஏதென அறியின் எனைக்கொள் மானே!

செஞ்சுவை

தஞ்சம்நி னக்கென் நெஞ்சகம் என்றால்
கொஞ்சுமம் மழலைக் கெஞ்சலை என்றும்
சஞ்சல மின்றிச் செஞ்சுவை என்று
நெஞ்சினிற் புகுத்திக் கொஞ்சுவேன் நானே

Jul 8, 2007

அன்புள்ள இறைவனே

அன்புள்ள இறைவனே
ஆற்றலின் வடிவனே
இன்புள்ள உலகிலே
ஏற்றத்தைத் தருகவே

Jun 8, 2007

நுதல்விழியாய்!

மென்மையான உன்றன் பேச்சு
என்றன் செவியில் ஏறிப் போச்சு
மயங்கிப் போனேனே - நான்
மயங்கிப் போனேனே

உன்றன் நெஞ்சில் ஒளிந்திருக்கும்
உயர்ந்த குணங்கள் எல்லாம் நானே
கண்டுகொண்டேனே - நான்
கண்டுகொண்டேனே

அன்பே! இது முதல்முறையோ?
என்னெஞ்சில் இளம்பிறையோ?
சுழல்கின்ற கடும்புயலோ?
சுடுகின்ற பெரும் அனலோ?

வருங்காலம் வசந்தகாலம்
இப்போதே வந்ததென்று
எண்ணம் சொல்கிறதே - என்
நெஞ்சம் சொல்கிறதே

நுதலில் வைத்தாய் 
நேயக் கண்ணை
அதனில் விழுந்த 
மாயக் கண்ணன்
நான்தானே நான்தானே