Nov 15, 2020

மணிக்குறள் - 20. செவிச்செல்வம் சேர்

நல்லவை கேட்க நயம்பெருகும் நல்வழியில்
வெல்லவைக்கும் கேள்வி விரும்பு                    191

ஆய்ந்தறியக் காண்கின்ற ஐயமெல்லாம் நீங்கிவிடும்
தோய்ந்தறிக கேள்வி தொடர்ந்து                     192

ஆசான்சொல் கேட்டறியும் ஆர்வம் உடைத்தாயின்
வீசாதோ தென்றல் வியந்து                                 193

கல்லா தவருக்கும் கேள்வியே மேலறிவாம்
அல்லா தனநீக்கும் ஆறு                                        194

நல்லார்சொல் கேட்டல் நனியினி(து) அல்லார்சொல்
கேளாமை யாண்டும் இனிது                              195

செவிவழியே சேர்க்கின்ற செல்வம் உளமார்ந்(து)
அவியாய் இனிக்கும் அறி                                     196

கேள்வி முயல்வதால் கேடறுத்(து) உய்விக்கும்
கோள்வினையும் கோடும் குலைந்து               197

ஊதிப் பெரிதாக்கும் ஊர்வம்பு வேண்டாது
காதினைக் காத்தல் கடன்                                     198

அறிவுறூஉஞ் செஞ்செவி ஆக்கத்திற்(கு) ஆக்கம்
செறிவுறூஉந் தோறும் செழிப்பு                         199

கவிவழிச் சேர்ந்த கலைகட்கும் ஆக்கம்
செவிவழிச் செய்தியாய்ச் சேர்ந்து                    200

No comments:

Post a Comment