வீட்டை மறந்து வினையொன்றே மேற்கொண்டு
நாட்டுக்(கு) உழைப்பார் நயந்து 211
குடும்பம் குழந்தை குழாஅம் மறந்தும்
கடும்பாலை நிற்பார் களித்து 212
கருவென்று கொள்வாரே காத்தல் நமக்காய்ச்
செருவென்று சேர்ப்பார் நலம் 213
துன்பத்தை இன்பென்பார் தூணாகத் தாங்குவார்
என்புருக்கும் அக்குளிரும் ஏற்று 214
எல்லையில் இல்லையெனில் எல்லாம் அழிந்தொழிந்(து)
இல்லாமல் போவோமே இன்று 215
எயில்காத்தல் போலவே எல்லையைக் காக்கத்
துயில்காணாத் தோள்களைப் போற்று 216
அதிரப் பொருதழிப்பார் ஆற்றலைப் போற்று
சதியையே சாகடிப்பார் சாற்று 217
எல்லாய் இயங்குவார் எண்ணத்தில் நிற்பதுவோ
எல்லையைக் காத்தலொன்றே எண் 218
நாட்டுப்பற்(று) ஒன்றே நினைவினிற் கொள்வாரைப்
பாட்டினிற் கொண்டு பரவு 219
பொல்லாப் பகையழித்துப் பொன்வாழ்(வு) அளிக்கின்ற
எல்லை மறவரை ஏத்து 220
No comments:
Post a Comment