Jan 4, 2013

முத்து முகிற்பா (பிறந்தநாள் வாழ்த்து)

இன்னிசை வெண்பா

முகிற்பா முகிழ்ப்பால் முகப்பால் சிரிப்பாள்
திகைப்பாள் தவிர்ப்பாள் திடுமென்(று) அதிர்வாள்
எதற்கா யெனநான் வினாதற்(கு) உரைப்பாள்
பதின்க வனத்தா ளவள்.                         1

நேரிசை வெண்பா                   

பேச்சுப் புலியே! பிறர்பேச என்னாவாய்?
கீச்சுக் கிளியாய்க் கிடப்பேனே! - மூச்சுப்
பிடித்தே பகர்வாள் பிடித்தன வெல்லாம்
பிடிக்கா தனபுலம்பு வாள்.                             2

“இன்பொருள் இவ்வுல கத்தில் ‘ம’கரத்தில்
அன்னை அவட்கடுத்(து) அம்முகில்” - சொன்னதற்(கு)
உள்ளம் நிறைத்தனை! என்றே உரைத்தனை!
வெல்லுஞ்சொல் வேறில்லை யே.                       3

புத்தக மேபடித்(து) எந்நாளும் பண்பட்டுப்
புத்தகம் பெற்றுயரு மாபடிப்புப் - புத்தகமே!
வித்தக மேதைய லால்வேறென்? புத்தகச்
சித்தகம் செய்தாயை சொல்.                           4

மடமிது! ‘பால்வழு’ நன்(று)அன்(று)என்(று) எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா! - அடடாவஃ(து)
என்னென்று சொல்லவா ‘டா’வென்றால் ‘டா’வில்லை
‘அன்புள்ள அம்மணி’ யே!                            5

தமிழ்த்தோழி தானயத் தானையவள் தன்னேர்
அமிழ்தாழி யாகின் குரலாள் - உமிதாங்(கு)
அரிசிவமாய்க் காக்கும் அருந்தகையாள் வையம்
பெரியதோ? இல்லை அவட்கு.                         6

முத்து முகில்மழை முத்தம் தரதரை
வித்து பெறுவரம் ஒட்டியதே - கத்து
கடலெனச் சிற்ற ருவிதனைச் செய்யும்
திடமுள செம்மை யினாள்.                            7

நாணல் நதிக்கொரு நன்னண்பன் நாடொறும்
நாணல் எனவாழ்த் திடும்பிறந்த - நாணல்வாழ்த்(து)
என்றோழி! வாழ்கநீ டூழி! யுளமுழுதும்
இன்பக் கடலாழ்ந் திரும்.                             8
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 14, 2012

இராஜகீழ்ப்பாக்கம் - M51G

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்றலையில் இன்றெழுதி வைத்துள் ளதேயான்
    இன்மழையில் மகிழ்வோடு நனைவேன் என்றே
என்னூரில் எனைத்தாண்டி எதிர்த்தி சையில்
     ஈரிரண்டு பேருந்து சென்றா லுந்தான்
ஒன்றுகூட செல்லாது என்னே ரத்தில்
     யான்செல்லும் திசை நோக்கி உதவி இல்லா
இன்னாவீ போக்குவரத் துள்ள வூர்தான்
     இராஜகீழ்ப்பாக் கந்தானான் என்ன செய்வேன்?
                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என் தலையில் இன்று எழுதி வைத்துள்ளதே; யான் இனிய மழையில் மகிழ்ச்சியோடு நனைவேன் என்றே; என் ஊரில் எனைத் தாண்டி எதிர்த் திசையில் 4 பேருந்துகள் சென்றபின்பும், ஒன்று கூட நான் செல்லும் திசைநோக்கிச் செல்லவில்லை; உதவி இல்லாத, துன்பம் தரும் போக்குவரத்து உள்ள ஊர்தான் இராஜகீழ்ப்பாக்கம். நான் என்ன செய்வேன்?

ஈ போக்குவரத்து - வினைத்தொகை

Oct 17, 2012

காயத்திரியின் கனியுள வேண்டல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாயத் திரையில் மயங்கிடு முலகு
   முடிவுறுங் காலு மாறிலாச் சீரார்
மாய னுந்தி முண்டகத் துதித்த
   மன்னவ! யுகங்கள் எத்தனை கடந்தும்
ஆய கலைகள் அறுபதும் நான்கும்
   அந்தமி லொன்றாய் மன்றிட வேண்டும்
காயத் திரியின் கனியுள வேண்டல்
   கலைமக ளகத்தே சேர்த்திடு வாயே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 3, 2012

அகழ் அகத்தான்

நேரிசை ஆசிரியப்பா

எனக்கு யானே நவிலு நல்லுரை
தனக்குள் விருப்ப மளவற நிரப்பித்
தன்வழி தனிவழி தன்னிக ரெவரினிச்
சென்றிடு தலுயர் வாழ்க்கை யன்றெண்
ணொழுக்கந் தலையா யுடன்பிற வெல்லாம்
இழுக்கொன் றிலதா யினிமை யுளதாய்ச்
செழித்திடச் செய்தல் வாழ்க்கை
விழித்திடு தமிழா வகழகத் தானே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 16, 2012

தந்தை

தந்தை - ஓர் உயரிய சக்தி, வழிகாட்டி, பாதுகாப்பு.

'என்ன நடந்தாலும் எந்தை உள்ளார் தோள்கொடுக்கும் தோழனாய்' என நம்பும் மகனுக்கு ஓர் உயரிய சக்தி.

அனுபவம் கண்டதை அப்படியே அள்ளி வழங்கி, அடுத்த படியை அழகாய் அமைத்துக் கொடுக்கும் அற்புத வழிகாட்டி.

தன்பெயருக்குப் பின் கணவன்பெயர் இடம்பெறும் வரை, முதற்பெயராயும் விருப்பப்பெயராயும் அமைக்க விருப்பப்படும் மகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.

சோற்றுக்குப் பஞ்சம் உண்டு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காற்றுக்குக் காவு தந்து,
     கவின்பெறு பதாகை செய்து,
போற்றுவார் வாழ்த்த வயது
     போதாது வணங்கு கின்றோம்.
சோற்றுக்குப் பஞ்சம் உண்டு
     சொல்லொணா இன்னல் உண்டு
மாற்றமும் வந்த தென்று
     மனமாறக் கூறிச் செல்வார்.
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

சாலையோரம் நிறுத்தியிருந்த பெரிய பதாகை(Banner)யைப் பார்த்தபோது
சொல்லத் தோன்றியது.

Jun 5, 2012

கவினா

நேரிசை வெண்பா

அறிவுப் பசியெடுத் தான்ற புலமைச்
செறிவுத் தமிழ்க்கவி னா!சீர் - பெறுகநீ
வாழ்விலெந் நாளும் வசந்தமே! பொங்கிடும்
ஆழ்ந்தகழ் பேரின்ப மே!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 1, 2012

புதுக்குறள்

குறள் வெண்பாக்கள்

The roof of Peace rests upon
the walls of understanding
                                 - Thiruvalluvar.
அமைதி யமைகூரை யாழ்ந்தே வமைந்த
தமைச்சே ருணராநின் று                                             (1)

Enjoy the little things in life,
for one day you may look back and realize
they were the big things.
                               - Antonio Smith.
மகிழ்ந்துகொண் டாடு மனமே!மீச் சிற்றும்
நெகிழ்ந்துகொண் டேகுமா பேர்                                (2)

Chennai is too hot!!!
வெந்தலை வெந்தலை வீசிடு வெவ்வலை
செந்தலைப் பேர்நின்ற ஊர்                                        (3)

வெந்தலை - வெம்மை தலை, வெந்து அலை
வெவ்வலை - வெம்மை அலை
செந்தலை - செம்மை தலை 

Kerala style : Ninda manasil aaraanu enakku ariyila, patche yenda manasil muluka muluka neeyum, ninda FRIENDship fullaitu undu, Manaslayo...
தமிழ் style :
நின்னெஞ்சில் யாருளரோ யானறியேன் ஆனாலும்
என்னெஞ்சில் நீயுநட்பும் கொள்                              (4)
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 1, 2012

தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்

என் அலைபேசி மதுர கானத்தை (இப்படிச் சொன்னால்தான் இனிக்குமோ?) எழுப்பி, என் தூக்கத்தைக் கெடுத்தது. தட்டுத் தடுமாறி அலைபேசியைக் கண்டுபிடித்து, அழைப்பை ஏற்றேன். அழைப்பில் அலுவலகத் தோழி.

"சுப்பிரமணி, தூங்கிட்டு இருக்கிங்களா...?"

இந்த வாரம் எனக்கு இரவுப்பணி முறை. முடித்துவிட்டுப் பகலில் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்தேன். அதனால் இது வழக்கமான கேள்வியாகிப் போய்விட்டது.

"இல்ல பா...! முழிச்சுட்டேன் சொல்லுங்க..." வழக்கமான பதில்தான்.

"அந்த முரணாய் உருவான (junk) தகவலை வழங்கியிலிருந்து (server) அழிக்கச் (delete) சொல்லி விட்டார்கள். ஆனால் அதைப் பட்டியலிட (list) முடியவில்லை. எப்படி எடுப்பது? கட்டளையை (command) எப்படிப் பயன்படுத்துவது? வழக்கமான கட்டளையைக் கொடுத்தால், தகவல் (data) வரமாட்டேங்குது. 'பொருள் அல்லது தகவல்' (object) காணவில்லை என்று பிழை சுட்டப்படுகிறது."

"அந்த முரண் தகவல் அப்படி அப்பாவித்தனமாய் நிரலியால் (program) உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதன் முழுப்பெயரையும் கட்டளைக்குள் பயன்படுத்தித் தகவலை எடுங்கப்பா..."

என் தோழிக்கும் எப்படிக் கட்டளையைப் பயன்படுத்துவது என்று தெரியும். ஆனால் அந்த முரண் தகவலைக் காண்பவர் சற்றுக் குழப்பமடைவர். இப்படி ஒரு முரண் தகவல் உருவாகி இருக்கிறது என்று அடையாளம் கண்டு, அதை எங்களது மேலதிகாரிகளுக்கு அறிவித்து இருந்தேன். அந்த முரண் தகவல் ஏன் உருவானது என்ற ஆய்வுக்குப் பின், அதனை அழிப்பதற்கான ஒப்புதல் (approval) இன்றுதான் கிடைத்தது. அந்த முரண் தகவலை எப்படிப் பட்டியலிடுவது என்பது எனக்குத் தெரிந்திருந்ததால் என்னை அழைத்தாள் தோழி.

மணி நண்பகல் 12:36. அலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே படுத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது. நாம் பள்ளியில் படிக்கும்போது, ஆசிரியர்களில் சிலர், 'தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்'னு சொல்லி சொல்லி அடிப்பாங்களே... அது இப்போதுதான் பயன்பட்டு இருக்கிறது...

சரி, எழுந்து பண்டிக்குச் சிறிது உண்டி கொடுத்து, அப்படியே இந்தத் தகவலையே வலையத்தில் ஏற்றிவிட்டு உறங்குவோம்.

கூற்று

இசைநன்று - ஔவை கூற்று

இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை

இயைபுத்தொடையத் தேடும் முயற்சியில் இயைபு மறந்துபோய், போதும் இது இக்காலத்திற்கு என்றாகிவிடும் நிலை.


மறைதமிழ் - வினைத்தொகை

முன்னமே வடமொழிக்கலப்பால் எது தமிழ், எது வடமொழி என்று பிரித்தறிய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். வடமொழி கலந்த தமிழில் பேசுவதும், பாடுவதும் பெருமையாக எண்ணப்பட்ட காலங்களும் உண்டு. (இவ்வரிகளில் கூட தமிழ்ச்சொற்கள் எத்தனையோ? தமிழுக்கு மட்டுமே தெரியும்).

ப்ரபுட தேவ மாராஜர் உளமு மாட வாழ்தேவர் பெருமாளே!

என்ற அருணகிரியார் காலமாயினும் சரி,

வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?
மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர கானமோ?

என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமாயினும் சரி.

இப்போது இன்னும் ஒருபடி மேலேறி, தமிங்கிலம் (தங்லிஷ்) என்னும் கொடுமை

'Why this கொலவெறி'