அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jun 14, 2023
ஓயாத சிந்தனைகள்
உள்ளுக்குள் ஓராயிரம்
ஓயாத சிந்தனைகள்
பாடாய்ப் படுத்தும்
நாட்டையா பிடிக்கப் போகிறேன்?
நாடகத்திலா நடிக்கப் போகிறேன்?
வேட்டைக்கா போகிறேன்?
வேதனையிலா வாடுகிறேன்?
இல்லை இல்லை எதுவும் இல்லை
எதுவு மில்லாத இந்த மனந்தான்
இத்துணைப் பாடு படுகிறது.
May 31, 2023
வெங்கடேசன் மாமாவின் பணி ஓய்வுப் பாராட்டு விழாவில் வாசித்த கவிதை
இன்னிசை மொழிபேசி
என்றென்றும் வாழ்த்தும்
மாணிக்க மாமணியே!
எங்கள் மாமா மணியே
மின்னியல் வளத்துறையில்
மின்னும் பணிசெய்த
மாணிக்க மாமணியே!
தொன்னூல் கலைகள்
தொட்டுத் தெளிந்து
தெருக்கூத்தும் சோதிடமும்
மின்னச் செய்கின்ற
மாணிக்க மாமணியே!
பன்னூ றாண்டுகள்
வையம் வாழ்த்த வாழியவே!
வேங்கடத்து ஈசனாய்
எங்கள் வெங்கடேசனார்
வளம்பல பெற்று
வாழிய வாழியவே!
May 2, 2023
விழியால் தென்றலை முத்தமிட்டவள்
கட்டுக் கடங்காத கன்னியே என்னுள்ளம்
மெட்டுக் கடங்காது வேவதேன் - பட்டுத்
தெறித்தநின் சேல்விழி தென்றற்கு முத்துப்
பொறித்ததோ மையிட்ட போது.
யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காத கன்னியே!
நீ உன்னுடைய மீன்போன்ற வடிவுடைய கண்களுக்கு மை தீட்டிக் கொண்டிருந்த போது, வந்து மோதிய தென்றலை உன் கண்கள் முத்தமிட்டனவோ?
என் உள்ளம் உன்னை நினைத்து இசைப் பாட்டின் மெட்டுக்கும் மயங்காது வெந்து தவிப்பதேன்?
Mar 16, 2023
ஏழு ஆண்டுகள் at opentext
கொடுமை யன்று கொடும்ஐ என்று
விடுமை இன்றி வினைசெய விழைந்தேன்
விளைந்தேன் விளைந்தேன் வளமொடு விளைந்தேன்
எண்ணிய பெறேஎன் என்றன் வாழ்வை
நுண்ணிதின் நோக்க அதற்குமேல் பெற்றேன்
ஏழ்நல் லாண்டுகள் என்னைத் தாங்கி
வாழ்வித்(து) இன்னும் எழுகவென்(று) ஊக்கும்
ஒன்றிய சொன்மை ஓபன் டெக்ஸ்டே!
ஒளிவும் மறைவும் இல்லா எழுத்தாய்த்
தெளிவுறு சிந்தை திகைப்புறு விந்தைத்
தகவல் தொழில்நுட்பம் தன்னில் தேர்ந்த
மிகவல் லமைகொள் விறுவிறு நிறுவனம்
எவ்வகை யானும் மகிழ்ச்சி ஒன்றே
செவ்விய கொள்கை செய்நலம் போற்றி
வாழ்த்து வேனே வாழ்த்து வேனே!
Feb 23, 2023
தமிழே!
மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே
கொஞ்சிப் புகட்டுவோம் கொண்டாடிக் கொண்டாடி
நெஞ்சம் புகட்டுவோம் நீடு
Feb 19, 2023
தேவைப்படும்போது...
தேவைப் படும்போது தேடுவாய்! நீபிறர்க்குத்
தேவைப் படும்போது தேடப் படுவாய்!
உலகத்(து) இயக்கம் இதுவே இதுவே
பலகற்(று) அறிந்து பழக்கு
Jan 30, 2023
நேயக்காரி
நெஞ்சைப் பிழியும் நேயக் காரியே
மஞ்சள் பூசிய மாயக் காரியே
செஞ்சவளே செஞ்சவளே
சிவந்த கண்களால் செஞ்சவளே
மல்லிப் பூவின் வாசம்
மனத்தைப் மயக்கிப் பேசும்
சொல்லிச் சென்றாயே
சோகம் வென்றாயே
என்ன நினைப்போ
எப்படி நான் அறிவேன்
வண்ணச் சிலையே
வடிப்பவன் வந்தேனே
இருளான என்றன் நெஞ்சம்
பொருளான வெளிச்சம் கொஞ்சம்
மருளாதே மருளாதே
மாற்றிப் பேரொளி தருவாயே
முத்துமணியே முத்துமணியே
சற்று தணியே சற்று தணியே
கற்றுத் தருவாய் கற்றுத் தருவாய்
கனியக் கனியக் கற்றுத் தருவாய்
இன்னதென்று சொல்லாமல்
என்னவென்று அறிவேனோ
என்னை வென்ற உன்மொழியில்
என்னை மறந்து தவிப்பேனே
காலம் மாறும் கருத்துகள் மாறும்
காதல் மட்டும் மாறாது
வேதனை வேண்டாமே
போதனை ஏன்தானோ?
Jan 11, 2023
நண்பன் புகழேந்தி - பிறந்தநாள் வாழ்த்து
விரும்பிய யாவும் பெற்று
விளக்கென விளங்குங் கோவாம்
கரும்பெனப் பேச்சில் நின்று
கவியென விளங்கும் பேரான்
பெரும்படை வந்த போதும்
பேறெனும் பொறுமை காத்துச்
சுரும்பெனச் சுறுசுறுப்பாய்ச்
சுழற்றுவான் மட்டைப் பந்தே
கிள்ளி எறிவோம்
அள்ளி விடுதற்கோர் அளவில்லை வாய்வந்த
கள்ளச் சேதியெலாம் கணக்காக வடிவமைப்பார்
எள்ளி நகையாட ஏற்றமணிக் கருத்துகளைக்
கிள்ளி எறிவோமிக் கீழ்மையை அகற்றுதற்கே
Jan 10, 2023
மொழிபெயர்ப்பு
காணவில்லை மாயமானாரே
நம்ம சிவா
கைலாச ஊரு சென்றாரே
கொடுப்பதைக் கொடுங்கள்
விடுவதை விடுங்கள்
கையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாரே (காணவில்லை)
ஆகாயம் மேலே இட்டாரே
நம்ம சிவா
பாதாளம் கீழே விட்டாரே
நடுவில் இந்த பூமியை
தோணிபோல மிதக்கவிட்டாரே (காணவில்லை)
காண தந்த மாய வாதனு (கன்னடப் பாடல்)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)