Jan 20, 2024

உழவனின் நம்பிக்கை

நேரிசை இருவிகற்ப அளவடி வெண்பா

வெள்ளி முளைக்க விடியுமென நம்பியவர்
துள்ளி யெழுந்து தொடங்குவார் அள்ளக்
குறையா வமிழ்தாய்க் கொடுக்கின்ற விண்ணின்
நிறையா அவாஅ நினைந்து

Jan 14, 2024

இனிய போகி நாள் வாழ்த்துகள்

தரவு கொச்சகக் கலிப்பா

பாரெங்கும் பனிமூட்டம் பகலவனோ கதிர்நீட்டி
ஏரெடுத்துப் பார்க்கின்றான் எழுந்திருங்கள் எழுந்திருங்கள்
காரென்னும் பெரும்பொழுது கழிந்ததுபோல் பழஞ்சிந்தை
வேரெடுத்துச் சீர்தூக்கி வேண்டாத யாங்களைவீர்

பாடென்று நினைந்தவற்றைப் பலவாறாய்ச் சிந்தித்துக்
கேடென்று நீரறிந்தால் கிளப்புங்கள் இனிவேண்டா
வீடெல்லாம் நனிநோக்கி வேண்டாத குப்பைகளை
நீடென்று காக்காமல் நீக்குங்கள் போகியன்றே

Dec 31, 2023

காந்தி ஆசிரியர் - இரங்கற்பா



காலத்தால் அழியாத
காவியமாய்க் கவிமழையாய்
வாழத்தான் விளைந்தவரே
வாழ்வாங்கு வாழ்ந்தவரே!

வருத்தவளை வேயரசர்
மாமுடியின் மேலாம்
கருத்துமழை வழிகாட்டிக்
கண்கலங்கச் சென்றவரே!

ஆங்கிலமும் அருந்தமிழும்
அமுதாக்கிக் கற்பித்தீர்!
தீங்கிரிக்க நாடெல்லாம்
திருக்குறளை எடுத்துரைத்தீர்!

திருக்குறளில் கணிதவியல்
தேர்ந்தெடுத்துச் சொன்னவரே!
திருக்குறளே பெருந்தவமாய்த்
தொழுதெழுந்து வாழ்ந்தவரே!

கணக்குப் பிணக்கறுத்து
மணக்குமெனக் காட்டியவரே!
வணங்குவோம் எம்வாழ்வைச் 
செதுக்கியவரே! ஆசானே!
                                     - கண்ணீருடன் 
தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 10, 2023

மனிதம்

மனிதம்
என்பது மட்டுமே
அடையாளம்

மற்ற உயிர்களினின்று
வேற்றுமைப்படுத்தும்
அடையாளம்

நாடு இனம்
மதம் மொழி
வகுப்பு குலம்குடி
இன்னும்
எத்தனையோ பெயர்கொண்டு
எப்படியெல்லாம் அடையாளம்கொண்டு
பிரிந்து பிரிந்து மனிதம் இழந்து
படைமேற் கொண்டு போர்செய்து
படைத்த வரலாற்றால்
மனிதம் மறந்த மனம்

இவை எல்லாம் துறந்து
மனிதத்தோடு மனம் ஒன்றுவது
எந்நாளோ?

Nov 4, 2023

போரை நிறுத்துவீர்

நிலைமண்டில ஆசிரியப்பா

உலகம் உவத்தல் உடைத்தா காது
நிலைஇய தன்மை நீடிக் காது
கலகம் கலகம் காணின் எங்கும்
பன்னூ றாண்டுகள் பாரில் வாழ்ந்தும்
நன்னூல் அறங்கள் நாணும் படியாய்ப்
பக்குவம் பெறாஅது பண்பிற் சிறவாது
கொலைவெறி கொண்டார் கொடுங்கோன் மறவர்
ஒன்று படாஅ உள்ளங் கொண்டார்
நின்றெதிர் புரியும் நெடும்போர் காணீர்
இனமென மதமென மொழியென வகுப்பென
எத்தனை பிரிவுகள் எத்தனை பிரிவுகள்
இயற்கையான் அழிவுகள் போதா வென்று
பகைமை பூண்டு படைமேற் கொண்டு
கொன்று குவிக்கும் கொடுமை காணீர்
யாரை நோவதி யாரை நோவதி
யாரை நோவதோ? யாங்கா ணேமே.

Oct 20, 2023

போரை நிறுத்துவீர்

நேரிசை வெண்பா

ஒன்றா(து) உடைகின்ற உள்ளத்தார்க்(கு) எந்நாளும்
பொன்றாது போரே புரிந்துணர்வீர் - நின்று
நிலைவாழ நேயமே நேரிய வாறாம்
குலையாது காப்போம் குடி

Oct 5, 2023

என்செய்வேன் பராபரமே!

தரவு கொச்சகக் கலிப்பா

எண்ணரும் எண்ணங்காள்! எனைவைத்துச் செய்கின்ற
இன்னல்கள் என்னுமா(று) இயக்குவதைக் காண்கின்றேன்
இன்னரும் மூளையினை ஏன்பற்றித் தாக்குகின்றீர்?
என்னையாட் கொண்டீரோ ஏதுக்கும் உதவாதே!

விண்ணுக்கும் மண்ணுக்கும் வீழ்ந்தெழுந்து குதிக்கின்ற
எண்ணங்கள் கண்டீரோ? எனைப்பாடு படுத்துவதே
கண்ணாகக் கொண்டுய்யும் காணாத எலாஞ்செய்யும்
அண்ணாஅ மலையானே! அருளுவாய் அடிச்சரணே!

மதுவுக்கே அடிமையென மனம்நொந்து குடிப்பாரோ
எதுவுமிங்குத் தாங்குகின்றார் எண்ணத்தின் வலைவீழ்ந்து
சிதையாது காக்கின்றார் சிகைநரையும் இல்லாது
அதுவுமில்லை இதுமில்லை எதுவுமில்லை என்பிழைப்போ?

ஒன்றுமிலை என்றாலும் ஓயாஅ(து) ஒழியாது
நின்றநிலை மாறாது நிம்மதியாய் வீடாது
வென்றநிலைச் சிரிப்போடு வேடிக்கை பார்க்குமந்த
என்றனிலை எண்ணத்தை என்செய்வேன் பராபரமே!

Oct 3, 2023

இராஜதுரை - இரங்கற்பா

நேரிசை ஆசிரியப்பா

இராஜ துரையெனும் இன்பெயர் தாங்கி
வராத வரமாய் வாய்த்த தவனே!
அறிவியல் அறிஞனாய் அனைத்தும் முயலும்
நெறியில் நின்று நினைத்தன செய்து
காட்டும் திறமை கைவரப் பெற்று
வாட்டம் போக்கும் வடிவழ கோனே
மின்னைக் கொண்டு தன்னை முடித்த
நின்னை எண்ணி எண்ணி யுருகிக்
கண்ணீர் உகுக்கும் குடும்பம்
காணாய் காணாய் கானுறைந் தவனே!

Sep 10, 2023

நான் ஏணி பேசுகிறேன்

கவியரங்கத் தலைவர் வணக்கம்

யாப்புக் கென்ன குறையிங்கு?
   யாரும் கவிஞர் ஆகிடலாம்
தோப்புக் குள்ளே பலகுயில்கள்
   தோன்றும் வண்ணம் ஊக்கிடலாம்
காப்புக் காடாய் விளங்குகின்றார்
   கலைகள் வளர்க்க முனைப்புடனே
சேர்ப்புச் செய்வார் செம்மலவர்
   சேலம் பாலன் வாழ்கவையா!

அவையடக்கம்

தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்
யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏற்றி விட்ட ஏணியினை
   இனியும் வேண்டா என்றுரைப்பார்
எட்டி உதைப்பார் உதைத்தாலும்
   என்றன் மக்கள் இவரன்றோ?
காற்றில் விட்ட பட்டமது
   கயிற்றை அறுத்துப் பறக்குமன்றோ?
கண்கள் தூசு பட்டதுமே
   கண்ணீர்க் குளத்தில் தவிக்குமன்றோ?
மாற்றம் வாழ்வைப் புரட்டிவிடின்
   மக்கள் மனங்கள் திருந்துமன்றோ?
மற்றும் ஓர்வாழ் உள்ளதென்று
   மானம் துறந்து வழிசேரும்
ஊற்றி னைப்போல் பெருக்கெடுக்க
   உடைய இடமே சேருமன்றோ?
உண்மை உடைமை எதுவென்றங்(கு)
   உள்ளம் தெளிவு பெறுமன்றோ?                  1

எண்ணி எண்ணி உளம்நிறைத்தேன்
   ஏணி ஆனேன் ஏற்றிவிட்டே
எனக்கோ இன்னும் ஏமாற்றம்
   ஏனோ இந்தத் தடுமாற்றம்?
நண்ண வேண்டும் நல்வழியை
   நாளும் உணர்ந்து கைக்கொள்ளேன்
நட்டார் நலனே நலனென்று
   நட்ட மரமாய் நான்நின்றேன்
கண்ணே மணியே எனப்போற்றி
   கருத்தை அகத்தே நன்றேற்றிக்
கடலே அன்ன தமிழுணர்த்திக்
   கவிழ்ந்த கலமாய் ஆனேனே
அண்ணற் கெளிதா யகம்விளைத்தும்
   அண்ணல் என்றே பேர்பெற்றும்
அன்பே என்றன் வழியென்றும்
   அற்றேன் வாழ்க்கை பிறர்வாழ!                  2

என்றன் வாழ்க்கை இயல்பறிந்தார்
   என்றன் உள்ளப் பொருளுணர்ந்தார்
இன்றும் இல்லை இனியுமில்லை
   என்னும் நிலைமை வாராது
நன்றே உலக நலன்கருதி
   நலமே விளைக்கும் செவியுள்ளார்
பொன்றும் துணையும் வாழ்ந்திருப்பார்
   புவியில் புனிதர் பேறுபெற்றே
அன்றும் இன்றும் எப்பொழுதும்
   அறமும் பொருளும் நனிவிளக்கி
அகிலம் காக்கும் இலக்கியத்தை
   அள்ளிப் பருகி நலம்வாழ்வோம்
கன்று தாயை மறப்பதில்லை
   கவிதை அறத்தை மறப்பதில்லை
கவிஞன் உலகை வழிநடத்திக்
   கடமை செய்தல் வாழ்வாகும்                     3

Sep 1, 2023

ஓ! ஏணியே!

ஓ! ஏணியே!
ஏன் நீயே
உன்னைக் குறைத்து மதிப்பிட்டு
உடைந்து போகிறாய்?

வாழ்வின் ஏற்றங்கள் எல்லாம்
வகைவகையாய் வந்துசேர
ஊற்றுப் பெருக்காய்
உடையன தருகிறாய்!

ஏணியென வாழ்ந்துவிட
ஏற்றுக்கொண்ட வாழ்விலே
ஆணியெனப் புதைந்துவிட்ட
ஆற்றலை எல்லாம்
வெளிக்கொணர்ந்து
மாற்றங்கள் பலவரினும்
மாறாதது ஏணியென
மார்தட்டுவதில்
மண்ணுக்கும் பயனில்லை

மாற்றத்தை ஏற்காத
வசதியான இடம்
சதியான இடம் என்பதை மறவாதே

எதிர்பார்ப்புகளால்
ஏமாற்றங்கள் ஏற்படுவது
இயற்கைதான்
எதிர்பாராமல்
என்னத்தை மாற்றிவிட முடியும்

மாற்றம் வேண்டுவார் மனத்தில்
குறிக்கோள் எனும் எதிர்பார்ப்பு வேண்டும்.