Sep 30, 2015

நதியா - பிறந்தநாள் வாழ்த்து

ஆசிரியத் தாழிசை

கனியுளந் தேன்மொழி கவினொளி மதிமுகம்
நனிசிறந் திலங்கிடும் நற்பண்(பு) அரசி
இனிமையுற் றென்றும் இசைபெற வாழிய!

ஆற்றுப் படுத்தும் ஆற்ற லுடைய
ஆற்றுப் பெயர்கொள் அன்புத் தோழி
ஏற்றமுற் றென்றும் இசைபெற வாழிய!

பொறுமை அரும்பெரு பொற்குணம் இயல்பாய்
உறுந்தகை மையினால் உயர்செவி லியரெனப்
பெறும்பே றிதுவே புகழொடு வாழிய!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 27, 2015

வாணிகமும் இயற்கைச் சீரழிவும்

நேரிசை ஆசிரியப்பா

நானில நன்மை சிறிதுங் கருதா
மானிடர் சிலர்தம் மாவிடர் சேர்க்கும்
வாணிக நெஞ்சுதன் வளத்தைப் பெருக்கிக்
காணலுங் கருமங் காத்தலுங் கோளெனக்
காணா திருத்தல் கவினியற் கைதன்
அழிவுக்(கு) ஆக்கம் ஆக்கும் அஞ்சாப்
பழிசேர் மூடர் பண்பிலார்
விழியொளி பெறாஅர் வீணே வீணே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 18, 2015

மொழிக்குப் பழிநேர்ந்தால்? (வெளிவிருத்தம்)

மொழிப்போ ரைத்தொ டங்குந் தலைவ - மடமோடி
மொழியென் றாலென்? மொழிவா யறியா - மடமோடி
விழியாய் விளங்கு வைநீ என்றார் - மடமோடி
விழியைப் பிடுங்கு மிழிசெய் கையேன்? - மடமோடி
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மடமோடி - மடம் ஓடி - மடமை ஊடுருவி.
மொழிவாய் - மொழியின் மூலம்

Sep 9, 2015

கடலும் உள்ளமும் (வெள்ளொத்தாழிசை)

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; நிலையின்றிக்
கத்து தலைக்கொண்டு காவல்கை யற்றன;வ
கத்துத் தளைகொண்டு கா

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; பொதியுள்சங்

கத்தமிழ் பேரொலி கட்பொருள் கொள்க;வ
கத்தமிழ் பேரொளி காண்

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; உளதன்ன

கத்தெண்  ணிலாத வளங்கள்; வளங்களுள
கத்தென் னிலாத வளம்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:


ஆழிசை கடல் உள்ளம் ஒத்த - பெரும் சத்தத்தை ஏற்படுத்தும் கடலும் உள்ளமும் ஒத்த தன்மையன.

ஏனெனில்,
1. நிலையின்றிக் கத்துதலைக் கொண்டு காவல் கையற்றன
2. பொதியுள் சங்கத்து அமிழ் பேரொலி கட்பொருள் கொள்க (சங்கினின்று எழும் பேரொலி, சங்கத்தினின்று எழும் பெருமுழக்கம் - எழுதலுக்குக் காரணம் அமிழ்ந்திருத்தல் எனக் கொண்டு) 
3. உள தன்னகத்து எண்ணிலாத வளங்கள்

1. அகத்துத் தளைகொண்டு கா - மனத்தைக் கட்டுப்படுத்திக் காக்க

2. அகத்து அமிழ் பேரொளி காண் - மனத்தில் இருக்கும் பேரொளியை அறிந்துகொள்க
3. வளங்களுள் அகத்து இலாத வளம் என்? (என்று அறிக) - அவ்வளங்களுள் மனத்தில் இல்லாத வளம் என்ன என்று ஆய்க.

Sep 5, 2015

வீர இராகவன் (பிறந்தநாள் வாழ்த்து)

கலிவிருத்தம்

வாச மந்தா தித்திருப் பாற்கடல்
ஆச னந்தா னென்னர வாமுயர்
நேச மந்தா சின்மலர் இலக்குமி
மாச னந்தம் போக்கிடும் இராகவன்        1

வீசு தென்றற் போல்விளங் கிடவருள்
ஆசி பெற்று வாழிய வளத்தொடு!
ஆசு கர்வ மேதுமி லாதவன்
நேசன் நேர்நில் நெஞ்சுரன் வாழிய!        2

நேச முற்றன நேர்ந்திட வாழிய!
மீசை மாகவி போற்றுவன் வாழிய!
பேசி டாவுயிர் பாசமுற் றியவன்
ஈசன் மைந்தனின் பங்கொள வாழிய!    3
                 தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 1, 2015

ஒன்றிய ஒருநான்கு வெண்பா

நேரிசை வெண்பா
----------------------------
ஒன்றில்நான் காகாதே ஒன்றேயாம்; ஒன்றாக்கால்
ஒன்றாகா; உள்ளம் ஒளிபெறா; - வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

இன்னிசை வெண்பா
--------------------------------
ஒன்றில்நான் காகாதே ஒன்றேயாம்; ஒன்றாக்கால்
ஒன்றாகா; உள்ளம் ஒளிபெறா ; வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

சிந்தியல் வெண்பா
------------------------------
ஒன்றாகா உள்ளம் ஒளிபெறா வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

குறள் வெண்பா
------------------------
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 29, 2015

சிவன்

நேரிசை வெண்பா

ஆஅ டரவாஅ ஆஅ பரணமுனக்
காஅ டுவதோஒ காஅட்டி - லாஅ
லகாஅல நஞ்சுண் டதேஎன் பிழைப்பு
தகாஅத மைந்தோய் தணி  
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய: 
ஆடுஅரவா ஆபரணம் உனக்கு? ஆடுவதோ காட்டில்
ஆலகால நஞ்சுண்டது ஏன்? பிழைப்பு தகாது அமைந்தோய்! தணி!

Aug 18, 2015

கண்ணா

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்னபெய ரிடலாமென் றெண்ணி இருக்க
  என்னுளத்தே எழுந்ததுவோ கண்ணா என்ப
நின்றோழி தனைநீய ழைத்த பேரோ
  கண்ணம்மா வாய்நிறைய அழைத்து மகிழ்ந்தாய்
என்றாலும் நின்கண்ணைக் காணு முன்னே
  இட்டபெயர் இங்ஙனம்பொ ருத்த மாகும்
என்றெண்ண விலையுன்றன் கண்ணை இன்று
  ஏரெடுத்துப் பார்த்துவியந் தேனே என்னே!

கண்ணாளன் என்றாகேன் ஆனா லுன்றன்
  கண்ணாள முனைந்தேநான் இன்று மகிழ்ந்தேன்
கண்ணால்நான் உனையென்று காண்பேன் அறியேன்
  கண்ணாள வென்னுளத்தைக் கொன்றாய் பின்னும்
கண்ணுக்குள் கண்ணாகி நின்றாய் நன்றாய்
  கண்டவனாய்க் காணாத தவனாய்க் கண்டேன்
கண்ணாடி குவித்துன்னை எட்டா தாகக்
  கண்ணுக்குக் குழிந்தெடுத்துக் காட்டும் அன்றோ!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 3, 2015

காரிகை

கட்டளைக் கலித்துறை

காரிகை கற்றுக் கவிபா  டுவனெனின் காதலியக்
காரிகை தானெனைக் காணாள் எனயான் வருந்தினனே !
காரிகை யாளெனைச் சேர்ந்திடு நாளொன் றுளதறியேன்!
காரிகை யேயுல கென்றென வெண்ணி வருந்துவனே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


Jul 31, 2015

கைக்கிளை யேதங் கைக்கிலை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

(தரவு)
நாவளன்தன் நெஞ்சதனில் நேர்ந்திடூஉம் நற்றலைவி!
ஆவலன்தன் மொழிக்கேங்கி யனுதினமும் காத்திருக்கும்
காவலன்தன் காவளம்சேர் காலமுந்தான் வந்ததெனத்
தாவலனென் றுள்ளத்தைத் தாங்கியெழு தும்மொழிகேள்!

புளிபோட்டு விளக்கியவள் மொழிகேட்டு நகைத்தவன்தன்
களிப்புக்கா தாரமும்நீ கண்ணுள்ளே நிற்கின்றாய்!
ஒளித்தலறி யாதிவன்தன் உணர்வுகளைச் சிறுகணமும்
அளித்தருள்நின் னெஞ்செனக்க டங்காத வுளமொழிகேள்!

(தாழிசை)
நினைவகற்ற வியலாது நினைதினமும் நெஞ்சுறைத்துக்
கனவினிலே காண்கின்ற கள்வனைநீ உணர்வாயோ?

நினைப்பிரிய மனமில்லா நேயத்தன் வன்சிறைதான்
எனைக்கொல்ல ஏங்கவிட்டு விட்டதனை உணர்வாயோ?

கண்சிமிட்டும் நொடிப்பொழுதில் கணக்கறியாச் செயல்புரியும்
கண்களைநே சிப்பவனின் கனியுள்ளம் உணர்வாயோ?

என்சிறையீ தென்றறிய வியலாதும்; அறிந்தும்பின்
தன்சிறையீ தென்றுணர்ந்தான் அவனைநீ உணர்ந்தாயோ?

தன்செய்த னக்கோர்பொன் செயவிழைந்தான் அப்பொன்னேர்
பொன்னித்தாய் தன்னில்தான் போற்றுவள்நெஞ் சுணர்ந்தாயோ?

பாவினனி யல்பாம்தன் பொருந்துள்ளப் பெருந்தகையாள்
நாவினளைத் தான்தேடி நலமுறுதல் உணர்ந்தாயோ?

(தனிச்சொல்)
ஆம்பின்,

(அராகம்)
அவனுளங் கருமுகி லெனவெளி யடைந்திடுந்
தவனுளம் வருந்தியு ழல்கிற தென்னை?

பொருளெது வவனெதிர் படினுனின் நினைவுகள்
அருள்வது வெனவுளம் மருள்கிற தென்னை?

களவுடை யவனெனக் கருதினை அதுவுளக்
களமெனக் கருதினன் தவறிலை என்னை?

சிவனென வளப்பரும் பருவதன் மகளெனத்
தவமொழிந் தவடனை நெருங்கின னென்னை?

(தனிச்சொல்)
ஆதலின்,

(தாழிசை)
தோழீஇ யேபின்தோள் கொடுத்தென்றன் உளமாற்று;
நாழீஇ யும்பிரிய மனமில்லேன் எனைத்தேற்று;
ஆழீஇ வேறென்னுள் ளந்தானஃ  திரங்காற்று;
கேழீஇல் பெருந்துணையாய் உளக்களத்தே வுனையேற்று;
ஏழீஇ சைமீட்டி எல்லையிலா உளத்தாற்று;
வாழீஇ யெனப்பரந்தென் னுளஞ்சேரு மொழியாற்று;

(தனிச்சொல்)
உரைப்பாய்

(நாற்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
என்செய் கின்றனை? என்சொல் கின்றனை?
புன்செய லோவென்? நன்செய லோவென்?
சிந்திக் கின்றனை? அதுவன் றென்னின்
நிந்திக் கின்றனை? பிழைப்பைப் பாரும்!
எனவுரைக் கின்றனை? அதுவன் றென்னின்
நன்றூஉ நன்றென் அன்புடை நெஞ்ச!
எனவுரைக் கின்றனை? என்சொல் வேனியான்?
அன்பே நண்பே உள்ளம் பகர்வாய்!

(தனிச்சொல்)
இன்னுமியான்

(சுரிதகம்)
தூது யாதெனத் தேர்ந்திடு வேனோ?
யாதென் னுளத்தை உனக்குரைத் திடுமோ?
ஏது யென்னென் றறிகிலேன்
போதே தேனே உள்ளம் பகர்வாய்!
                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்