Dec 31, 2015

வீரன்

வீரன் என்பவன் யாரடா
வினைகள் தீர்ப்பவன் பாரடா
பாரம் என்றும் எனக்கில்லை
பயமோ ஓடும் பார்த்தெல்லை
 
கடலும் மலையும் மடுவாகும்
கடந்திடும் இரும்பு மனமாகும்
கடவுள் அவனைப் படைத்திடவும்
கையில் ஆயுதம் எடுத்திடுவேன்
 
கொண்ட செயலை ஓரெண்ணம்
கொண்டே முடிப்பேன் காரென்னும்
அண்டும் வாழ்க்கை எனக்கில்லை
அகிலம் எனக்கு மேலில்லை.
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Dec 25, 2015

மாரி கழிந்தது

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

மாரி கழிந்தது மாவிமஞ் சூழ்ந்தது
நீரில் உறங்கும் நெடுமாலை நாம்பாடித்
தேரின் மனத்தெண்ணம் தெள்ளியசொல் செந்நாவில்
சேரின் அதன்பொருட்டே செய்செயலும் மாறாமல்
போரில் புனிதமிகு பொன்னுலகை நாம்படைத்(து)
ஓரில் ஒருகுடை ஓருளமென்(று) ஓர்ந்துயர்ந்து
சீரிளமைச் செந்தமிழ்ப்பா தித்திக்கத் தாலாட்டும்
மாரி நனைந்தே மகிழ்வோடு வாழ்குவமே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Dec 19, 2015

கைக்கிளை

தரவு கொச்சகக் கலிப்பா

கலிப்பாதன் பெருந்துள்ளல் கனிந்தமனத் தடங்காத
வலிப்பாவிங் கெழுந்தோடு மழைநீராய் அலைந்தேகிக்
கலிதானுட் புகுந்தவனுங் கலங்காநின் றேநலிந்தான்
நலிந்தானுன் நினைவாலே நலிந்தானே நலிந்தானே
அவனைக்
கள்ளுங் காலம் கொள்ளுங் காலம்
தெள்ளுத மிழ்ச்சுவை போலே
அள்ளுங் காலமெக் காலம் அம்மே?
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Dec 13, 2015

மாமழைத் துயரம்

நேரிசை வெண்பா

(முன்முடுகு)

அக்கத்துப் பக்கத்துச் சிக்கித்தத் தித்தத்தித்
திக்கித்தச் சத்துத்திக் குத்திக்குத் - துக்கித்தித்
தண்ணீர் தனில்யாவும் தானிழந்து செல்கின்றார்
கண்ணீ ரொடுங்கொடுமை காண்
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
அக்கத்துப் பக்கத்துச் சிக்கித் தத்தித் தத்தித் திக்கித்து அச்சத்துத் திக்குத் திக்குத் துக்கித்து இத் தண்ணீர்தனில் யாவும் தான் இழந்து செல்கின்றார் கண்ணீரொடும் கொடுமை காண்.

அன்னை

கலிவிருத்தம்

அரும்பு தொட்டுளம் ஆவியின் மேலதாய்ப்
பெரும்பொ றுப்பொடு பேணிவ ளர்த்திடுங்
கரும்பு கற்பகக் காவென நிற்பவள்
அருந்த வத்தவள் ஆருயிர் அன்னையே! 
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 28, 2015

என்னவள் தன்னுள் யான்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

"புனிதமிகு வெண்ணங் கொண்டேன்
    புரிதலிலே வண்ணங் கண்டேன்
தனித்துவங்கண் டேவி யந்தேன்
    தலையாய மதிப்புங் கொண்டே
மனிதரிலே குருவாய்க் கொண்டேன்
    மகத்துவனீ! துணையாய்க் கொண்டால்
துனியென்றாம்" என்றாள் பாரேன்
    துயரந்தான் வாழ்வில் இங்கே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

துனி - குற்றம்.

என்பே தை - என்பேதை

கலித்தாழிசை

என்பேதை அன்புடையன் இவனென்று ணர்ந்திலங்கா
என்பேதை? அன்புடையள் என்றாலும் மனமில்லாள்
இன்போ?தை இன்னலிதோ? என்றறியேன் மனத்தில்லாள்
எந்நேர முந்தவமாய் இயல்கின்றேன் மனத்தில்லாள்
                                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 23, 2015

முருகா!

கட்டளைக் கலித்துறை

அருவாய் உருவாய் அருளாய் ஒளியாய் அகத்துறையும்
பொருளாய்ப் பொருள்தன் பொருளாய்ப் பொலியும் பொழில்விருப்பக்
கருவாய்க் குருவாய்க் கனியாய்க் கனிவாய்க் கனிந்தவனே!
திருவாய்த் திறமாய்த் திருவாய் மொழியாய்த் திகழ்குகனே!
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 22, 2015

வான மழையும் வாழ்க்கையும்

காப்பியக் கலித்துறை

தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா

வான மழைக்குங் கடல்நீர்தனை மாற்றி வைத்துத்
தான மெனவிவ் வுலகேபெறு மாற ளிக்குங்
கான லெனமுன் கரைந்தேகிடுங் கால வாழ்க்கை
வான மெனச்சேர்த் தளித்தேகளித் தேகு வோமே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 8, 2015

பொருள் விளக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருவிளங்கு முருண்டையது மொழிவ ழக்கில்
   பொருவிளங்கா வுருண்டையென மாற்றங் கொண்டு
பொருள்மயக்கம் தந்தென்னை யலைக்க ழிக்கப்
   பொருளுணர்த்தி யருள்தந்தார் பெருந்த கைமைத்
திருவரதப் பெருங்கோவும் அழகுக் கோவும்
  சிறந்தபொருள் சொல்வழக்கைத் தெரிந்து கொள்வோம்
பொருள்விளங்கா மற்போதல் புரிந்து கொள்ளாப்
  பொருள்நிலையாப் பொருளென்று பொருள்த ரும்மே 
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மொழிவழக்கு - வினைத்தொகையாகப் பேச்சு வழக்கு எனும் பொருளில்.

திருவரதப் பெருங்கோ - மரபுமாமணி மா.வரதராசனார்
அழகுக் கோ - சுந்தரராசனார்

பொருள்விளங்காமற் போதல் என்பது  1. புரிந்துகொள்ளாப் பொருள், 
2. நிலையாப் பொருள் எனும் இருபொருள்களைத் தரும்.