Aug 21, 2022

செருவெல்க செந்தமிழே!

தமிழ்வாழ்த்து

தகவற் றொழினுட்பக் காலத்துத் தகவமைந்(து)
அகவும் அருந்தமிழே! ஆற்றலைக் காட்டிப்
பகலாய் விளங்குவாய் பார்வென்(று) ஆளுவாய்
மகக்கடன் வேறென்ன காப்போம் மனமார்ந்தே

பாவலர் மா. வரதராசனார்க்கு வாழ்த்து

வரத ராசர் மனங்கொள் நேசர்
வரமாய் வந்து மரபைக் காக்கும்
பரந்த மனத்தார் பண்பிற் சிறந்தார்
தரமாய்த் தமிழைத் தருவார் போற்றி

அவையடக்கம்

எவையடங்குங் காலத்தும் சுவையடங்காச் செந்தமிழின்
பகையடங்கச் செய்தற்குப் பாட்டாலே பரவுவோம்
அவையடங்கிக் கருத்துரைப்போம் ஆன்றோர் குறைபொறுப்பீர்
கவைத்தறிவு பெருகற்குக் கரையில்லா விளக்காவீர்

செருவெல்க செந்தமிழே!

எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பேரிடர்கள்
சத்தான செந்தமிழைத் தகர்த்தெறிய நின்றெதிர்த்தும்
அத்தனையும் பொடியாகி அகமழிந்து நிற்பதுகாண்
முத்தான செந்தமிழே முக்காலும் உலகாளும்                       1

கலந்தாலும் கலந்துகலந் தேபிரிந்தும் தனித்தமிழின்
குலந்தழைக்கும் குவலயத்தில் முன்னிற்கும் எழில்காணீர்
மலடில்லை மகப்பேறு பெற்றவளைத் தாயவளைத்
தலைதூக்கிக் கொண்டாடும் தமிழ்க்குலமே தமிழ்க்குலமே 2

தமிழன்றன் மறையெல்லாம் தான்மறைத்து வளர்ந்தாலும்
தமிழோசை யால்கெட்டுத் தவிக்கின்ற நிலைக்காகும்
அமிழ்தாகும் அவளுக்கு வேறேதும் இணையில்லை
தமிழோடு விளையாடத் தனித்திறமை வேண்டுமன்றோ 3

பாமரனின் நாக்கினிலே படியாவே பிறமொழிகள்
நாமறுக்க மாட்டாமல் நலம்விளைக்கும் தமிழ்மொழியே
ஏமமென எப்போதும் இருப்பதுவே இயற்கைமொழி
தீமையுற்றுப் பிறமொழிகள் செயற்கையினால் அழியும்மே 4

பலவாறாய்க் கிளைத்திருக்கும் மொழிக்கெல்லாம் தாயாகி
நிலையாக வீற்றிருப்பாள் நெஞ்சினிலே முக்காலும்
தலையிருக்க வாலாடும் தனித்திறமைக் கதையெல்லாம்
தலையிழந்து தரமிழந்து தாயின்றாள் தாம்பணியும் 5

செருவென்று வந்துவிட்டால் செருவென்று காட்டுபவர்
பொருவென்று பகைவர்தமைப் போயழிக்கும் வீரமிகு
திருச்செல்வர் பலவுண்டு திகைப்பேதும் தேவையில்லை
உருவழிக்க வியலாதே உண்மையென்றும் நிலைத்திருக்கும் 6

பல்குகின்ற துறையாவும் பாதையிடும் பெருந்திறமை
நல்குகின்ற தமிழ்த்தாயே! நானிலத்தை ஆள்பவளே!
செல்வமெலாம் நீயன்றித் தேர்வதிலை என்மனத்துள்
தொல்குடியன் எனப்பெருமை கொள்வேனே தொடர்ந்தகழ்ந்தே! 7


ஆரியமும் மகமதுவும் ஆங்கிலமும் ஆகிவரும்
பேரியக்கம் எல்லாஅம் பெரும்படையைக் கொண்டுவந்தும்
நீரியல்பைப் போன்ற நிலையான செந்தமிழின்
பேரிலக்க முத்தாழி முன்னிற்க முடியாதே!                                            8

Aug 16, 2022

சங்கத் தமிழ்வேள் - சங்கர சத்யா

சங்கத் தமிழ்வேட்குச் சத்தியநா ராயண
சங்கரர்க்குப் பாமாலை சாற்றுவோம் - பொங்கும்
உளம்நிறை செந்தமிழ் ஓட்டம் கவிதைக்
களம்நிறையக் காக்குந் தலை

Aug 13, 2022

முந்தைப் பிறந்தவள்யான் - ஒருபா ஒருபஃது

இயற்கையாய் நின்றேன் எடுத்தாண்ட வேந்தர்
முயற்சியால் மூன்றாய் வளர்ந்தேன் - செயற்கை
பலவாறாய் என்னைப் பதம்பார்க்க எண்ணித்
தலைவேறாய்ப் போனது காண்                                                      1

இயற்கை சிதைக்கும் செயற்கை வழக்கம்
இயற்கையே என்றும் இருக்கும் - அயர்ந்திந்த
பூமி அழிந்து புதுப்பிறவி கொண்டாலும்
ஆமிமிழ்ந்து தோன்றுவன் யான்.                                                    2

இயல்பின ளாய எனையழிக்க நின்றார்
முயற்சியெலாம் பாழாய் முடியும் - அயற்சியிலா(து)
ஆழ்ந்தகழ்ந் தாய்வார்க்(கு) அமிழ்த சுரபியாம்
வாழ்ந்தார் எனைக்கூறு வார்                                                           3

இயற்கையி னின்று செயற்கையை நாடி
முயற்சிகள் நீளல் முடிபோ - பெயர்ச்சிகள்
மேன்மேலும் வந்தென்னை வீழ்த்த நினைத்தாலும்
யான்மேலே நிற்பேன் இனிது                                                           4

உயர்ந்த பொருளாய் உணர்வார்க்(கு) உணர்வாய்ப்
பெயர்ந்து வளர்வார்க்கும் பேறாய் - அயராத
நல்லுள்ளந் தந்து நயத்தகு பாவடிக்கச்
சொல்லுள்ளம் சேர்ப்பேன் சுரந்து                                                   5

எனக்கென்ன போட்டி எடுத்தாளு வார்தம்
மனக்கவலை மாற்றும் மருந்து - தனக்குவமை
இல்லாத என்னை இனியவளைக் கையாண்டு
சொல்லாத தெல்லாமே சொல்                                                         6

என்னின் இளையார்க்கும் ஏற்ற இடந்தருவேன்
பொன்னின் பொலிவோ பொசுங்காது - மன்னும்
நிலைப்பே றுடையவள் நீண்டு தொடரும்
கலைவேறு யான்வேறோ காண்?                                                    7

வருமொழி யாவும் வளரும் தளரும்
ஒருமொழி யுண்டென்பார் ஓர்ந்தார் - அருமொழி
நிற்கும் பிறமொழி நீத்து விடுமியல்பே
பொற்குவையே காக்கப் படும்.                                                         8

முத்தமிழாய் முத்துதிர்க்கும் முந்தைப் பிறந்தவள்யான்
சொத்தாய்ப் பலர்க்குச் சுரந்தமுத - வித்தாய்த்
திகழும் விளக்கம் தெரிந்தவள் என்னை
இகழ்வார் இகழ்ந்தழி வார்                                                                   9

மொழிவார் மொழியாவேன் முத்தாய் முனைவார்
எழிலாவேன் இன்பம் இயற்றிப் - பொழிலாவேன்
காலத்(து) அழியாத காவியம் தந்துயர்ந்து
ஞாலத் திருப்பேன்யான் நன்று                                                          10

முத்துமணி அம்மா

முத்திரண்டு பெற்றவராம் முற்றறிவு தந்தவராம்
முத்துமணி அம்மா முகமலர்ந்து - முத்தியுற்றார்
வைகுண்டம் வந்தடைந்தார் வாழ்த்துவார் எந்நாளும்
செய்தவத்தால் செம்மையுறச் செய்து.

வெண்ணிலாவே!

வெண்ணிலாவே உன்னொளி அன்ன
என்னிலாவைக் கண்டென சொல்வாய்?
கண்ணிலாதான் கலங்குதற் போலே
மண்ணில்யானும் உழலுகின் றேனே

Jul 7, 2022

மென்பொருள் மேலாண்மை

Software support team provides a workaround 
until the development team finds a solution

ஆய்ந்தொரு தீர்வை அளிக்கும்வரை மென்பொருள்
தோய்ந்து விடாது தொடர்ந்திருக்க - வேய்ந்தளிப்போம்
தற்கா லிகமாய்த் தடைநீக்கி வாணிகம்
நிற்காது நீள்வதற் கே
                              - தமிழகழ்வன்

Jun 19, 2022

வண்ணப்பா - திருக்குறளின் பெருமை

தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா
தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா
தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா - தனதந்தா

முத்தாகிய முற்றோதிய முத்தார்தமிழ் வித்தே
முட்டாகிய முற்றாதன முற்றோடொழி சத்தே
முப்பாலது நிற்பாலது வற்றாததும் எற்றே          - குறளன்றே
   முத்தேயமும் மிக்காயிசை தைத்தார்மனம் உற்றே
   செற்றேயிது குற்றேயடி எற்றேயுரை யுற்றும்
   முப்பாலிணை எப்பாலுமில் அக்காலம தித்தே - கொளவென்றே

சித்தாவென முத்தாவென அத்தாவென மற்றே
சொத்தேயென மிக்கோர்மனம் எக்காலமும் பற்றே
தெற்காயொரு பற்றாயவர் முற்றாயவும் நற்றேன்   - உணவென்றே
   செற்றாரையும் நற்பாலரா நிற்பாரெனும் வித்தா
   நெய்ப்பாரவர் தப்பானவை சுட்டாதிலை சற்றே
   செப்பாதுள மெய்ப்பாடெது முற்றாவுல கிற்றே   - அழகுஞ்சேர்

புத்தாகிய தெக்காலமும் பெற்றோர்நிலை யுற்றோம்
பொற்றாமரை நற்றாளிணை பெற்றேவுயர் வுற்றோம்
பொற்கோவிறை நற்பேருளம் பெற்றோமகிழ் வுற்றோம் – இணையின்றே
   புற்றார்மனம் பித்தாயலை வுற்றேநிலை கெட்டால்
   உற்றார்துயர் முற்றாவழி தெற்றாவில கிற்றே
   பொற்றாநிலை எற்றேயவர் பித்தேயழி வுற்றே - மனமொன்றே

கொத்தேயெது? கொக்கோதவ முற்றேயொரு முத்தே
அத்தேவழி நிற்றேநிலை சத்தாயொரு மித்தே
கொத்தாயென வித்தாயொரு முற்றானது தித்தே - வளமொன்றே
   கொப்பூழொரு சிற்றாருயிர் கொத்தாகியு தித்தே
   கைப்பாடுறு மக்கூழது துப்பாமமிழ் தத்தேன்
   கொத்தாவது தப்பாதினி தப்பாலது முப்பால் - எனவென்றே 
                                                            - தமிழகழ்வன் 

பிரித்தறிய:
முத்து ஆகிய முற்றும் ஓதிய முத்து ஆர் தமிழ் வித்தே
முட்டு ஆகிய முற்றாதன முற்றோடு ஒழி சத்தே
முப்பாலது நிற்பாலது வற்றாததும் எற்றே - குறளன்றே

முத்தேயமும் மிக்காய் இசை தைத்தார் மனம் உற்றே
செற்றே இது குற்றே அடி எற்றே உரை உற்றும்
முப்பால் இணை எப்பாலும் இல் அக்காலம் மதித்தே – கொளவென்றே

சித்தா என முத்தா என அத்தா என மற்றே
சொத்தே என மிக்கோர்மனம் எக்காலமும் பற்றே
தெற்காய் ஒரு பற்றாய் அவர் முற்று ஆயவும் நற்றேன் - உணவென்றே

செற்றாரையும் நற்பாலராய் நிற்பாரெனும் வித்தாய்
நெய்ப்பார் அவர் தப்பானவை சுட்டாது இலை சற்றே
செப்பாது உள மெய்ப்பாடு எது முற்றா உலகு இற்றே - அழகும் சேர்

புதுமை ஆகியது எக்காலமும் பெற்றோர் நிலை உற்றோம்
பொன் தாமரை  நற்றாள் இணை பெற்றே உயர்வு உற்றோம்
பொன் கோ இறை நல் பேருளம் பெற்றோம் மகிழ்வு உற்றோம் – இணை இன்றே

புற்று ஆர் மனம் பித்தாய் அலைவு உற்றே நிலை கெட்டால்
உற்றார் துயர் முற்றா வழி தெற்றாய் விலகிற்றே
பொற்றாநிலை எற்றேயவர் பித்தேயழி வுற்றே - மனமொன்றே

கொத்தே எது? கொக்கோ தவமுற்றே ஒரு முத்தே
அத்தே வழி நிற்றே நிலை சத்தாய் ஒருமித்தே
கொத்தாய் என வித்தாய் ஒரு முற்றானது உதித்தே – வளமொன்றே

கொப்பூழ் ஒரு சிறு ஆருயிர் கொத்தாகி உதித்தே
கைப்பாடு உறும் அக்கூழ் அது துப்பாம் அமிழ்தத் தேன்
கொத்து ஆவது தப்பாது இனிது  அப்பால் அது முப்பால்  - என வென்றே 

விளக்கம்: 
முத்துக்களாகிய இலக்கணக் கூறுகளை முற்றும் உள்வாங்கியதால், அம்முத்துக்கள் நிறைந்த தமிழ் விதையே (திருக்குறளையும் இலக்கணத்தையும் சேர்த்துப் படிக்கும்போது நமக்கு ஒன்று புரிய வரும். என்னவென்றால் இலக்கணக் கூறுகளில் பெரும்பாலானவற்றை உள்வாங்கியவர் எடுத்துக் காட்டுகளைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே திருக்குறளைப் படைத்ததாகத் தோன்றும்). இந்நூலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அரைகுறை அறிவுகளையெல்லாம் மொத்தமாக ஒழிக்கின்ற வளமை உடையதே மூன்று பால்களை உடையது.நிலைத்து நிற்கக் கூடியது. அதன் கருத்துக்கள் பலவும் காலத்தால் வற்றிப் போகாமல் இருப்பதும் ஆகிய நூல் என்னவோ? குறளல்லவா!

சேர, சோழ, பாண்டிய நாடுகளாகிய மூன்று நாட்டினரும் மனமார மிகவும் புகழ்ந்து பாராட்டினர். சிலர் இது இரண்டே அடிகளை உடைய குறுமை உடையது எனப் பகைமை பாராட்டினர். ஆனாலும் அக்காலத்திலேயே முப்பாலுக்கு இணை எந்தப் பாக்களும் இல்லை என்று ஏற்றுக்கொண்டு மதித்தனர். 

சித்தரே, முத்தியின்பம் தருபவரே, தந்தையே, மற்றும் எங்களின் சொத்தே எனத் திருவள்ளுவரை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் எக்காலத்திலும் மாறாத பற்றுடையராகின்றனர். தென்புலத்தாரும் வணங்கத்தக்கவரே என்று அவர் கூறிய கருத்து, குமரிக் கடலை முழுதும் ஆராய முனையும் ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல தேன்போன்ற இனிய உணவாகும்.

சினந்து பகைமேற் கொண்டாரையும் நல்லவராய் நிலைக்கச் செய்யும் விதையாகச் செய்வார்; அவர் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இல்லை. திருக்குறளில் சொல்லப்பபடாத மெய்ப்பாடுகள் உள்ளனவா? இது இன்னும் முழுமையாக உணராத உலகில் இன்றும் அழகும் சேர்க்கின்றன. (தமிழ் மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகியன)

திருக்குறளைப் படிக்கப் படிக்க எந்தக் காலத்திலும் புதிது புதிதாகப் பொருள் புரிந்துகொள்ளும் நிலையை அடைந்தோம். திருவள்ளுவரது பொற்றாமரைப் பாதங்களை வணங்கி உயர்வடைந்தோம்.
பொன் போன்ற இறைவனாகிய திருவள்ளுவரின் நன்மை செய்யும் பெருமை மிக்க உள்ளத்து உணர்வுகளைப் பெற்றோம்; மகிழ்வு உற்றோம். அவருக்கு வேறு யாரும் இணையில்லை.

எறும்புப் புற்றினைப் போன்று ஏராளமான எண்ணங்களைத் தாங்கிய மனம் பித்துப் பிடித்து அலைந்து தன் நிலைமை கெடும்போது, அந்தத் துயரம் அடைந்தவர் அதன் உச்ச நிலைக்குச் செல்லாமல் தெளிவடைய வழிகாட்டித் துயரத்தை விலக்குவது திருக்குறள். பொறாமை என்ற பித்து நிலை அழிந்து, மனம் ஒன்றச் செய்வது திருக்குறள் (பொறாநிலை சந்தம் நோக்கிப் பொற்றா நிலை என வந்தது).

கொக்கொக்க கூம்பும் பருவத்து என்ற குறளுக்கேற்ப நின்றால் வாழ்க்கை வளமாகும். 

அமிழ்தினும் ஆற்ற இனிதே என்ற குறளை எண்ணி மகிழ்கிறோம். இனியதாகிய அப்பால் அது முப்பால் எனத் தப்பாமல் கொத்திக்கொள்வோம்; வென்று காட்டுவோம்.

வண்ணக்கலித்துறை

தன்னன தானா தய்யன தானா தந்தானா

இன்னமு தாமே இல்லவ ளாலே என்பேனே
அன்னமு மாமே அல்லியு மாமே அன்போடே
பொன்னென வாமே புல்லுவ ளாமே பொங்காதே
சொன்னவை தாமே பொய்யவை வேறோ சிந்தாதே

வண்ணப்பா

தத்தத் தனதனந் தனனா
தத்தத் தனதனந் தனனா
தத்தத் தனதனந் தனனா - தனதானா

முக்கட் பரமனின் றுணையே
முத்தத் தகைமுகந் தயவே
முற்றுப் பெறுமனந் தருவாய் - அருள்வாயே!

மொட்டுச் சிறைவிரிந் தவனாய்
மட்டற் றுளமகிழ்ந் திடவே
முத்துத் தமிழனிங் குறவே - பணிவேனே

மக்கட் பெருமையங் கயலே
மச்சக் குலம்வளர்ந் தனையே
மக்கட் குறைகளைந் தருளே – மலையாளே

வற்றிப் பசியெனுந் துயரார்
வக்கற் றுனையெணுங் குரலார்
வட்டிற் சுவையடங் குணவால் - ஒளியாவாய்

விக்கித் தழுவர்தங் குறையோ
விட்டுப் புலமறந் துறைவாம்
விட்டுச் செலவருந் துறையாய் - இயல்வாயே

மெட்டுக் கொருபெருங் கவிதா
மெச்சித் தலைவணங் கினனே
வெற்றிக் கனிமகிழ்ந் தருளே - பெருந்தாயே!

திக்கற் றயலரென் றியலா(து)
இக்கட் டினிலுழன் றவரோ
திக்கித் திரிதலுண் டினியோ - அருளாலே

சிக்குத் துயரமுந் துடையேன்
தித்தித் தெவருமிங் கினிதே
சித்திக் கிறவருந் தவமே - உறுவாரே

வண்ண எண்சீர்விருத்தம்

தத்தத்தன தத்தத்தன தத்தத் தத்தா

வெற்றிக்கொடி கட்டிப்பறை கொட்டிப் பொற்றேர்
வெப்பக்களம் நிற்கத்தலை யற்றுப் பட்டேம்
பற்றுக்கொடி யற்றுச்சித றித்திக் கெட்டே
பக்கத்துணை முற்றத்தழி வுற்றுக் கெட்டேம்
எற்றுக்கினி மிச்சத்துயிர் துச்சத் துக்கே
எற்றைக்கொரு வெற்றிக்கொடி நட்டுச் செற்றே
வெற்றிக்கனி பற்றிப்பெரு மித்துச் செப்பேம்?
வெட்சித்திணை உச்சத்தினை மெச்சிக் கொட்டே!