Aug 31, 2023

மடையுடைத்து வெள்ளம் வருமே!

கடைந்தவெணம் குடைந்தகுணம் நடைதளர்ந்த(து) எனவே
உடைந்தமனம் அடைந்தவினப் படைமறத்தல் தகுமோ?
இடையிடையே இணங்கமுடி யாதிருக்க ஏதோ
மடைபோட்டுத் தடுத்தாலும் உடைத்துவெளம் வருமே!

Aug 23, 2023

மூன்றாம் சந்திரயான்

தென்புலம் காணத் தெளிந்து தெளிந்து
இன்புளத் தோடு இறங்கிய சந்திரயான்!

***

அதோ பார்!
மூன்றாம் சந்திரயான்
அழகாய்த் தரை இறங்கியதை!

நிலவின் தென்துருவத்தை
வெற்றியோடு தொட்டது 
விளங்கொளிக் கதிர்வீசி!

***

நிலவே! நலமா?
சந்திரயான் எனும் எந்திரன் யான்
வந்திறங்கினேன் மூன்றாம் தலையினன்

நீ சுற்றிவரும் தாய்ப் பூவுலகின்
பெருமக்கள் பரவலுடை
இந்தியாவின் வேட்கை
என் வேட்கை

உன் தென்புலத்துத் துருவத்தைக்
காணாத பல கண்களின் வேணவா தீர்க்க
விவேகத்தோடு விரைந்து வந்தேன்

எத்தனை எத்தனை உள்ளங்கள்
கைகூப்பி வேண்டிக் கைதட்டிக் கொண்டாடுகின்றன

வரலாற்றுச் சிறப்புடைத்தாய்
வார்த்தெடுத்துச் சூழ்ந்தனர்
வளமிக்க இந்தியர்!

இனி,
பாட்டி சுட்ட வடையை
வாங்கித் தின்ன நேரில் வருவர்
நேர்த்திக் கடன் செலுத்த விரைதல் போல

***

Aug 22, 2023

அருஞ்செயலுக்குத் தேவை ஆர்வமே

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆயிரம் உந்தல் இருந்தாலும்
   ஆர்வமி லாத செயலென்னின்
மாயிருள் போலக் கண்கட்டும்
   மடுவெனப் போகும் மாமலையும்
ஆயிரம் தடைகள் வந்தாலும்
   ஆர்வம்நி றைந்த செயலுக்குத்
தீயன தாரா(து) அதுவளரும்
   தெரிந்து செய்வீர் அருஞ்செயலே

Jul 17, 2023

காக்கைக்குச் சோறு!

வானத்து நிலா
காணாமல் போகட்டும்
வயிறாரச் சோறு கிடைக்கும்
காக்கைக்கு!

Jul 9, 2023

எண்ணம் தெளிவு பெறுக

இல்லை இல்லை இல்லை இல்லை
    உண்மை யாக இல்லையே
தொல்லை தொல்லை தொல்லை தொல்லை
    ஆசை கொள்ளல் தொல்லையே
எல்லை எல்லை எல்லை எல்லை
    இல்லை எல்லை யானவன்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
    நெஞ்சி லேற்று வாழவே!

எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
    ஏனு ழந்து நைகிறாய்
திண்ணி தென்ற உன்ற னுள்ளம்
    தெளிவி ழந்து பொங்கவே
மண்ணி லேது மன்ன லில்லை
    மண்ணை யன்றி உலகிலே
எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
    எண்ணம் தெளிவு பெறுகவே

என்ன மாயம் என்ன மாயம்
    இந்த மனித வாழ்வுதான்
என்ன வென்று ணர்ந்து தெளிதல்
    என்ன என்ன என்னவோ?
மின்னி மின்னி மின்னி மின்னி
    மின்னும் ஒளியி ழக்குமே
மன்னி மன்னி மன்னி மன்னி
    மண்ணில் நிலைப்ப தில்லையே

Jun 30, 2023

இளைய மகன் கதிர்வேலன்

முத்தங் கொடுத்தே முறைக்கும் சினமாற்றும்
முத்துச் சிரிப்பின் முதல்வனே - வித்தகனாய்
விந்தை மிகச்செய்யும் வேறு படுத்துமொரு
சிந்தைக் கதிர்வேல னே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி

வானீய மேலெழுந்து வா

விரும்பியன விட்டொழித்து வேறுசெயப் புக்கின்
பொருந்தாது போமன்றே பொய்யாய் - வருந்தாது
தேனீயின் வாய்ப்புக வாழ்க்கை வருந்தாது
வானீய மேலெழுந்து வா
                                  - தமிழகழ்வன்

Jun 29, 2023

கடனில் மூழ்கி...

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மலரும் உள்ளம் என்னும் நூலில் சட்டை போட்ட குரங்கு என்னும் தலைப்பில் அமைந்த பாடலைப் படித்தபின் எழுதியது

இந்தக் குரங்கைப் போலவே
    இற்றை மனிதர் வாழ்விலே
கந்து வட்டிக் கடனிலும்
    கலக்க மூட்டும் கடனிலும்

மூழ்கிச் சிக்கித் தவிக்கிறார்
    மூளை யின்றித் திரிகிறார்
பாழ்கி ணற்றைப் பார்க்கிறார்
    பாதை மாறித் திரிகிறார்
                                 - தமிழகழ்வன்

Jun 14, 2023

ஓயாத சிந்தனைகள்

உள்ளுக்குள் ஓராயிரம்
ஓயாத சிந்தனைகள்
பாடாய்ப் படுத்தும்

நாட்டையா பிடிக்கப் போகிறேன்?
நாடகத்திலா நடிக்கப் போகிறேன்?
வேட்டைக்கா போகிறேன்?
வேதனையிலா வாடுகிறேன்?

இல்லை இல்லை எதுவும் இல்லை
எதுவு மில்லாத இந்த மனந்தான்
இத்துணைப் பாடு படுகிறது.

May 31, 2023

வெங்கடேசன் மாமாவின் பணி ஓய்வுப் பாராட்டு விழாவில் வாசித்த கவிதை

இன்னிசை மொழிபேசி
என்றென்றும் வாழ்த்தும்
மாணிக்க மாமணியே!
எங்கள் மாமா மணியே

மின்னியல் வளத்துறையில்
மின்னும் பணிசெய்த
மாணிக்க மாமணியே!

தொன்னூல் கலைகள்
தொட்டுத் தெளிந்து
தெருக்கூத்தும் சோதிடமும்
மின்னச் செய்கின்ற
மாணிக்க மாமணியே!

பன்னூ றாண்டுகள்
வையம் வாழ்த்த வாழியவே!
வேங்கடத்து ஈசனாய்
எங்கள் வெங்கடேசனார்
வளம்பல பெற்று
வாழிய வாழியவே!