Oct 9, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 3

தேர்வு முடிந்ததும், “என்னடா, விடைத்தாளைச் சீக்கிரமா குடுத்துட்ட போல? அப்புறமும் என்னடா எழுதிட்டு இருந்த?” எனக் கேட்டான் ஸ்னோவின்.
“வேற என்ன? கவிதைதான்”, மொழிந்தான் சின்னதுரை.
“அறிவுக்கொழுந்து! தேர்வு அறையிலயும் உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டியா? சரி... அதை விடு. தேர்வு எப்படி எழுதின?”
“அதான் அரைமணி நேரம் முன்னயே கொடுத்துட்டேனே! சரியாவே எழுதல...”
“ஏன்டா...? நேத்து படிச்ச கேள்விங்க தானே கேட்டிருந்தாங்க...”
“அப்படியா...! படிச்ச மாதிரியே தெரியலியே...”
“ஒன்னுமில்ல... கேள்வியைக் கொஞ்சம் மாத்திக் கேட்டிருந்தாங்க...”
“ஹூம்... என்ன பண்றது...? எனக்குப் புரிஞ்சது அவ்வளவுதான்”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... போகப் போகப் புரியும்...”
“ஏதோ, உன்னால தான் நான் கொஞ்சமாவது எழுதினேன்”
“அடுத்த வருஷம் பாரு... நீ என்ன விட அதிக மார்க் வாங்குவ...”
“எப்படிச் சொல்ற...?”
“உங்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு...”
“பார்ப்போம்”
இதுவல்லவா நட்பு! சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமன்றோ!

மாலை, விடுதி அறையில் தங்கியிருந்த இன்னொரு நண்பனிடம் ஊமைச் சண்டையில்
இறங்கியிருந்தான் சின்னதுரை. இரவீந்தர் அவனிடம் தானாய் வந்து பேசினாலும், அவன் வாய் திறக்கவே இல்லை. ‘உம்’மென்று இருந்தான். அவனுக்கு இரவீந்தர்மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
உள்ளே நுழைந்த ஸ்னோவினிடம் இரவீந்தர் சொல்ல, அவன் சின்னதுரையிடம் கேட்டான். “என்னடா பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அப்போது கூட, அவன் வாய் திறக்கவே இல்லை.
“அவன், உம்முனா மூஞ்சி, அப்படித்தான் இருப்பான். அவனே சொல்லும்போது கேட்டுக்குவோம்”, என்றான் ஸ்னோவின்.
அந்த அறையில் தங்கியிருந்த இன்னொருவன் கார்த்திகேயன். அவனிடம் சென்று ஸ்னோவின் கேட்டான், “கார்த்தி, ரொம்பப் பசிக்குது... சாப்பிட ஏதாவது வச்சிருக்கிறியா?”
“ஆம், வச்சிருக்கேன்”
“சரி, கொடு”
“வாய் வச்சிருக்கிறேன்...”
குபீர் என்ற சிரிப்பு அறைமுழுவதும் பரவியது. இரவீந்தரும் கார்த்தியும் சிரித்தார்கள்.
“ச்சோ, உங்கிட்ட போய் கேட்டேன் பாரு”, என்றான் ஸ்னோவின்.
அறை அமைதியானது. ஓர் ஐந்து நிமிடம் போயிருக்கும். மீண்டும் திடீரென்ற சிரிப்பொலி. சின்னதுரைதான் சிரித்தான். ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள் மற்ற மூவரும்.
“என்னடா, உம்முனா மூஞ்சி! திடீர்னு சிரிக்கற? என்னாச்சு உனக்கு?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஒன்னுமில்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்த்தி சொன்னானே! அதை நெனச்சித்தான் சிரித்தேன்”
“அடப்பாவி! மொக்க நாயே! ரொம்ப லேட் ரெஸ்பான்ஸ் டா, சரி சிரிச்சுட்ட, கோபம் போயிடுச்சா? என்ன பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அதைச் சொல்லத் தயக்கப்பட்ட சின்னதுரை, “அப்புறமா சொல்றேன்” என்றான்.
இன்னும் கடுப்பானான் இரவீந்தர்.
                                                                   (தொடரும்)

Oct 1, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 2

பக்கத்து அறையில் தங்கி இருந்த முகுந்தன் உள்ளே நுழைந்தான்.
“வாடா, நல்லவனே!”, தனக்குப் பிடித்தவர்களை, உற்சாகத்தோடு இப்படித்தான் அழைப்பான் சின்னதுரை. “என்ன படிச்சிட்டியா?”
முகுந்தன் சொன்னான், “எங்க படிக்கிறது, ஒன்றும் புரிய மாட்டேங்குது, ஆமா, நீ படிச்சிட்டியா?”
“நானா? எங்க படிக்கிறது? ‘சப்ஜக்ட்’ட தூக்கிப் போட்டுட்டுக் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேன்ல...”
“ஆமாம், நேத்து அந்த சீனியர் அண்ணன் கேட்டாரே ஒரு கவிதை, அதை எழுதிட்டியா?”
“ஏதோ எழுதியிருக்கேன், படிச்சுப் பாரு”. கவிதையைக் கொடுத்தான் சின்னதுரை.

“காற்றினிலே
பூங்காற்றினிலே
வரும் பாட்டினிலே
.............................
............................”.

முழுவதையும் படித்துவிட்டு, “அடேயப்பா! எப்படிடா இப்படியெல்லாம் எழுதறீங்க? செம ‘ரைமிங்’கா இருக்கு. ரொம்ப ஃபீல் பண்ணி எழுதி இருக்க போல!”, என்றான் முகுந்தன்.
“ஒரு இலக்கணங்கூட இல்லாம எழுதி இருக்கேன். இதப்போய் இவ்வளவு பெரிசா பேசறியே?”, என்றான் சின்னதுரை.
“இந்தக் காலத்துல இப்படி எழுதனாலே போதும்டா”
“முகுந்தா, இந்தக் கதையைக் கேட்டியா?”, என்றான் ஸ்னோவின் முகத்தைத் துடைத்துக் கொண்டே.
“எந்தக் கதை?”, என்றான் முகுந்தன்.
“ஒன்னுமில்ல, துரை எனக்கு ஒரு பேரு வச்சிருக்கிறாராம்...”
“அப்படியா, துரை? என்ன பேரு?”
“வெண்பனி வெற்றியன்!”, என்றான் சின்னதுரை.
“என்னாது...? வெண்பனி வெற்றியனா...?” சிரித்தான் முகுந்தன். ஸ்னோவினும் தான்.
படிப்பு நேர மணி அடித்தது. “ஸ்டடி பெல் அடிச்சிட்டாங்க... நான் கிளம்பறேன்”, கிளம்பினான் முகுந்தன்.
மறுநாளைய சிறுதேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார்கள். ஆங்கிலம் அவ்வளவாய்ப் புரிந்துகொள்ள முடியாத சின்னதுரை, அகராதியைப் புரட்டிப் புரட்டி, ஏதோ புரிந்துகொண்டு படித்தான். படிப்பு நேரம் முடிந்து, இரவு உணவிற்கு மணி அடித்தார்கள்.
“படிச்சிட்டியா துரை?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஏதோ கொஞ்சம் புரிஞ்சது. இன்னும் முடிக்கலைடா”, என்றான் சின்னதுரை.
“சரி, சாப்பிட்டுட்டு வந்த பிறகு, நானே மீதியைச் சொல்லிக் குடுக்கறேன்”, என்றான் ஸ்னோவின்.
மறுநாள், தேர்வை முடிந்தவரை எழுதிவிட்டு, விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்தான் சின்னதுரை. “இன்னும் அரைமணி நேரம் இருக்கு, அப்புறந்தான் போக முடியும். அப்படியே உட்கார்”, என்றார் ஆசிரியர்.
அப்படியே அமர்ந்தான் சின்னதுரை. அவனது எண்ணங்கள் சும்மா இருக்குமா? கவிதைத் தாளம் போட ஆரம்பித்தன. எழுதுவதற்குத் தாள் இல்லையே... என்ன செய்வது? வினாத்தாளின் பின்புறம் காலியாக இருந்தது. அது போதுமே! எழுத ஆரம்பித்தான் மனதைத் தோண்டி...

“தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
...........................................
...........................................”

                                                      (தொடரும்)

Sep 25, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 1

“ஸ்னோவின் (Snowin)!”, அழைத்தான் சின்னதுரை.
“என்னடா?”, கேட்டான் ஸ்னோவின்.
“இந்தப் பெயர் எப்படி இருக்கு?”
“எந்தப் பெயர்?”
“வெண்பனி வெற்றியன்...”
“ஏன்டா, உனக்கு வேற வேலையே இல்லையா...? போயிடு அந்தப் பக்கம்... வந்து இருக்கிறது எஞ்சினியரிங் காலேஜுக்கு, தமிழ் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்...”, இது ஸ்னோவினின் கோபக்கனல்.
அது இல்லடா, உன் பெயரைத்தான் அப்படி மொழிபெயர்த்திருக்கிறேன்”, என்றான் சின்னதுரை.
இப்படித்தான் அவ்வப்போது எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பான் சின்னதுரை. அவற்றைத் தமக்குப் பிடித்த நண்பர்களிடம் விவாதிக்கவும் செய்வான். அவர்கள் என்ன திட்டினாலும் இவனுக்கு உரைக்கவே உரைக்காது.
சிரித்துக்கொண்டே சொன்னான் ஸ்னோவின். “ஏன்டா நீ மட்டும் இப்படி இருக்கே! தமிழெல்லாம் எவனுக்குடா வேணும்? அவனவன் என்னென்னமோ படிச்சிட்டு எங்கெங்கேயோ போய்க்கிட்டு இருக்கான், தமிழ் படிச்சா ஒரு வேலையும் கிடைக்கப் போறதில்ல!”
“என்னடா அப்படிச் சொல்லிட்டே! நீ வேணும்னா பாரு, தமிழுக்குப் பிற்காலத்துல எவ்வளவு மதிப்புக் கிடைக்கப் போகுதுன்னு”, என்றான் சின்னதுரை.
“அப்படி மட்டும் நடந்திட்டா, நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். இப்ப ஆள விடு”, என்று சொல்லிவிட்டு, முகம்கழுவச் சென்றுவிட்டான் ஸ்னோவின்.
என்னதான் ஸ்னோவின் சின்னதுரையைத் தட்டிக்கழித்துப் பேசினாலும், அவன் கவலைப்படுவதில்லை. மாறாக, ஸ்னோவின் மீது தனிப்பாசம் கொண்டிருந்தான். ஏனென்றால் அவனது பேச்சில் விளையாட்டுத்தனம் தெரியுமே தவிர, தீவிரம் தெரியாது. அன்பாகப் பழகுபவன். சில விஷயங்களில் தன்னிடம் குறை இருப்பதை எண்ணி, சின்னதுரை வருத்தப்படும்போதெல்லாம் ஸ்னோவின்தான் அவனுக்கு ஆறுதல் கூறுவான். ஒருமுறை 90-10 விதியைப் பற்றிக்கூட, ஸ்னோவின் அவனிடம் சொல்லி இருக்கிறான்.
“ஒவ்வொரு நாளும் சில 10 சதவீதம் வருத்தம் தரும் நிகழ்வுகள் நேரலாம். அதற்காக மீதமுள்ள 90 சதவீத மகிழ்வுதரும் நிகழ்வுகளைத் தவற விட்டுவிடக் கூடாது”.
இவ்வாறான ஊக்கமூட்டும் வார்த்தைகளால் ஸ்னோவினிடம் தனிமதிப்பு வைத்திருந்தான் சின்னதுரை.
பள்ளியில் தமிழ்வழிக் கல்வியையே பயின்றிருந்ததாலும், புத்தகப் புழுவாகவே இருந்ததாலும், சின்னதுரைக்கு ஆங்கில அறிவும், உலக அனுபவமும் சற்றுக் குறைவுதான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவனானாலும், யார் யாரோ செய்த உதவிகளினால் கல்லூரி வாசலையும் தொட்டுவிட்டான். அங்கு, இனி, ஆங்கில வழியில் மட்டுமே பயில முடியும் என்பதால், அவனைவிட உயர்நிலையில் உள்ள நண்பர்களிடம் நல்ல பழக்கம் வேண்டும் என்பதற்காகவே, தேடிக்கிடைத்த நண்பர்களில் ஸ்னோவினும் ஒருவன். பெரும்பாலான நிகழ்வுகளில் ஸ்னோவினின் எண்ணங்கள் யதார்த்தமானதாக - உண்மையாக அமைந்து விடுவதை அவனே நேரில் உணர்ந்திருக்கிறான்.
அவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். சின்னதுரைக்கு விளையாட்டுகளில் மனம் செல்வதில்லை. மற்ற நண்பர்கள் விளையாடச் சென்றுவிடும்போது, அவன்மட்டும் தனிமையை உணர்வான். அத்தகைய நேரங்களில் தமிழைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவான். தமிழே அப்போது அவனுக்கு உற்ற துணையாக இருந்தது. அப்படிச் சிந்தித்தவற்றின் விளைவுகள் அவ்வப்போது நண்பர்களிடமிருந்து கோபமாக வெளிப்படும்.
                                                       (தொடரும்)

Sep 5, 2010

குரு வணக்கம்

இன்று ஆசிரியர் தினம். என் வாணாளில் நான் சந்தித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. படிப்பு மட்டுமன்றி, வாழ்க்கைப் படியில் முன்னேறவும் வழிசெய்து தந்த ஆசிரியர்களை எண்ணிப் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இதுவரை நான் படித்துவந்த வகுப்புகளின் ஆசிரியர் பெயர்களை நினைவுகூரலாம் என நினைத்தேன். முடிந்தவரை முயன்றிருக்கிறேன்.

நகராட்சி நடுநிலைப் பள்ளி, திருவண்ணாமலை
உஷா (முதல் வகுப்பு)
கிருஷ்ண மூர்த்தி (இரண்டாம் வகுப்பு)
தமிழ்ச்செல்வி (மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு)
வேலு, தனக்கோட்டி (ஐந்தாம் வகுப்பு)

திரு க.குப்புசாமி நினைவு உயர்நிலைப் பள்ளி, சின்னக்காங்கியனூர், திருவண்ணாமலை.
சுப்பிரமணியன் (தலைமை ஆசிரியர், அறிவியல் ஆசிரியர்)
செயராமன், ஞானப்பிரகாசம் (தமிழ் ஆசிரியர்)
நடராஜன் (சமூக அறிவியல்)
காந்தி (ஆங்கிலம்)
கிருஷ்ணன் (கணிதம், தமிழ்)
அருணாசலம் (ஆங்கிலம், அறிவியல்)
சரவணன் (கணிதம், தமிழ்)
இரவி (கணிதம்)
ரேவதி (ஆங்கிலம், சமூக அறிவியல்)
புவனேஸ்வரி (ஆங்கிலம், கணிதம், அறிவியல்)
வீரசேகர் (தமிழ்)
கார்த்திகேயன் (விளையாட்டு)
தனசேகர் (சமூக அறிவியல்)
மற்றும் பலர்

Danish Mission மேனிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
தெய்வநீதி, தங்கவேலு (தமிழ்)
Earnest William (ஆங்கிலம்)
சம்பத் (கணிதம்)
Hubert Dhanasundaram (இயற்பியல்)
சுமித்ரா (இயற்பியல்)
ஜமுனா (வேதியியல்)
தாவரவியல் ஆசிரியை
ஜெயமேரி பூங்கொடி (விலங்கியல்)

இளங்கோ (நுழைவுத்தேர்வு)

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை
குமரன், நந்தினி ஸ்ரீதர், அன்பரசு, சுவாதி, சுமதி, விஜயராமன், சரவணன், அனிஷா,  Graphics And Multimedia ஆசிரியை, மோகன், மற்றும் பலர்.
சிவசெல்வன், Joseph Francis, அமுதா, Freny Joy, மற்றும் பலர்.
நடராஜன், அசோக், மகாலட்சுமி, உமா, DPSD ஆசிரியை, மற்றும் பலர்.

தற்போது
சுப்பிரமணியன் இராஜா, இராம், Phani Bhushana,
நித்யா, சரவண வடிவேல், தாரணி, வினோத், இராகவேந்திரா.

அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sep 2, 2010

நண்பனின் பிரிவு

நதிக்கு நண்பன் நாணல்தான்
'நலமா?' நாளும் கேட்டிடுமே!                        1


நாணலின் நண்பன் நதிதானே
வாழ்வினில் வளமே சேர்த்திடுமே!            2


தட்டிக் கொடுப்பவன் நண்பனே!
தட்டிக் கேட்பதும் நண்பனே!                           3

இன்பம் துன்பம் ஏதெனினும்
உடனுறை பவனே நன்னண்பன்                    4

நினைந்தால் போதும் நெஞ்சார
நினைவிலும் நன்மை செய்திடுவான்         5

நேசம் உள்ள நண்பனே!
நெஞ்சம் உன்னை மறக்குமா?                        6

பாசப் பிணைப்புப் பந்தமே!
பண்பில் ஓங்கிய சொந்தமே!                          7

நாளும் உன்னை நினைக்கையில்
நெஞ்சில் இன்பம் தங்குதே!                             8

கொட்டும் நீர்த்துளி கண்ணிலே
நண்பா பிரியும் போதிலே                                 9

நிலையி னின்று பிரிந்தாலும்
நினைவுகள் என்றும் மறவாதே!                   10
                   - சுப்பிரமணிய தமிழகழ்வன்

Aug 22, 2010

உயர்தமிழே!

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
ஓங்குமலை தானளிக்க ஓசையொடு பாயருவி
ஆங்குப்பே ராறாகி அழகாக விரிசோலை
ஓங்கிவளஞ் செழித்தன்ன உளம்புகுந்த உயர்தமிழே!
தேங்குதமிழ்த் தெம்மாங்குத் தேன்பாட்டைப் பாடுவனே!

(தாழிசை)
ஓரணுவாய் உட்புகுந்தே உயருணர்வைக் கிளப்பிவிட்டுப்
பேராற்றல் வெளிப்படுத்தும் பெருவெடிப்பாய் வளர்தமிழே!

புதுமையிலே மோகங்கள் புதுப்பாதை செய்தாலும்
பழமைநிலை குன்றாத பண்போடு வளர்தமிழே!

தொன்றுதொட்டுத் துறைதோறும் துள்ளளொடும் ஏடெதிர்ந்து 
வென்றுவிட்ட ஆற்றலொடும் விண்ணோங்கி வளர்தமிழே!

(தனிச்சொல்)
நீயே

(சுரிதகம்)
என்றும் உள்ளம் ஏத்திப் பாடத்
தென்றல் தானும் தாலாட்ட
நின்றுநின் றாடும் நேயத் தேவே!

Egmore - எக்கு(eggu)

        எனக்கு எக்கு(eggu) என்றும் ஒரு பெயர் உண்டு. சிறுவயதிலிருந்தே எக்கு என்றே என்னைப் பலரும் அறிவர்.
        நான் கல்லூரியில் படிக்கும்போது, 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள், சென்னையிலுள்ள மருத்துவமனைகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக, மாணவர்கள் அனைவரையும் தொண்டூழியராக (volunteers),  பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் பேருந்து, எழும்பூரிலிருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றது. அங்கு சென்று, துப்புரவு வேலைகள் செய்துகொண்டிருந்தோம். திடீரென்று ஞானோதயம் போல,  எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 'ஆஹா! இந்த மருத்துவமனைதான் என்னைக் காப்பாற்றியதா?' நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!! பெருமகிழ்ச்சியில் இன்னும் ஊக்கமாக வேலை செய்து கொண்டிருந்தேன்.
       பழைய நினைவுகளைக் கிளறிப் பார்த்தேன். 
                                                              ----------------
        ஆண்டு 1987. பச்சிளங் குழந்தையாக இருந்த எனக்கு, ஒரு விதமான நோய். பால் குடித்தால் ஜீரணம் ஆகாது. வயிறு புடைத்து, வலிக்க ஆரம்பித்து விடும். மீண்டும் வாந்தி எடுத்தால்தான் சரியாகும். பாவம் நான். என் பெற்றோரின் தவிப்பை என்ன சொல்ல? அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு என்னைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். "இங்கு முடியாது. சென்னை egmore - ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்", என்று கூறி விட்டர்கள். சென்னைக்குச் சென்று, எப்படியெல்லாமோ கஷ்டப் பட்டு,  என்னைக் காப்பாற்றினார்கள். egmore மருத்துவமனைக்குச் சென்று உயிர் பிழைத்து வந்ததால், எல்லாரும் செல்லமாக egmore என்றே கொஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். அது பின்னர், eggu என்றாகிவிட்டது.
                                                               --------------------

Aug 15, 2010

எட்டின் நடுவே எங்கள் பாரதம்

நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது விடுதலைத் திருநாளன்று எழுதிய கவிதை.

நிலைமண்டில ஆசிரியப்பா

எட்டின்  நடுவே  எங்கள்  பாரதம்
எட்டிய  மகிழ்ச்சிக்  களவே  இல்லை
அந்நியர் நீங்கி அன்று சென்றனர்
இந்தியர் கொண்ட ஒருமைப் பாட்டால்
பழிநிலை மாறிடப் பழுத்தார் மக்கள் 
இழிநிலை மாறிட இழுத்தார் செக்கு 
இமயம் குமரி எல்லை என்று 
அமைந்த பார தப்பெரு நாடு 
பலவளங் களுடன் பலமாய்த் திகழ்ந்தது
அலையென வந்த ஐரோப் பியரால்
வளங்குன் றியது; வறுமை யடைந்தது;
அளவில் லாமல் அனுபவித்த திடுக்கண்
அந்நியர் தாக்கம் அழிந்தது ஆக்கம் 
வந்தவர் போனபின் வந்தது ஊக்கம் 
எழிலார் இந்தியம் இழந்தசு தந்திரம்
எட்டின் நடுவே ஈட்டிய தாயினும் 
இன்னும் மலரா இந்திய நாடு 
என்றும லருமோ? யானறி யேனே
வந்தவர் போனார் வறுமை போகலை!
சந்தம் பாடினும் சமத்துவ மாகலை!
இந்நிலை தொடரின் இடுக்கண் தொடரும் 
அந்நிலை மீண்டும் அடைத்த லாகும்
                                           - சுப்பிரமணிய தமிழகழ்வன்

  
இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Aug 4, 2010

Micro Devil - குட்டிச் சாத்தான்

இது என் கல்லூரி நண்பன் ஒருவன் எனக்கு வைத்த பெயர். என் கல்லூரி நண்பர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். அவர்களோடு பழகுவதற்கு முன்புவரை நான் அதிகம் பேசி, யாரும் கண்டதில்லை. அவர்களோடு பேசிப்பேசி, அதிகம் பேச ஆரம்பித்து விட்டேன். பிறரை என்னாலும் நகைக்க வைக்க முடியுமோ என்று முயன்றதில் தோற்றுப் போனவன்தான் நான். (நான் அதிகம் மொக்கை போடுகிறேன் என்று கூறிவிட்டார்கள்!!!). இருந்தும் விடாமல் தொடர்ந்து மொக்கை போட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் வந்த வினைதான் இந்த Micro Devil என்ற பெயர்.

அதிலும் குறிப்பாக micro என்பதன் காரணம் என்ன தெரியுமா?
போக்கிரி படம் release ஆகி இருந்த நேரம். அந்த semester- ல Microprocessor பற்றிய பாடமும் படித்தோம். போக்கிரி படத்தில் ஒரு பாடல் வருமே...
'ஆடுங்கடா என்ன சுத்தி - நான்
அய்யனாரு(Aiyanaar) வெட்டுக்கத்தி'.
Microprocessor - ல ஒரு insrtuction INR (increament).
Aiyanaar - INR இரண்டையும் பொருத்தி வச்சி, INR - க்கு எதிர்மறையான DCR (decreament) - ஐப் போட்டு,
'ஆடுங்கடா என்ன சுத்தி - நான்
டீசியாரு(DCR) வெட்டுக்கத்தி'
அப்படின்னு பாடினேன். தேர்வுக்குப் படிக்கும்போதுகூட ஒரு நண்பன் இதை நினைத்துச் சிரித்து விட்டானாம். அதுக்காக ஒருத்தன் எனக்கு வச்ச பேருதான் இந்த 'MICRO DEVIL'.

Aug 3, 2010

SBS Raman

எனக்குப் புதிது புதிதாய்ப் பெயர் வைத்துக் கொள்ளப் பிடிக்கும். நான் ஒரு பெயராசை பிடித்தவன். ஒருமுறை SBS Raman என்று பெயர் வைத்துக் கொண்டேன். அதன் காரணத்தை இங்குப் பதிக்கிறேன்.

SBS?    எங்க அப்பா பேரோட முதலெழுத்தையும் அம்மா பேரோட முதலெழுத்தையும் என் பேரோட முதலெழுத்தையும் சேர்த்து SBS என்று வைத்துக் கொண்டேன். நல்லா இருக்குல்ல?


Raman?   அது ஒரு பெரிய்ய்ய்ய கதை. நான் கல்லூரி சேர்ந்த போது, வகுப்பு வருகைப் பதிவுப் புத்தகத்துல Subramani க்குப் பதிலா Subraman ன்னு தவறாகப் பதிச்சிருந்துச்சு. ஒவ்வொரு தடவ வருகைப் பதிவு கூப்பிடும்போதும் Subraman ன்னு தான் கூப்பிட்டாங்க. நான் என் பேரத் திருத்தச் சொன்னேன். பிறகு Subramani ன்னு கூப்பிட்டாங்க. ஆனா, அதற்கு அடுத்த மாதம் மறுபடியும் பழைய புராணம் தான். கல்லூரி அலுவகத்துக்குப் போயி, பேரத் திருத்தச் சொன்னேன். ஆனா பாவம் அதற்கு அடுத்த மாதமும் அதே கொடுமைதான். மீண்டும் மீண்டும் சொல்லியும் 'i' ஐத் தவற விடுவதே பொழப்பாப் போச்சு அவங்களுக்கு. எப்படியாவது கூப்பிட்டுட்டுப் போங்க... எத்தனை முறை சொல்லிப் பாக்குறதுன்னு விட்டுவிட்டேன். அப்படி இருந்த SUBRAMAN-ல் RAMAN தனியாத் தெரிஞ்சுச்சா... SBS RAMAN ன்னு வச்சிக்கிட்டேன்.