Aug 15, 2019

தமிழில் பெயர் வைப்பது எப்படி? - சில கருத்துகள்

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

1. தமிழ்ப்பெயரிட விரும்பாத தமிழர்கள்

அன்னைத் தமிழே! அமிழ்தத் தமிழே!
உன்னை யன்றி ஒன்றும் அறியேன்!

வடசொற் கலப்பின்றி அழகான தமிழ்ப்பெயரைத் தம் குழந்தைக்கு வைக்க, இக்காலத் தமிழர்களுக்குத் துணிவில்லை.

அழகாய்த் தமிழில் பெயர்வைத்தல்
   ஆகா(து) என்றே திரிகின்ற
பழகாத் தமிழன் பெருமையெலாம்
   பாருக்(கு) உரைக்க நான்வருவேன்
அழகே தமிழாம் அதைவிட்டெங்(கு)
   அழகைத் தேடிச் செல்கின்றீர்
பழகப் பழகத் தான்தெரியும்
   பழமும் பாலும் தமிழென்றே

முதலில் 'நல்ல தமிழ்ப்பெயர் சொல்லுங்கள்' என்பார்கள். ‘இரண்டு, மூன்று எழுத்துகளில் வருமாறு சிறிய பெயராக இருக்க வேண்டும்’ என்பார்கள். மூன்று எழுத்துகளுக்கு மேலுள்ள பெயர்களை வைத்தால் அவர்களது வாயில் நுழையாமல் போய்விடுமா? பெயர் புதுமையாக இருக்க வேண்டும் என்பார்கள். என்ன பெயர் சொன்னாலும் அது பழையதாக இருக்கிறதே என்பார்கள். தமிழ்மொழி பழைமையானதே என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் புதுமை என்று, பெயரில் எதிர்பார்ப்பதெல்லாம் ஷ, ஹ, ஜ, ஸ, க்ஷ, ஶ்ரீ என்ற ஆறில் ஓரெழுத்தாவது இருக்க வேண்டும் என்பதே. அப்படி அமைந்தாலும் அமையாவிட்டாலும், இணையத்தில் தேடி எப்படியாவது ஒரு வடசொல்லையே தேர்ந்தெடுப் பார்கள். மக்களுக்குப் புரிகின்ற எளிய தமிழ்ச் சொற்கள் எல்லாம் பழையதாய்ப் போய்விட்டன. புரியாத சமற்கிருதச் சொற்களெல்லாம் புதியதாய்த் தென்படுகின்றன. இப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழ்நாட்டின் நிலை.

"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்" என்று பேசுபவரை, 'நடைமுறைக்கு ஒத்துவராத ஏதோ செயலைச் செய்கின்றார்' என்னும் நோக்கில் நோக்கு கின்றனரோ? அந்நியத் தாக்கத்தால் அந்த அளவுக்கா வழக்கொழிந்து போய்விட்டது தமிழ்? பேச்சளவில் நின்றுவிடாமல், செயலில் காட்டுவோர் எத்தனை பேர்? தமிழா! எப்போது விழிக்கப் போகிறாய்?

தொல்காப்பியரும், நன்னூலாரும் சொல்லும் மொழிமுதல் எழுத்துகளை மதியாமல், சோதிடம் கூறுகின்ற மொழிமுதல் எழுத்துகளை ஏற்றுக் கொள்ளும் அந்த நொடியில், நீங்கள் தமிழர் என்பதை மறந்துவிடுகின்றீர்.

அங்ஙனம் மொழிமுதல் எழுத்துகளை மறந்து, சோதிடம் குறிப்பிடும் பெயருக்கான முதல் எழுத்துகளைக் கொண்டே பெயர்வைக்கும் பழக்கம் தோன்றியதும், அந்நிய ஆதிக்கம் மேலோங்கியதற்குக் காரணம் ஆகும். இப்போது தமிழில் பெயர் வைப்பது எப்படி எனக் கட்டுரை எழுதும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

2. தமிழில் பெயர் வைப்பது எப்படி?

தமிழில் பெயரிட விரும்புவோர் பின்வருவன வற்றைக் கருத்தில் கொள்ளலாம்.

 தமிழ்ச் சொல்தானா என்பதை உறுதி செய்ய, சொல்லின் வேர்ச்சொல்லைத் தேடிப் பாருங்கள்.

 பெயர்ச்சொற்களுக்கான விகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.

 தமிழிலக்கியங்களில் இடம்பெற்ற பெயர்களின் அமைப்பையும் அழகையும் கருத்தில் கொள்ளுங்கள்.

 மொழிமுதல் எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள், மெய்ம்மயக்கம் போன்ற விதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.

 இவ்விதிகளை அடிப்படையாய்க் கொண்டு நன்னூலார் செய்த வடமொழியாக்கப் பகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, ஆகாரத்தில் பெயர் முடிவது, தமிழ்ப்பெயர் முறைமையாக இருக்காது என்பது என் எண்ணம். தமிழ்ச்சொற்கள் பலவற்றை வடமொழிப் படுத்த, இந்த ஆகார நீட்சி பயன்பட் டிருக்கிறது. இகரம், ஐகாரத்தில் முடிவது போலப் பெண்களுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம். எழிலி (இகர இறுதி); ஆதிரை, மேகலை (ஐகார இறுதி) என்பன போல.

3. 27 விண்மீன்களுக்கும் வரையறுக்கப் பட்டுள்ள தமிழ் எழுத்துகள்

தொல்காப்பியமும், நன்னூலும் எடுத்துச் சொன்ன, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் விதிகளுக்கு உட்பட்டுச் ‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூல் பல சொற்களைத் தமிழ்ப்படுத்தி நமக்கு வழங்கி இருக்கிறது. சோதிடத்தில் ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திற்கும் நந்நான்கு எழுத்துகளைக் கொடுத்து, மொழிமுதலாக வைத்துக்கொள்வது வழக்கம். அவற்றில் வடவெழுத்துகளும் கலந்திருப்பதனால், தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்ட பட்டியலை இந்நூல் பரிந்துரைக்கிறது. சோதிட முறைப்படித்தான் பெயர்வைக்க வேண்டுமென்று எண்ணுவோர் இந்தப் பட்டியலைக் கருத்தில் கொள்ளலாம்.

கார்த்திகை
அ, ஆ, இ, ஈ
உரோகிணி
வ, வா, வி, வீ
மிருகசீரிடம்
வெ, வே, வை, வௌ
திருவாதிரை
கு, கூ
புனர்பூசம்
கெ, கே, கை
பூசம்
கொ, கோ, கௌ
ஆயிலியம்
மெ, மே, மை
மகம்
ம, மா, மி, மீ, மு, மூ
பூரம்
மொ, மோ, மௌ
உத்திரம்
ப, பா, பி, பீ
அத்தம்
பு, பூ
சித்திரை
பெ, பே, பை, பொ, போ, பௌ
சுவாதி
த, தா
விசாகம்
தி, தீ, து, தூ, தெ, தே, தை
அனுடம்
ந, நா, நி, நீ, நு, நூ
கேட்டை
நெ, நே, நை
மூலம்
யு, யூ
பூராடம்
உ, ஊ, எ, ஏ, ஐ
உத்திராடம்
ஒ, ஓ, ஔ
திருவோணம்
க, கா, கி, கீ
அவிட்டம்
ஞ, ஞா, ஞி
சதயம்
தொ, தோ, தௌ
பூரட்டாதி
நொ, நோ, நௌ
உத்திரட்டாதி
யா
இரேவதி
ச, சா, சி, சீ
அச்சுவினி
சி, சூ, செ, சே, சை
பரணி
சொ, சோ, சௌ

Jul 22, 2019

பைந்தமிழ்க் குருத்து

என்னதவம் செய்தேனி யானிங்கே மேன்மைமிகு
பொன்னான பைந்தமிழக் குருத்துக்குத் தகுதிபெற
அன்னையென விளங்குகிறாள் அந்தமிழாள் வணங்குகிறேன்
மன்னவரே மாவரத மாமுனியே வணங்குகிறேன்

பொன்னாய் ஒளிரும் பசுமை நிறைந்து வளர்ந்தெழிலே
மின்னாய் அமிழ்தே மெருகே றியதன் கருவினையே
உன்னால் வளர்ந்தேன் ஒளிர்ந்தேன் மிளிர்ந்தேன் உனதருளே
இன்னும் பலரின் இயல்கவிப் பேற்றை வளர்த்திடவே

Jul 15, 2019

விதியாலே உழலாதீர் (தரவு கொச்சகக் கலிப்பா)

விடியாது நாளென்று விதியாலே உழலாதீர்
முடியாத போராலே முடிவாக நாம்சொல்வோம்
படியாகும் துயர்யாவும்; பதராகும் படையாவும்
அடியாது தமிழன்றோ? அதன்வழியே நடப்போமே!

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ – 5

பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

வடசொற்கள் தமிழில் வந்து அமையும்போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக, இன்னும் சில விதிகளை மனத்திற் கொள்வோம்.

  •  தமிழில் 'ர'கர, 'ல'கரம் மொழிமுதலில் வராது என்பதனால், 'ர'கர முதல் வடசொற்கள் தமிழில் அ, இ, உ என்ற எழுத்துகளை முதலாகப் பெறும். 'ல'கர முதல் வடசொற்கள் தமிழில் இ, உ என்ற எழுத்துகளை முதலாகப் பெறும்.
நன்னூல்:
ரவ்விற்கு அம்முதல் ஆமுக் குறிலும்
லவ்விற்கு இம்முதல் இரண்டும்
… மொழிமுதல்
ஆகிமுன் வருமே.

குறிப்பு:
௧. கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளில், சில தமிழ்ச் சொற்களும், வடசொற்களைப் போல் ரகர முதலோடு திரிக்கப்பட்டிருக்கலாம்.
௨. வடசொற்கள் மட்டுமின்றிப் பிறமொழிச் சொற்களையும் இந்த விதிப்படி ஆளலாம்.

Raktha - அரத்தம், இரத்தம்
Rathana – இரத்தினம்
Ramba - அரம்பை
Ramya - அரமியம்
Rahasya - இரகசியம்
Rakshashaa - இராக்கதன்
Radha - இராதை
Ram - இராமன்
Ramayana - இராமாயணம்
Ravana - இராவணன்
Raj – இராசன்
Revathi - இரேவதி
Roman - உரோமம்

Lagna - இலக்கினம்
Laksha - இலக்கம், இலட்சம்
Lakshana - இலட்சணம்
Lakshman - இலக்குவன்
Lakshmi - இலக்குமி
Lanka - இலங்கை
Laddu - இலட்டு
Latin - இலத்தீன்
Laya - இலயம்
Lalitha - இலலிதை
Lavanga - இலவங்கம்
Laada - இலாடம்
Laaba - இலாபம்
Laavanya - இலாவண்யம்
Ligitha - இலிகிதம்
Linga - இலிங்கம்
Leela - இலீலை
Loga - உலகம்
Loba - உலோபன்
Loha - உலோகம்
  • தொல்காப்பியர் காலத்தில், ‘ய’கர வரிசையில் யா என்னும் நெடில் ஒன்றே மொழிமுதலாகும். மற்ற பதினொன்றும் மொழிமுதலாகா.
தொல்காப்பியம்:
ஆவோடு அல்லது யகரம் முதலாது.

யா, யாண்டு, யாணர், யாத்தல், யாப்பு, யாம், யார், யாழ், யாறு, யான், யானை…

நன்னூலார் காலத்தில், யகர வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ என்னும் ஆறும் மொழிமுதலாகும். யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறும் மொழிமுதலாகா.

நன்னூல்: அஆ உஊ ஓஔ யம்முதல்.

நன்னூலின்படி, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது, யகர வரிசையை முதலெழுத்தாகக் கொண்ட சொற்களுக்கு, இகரம் மொழிமுதலாக வரும்.

நன்னூல்: யவ்விற்கு இய்யும் மொழிமுதல் ஆகிமுன் வருமே.

Yaksha – இயட்சன், இயக்கன்
Yasodha – இயசோதை
Yandhra – இயந்திரம்
Yama – இயமன்
Yamaga – இயமகம்
Yesu (Jesus) – இயேசு (பிறமொழிச்சொல்)
  • ஆனாலும் பல வடசொற்கள் இகரம் சேர்க்கப்படாமலும் வழங்கப்படுகின்றன.
Yaaga – யாகம்
Yathriga – யாத்திரிகன்
Yadhava – யாதவன்
Yuga – யுகம்
Yukthi – யுத்தி
Yudha – யுத்தம்
Yuva – யுவன்
Yuvaraja - யுவராசன்
Yoga – யோகம்
  • யகரம் அகரமாகவும், எகரமாகவும் திரிக்கப்படுவதும் உண்டு.
Yasodha – அசோதை
Yandhra – எந்திரம்
Yama – எமன்
Yajamana – எசமான்
  • வடமொழியில் ‘மெய்யை அடுத்து யகரமோ, ரகரமோ, லகரமோ’ இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, இகரம் தோன்றும்.
நன்னூல்:
இணைந்தியல் காலை யரலக்கு இகரமும்

௧. மெய்யை அடுத்துவரும் யகரம்

‘த்யா’க – தியாகம்
வா’க்ய’ - வாக்கியம்
பா’க்ய’ – பாக்கியம்
ச’த்ய’ – சத்தியம்
நி’த்ய’ - நித்தியம்
வா’த்ய’ – வாத்தியம்
ஆர்ய – ஆரிய
ரம்ய – அரமியம்

௨. மெய்யை அடுத்துவரும் ரகரம்

‘க்ர’ம – கிரமம்
வ’க்ர’ம் – வக்கிரம்
வ’ச்ர’ – வச்சிரம்
ச’த்ர’ – சத்திரம்
சு’க்ர’ன் – சுக்கிரன்
மந்’த்ர’ – மந்திரம்
யந்’த்ர’ – யந்திரம்
தந்’த்ர’ – தந்திரம்
காய’த்ரி’ – காயத்திரி

௩. மெய்யை அடுத்துவரும் லகரம்

‘க்லே’ச - கிலேசம்
சு’க்ல’ம் – சுக்கிலம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் சிலவிடங்களில்

௧. ஒற்று இரட்டிக்க, இரண்டாம் ஒற்றோடு இகரம் சேர்ந்து உயிர்மெய் ஆனது. இங்கே ஒற்று இரட்டித்தது மெய்ம்மயக்க இலக்கணப்படி.

௨. ஒற்று இரட்டிக்காமல், ஓரொற்றாகவே அமைய இகரம் சேர்ந்து உயிர்மெய் ஆனது.

௩. வடமொழியில் ‘மொழிமுதல் தனிமெய்’ அமைந்தால், தமிழில் உயிரோடு ஒன்றி உயிர்மெய்யாக வழங்குகிறது.

தொல்காப்பியம் :
பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்

உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா

என்னும் நூற்பாக்களினின்று நாம் அறிய வேண்டியது: தனித்த மெய்யெழுத்துகள் தமிழில் மொழிமுதலில் வாரா.

  • ரகர ஒற்றும், ழகர ஒற்றும் தனிக்குறில் எழுத்தை அடுத்து வாரா. அவற்றை உகரத்தோடு சேர்த்து எழுதலாம்
நன்னூல்:
1. ரழத் தனிக்குறில் அணையா.
2. ரவ்வழி யுவ்வும்.

கர்நாடகா - கருநாடு, கருநாடகம்
கர்மா - கருமம்
கர்ணன் - கருணன், கன்னன்
தர்மம் - தருமம்
தர்பூசணி - தருபூசணி
மெர்சல் - மெரிசல், மெருசல்
கர்த்தர் - கருத்தர்
அர்த்தம் - அருத்தம்
துர்லபம் - துருலபம்
வர்த்தமானம் - வருத்தமானம்
வர்ணம் - வருணம், வண்ணம்
நர்த்தனம் – நருத்தனம்

என இவற்றையெல்லாம் தமிழின் ஒலிநயத்தைக் காக்கும் பொருட்டுத் திருத்தி எழுத வேண்டும்.
  • வடமொழியில் ‘மெய்யை அடுத்து மகரமோ, வகரமோ’ இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, உகரம் தோன்றும்.
பத்மம் - பதுமம்
பக்வம் - பக்குவம்
  • வடமொழியில் ‘மெய்யை அடுத்து நகரம், இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, அகரம் தோன்றும்.
ரத்ந - அரதனம்
  • இன்னும், வடமொழியிலிருந்து தமிழுக்கு வரும் ஆண்பாற் பெயர்களை னகர ஒற்றை ஈறாகக் கொண்டு எழுதுவோம்.
தொல்காப்பியம்:
னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்

Ram - இராம்–இராமன்
Yama – இயம - இயமன்
Rakshashaa – இராக்கத - இராக்கதன்
Raj – இராசன்
Loba – உலோப – உலோபன்

இவ்வாறு தமிழுக்கு வரும் வடசொற்களைத் தமிழின் ஒலிப்பியல்பு மாறாமல் மாற்றிப் பயன்படுத்துவோம். முடிந்தவரை வடசொற்களின் பயன்பாட்டைக் குறைப்போம். தமிழைக் காப்போம்.

Jun 17, 2019

சங்க காலக் காதலும் எங்கள் காலக் காதலும் - கவியரங்கம்

கவியரங்கத் தலைமை 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்த்தாய் வேண்டல்

தெங்கிள நீராய்த் தித்தித் திருக்கும் 
    தண்ணிய செம்மொழியே
திங்களாய்ப் பாரில் தண்மை யொளியைத் 
    திகழ்ந்திடச் செய்பவளே
அங்கைக ளெடுக்குஞ் செயல்கள் விளங்க 
    அருள்மழை தான்பொழிவாய்
பொங்குநல் லுள்ளம் போகும் வழியின் 
    பொருளெனத் தான்வருவாய்!

முனைவர் அர. விவேகானந்தனார் வாழ்த்து

பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும் 
   பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத் 
   தீங்கனி தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால் 
   உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகா னந்தர் வாழ்க 
   மேவிய புகழோடே!

அவையடக்கம்

தேமொழி பாடத் தேடி வந்தேன் 
   தேர்வில் தூங்கிவிழும்
ஆமொழுங் கில்லா அறியா தவனாய் 
   அவையை நாடிவந்தேன்
தூமொழி யாக விளங்க வேண்டித் 
    தோய்ந்த சொல்லாலே
யாமொழி வேனோ? குற்றம் பொறுப்பீர் 
    யாதென் றெனக்குரைப்பீர்!

தொடக்கக் கவிதை

எங்கும் இயற்கை வளங்கொஞ்ச 
   எதிலும் இயற்கை மணம்வீசப்
பொங்கும் உளத்தால் தான்மகிழ்ந்து 
   புதுமை புகுத்தி அறிவியலும்
அங்கங் கேதான் புதைத்துவைத்தார் 
   அழகிய தமிழால் அவையியற்றி
எங்கும் தமிழைத் தான்பரப்பி 
   இனிமை யோடு வாழ்ந்திருந்தார்

சங்க காலத் தமிழர்கள் 
   சார்ந்த இயற்கை தனைப்போற்றிப்
பங்கு பிரித்தார் நிலமைந்தா
ம்
  பழகிய பூவைத் திணையென்றார்
அங்கங் கேகாண் பொருட்களினை 
   அழகாய் அவற்றுக்(கு) அடுக்கிவைத்தார்
இங்ங னந்தான் இயற்கையினோ(டு) 
   இயைந்த வாழ்வு வாழ்ந்தாரே

குறிஞ்சி என்றார் புணர்ந்திருந்தார் 
   கூட்ட மாக நிரைமேய்க்கும்
குறியாம் முல்லை காத்திருந்தார் 
   குலத்தாள் குடியி ருக்கையிலே
நெறியி லாது திரிந்தவனால் 
   நெருடும் ஊடல் மருதந்தான்
அறிவீர் இரங்கல் நெய்தலிலே 
   அவலம் பிரிதல் பாலையிலே

எங்கள் காலம் இணையத்தில் 
   எளிதாய்க் காதல் வளர்க்கிறதே
இங்கே எண்ணும் வேகத்தில் 
   எடுத்துச் சொல்ல முடிகிறதே
மங்காக் காதல் காலத்தால் 
   மாற்றம் கொண்ட வையெண்ணி
இங்கே உரைக்க ஈரிருவர் 
   எழுந்தார் அவர்சொல் கேட்போமே

1. ஜெய்சங்கர் ஐயா

செம்மொழித் தாயைப் போற்றித் 
   தென்னகப் பெருமை யாவும்
மும்மழை போலே வந்து 
   முகிழ்த்திரு சொல்லால் பெய்து
செம்மையாய்த் தமிழைப் பாடும் 
   ஜெய்சங்கர் ஐயா வருக
இம்மையில் இன்பம் கூட்டும் 
   இன்கவி தருக தருக

பெருமை தமிழ்க்குத் தேடியளி 
   பெரிய ஆசா னாய்த்திகழும்
திருவா ளர்க்கு வாழ்த்துரைப்பேன் 
   திறமை யாவும் தான்திரட்டி
அருமை யான நடையினிலே 
   அழகாய்க் கவிதை தான்செய்தார்
இருமை யுலகும் இவர்புகழை 
   எண்ணி வியக்கும் வாழியவே!

2. இரேவதி முருகதாசு ஐயா

படைக்கும் கவிதை ஒவ்வொன்றும் 
   பச்சை மரத்துப் பட்டாணி
தடைக்கல் தகர்த்துத் தடமாகத் 
   தாங்கும் சொற்கள் தேர்வாழ்க்கை
இடைஞ்சல் எதுவும் நெருங்கிடுமா? 
   இரேவதி முருக தாசையா
மடையைத் திறக்க வாருங்கள் 
   வாய்பார்த் திருப்போம் ஆசையா

அடடா அடடா இதுகவிதை 
   அறியா தவர்க்கும் இதுபுரியும்
தொடடா எல்லை என்றுள்ளம் 
   தொட்டுப் பார்க்கும் செங்கவிதை
அடையான் வீட்டுப் பேற்றின்பம் 
   அடைவான் அழகாய்க் கவிதந்தீர்
மடையைத் திறந்த சொற்களுக்கு 
   மகுடம் சூட்டி வாழ்த்துவமே

3. அமலா அம்மா

தமிழால்தான் தழைப்போம் என்று 
   தகுமாற்றை எடுத்துக் காட்டும்
தமிழ்த்தேனீ! தமிழே மூச்சாய்த் 
   தாங்குதலை எண்ணி எண்ணி
அமிழ்தனைய கவிதை செய்யும் 
   அமலாம்மா வருக வருக
குமிழுடைத்துக் குவல யத்துக் 
   கொடுப்பீரே கவிதை முத்தே

முத்துக் கவிதை நயத்தோடு 
   முகிழ்ந்த கவிதை பன்மடங்கு
சத்துக் கவிதை சரித்திரத்தைச் 
   சாற்றும் கவிதை தமிழுள்ளச்
சொத்துக் கவிதை சுகமளிக்கும் 
   சொக்க வைக்கும் கவிதையிது
வித்துக் கவிதை தனைத்தந்தீர் 
   வியந்தே உலகம் வாழ்த்திடுமே

4. மோகன் ஐயா
எண்ணத் தெழுந்த முத்துகளை 
   எளிய தமிழில் ஏற்றிவைத்துப்
பண்ணுக் கேற்பப் பெய்ததற்குப் 
   பட்டங் கட்டிப் பார்ப்பதுடன்
வண்ணம் தந்து வடிவமைத்து 
   வனப்புக் கொஞ்சத் தருவாரே
அண்ணல் மோகனத் தமிழ்நெஞ்சர் 
   ஐயா வருக கவிதருக

மின்னும் கவிதை மோகனத்தால் 
   மிரட்டும் கவிதை சொல்நயத்தால்
கன்னல் கவிதை கருத்துகளைக் 
   கருவாய்த் தாங்கும் கனிக்கவிதை
பொன்னும் பொருளும் ஈடாகாப் 
   போற்றற் குரிய நற்கவவிதை
இன்னல் நீக்கும் கவிதந்தீர் 
    இனிமை யோடு வாழியவே!

முடிவு கவிதை
காலை மாலையென் றறியாது 
   காதல் மொழியினில் உளகாள்வர்
சோலை போலவர் மனமகிழ்ந்து 
   சொக்கிக் காதலிப் பார்பாரீர்
காலம் மாறியும் மாறாத 
   காதல் மொழியினைக் கேளுங்கள்
கோலம் மாறியும் மாறாது 
   கொள்ளும் காதலைப் பாருங்கள்

சார்த லுக்காய்க் காத்திருப்பார் 
   சங்க காலக் காதலர்கள்
ஊரென் சொல்லும் உறவுகளும் 
   உரைப்ப தென்னை எனநினைக்கும்
பேரறி யேனே என்பாளே 
   பேதை யவனுக் காயேங்கி
ஊரறி யாமல் உடனேகி 
   ஒன்றி வாழ்வார் காதலரே

கடிதினில் காதல் வந்திடுமே 
   கருதி யவனை யுளங்கொள்வாள்
அடிசுடும் பாதம் அதுகாணாது 
   அவனோடு ஏகினள் அவளெங்கே
அடிசுட நடந்து தாயேங்கி 
   அவளைத் தேடிச் செல்வாளே
மடிச்சுமந் தாளின் மனக்கலக்கம் 
   மயக்கும் துயரம் தனைத்தருமே

காதல் நிகழும் களமெண்ணிக் 
   கணக்காய் வாழ்ந்தார் அக்காலம்
ஏதம் இல்லாக் காதலுக்காய் 
   ஏங்கி நிற்பார் எக்காலும்
காதங் காத மாய்ப்போகும் 
   கணக்கும் உள்ள(து) எக்காலும்
காதல் மட்டும் மாறாதே 
   காலம் மாறிப் போனாலும்

Jun 15, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… – 4

பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளில் மொழி முதலில் அமையும் எழுத்துகள், மொழியிடையில் அமையும் மெய்யெழுத்துகள் (மெய்ம்மயக்கம்), மொழியீற்றில் அமையும் எழுத்துகள் பற்றிப் பார்த்தோம். இவற்றால் ஒருவாறு சொற்கள் தமிழில் எவ்வாறு அமையும் என்பதையும் எவையெல்லாம் பிழையாகும் என்பதையும் அறிந்தோம்.

இப்பகுதியில் வடசொற்கள் தமிழில் வந்து அமையும் போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வடசொற்கள் தமிழில் எப்போது வரும்? வடமொழிக் காப்பியங்களைத் தமிழுக்குப் பெயர்க்கும்போது அம்மொழிப் பெயர்களைத் தமிழில் எழுத, வடசொல்லாக்கம் உதவும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் இக்காப்பியங்களின் தாக்கம் ஏற்படும்போது அவற்றைத் தமிழ்ப்படுத்திச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது தமிழுக்குப் பெருந்தொண்டாகும்.

எடுத்துக்காட்டாக, இராமாயணம், மகாபாரதம் முதலிய காப்பியங்கள் தமிழில் பெயர்க்கப்பட்ட போது அவற்றை இயற்றிய புலவர்கள் தமிழெழுத்து ஒலிகளுக்கு ஏற்றவாறு சொற்களை அமைத்துத் தந்தனர். ஆனால், பிற்காலத்தில் வடசொற்களின் தாக்கம் தமிழில் நிறைந்துவிட்டது. அது தவறு என்று உணராதவர்களாலும், சமற்கிருதம் படித்த சிலர் அதைத் தேவபாடை என்று கதை கட்டி விட்டதாலும், மக்களின் பயன்பாட்டில் எளிதாக அச்சொற்கள் புகுந்துவிட்டன. அதுவும் வடசொற்களை எழுதுவதற் கென்றே சில எழுத்துகளை உட்புகுத்தும் செயல்களும் நடந்தேறின. ஆனாலும் நந்தமிழ் இலக்கணம் அவற்றை நீக்கித் தமிழைக் கட்டிக்காக்கப் பெரிதும் உதவுகிறது.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்றார் தொல்காப்பியர். அஃதாவது, செய்யுட்சொல் நான்கனுள் வடசொல்லாகி வரும் சொற்களாவன சமற்கிருத மொழிக்குரிய எழுத்தொலிகளை நீக்கித் தமிழெழுத்திற்குரிய ஒலியோடு புணர்ந்து அமையும் சொற்களாகும்.

நன்னூலார் இன்னும் ஒருபடி மேலே போய் அந்நூற்பாவை விரித்து எந்தெந்த வடவெழுத்துகளை எந்தெந்தத் தமிழெழுத்துகளாக மாற்றலாம் என்று ஒரு பட்டியலே போட்டுவிட்டார். அவர்வழி நின்று இவ்வடசொல்லாக்கத்தைக் கற்போம்.

நன்னூலார் காலத்தில் ஆரிய மொழியில் 16 உயிரெழுத்துகள், 37 மெய்யெழுத்துகள் என மொத்தம் 53 எழுத்துகள் உண்டு. தமிழுக்கும் ஆரியத்துக்கும் பொதுவான ஒலிப்பு உடைய எழுத்துகள் தமிழ் எழுத்துருவிலும், ஆரியத்துக்கு மட்டுமே அமைந்த ஒலிப்புடைய எழுத்துகள் இலத்தீன் எழுத்துருவிலும் கீழே குறிக்கப் பெற்றுள்ளன.

உயிரெழுத்துகள்
1
2
3
4
5
6
7
(r/ru)
8
(r/ruu)
9
Lu
10
luu
11
12
13
14
15
Am
16
ah



மெய்யெழுத்துகள்
1

1
2
kha
3
ga
4
gha
5
2

6
7
chha
8
ja
9
jha
10
3

11
12
tta
13
da
14
dda
15
4

16
17
ttha
18
dha
19
ddha
20
5

21
22
pha
23
ba
24
bha
25
6

26
27
28
29
30
sa
7

31
Sha
32
ssa
33
ha
34
35
Ksha
8

36
shka
37
Shpa





உயிரெழுத்துகளில் தமிழுக்கு உரியவையல்லாத எழுத்துகள் ஆறும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப் பெறும்.

அவற்றுள் ஏழாம் உயிரெழுத்து இகரமாகவும் இருவாகவும் திரியும்.

rshabam – இடபம்,
mrgam - மிருகம்.

மெய்யெழுத்துகளில் தமிழுக்கு உரியவை யல்லாத 22 எழுத்துகளும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப்பெறும்.

முதல் வரிசையில் இடைநின்ற மூன்று எழுத்துகள், அஃதாவது 2, 3, 4 ஆகிய எழுத்துகள் முதலாம் எழுத்தாகத் திரியும்.

Sakhi – சகி
Naaga – நாகம்
Moha - மோகம்

இது போன்றே 2, 3, 4, 5-ஆம் வரிசைகளில் அமைந்த எழுத்துகள் திரியும்.

சலவாதி, விசயம் சருச்சரை
பீடம், சடம், கூடம்
தலம், தினம், தரை
பலம், பந்தம், பாரம்

அவற்றுள் எட்டாம் மெய்யெழுத்து மொழியிடையில் யகரமாகவும் திரியும்.

Pankajam - பங்கயம்.

முப்பதாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் யகரமாகவும் திரியும்.

Sankaran - சங்கரன்,
Pasam - பாசம்,
Desam - தேயம்.

முப்பத்தொன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையிலும் கடையிலும் டகரமாகவும் திரியும்.

Shanmuga - சண்முகன்,
Visham - விடம்,
Bashai - பாடை

முப்பத்திரண்டாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் தகரமாகவும் திரியும்.

Ssabha - சபை
Vassam - வாசம்,
Maassam - மாதம்.

முப்பத்து மூன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் அகரமாகவும் இடையிலும் கடையிலும் கரமாகவும் திரியும்.

Haran - அரன்,
Moha - மோகம்,
Mahi - மகி

முப்பத்தைந்தாம் மெய் இரண்டு ககரமாகத் திரியும்.

Paksha - பக்கம்.
Ksheera - கீரம்.

முப்பத்து மூன்றாம் மெய் மொழிக்கு முதலில் அகரமாகத் திரியும் என்றல் பொருந்தாது; கெடும் என்றலே பொருந்தும், அரன், ஆடகம், இமம், ஏரம்பன், ஓமம், ஒளத்திரி என வரும். இவைகளிலே h எனும் மெய் கெட, அம் மெய் மேல் ஏறி நின்ற உயிர் நிற்றல் காண்க.

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது ஆகார ஈற்றுச் சொற்களை ஐகார ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல்: ஆஈறு ஐயும்.

அகல்யா - அகலிகை
அம்பா - அம்பை
அம்பாலிகா - அம்பாலிகை
அம்பிகா - அம்பிகை
ஆருத்ரா - ஆதிரை
ஊர்மிளா - ஊர்மிளை
குணமாலா - குணமாலை
கோசலா - கோசலை
சபா - சபை
சீதா - சீதை
சுபத்ரா - சுபத்திரை
சுமித்ரா - சுமித்திரை
சூர்ப்பனகா - சூர்ப்பனகை
தாடகா - தாடகை
தேவசேனா - தேவசேனை
ப்ரியா - பிரியை
மாலா - மாலை
மிதிலா - மிதிலை
மேனகா - மேனகை
யசோதா - யசோதை
ரம்பா - அரம்பை
ராதா - இராதை
லங்கா - இலங்கை
விசயா – விசயை

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது, ஈகார ஈற்றுச் சொற்களை இகர ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல் : ஈஈறு இகரமும்.

மாதுரீ - மாதுரி
மாலதீ - மாலதி
த்ரௌபதீ - திரௌபதி
தில்லீ - தில்லி
பாஞ்சாலீ - பாஞ்சாலி
மைதிலீ - மைதிலி

(தொடரும்)

May 15, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… பகுதி - 3

தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழி இறுதி எழுத்துகள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

சென்ற பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழி இறுதி எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

சொற்களின் இறுதியில் நிற்கும் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எனப்படும்.

1.            உயிரெழுத்துகள்

             ஒளகாரம் தவிர மற்ற 11 உயிர்களும் மொழி ஈறாக அமையும். அவற்றுள்

•             நெடில் எழுத்துகள் தனித்து (ஓரெழுத்து ஒருமொழியாய்) ஈறாகும். எ.கா: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ.

•             குறில் எழுத்துகள் அளபெடையில் ஈறாகும். எ.கா: கடாஅ, குரீஇ, ஆடூஉ, நசைஇ, என்னேஎ, அதோஒ.

             ஒளகாரம் பெயராகவும், வினையாகவும் வாராது குறிப்பிடைச் சொல்லாக மொழி ஈறாக அமையும். எ.கா: ஒள.

2.            மெய்யெழுத்துகள்

             மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொரு எழுத்துகள் மொழி ஈறாய் அமையும். எ.கா: கண், அறம், மன்னன், சேய், சேர், செல், ஆழ், ஆள்.

             ஞகரப் புள்ளி ஒரு சொல்லில் மட்டுமே ஈறாக வரும்.  எ.கா. உரிஞ் (உரியும் தோல்).

             நகரப் புள்ளி இரண்டே சொற்களில் ஈறாக வரும். எ.கா. பொருந் (பொருத்திக்காட்டு), வெரிந் (முதுகு).

             வகரப் புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும். எ.கா. அவ், இவ், உவ், தெவ் (பகை).

             னகரப் புள்ளியை ஈறாக உடைய (ஈரெழுத்தொரு மொழியல்லாத) தொடர் மொழிகளுள், மகர ஈற்றுத் தொடர்மொழிகளாக மயங்குதலினின்று வரையறுக்கப் பெற்றவை அஃறிணைப் பொருள்மேல் கிளக்கப்பெற்ற ஒன்பது சொற்கள் ஆகும். அவை எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என்பன.

             மெய்யெழுத்துகளில் க், ச், ட், த், ப், ற், ங் ஆகிய ஏழு எழுத்துகள் சொற்களில் ஈற்றெழுத்தாக அமையா. எனவே இவ்வெழுத்துகளை ஈறாகக் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது திருத்தி எழுத வேண்டும். எ.கா. தீபக் - தீபன், தீபகன்; நாயக் – நாயகன்; மார்க் – மார்க்கு; மார்ச் – மார்ச்சு; ஆகஸ்ட் – ஆகத்து; நாத் – நாதன்; வினோத் - விநோதன்; பிரதீப் – பிரதீபன்.

3.            உயிர்மெய்யெழுத்துகள்

             ஒளகாரம் ககர, வகர மெய்களோடு மட்டும் கூடி மொழி ஈறாகும். எ.கா: கௌ, வெள.

             எகரம், மெய்யுடன் கூடி ஈறாகாது. கன்னடம் தமிழோடு இவ்விதியில் வேறுபடுகிறது எனலாம். கன்னடத்தில் பல சொற்களில் எகரம் மெய்யோடு கூடி மொழி ஈறாய் அமையும். எ.கா: தாவரெ கெரெ (ತಾವರೆ ಕೆರೆ) - தாமரை ஏரி; ஹலெ (ಹಳೆ)  - பழைய; ஹொகெ (ಹೊಗೆ) – புகை.

             ஒகரம் நகர மெய்யுடன் மட்டும் கூடி மொழி ஈறாகும். எ.கா: நொ, நொக்கொற்றா.

             ஏகார ஓகாரங்கள் ஞகர மெய்யோடு கூடி ஈறாதல் இல்லை. எ.கா. உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ - இவை எச்சமும், தொழிற்பெயரும் பற்றி வரும். அஞ்ஞை, மஞ்ஞை இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப்பட்டன.  உரிஞோ  என்பது  'கடிசொல்லில்லை' என்பதனாற் கொள்க.

             உகர ஊகாரங்கள் நகர, வகர மெய்களோடு கூடி ஈறாதல் இல்லை. ஏனைய மெய்களோடு கூடி ஈறாகும். எ.கா. நகு, உசு, கடு, அணு, அது, தபு, உருமு, உரு, கமு, உறு, மின்னு. நகூ, முசூ, உடூ, என்னூ, தூ, பூ, கொண்மூ, பரூ, பழூ, உறூ.
எனில் கதவு, வரவு, செலவு என்பவை எவ்வாறு வரும்? அவை உகரச்சாரியை பெற்ற விதியீறுகளாகும். எனில் இவை வகர ஈறா? அன்று. அங்கே நிற்கும் வகரமெய், உகரத்தை ஏற்கவந்த உடம்படுமெய் ஆகும்.

             திரிபின்றி முற்றியலுகரமாக வரும் சகர உகரம் (சு) இரண்டு ஆகும். அவை உசு, முசு என்பன. பசு, வசு முதலியவை ஆரியச் சொற்கள். அரசு, முரசு என்றாற்போல வரும்  ஏனையவை,  புணர்மொழி நோக்கி முற்றியலுகரமாயும் குற்றியலுகரமாயும் நிற்றற் கேற்பன.

             முற்றியலுகரமாக வரும் பகர உகரச் சொல் ஒன்றே. அஃது தொழிற்பெயர், ஏவல்வினை ஆகிய இரண்டிடத்தும் நிற்கும் பொருண்மையுடையதாகும். எ.கா: 
•             தபு - நீதபு! எனவரும். த = கெடுவாயாக! 
•             பெயராயின் தவறு என்பது பொருளாம். அது இக்காலத்துத் ‘தப்பு’ என வழங்கும்.

             இதுகாறும் விதந்து கூறப்பட்ட ஒள, எ, ஓ, ஏ, ஒ, உ, ஊ என்பவை தவிர்ந்த அ, ஆ, இ, ஈ, ஐ ஆகிய ஐந்து உயிர்களும் ஙகரம் தவிர்ந்த எல்லா மெய்களோடும் கூடி ஈறாதற்குக் குறைவில.

             மொழிக்கு ஈறாகா உயிர்மெய்களும், ஙகரமும் தம்பெயர் மொழிதற்கண் ஈறாக நின்று புணரும். எ.கா. நுப்பெரிது, வுச்சிறிது, ஙக்களைந்தார்.

சகர உகரச் சொற்கள் இரண்டே, பகர உகரச்சொல் ஒன்றே, நகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல்  இரண்டே, ஞகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் ஒன்றே, வகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் நான்கே என எண்ணிக்கையோடு காட்டப்பட்டதன் நோக்கம் செய்யுளீட்டச் சொல்லாக வடசொற்கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச்சொற்கள் இவையே என அறிதற் பொருட்டு ஆகும்.

4.            குற்றியலுகரம் - குறுகிய உகரம் மொழி இறுதியில் அமையும். எ.கா. பாகு, காசு, பட்டு, பத்து, காப்பு, ஒன்று.

இவ்வாறு பன்னிரு உயிர்கள், பதினொரு மெய்கள், குற்றுகரம் ஆகிய 24 எழுத்துகள் சொற்களின் இறுதியில் அமையும். மெய் முன்னும், உயிர் பின்னுமாய் ஒலித்து நிற்பது போலவே உயிர்மெய்க்கு மெய் முதலாகும்; உயிர் இறுதியாகும்.
                                                      (தொடரும்)

கண்ணே பாப்பா தமிழ்பேசு

எண்ணம் தமிழில் இயங்கட்டும்
பண்ணில் இன்பம் பெருகட்டும்
கண்ணாய்த் தமிழைக் காத்திடவே
கண்ணே பாப்பா தமிழ்பேசு

Apr 10, 2019

முதலைத் தருவான் முருகன்

நேரிசை வெண்பா

1. ஆற்றுப்படை

முதலைத் தருவான் முருகன்அம் மூவர்
முதலுக் குரியன் முருகன் - முதற்கண்                      
நுதற்கண் ணுதித்தோன் நுதலைப் பதித்தோன்                      
நுதற்கண் ணிருத்தி நுவல்.

நாடி நரம்பெலாம் நங்குமரன் நாமங்கள்
நாடி விரைந்து நலம்பயக்கும் - நாடியே
தேடு பொருளெனும் தெள்ளறி வாளர்க்கு
நாடுபொருள் எல்லாம் நவில்

2. வாழ்த்து

குமரனே! ஞானக் குகனே! அடியார்
தமரனே! துன்பந்தீர்த் திட்ட - விமலனே!
வாழை தனிற்பந்தல் வாய்த்திடச் செய்தோனே!

வாழி!நீ நின்னடியன் வாழ்த்து                                                   

3. புகழ்

தேனாய தீந்தமிழின் தேவமக னேநீதான்
வானாகிக் காலாகி வையத்தார் - கோனே!
மனம்நிறைந்த மாணிக்க மே!மகிழ்வே! என்றே
மனம்பொருந்தக் கூறிடும் மான்                                               

சுரபூ பதியேயென் றேத்துபுகழ் கொண்ட 
சரவண னே!தமிழ்ச் சாறே! - அரவந்
தரித்த வரன்மைந் தனே!கூர் வடிவேல்
உரித்தாய் உடையவ னே!                                                            

விண்டவழ் மீனறுவர் ஊட்டமுதப் பாலகனே!
எண்டிசை போற்றிடும் எந்தையே! - தண்டமிழ்ச் 
சொல்லாய் விளங்கிடுஞ் சோலையனே! நானிலத்தே
எல்லாய் இயங்குமிறை யோய்!

தன்னம்பிக் கையாயென் னெஞ்சுலவு நாதனவன்
தன்னவரைக் காக்கும் குகையாவான் - அன்னவன்
தான்குக னாவான் தரணியும் ஆவானே
வான்கூடத் தானே அவன்                                                 

4. வேண்டல்

முருகனே! கந்தனே! கார்மேக வண்ணன்
மருகனே! செந்தமிழ்ப் பாட்டுக்(கு) - உருகனே!
எந்தையே! நின்னருளை வேண்டுகிறேன் நல்லறிவுச்
சிந்தையை நீஎனக்குத் தா                                                            

செந்தூர் எழிற்குமரா! தேர்க நினதருளால்
கந்தா!கார் மேகத் தருளெனவே - எந்தம்
அகங்குளிர ஆற்றுக ஆற்றத் தகுந்த!
குக!குகை என்னைக்கா கா                    

திருமுருக! நின்னருளை என்னிழற்குச் சேர்க்க!
உருவதுவாய் அந்நிழலை மாற்றித் - திருக்கருணை
மாரி எமைச்சேர மாட்சிமை யோங்கிட
வாரீர் வளந்தரு வீர்

என்னிறைவா என்றழைத் துள்ளம் மகிழ்கின்றேன்
தன்னிறைவாம் செல்வத்தைப் பெற்றிடவே - முன்னின்று
வாழ்த்திடுவாய் வாழ்க்கை முறையில் வளம்மேலும்
சேர்த்திடுவாய் நின்னடி யில்.

உண்மைப் பெயருடையார் போலுடலுள் ளந்தருவாய்
அண்மை இருந்தெம்மை ஆட்கொள்வாய் - திண்ணமுடன்
கொண்ட செயல்முழுமைக் கோன்மை யுடனதனால்
கொண்டிடச் செய்குவை கோன்
                                      
                      - தமிழகழ்வன்