Feb 22, 2013

என்தமிழ்

கலிவிருத்தம்

என்றமிழ் என்றமிழ்ந் திருந்தேன் என்றமிழ்
இன்றமிழ்ந் திருளுல கென்றமிழ்? வினவுதே!
நன்றிலை இன்றமிழ் இஃதிலை என்னுளம்
கொன்றுமிழ் சினத்தினைக் காத்திட என்செய?
                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
என்தமிழ் என்று அமிழ்ந்து இருந்தேன். என்தமிழ் இன்று இருளுலகு அமிழ்ந்து என்ன தமிழ்? என என்னுள்ளம் வினவுதே! நன்று இல்லை. இன்தமிழ் (இனிய தமிழ்) இஃது இல்லை. என்னுள்ளம் என்னைக் கொன்று உமிழும் கோபத்தை அடக்கிக் காத்துகொள்ள என்ன செய்வேன்?

Jan 19, 2013

மா வண்டு ஏன் மா வண் தேன் தேடி

நேரிசை வெண்பா

காவருங்கா லுள்ளத்தைக் கல்லாய் 
அடைத்துப்பின் 
ஏவல்லி ஏங்காதே இன்னாதே - மாவண்டேன்
மாவண்டேன் றேடி மலையாதும் காணாது
நோவது நீயறி வாய்
                - தமிழகழ்வன் சுப்பிரமணி 

ஏ வல்லி! கா வருங்கால் உள்ளத்தைக் கல்லாய் அடைத்துப் பின் ஏங்காதே இன்னாதே
மா வண்டு மா வண் தேன் மலை யாதும் தேடிக் காணாது நோவது ஏன்?  நீ அறிவாய்           - தமிழகழ்வன் சுப்பிரமணி

Jan 9, 2013

முள்ளம்பன்றி

கலி விருத்தம்

முள்ளம் பன்றித் தைக்கும் முதலே!
கொள்ளென் பென்றி ருப்பார் அன்பர்
வள்ளு வன்றன் வண்சொல் போலவ்
வுள்ளன் பன்றி வேறென் வேண்டும்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
முள் அம்பு அன்றித் தைக்கும் முதலே!
கொள் என்பு என்று இருப்பார் அன்பர்
வள்ளுவன்தன் வண்(மை) சொல் போல்
அவ்வுள்ளன்பு அன்றி வேறு என்(ன) வேண்டும்?

என்பு - எலும்பு

Jan 4, 2013

முத்து முகிற்பா (பிறந்தநாள் வாழ்த்து)

இன்னிசை வெண்பா

முகிற்பா முகிழ்ப்பால் முகப்பால் சிரிப்பாள்
திகைப்பாள் தவிர்ப்பாள் திடுமென்(று) அதிர்வாள்
எதற்கா யெனநான் வினாதற்(கு) உரைப்பாள்
பதின்க வனத்தா ளவள்.                         1

நேரிசை வெண்பா                   

பேச்சுப் புலியே! பிறர்பேச என்னாவாய்?
கீச்சுக் கிளியாய்க் கிடப்பேனே! - மூச்சுப்
பிடித்தே பகர்வாள் பிடித்தன வெல்லாம்
பிடிக்கா தனபுலம்பு வாள்.                             2

“இன்பொருள் இவ்வுல கத்தில் ‘ம’கரத்தில்
அன்னை அவட்கடுத்(து) அம்முகில்” - சொன்னதற்(கு)
உள்ளம் நிறைத்தனை! என்றே உரைத்தனை!
வெல்லுஞ்சொல் வேறில்லை யே.                       3

புத்தக மேபடித்(து) எந்நாளும் பண்பட்டுப்
புத்தகம் பெற்றுயரு மாபடிப்புப் - புத்தகமே!
வித்தக மேதைய லால்வேறென்? புத்தகச்
சித்தகம் செய்தாயை சொல்.                           4

மடமிது! ‘பால்வழு’ நன்(று)அன்(று)என்(று) எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா! - அடடாவஃ(து)
என்னென்று சொல்லவா ‘டா’வென்றால் ‘டா’வில்லை
‘அன்புள்ள அம்மணி’ யே!                            5

தமிழ்த்தோழி தானயத் தானையவள் தன்னேர்
அமிழ்தாழி யாகின் குரலாள் - உமிதாங்(கு)
அரிசிவமாய்க் காக்கும் அருந்தகையாள் வையம்
பெரியதோ? இல்லை அவட்கு.                         6

முத்து முகில்மழை முத்தம் தரதரை
வித்து பெறுவரம் ஒட்டியதே - கத்து
கடலெனச் சிற்ற ருவிதனைச் செய்யும்
திடமுள செம்மை யினாள்.                            7

நாணல் நதிக்கொரு நன்னண்பன் நாடொறும்
நாணல் எனவாழ்த் திடும்பிறந்த - நாணல்வாழ்த்(து)
என்றோழி! வாழ்கநீ டூழி! யுளமுழுதும்
இன்பக் கடலாழ்ந் திரும்.                             8
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 14, 2012

இராஜகீழ்ப்பாக்கம் - M51G

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்றலையில் இன்றெழுதி வைத்துள் ளதேயான்
    இன்மழையில் மகிழ்வோடு நனைவேன் என்றே
என்னூரில் எனைத்தாண்டி எதிர்த்தி சையில்
     ஈரிரண்டு பேருந்து சென்றா லுந்தான்
ஒன்றுகூட செல்லாது என்னே ரத்தில்
     யான்செல்லும் திசை நோக்கி உதவி இல்லா
இன்னாவீ போக்குவரத் துள்ள வூர்தான்
     இராஜகீழ்ப்பாக் கந்தானான் என்ன செய்வேன்?
                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என் தலையில் இன்று எழுதி வைத்துள்ளதே; யான் இனிய மழையில் மகிழ்ச்சியோடு நனைவேன் என்றே; என் ஊரில் எனைத் தாண்டி எதிர்த் திசையில் 4 பேருந்துகள் சென்றபின்பும், ஒன்று கூட நான் செல்லும் திசைநோக்கிச் செல்லவில்லை; உதவி இல்லாத, துன்பம் தரும் போக்குவரத்து உள்ள ஊர்தான் இராஜகீழ்ப்பாக்கம். நான் என்ன செய்வேன்?

ஈ போக்குவரத்து - வினைத்தொகை

Oct 17, 2012

காயத்திரியின் கனியுள வேண்டல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாயத் திரையில் மயங்கிடு முலகு
   முடிவுறுங் காலு மாறிலாச் சீரார்
மாய னுந்தி முண்டகத் துதித்த
   மன்னவ! யுகங்கள் எத்தனை கடந்தும்
ஆய கலைகள் அறுபதும் நான்கும்
   அந்தமி லொன்றாய் மன்றிட வேண்டும்
காயத் திரியின் கனியுள வேண்டல்
   கலைமக ளகத்தே சேர்த்திடு வாயே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 3, 2012

அகழ் அகத்தான்

நேரிசை ஆசிரியப்பா

எனக்கு யானே நவிலு நல்லுரை
தனக்குள் விருப்ப மளவற நிரப்பித்
தன்வழி தனிவழி தன்னிக ரெவரினிச்
சென்றிடு தலுயர் வாழ்க்கை யன்றெண்
ணொழுக்கந் தலையா யுடன்பிற வெல்லாம்
இழுக்கொன் றிலதா யினிமை யுளதாய்ச்
செழித்திடச் செய்தல் வாழ்க்கை
விழித்திடு தமிழா வகழகத் தானே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 16, 2012

தந்தை

தந்தை - ஓர் உயரிய சக்தி, வழிகாட்டி, பாதுகாப்பு.

'என்ன நடந்தாலும் எந்தை உள்ளார் தோள்கொடுக்கும் தோழனாய்' என நம்பும் மகனுக்கு ஓர் உயரிய சக்தி.

அனுபவம் கண்டதை அப்படியே அள்ளி வழங்கி, அடுத்த படியை அழகாய் அமைத்துக் கொடுக்கும் அற்புத வழிகாட்டி.

தன்பெயருக்குப் பின் கணவன்பெயர் இடம்பெறும் வரை, முதற்பெயராயும் விருப்பப்பெயராயும் அமைக்க விருப்பப்படும் மகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.

சோற்றுக்குப் பஞ்சம் உண்டு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காற்றுக்குக் காவு தந்து,
     கவின்பெறு பதாகை செய்து,
போற்றுவார் வாழ்த்த வயது
     போதாது வணங்கு கின்றோம்.
சோற்றுக்குப் பஞ்சம் உண்டு
     சொல்லொணா இன்னல் உண்டு
மாற்றமும் வந்த தென்று
     மனமாறக் கூறிச் செல்வார்.
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

சாலையோரம் நிறுத்தியிருந்த பெரிய பதாகை(Banner)யைப் பார்த்தபோது
சொல்லத் தோன்றியது.

Jun 5, 2012

கவினா

நேரிசை வெண்பா

அறிவுப் பசியெடுத் தான்ற புலமைச்
செறிவுத் தமிழ்க்கவி னா!சீர் - பெறுகநீ
வாழ்விலெந் நாளும் வசந்தமே! பொங்கிடும்
ஆழ்ந்தகழ் பேரின்ப மே!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்