Oct 25, 2020

மணிக்குறள் - 17. முதியோர் இல்லம்

முதியோரைக் காவாதான் மூடன் முறையாய்
மதித்து நடத்தல் மதி                                  161

பெற்றோரைக் காக்காத பேதையோ பேருலகம்
சுற்றினும் இல்லை சுகம்                           162

மாற்றில்லம் காட்டி மதியாத பிள்ளைக்குக்
கூற்றில்லம் தேடி வரும்                            163

மெத்தப் படித்தாலும் மேன்மை யடைந்திலன்
பெற்ற மனந்தவிக்கும் போது                164

தனிக்குடும்பம் வேண்டித் தனிமைப் படுத்தின்
தனிமைப் படுவாய் தளர்ந்து                 165

பெற்றோரைக் காவாதான் பிள்ளையும் அவ்வழியே
பெற்றோரைக் காவாது போம்               166

ஆண்டாண்டு வாழ்ந்திருந்(து) ஆனந்தம் காண்வயதில்
வேண்டுமோ வேறில்லம் சொல்            167

மீண்டும் மழலை மனத்திற்கு மாறுவோர்க்கு
வேண்டும் அரவணைப்(பு) அன்பு          168

மூத்தோரின் பட்டறிவு முன்னேற்றம் தந்துதவும்
காத்தோரே வாழ்வார் களித்து                169

மூத்தோரின் வாழ்வியல் முத்தான வாழ்வியலாம்
காத்தோம்பிக் கொள்க கனி                     170

No comments:

Post a Comment