Oct 4, 2020

மணிக்குறள் - 14. பெரியோரைப் போற்று

கண்டறிந்த சக்கரத்தைக் கண்டறிவேன் என்னாது
பண்டறிந்தோர் பாட்டினைப் போற்று                     131

புத்தறி வுக்குப் பொலிவூட்டல் சான்றோரின்
பட்டறி வென்றே அறி                                                        132

காலமெலாம் கண்டறிந்து காட்டும் வழித்துணை
மேலவராம் சான்றோரைப் போற்று                           133

பெரியோரைப் போற்றிப் பெருமையுள பாடம்
அறியும் அறிவே அறிவு                                                      134

பொல்லாச் சுரத்தும் பொலிவுற நல்லோர்
அறிவுரை நற்றுணை யாம்.                                             135

இற்றைப் புரட்சியால் இவ்வுலகோ? இல்லையில்லை
எற்றைக்கும் ஏற்பட்ட(து) ஏற்று.                                     136

வாரி வழங்கி வளங்குவித்தல் வாய்த்தலுக்(கு)
ஆரியங்கி ஆக்குவித் தார்?                                               137

ஆதி முதற்கொண்(டு) அகழ்ந்தார் வழியெலாம்
வேதி மரபணுவின் வேர்                                                      138

நன்மையன்றித் தீமையில்லை நாளும் நலம்பயக்கும்
பொன்மொழியர் சான்றோரைப் போற்று                  139

ஈன்று புறந்தந்தும் இன்னாவி கொண்டுழைத்தும்
சான்றுக்கே சான்றானார் சார்                                          140

No comments:

Post a Comment