பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
அருவினை யாவும் அழிக்கும் வலனே அறுமுகனே!
வருவினை யாவும் வடிவேல் செலுத்தி வருத்துகவீங்(கு)
ஒருவினை என்னை உழலும் துயரில் உறுத்துவதோ?
மருவினை நீக்கு மருத்துவ மாமணி மாமுருகே! 1
முருகைய! முத்தமிழ் முத்தைய! என்றும் முடிவிலனே!
உருவு மருவுமென் றோருதற் கேலா ஒருதனியே!
பெருவெளி எங்கிலும் பேரொளி யாயுள பேரிறையே!
அருவெளி என்றன் அகத்தினுக் குன்றன் அருளொளியே! 2
ஒளிர்ந்தெழுந் தோங்கி உலகினை ஊக்கும் ஒருதனியே!
தெளித்தருள் வாயே சிலைநாள் உறக்கத் திருந்தெழுந்து
தெளிந்த மனத்தொடு தேர்ந்தன செய்யத் துணையிருப்பாய்
துளிர்த்தநற் சூழ்ச்சி செயல்வழி நன்றாய்த் துலங்குகவே! 3
துலங்கு கதிர்வேல் துணைசெயுந் தொட்டுத் தொடங்குவன
இலங்கும் வழிதரும் எங்கும் நிறைந்த எழிலவனைக்
கலங்கா திருந்து களிப்பொடு காண்பாய் கடம்பமலர்
அலங்குநல் லாரமும் ஆற்றுப் படையும் அகத்தாற்றவே 4
ஆற்றுப் படுத்தென் னகத்தைக் குளிர்வித் தருமணியே!
ஊற்றுப் படுத்தென் னுணர்வு பெருகி உயரருவி
காற்றுப் படுத்துங் கடிதெனத் தேடக் கழலிணைகள்
ஆற்றுப் படுத்தி அருள்வாய் முருகா அடியனுக்கே! 5
அடியார்க் கடியவர் அன்பருக் கன்பர் அகத்துறையும்
மடியா தனவெனும் மாத்துய ரெல்லாம் மடித்தருளும்
படியாய் விளங்கலின் பாடிப் பரவிப் பணிதலுக்கே
துடிப்பவர் நெஞ்சில் துளைத்தழிக் கின்ற துயரிலையே 6
துயரந் தொலைத்தெழுந் தோடத் துணைசெய் தருளுகவென்
றயக்கங் களையுந் தரந்தந் துயர்த்துக தான்விழைந்து
முயல முயல முதலென நின்று முனைதலுடைச்
செயலுக் குருவாய்ச் சிறப்பொடு நின்றருள் செவ்விறையே! 7
இறைவ னடிதொழு தின்புறு நெஞ்சே இடரெனவொன்
றுறைவ திலையுனை ஊக்குமவ் வாற்றல் உயிர்த்தெழுக!
சிறையென வாழ்வைச் சிதைத்தல் சிறப்போ சிறைவிரிக்க!
குறைபல போக்கும் குமரனைத் தேடுக குன்றினிலே 8
குன்றுகள் தோறும் குடியிருக் கின்ற குழக்குமரா!
இன்றெழுந் தேனென் இயற்கை எதிலும் இனிதிருப்பாய்!
பொன்றுந் துணையும் புதுக்குவாய் என்றன் புலன்றெளிய
வென்றுளம் வாழ்குவாய் வெற்றி யளிகொற் றவைமகனே! 9
மகனே! களைவாய் மயக்கம் செயலை மகிழ்வுடனே
அகத்தில் பொருத்தி அணுவணு வாக்கி அவைதுணிக!
இகத்தில் செயலே இனிமை பயக்கும் இறுதிவரை
வகைப்படுத் தாற்றலின் மாச்செயல் எல்லாம் வழிப்படுமே 10
(தொடரும்)
No comments:
Post a Comment