Jul 18, 2021

உள்ளமும் வளர்ச்சியும்

தமிழகழ்வன் சுப்பிரமணி

காப்பு
அப்பனே! அந்தமிழ் ஆர்வல! ஆக்குகின்ற
இப்பனுவல் ஏதும் இடருறாமல் - செப்பமாய்ச்
செய்ய வலனென்று சேதி உரைத்தலுக்(கு)
உய்யும் உயர்விதி கூறு

அவையடக்கம்
என்செய எண்ணியான் என்செய்கின் றேனோஒ
புன்செயல் எல்லாம் பொறுத்தருள்வீர் - நன்செயும்
புன்செயும் இந்தப் புவிமீதில் உண்டேமன்
இன்செயல் என்றேயேற் பீர்

நூல்
உலகம் உவப்ப உழலச் செயுமவ் வுயர்ந்தவனைப்
பலரும் புகழும் பகலவன் தன்னைப் பணிந்தமுதக்
கலவை எனவே கலந்த உயிர்களைக் காத்தருளும்
நிலவுல கத்தை நினைத்தியான் பொங்கி மகிழ்பவனே! 1

மகிழ்ச்சி நிறைந்து மனத்தினில் ஓங்கி வளர்வதற்கே
பகிர்ந்து பலவுயிர் ஓம்பிக் கருத்தொடு வாழ்குவமே
அகிலந் தனிலே அதுவே முறைமை அழிப்பதற்கே
திகிலைப் பரப்பும் திகைசெயல் எல்லாம் திருத்துவமே 2

திருந்தித் தெளிந்து திகழ்சொல் லுரைத்துத் திருத்துகவே
வருந்தி வகையாய் வடிவமைப் பாயே வளர்நலமும்
பொருந்திப் பெரிதுவக் கின்ற பெருமை யடைந்துலகில்
இருந்ததற் கான இனிய புகழை இயம்புதற்கே 3

இயம்புக சொற்கள் இனிமை தரவே இகழ்ச்சியெலாம்
நயம்புக மாறும் நலமே அருளுமிந் நானிலத்தில்
பயந்த பெருவெளிப் பாதை முழுதும் பயன்படற்கே
வியந்தளக் கின்ற விருப்பம் உடைத்தாய் ஒளிர்தரவே 4

ஒளிர்தரும் ஒண்மீன் உடனுழல் கோள்கள் ஒருவிதியால்
தெளிவுற வோங்கித் திகைக்க வைப்ப தறிகுவையோ
ஒளியும் இருளும் உளவே இலவே ஒருங்கிணைந்து
மிளிருமொன் றோடு சுழியம் எனவே வெளிப்படுமே 5

வெளிப்பா டுடைமை உளத்துக்கண் ணோடும் விளைவுகளைத்
தெளிவாய் எடுத்துத் திளைக்கச் செயுமத் திருவினையால்
ஒளிப்பா டுடைமையின் உண்மையும் இன்மையும் ஒருங்குவைத்துக்
களிப்பைத் தருவதன் காரணம் ஓர்க கருதிவைத்தே 6

வைத்த பெருவிதி மாபெருஞ் சட்டம் வகைவகையாய்ப்
பொய்த்து விடாது புலிபசுத் தோல்போர்த்த அக்கதையாய்
மெய்த்து விடாது வெள்ளறி வோடு விளங்குவதால்
உய்க்கும் வழியமைத் தோங்கி வளர்க்க உயிர்களையே 7

உயிர்களை நாடி உதவிகள் தேடி ஒருங்கிணைத்துப்
பயிர்களைப் போலே பதமாய்த் திருத்திப் பழக்குகின்ற
உயிர்த்தலை வன்றனை ஓர்ந்திவண் டேர்க ஒருவழியே
துயர்துடைக் கின்ற துணைவன் அவனே சுடர்விளக்கே 8

விளக்கொன்று வேண்டும் விடியல் நமக்கு விளக்குதற்கே
உளமிருந் தால்தான் உயர்வுக் கொருவாய் உருப்படுமே
களங்காண் ஒருவன் கருதிய யாவும் களமழிக்கா(து)
உளங்கொ ளொருவனாய் ஓங்கி வளர உயர்த்துகவே 9

உயர்த்துக உன்கை உலகமும் உன்கை ஒருவிதிசெய்
செயற்கையால் சேரழி வுக்கோர் முடிவைச் செயல்படுத்தி
இயற்கை யுடனே இயயைந்தநல் வாழ்வை இறையருள்வான்
உயர்வோ உழைப்பால் உணர்வாய் உணர்வாய் உலகினிலே 10

நூற்பயன்
உள்ளத் துறையும் உடைசிந் தனையெலாம்
வெள்ளத் திருத்தி வெளிக்கொணரப் - பள்ளங்
கடந்தேறும் நல்ல கனிவாழ்வு பெற்றுத்
தடமமைப்பீர் தாங்குதர ணிக்கு.

No comments:

Post a Comment