Jul 14, 2021

பண்ணால் அகமாற்றுவேன்

என்னதான் செய்வதிங்கே? ஏதுசெய் தாலுந்தான்
தன்னிறை வென்றொன்று தான்கொளா - மின்னலாய்
எண்ணங்கள் மாற்றி எடுத்ததெலாம் வேண்டுமெனில்
வண்ணங்கொள் வாழ்வா? வதை                                  1

வதைபடு நெஞ்சினன் வன்சொல்லைக் கேளா(து)
உதைபடு நாளா உழன்று - கதைமாறுங்
கானத்து வாசமாய்க் காட்டி நடப்பனோ
ஈனத்(து) இழிபிறப்பா யான்?                                            2

யான்செய்த பாவமென்ன யாமத்தும் துஞ்சாது
வான்கொள் நிலவோடு வாட்டத்தைத் - தான்பகிர்வேன்
தேனாம் இனியவளே தேனீயாய்க் கொட்டியதால்
ஊனடங்கிப் போனேன் உழன்று                                     3

உழன்றுழன்(று) ஓடாய் உடைந்தழும் உள்ளம் 
பழங்கதைகள் எல்லாஅம் பாழாய் - முழம்போட
வெற்றுக்கை வீசி வெறுக்கை வெறுத்தேனோ
பற்றுக்கோ(டு) இல்லாப் படி                                             4

படித்த படியான் படியான் எனையும் 
அடியன் எனவாக்கல் ஆமோ? - முடியா 
அடியா முழுதுண ராதார் அடைவேன் 
அடியை அறியா தவன்                                                         5

தவந்தாங்கி வாழ்ந்தேன் தனக்கு நிகரில்
எவரும் எனவிருந்தேன் இன்றும் - அவந்தாங்
ககமாய் நிகரிலேன் ஆனேனை இன்னும்
இகமாந் தழைக்கும் இனி?                                                 6

இனியொன்று செய்வேன் எனவென்று நன்றாய்
நனிமகிழச் சூழ்ச்சி நலமே - பனிக்கின்ற
கண்ணாள் படும்பார்வை காணாது நொந்தேனா
பண்ணால் அகமாற்று வேன்.                                          7

மாற்றுவேன் என்று மனமாறிச் சென்றறிந்தேன்
மாற்றங்கள் எல்லாம் மறையுமே - கூற்றமே
மாற்றரிய மாவிசையாம் மண்ணுயிர்க் கெல்லாஅம்
போற்றியுயிர்ப் பாக்கல் பொலிவு                                 8

பொலிவுடைய நெஞ்சிலும் போற்றுத லின்றி 
நலிவடையும் எண்ணம் நடத்தும் - வலிய
விதியின்பால் நாளை விழாஅது காப்பாய்
மதியின்பம் சேர்க்கும் வழி           9

வழியறி யாது வகைதெரி யாது
சுழியினின்(று) ஒன்று துலங்கத் - தொழில்நடத்திச்
செல்லவொரு தூண்டுகோல் தேடுக வெல்லும்வாய் 
இல்லையென்ப(து) இல்லையே என்       10










No comments:

Post a Comment