Oct 10, 2014

வெண்பாவாய்ப் பட்டேன்

நேரிசை வெண்பா

நெஞ்சமெலாம் நீயே நிறைந்திருக்க வேறேதுங்
கொஞ்சமேனு மச்சிந்தைக் கெட்டாதே - தஞ்சமடைந்
திட்டேனென் னாழ்மனத்தி னெண்ணமே வெண்பாவாய்ப்
பட்டேனென் னேயென்னே பண்

                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்க வேறு ஏதும் கொஞ்சமேனும் அச்சிந்தைக்கு எட்டாதே! தஞ்சம் அடைந்திட்டேன் என் ஆழ்மனத்தின் எண்ணமே! வெண்பாவாய்ப் பட்டேன் என்னே என்னே பண்!

       என்னவளே! என் நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்கிறாய், ஆதலால் வேறு எதைப்பற்றியும் சிறிதளவுகூட சிந்திக்க முடியாமல் தவிக்கும் என் மேலோட்ட மனம், என் ஆழ்மனத்தில் புதைந்த உன்னைப்பற்றிய எண்ணங்களிடம் தோற்றுப்போய்த் தஞ்சம் அடைந்துவிட்டது.
      இக்கருத்தைக் கொண்ட என்மனம், இயல்பான உரைநடையில் இதை எடுத்துரைக்கத்தான் முதலில் எண்ணியது. ஆனால், போகிற போக்கில், அஃது அக்கருத்தை நல்ல கட்டமைந்த தளைகளால் உண்டாகும் வெண்பாவின் வடிவிலே உருவாக்கிவிட்டது. அந்த வெண்பாவாகிய பாடலின் அருமையை எண்ணி வியக்கிறேன்.

உடைந்த உளத்தன்

கலிவிருத்தம்

உடைய வுடனிலா(து) உடைந்த வுளத்த!தே(டு)
உடையன் அடிமனத்(து) உறைய மறைக்குமா?
கொடைய ளித்தெனத் தங்கை தன்னுரை
கடைப்பி டிப்பனோ? காண்பன் காண்பனே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 14, 2014

அருண்குமார் - அருணா (திருமண வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

மதுர மொழிய மதுரைத் தமிழ
விதுர நெறிய விசய விழிய
அருண வருண பனிக்கும் அருள
ஒருத னிப்பேர் உயர்ந்த பண்ப
தென்றல் இதய தேன்றன் பதிப்ப
மன்றல் நன்னாள் மகிழ்ச்சி பெருக
தங்க வமுத வருணம் பெறுக
எங்கும் எதிலும் ஏற்ற நிறைய
எண்ணம் வளர்க இதயம் நிறைவ
தாக நெஞ்ச தாகம் நட்பாம்
ஒன்று தனியென் றிராஅ தொன்றிய
வொன்றா கிடுக வெல்லாம் வெல்லம்
உள்ள வெள்ளம் என்க
உயர்தனிச் செந்தமி ழெனவா ழியவே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 15, 2014

பிரிவு

கலிவிருத்தம்

என்றுந் தனிமை யென்றுன் றனிமை
ஒன்று ரைக்கு மொன்றா நாழிகை
என்ற னுள்ளங் கொன்று வாழும்
இன்று ணைவன் இலனோ என்க

            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்றும் தனிமையென்று உன்றன் இமை
ஒன்று உரைக்கும் ஒன்றா நாழிகை
என்றன் உள்ளம் கொன்று வாழும்
இன் துணைவன் இலனோ என்க.

Aug 12, 2014

இழப்பும் அச்சமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், 

தொலைந்த தென்றதோ ருண்மையினும்
    தொலைக்கப் போகிறோம் என்பதனால்
தொலைத்து விடுகிற வாழ்வினிலே
    தோய்ந்த வச்சமென் செய்வேனோ?
தொலைத்தல் தோல்வியும் வெற்றியுமாய்த்
    தொலைந்த தொலைவத னுள்ளடங்கும்
குலைக்கச் செய்வது மதன்வேரில்
       குடியி ருக்குமப் பயந்தானே
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


மா-விளம்-காய்

Aug 7, 2014

சுபத்திரா (பிறந்தநாள் வாழ்த்து)

பஃறொடை வெண்பா

சுபத்திரா வாழ்க; சுகத்துடன் வாழ்க
சுபமாஅ யெச்செயலும் செய்துயர்ந்து வாஅழ்க
என்றன்றங் கையென்றும் இன்ப முறவாழ்க
நன்றென்றும் நின்வாழ்வில் சூழ வலம்வருக
அன்பாழி முத்தா யகங்குளிர வாழ்கவுயர்
பண்பாலே பேர்நிறுத்திப் பார்போற்ற வாழ்க
ககரமே யென்றால் கருப்பட்டி முன்னே
வகரமே யென்றால் வழித்துநக்கென் றோதும்
இலகுமனத் தாள்வாழ்க வின்முகத்தாள் வாழ்க
குலம்வாழ்க வாழ்க வினிது.

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 5, 2014

கைக்கிளை

கலிவிருத்தம்

கைக்கிளை யேதங் கைக்கிலை யேசிந்
தைக்கிலை துன்பம்? தங்கிளை என்பன்?
மெய்க்கிளைப் பேறிடச் செய்க்குழைப் பாம்வீண்
பொய்க்குரைப் பேனே! நானே! நலமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:

கைக்கிளையே தம் கைக்கு இலையே (கைக்கிளை ஏதம் கைக்கு இலையே)
சிந்தைக்கு இலை துன்பம்? தம் கிளை என்பன் ?
மெய்க்கு இளைப்பு ஏறிடச் செய்க்கு உழைப்பாம் வீண்
பொய்க்கு உரைப்பேனே! நானே நலமே!

கைக்கிளை - ஒருதலைக் காதல்
ஏதம் - குற்றம்
தங்கைக்கிலை - தம் கைக்கு இலை
சிந்தைக்கிலை - சிந்தைக்கு இலை
இலை - இல்லை என்பதன் இடைக்குறை
தங்கிளை - தம் கிளை
கிளை - உறவு
மெய்க்கிளைப்பு - மெய்க்கு இளைப்பு
செய்க்குழைப்பாம் - செய்க்கு உழைப்பாம்
செய் - நிலம், துறை
செய்க்கு - துறைக்கு, நிலத்திற்கு, களத்திற்கு
பொய்க்குரைப்பேன் - பொய்க்கு உரைப்பேன்

இஃது என் வாழ்க்கை?

கலிவிருத்தம்

ஒன்றி னுள்ளே வொன்றிய காலே
பின்னொன் றுள்ளே யுள்ளஞ் செல்லே
னென்ற மிழ்ந்த டம்பி டிக்கக்
கன்றுள் ளத்தன் கருத்தா யாமே


அக்க ருத்த ழிந்த பின்னே
அக்க ரந்தான் மாறிச் செல்ல
அக்க ரையாற் றுச்செல் வந்தான்
அக்க றைநெஞ் சுள்ளே செல்லும்


இங்ஙன மாகக் கணத்திற் கொன்றாய்க்
கங்கணங் கட்டிக் கொண்டே றெண்ணம்
தங்கவி டாதே யொன்றிலு மொன்றாய்
எங்ஙன மறிவே னிஃதென் வாழ்க்கை?
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 3, 2014

ஒன்றா? சுழியா? ஒன்றாச் சுழியா ?

நேரிசை ஆசிரியப்பா

விண்ணில் ஒளிரும் எண்ணில் மீன்கள்
ஒன்றை யொன்றறி யாதே யாயினும்
மிளிரும் அதுபோல் இம்மீ னுக்கும்
யாதொன் றுந்தெரி யாஅ தாயினும்
மிளிர்தல் குறைவிலை எல்லா மறிய                         5
வேண்டு மென்னும் எண்ண மதற்கிலை
அறிந்து தானென் செயப்போ கிறது
அதன்வழி யதனெண மதனுணர் வதன்கோள்

எண்ண வரிய வணுக்க ளதன்கூட்
டமைவை நோக்கின் ஒருசெல் லாதலின்                10
உயிருள் ளதுவோ உயிரில் லதுவோ
இறைவன் பார்வைக் கெல்லா மொன்றே

ஒன்று மிலாத ஒருகூட் டாய்ச்சேர்ந்
தென்ன படைத்தென? உயர்ந்தோன் பார்வைப்
பேராழி யுலகும் ஓரணு வாமே                                      15

தோன்றிய யாவும் தோன்றுயா வற்றையும்
ஊன்றிய உருவங் கொடுத்துப் பகுத்தே
ஆய்ந்து காலம் போக்கு கிறது
முடிந்த வாழ்வை எண்ணிப் பார்க்க,
கடந்தது காலம் மட்டும்                                                    20
ஆற்றிய யாவும் அனர்த்தமா கும்மே

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 19, 2014

என்ன சொல்ல வந்தாய்?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்ன சொல்ல வந்தாயென்
  நெஞ்சே நீயஃ தறிவாயோ?
ஒன்று மில்லை என்றாளே
   ஒன்று மிலதோ யாதறிவேன்?
சொன்னால் தானே தெரியுமது
    சொல்லா மற்சொலி வைத்தனையே
என்னென் றறியா தெங்ஙனமோ
    யானுறக் கந்தான் கொள்வதுவே?

                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்