Dec 6, 2016

இறையில் அமைதியுற... - இரங்கற்பா

மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி இறையில் அமைதியுற வேண்டுகிறோம்.

இரங்கற்பா

வஞ்சி விருத்தம்

அடங்கா மாரி அலைக்கழிக்கத்
தடங்கால் மாரி தலையொழிக்க
நடுகால் மாறிக் காலொழிக்க
வடக்கால் மாறத் தென்னெங்கே?


கலி விருத்தம்

எடுப்பது கையில் இயற்செங் கோலது
கெடுப்பது வஞ்ச வறுமைக் காலது
படுப்பது பகைவர் கைகொள் வாளது
தடுப்பது தடுக்கும் தின்மை தானது


வற்றறு பொற்றடத் துற்றநீர் அற்றென
உற்றவர் பெற்றவர் அற்றென உற்றவர்
பற்றறுந் தற்றவர் கற்றறிந் துற்றவர்
மற்றெவர் கொற்றவர் பொற்றவத் துற்றவர்


நற்றாயெனப் பெற்றாயுயர் நற்றாளிணைப் பொற்றாமரை
பெற்றேவளர் முற்றாவிதை முற்றாவினை கற்றோமினி
மற்றாருளர் பெற்றோமுனை அற்றாயுயிர் பெற்றார்பிறர்
பொற்றேர்வலப் பற்றேவளர் சற்றேவளர் சற்றேவலர்
                                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 20, 2016

திருமண வாழ்த்து - சுப்பிரமணி ஆனந்தி

சந்தக் கலிவிருத்தம்

அன்பின்விழி ஆன்றோர்மொழி ஐயன்வழி ஔகத்(து)
இன்பங்கொள ஈதல்வசி என்னும்படி ஏற்றம்
உன்னுங்கவி ஊக்கங்கொள ஒன்றித்தரும் ஓசை
தன்னில்சகி மன்னன்வழி நண்ணுங்கனி ஞான்று

அப்பிருமணி அகிலத்தினில் அரியனபெரும் யாவும்

ஒப்பிலிமணி என்றேநிலும் ஒண்ணித்தில நகையாள்
செப்பிடுமணி ஆனந்தியின் எண்ணங்கொளும் உள்ளம்
சுப்பிரமணி உறுகென்றுயர் உள்ளத்தொடு வாழ்த்தும்
                                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 26, 2016

திருமண விழா அழைப்பு ஓலை - சுப்பிரமணி ஆனந்தி

(நேரிசை வெண்பா)
வாழிய வையகம் வாழிய செந்தமிழ்
வாழிய ஞாயிறு மாமதி - வாழிய
கோள்களும் மீன்களும் கொள்கை உலவிட
ஆள்தவர் ஆள்க அறம்                                                              1


(நேரிசை ஆசிரியப்பா)
அழகன் முருகன் அருள்மழை பொழிக
தழைக்கச் செய்குல சாமிகள் வாழ்க
பருவத மாமலை தருவளம் திகழும்
பருவத இராசன் குலத்தே நிகழும்
திருமண விழாவிது தேர்நாள்
வருவது பின்னே அறிவீர் தாமே.                                              2


(சந்தக் கலிவிருத்தம்)
திருவள்ளுவ ருள(ம்)வாழ்ந்திடு திகழீரிரு வைந்நூற்(று)
ஒருநாற்பது பின்னேழென ஒளிராண்டினி லொன்றி
வருதுன்முகி எனுவெம்முக வைகாசியி னான்கைந்(து)
இருமூன்றென வறிவன்புத னியனாளது திருநாள்                  3


புலர்திரளொளி புனர்வசுவது புரிவினையென நேர்நில்
நிலவதுவளர் பிறைநான்கென நிகழ்நாளது சேர்நில்
இலங்காங்கில வாண்டுரையென ஈராயிரத் தீரெட்(டு)
உலகோருளம் கொளும்நாள்எது? ஜூன்திங்களில் எட்டு        4


அணிசேர்கதிர் அகிலந்தனை அடியொற்றிடுங் காலை
மணிநெற்கதிர் வருதலையென மணந்திடுமரு வேளை
மணியாறதை அடித்தேவரு மவ்வொன்றரை மிதுனம்
பணியேறிடுங் கனிநாளதே அருவேளைய தென்று                 5


(நிலைமண்டில ஆசிரியப்பா)
அஞ்சி லொன்று தீஅவ் வூராம்
நெஞ்சி லொன்றிட நேஎர் வீடாம்
திருவண் ணாமலை மாவட் டந்தனில்
திருவி ளங்கிடு தென்மகா தேவ
மங்கலந் த
ன்னில் வாழ்ந்தி ருந்த
நாட்டு வைத்தியர் சோதிட ரென்று
நாட்டு புகழ்நல் வேந்தர் ஆகிய
குமார சாமி சின்னம்மாள் மகனார்
பள்ளி கொண்டாப் பட்டில் வாழும்
நல்ல சோதிடர் நாட்டு வைத்தியர்
நல்லிசை யுல(கு)அறி பம்பை யோடு
பொற்சி லம்பு நடனத் தோடு
தொல்தெருக் கூத்தென்று பலகலை அறிந்த
வித்தகர் சேகர் பூமா தேவி 
இவர்த மக்கமை இளைய மகனாம் 
சுப்பிர மணியெனும் திருவளர் செல்வன் 
மன்னும் தமிழகழ் மனத்தே ரினனே!                                       6

(குறளடி வஞ்சிப்பா)
விழிமாநகர் விழுப்புரம்தனில்
எழிலாய்நிலும் ஓரூராம்
மேல்மலையனூர் தனில்வாழும்
ஆல்போல்குலந் தழைத்திடவே
அருள்கொடையங் காளம்மன்
திருக்கோயிலின் முன்னாள்அறங்
காவலர்எனப் புகழ்கொண்ட
சுப்பிரமணி பூசாரி
அவர்தம்துணை ஆண்டாள்
அம்மாள்இவர் தம்புதல்வர்
அரும்வாணிகர் கைதேர்ந்த
சமையற்கலை யாளரவர்
பம்பைதனை இசைக்கின்ற
பல்கலையறி பூசாரி
பாலுவென்பார் அவர்துணைவி
புஷ்பாஇவர் தம்முடைய
இளையமக ளாம்நகையாள்
ஆனந்தி
என்னும் திருவளர் செல்வி
மன்னும் மதிவத னத்தாள் தானே!                                         7


(நேரிசை ஆசிரியப்பா)
அவரை
இருவீட் டினரும் ஒருங்கே கூடிச்
சுற்றமும் நட்பும் சூழ நின்று
மேல்மலை யனூரில் சிவனருள் திருமண
மண்டபந் தன்னில் மணவணி காண
முறைமை தழுவி முடிவு செய்தனர்
அவ்வழித் தாங்கள் தங்கள் சுற்றமும்
செவ்வழி நட்பும் சேர்ந்திட வந்து
மணவணி காணும் மக்களைக் கல்வி
அறிவு வீரம் ஆற்றல் வெற்றி
அழகு நுகர்ச்சி ஆயுள் நல்லூழ்
இளமைநோ யின்மை நன்மக்கள் நெல்பொன்
பெருமை புகழெனும் பேறுகள் பதினாறு
பெற்றுப் பெருவாழ்வு வாழ்கென
உற்ற மகிழ்வின் உளம்வாழ்த் துகவே!                                  8
                      -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 13, 2016

காவடிச் சிந்து

அன்புச்செல் லத்தாயே போற்றி! - அம்மா
ஆண்டவன் என்றேதான் தோற்றிச் - சொல்லா
அரும்பாடெனுந் துயர்யாவையும்
துரும்பாக்கிடும் பெருந்தாயவள்
அன்பே - அவள் - பண்பே


இன்பத்தே எந்நாளும் நானும் - நலம்
ஈவதே உன்பால்நான் காணும் - பெரும்
ஈடிணையில் பேறதனில்
பாடிடுவன் ஆடிடுவன்
இணங்கி - உனை - வணங்கி

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 12, 2016

முத்தந்தரச் சொற்றந்தனை

சந்தக் கலிவிருத்தம்

முற்றந்தர முற்றந்தர முத்தந்தர முத்தே

சொற்றந்தனை சட்டென்றெனைத் தொக்குங்கலை யுற்றே
மற்றொன்றினை பற்றென்றவை வற்றென்றனை எற்றே
சுற்றங்கலை கற்றங்கலை தொற்றங்குல கற்றே
                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காவடிச் சிந்து/ கா வடிசிந்து

வந்தவினை நொந்துமிக ஓடும் - தமிழ்
வாழ்ந்திருக்கும் இந்தவுல கோடும் - கடல்
வந்திழுத்துப் போயிடினும் செந்தமிழச் சங்கதனை
வழங்கும் அது முழங்கும்.


எந்தமிழென்(று) ஏத்துகிற வரதர் - பணி
ஏற்றவரும் பைந்தமிழ மரபர் - அவர்
ஏற்றிவைக்கும் தீபவொளி போற்றிவைக்கும் தீந்தமிழை
எங்கும் வளம் பொங்கும்!
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 29, 2016

வளையற்சிந்து - தூது

தென்றலினை நெஞ்சுதனைச்
  செந்தமிழை முகிலை - மான்
  சேர்பணத்தைக் குயிலைக் - கிளி
  செம்மலரைத் துகிலைத் - தூது
 சேர்த்திடவே ஏவிடுவார்
 செவ்வேலோன்  மயிலை


அன்னம்புகை யிலைவிறலி
 அரவஞ்சேர் வண்டு - காக்கை
 அருநாரை நண்டு - நெல்
 அரும்பலவாம் கொண்டு - பேர்
 அழகுமாலை கொண்டுவாராய்
 அகங்குளிரக் கண்டு

         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 26, 2016

இலாவணிச் சிந்து


எங்குலந்த ழைக்கவந்த தங்கமக ளென்றுனையான்
என்னுளத்தே வைத்திடுவேன் ஏத்தி ஏத்தி
தங்குளத்துத் துள்ளலிலே பங்குகொள வந்தவளே
தங்கமகப் பாடலினைச் சாத்திச் சாத்தி
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 15, 2016

அதுகவிதை?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
      மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்
கலைநுட்பம் கற்றுணராக் கருத்துக் காலக்
      கவிதைசெயப் புறப்பட்டுக் கண்டெ டுத்த
அலைபட்ட நெஞ்சன்ன அழகே இல்லா
       அதுகவிதை புதுக்கவிதை கவிதை வேறென்?
 கலைக்கொலையைக் கண்டுள்ளம் கவன்றே சொல்வன்
       கவியழகைக் காணாத கவியும் ஏனோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்பே தமர்க்காம்

கட்டளைக் கலித்துறை

என்பே தமர்க்காம் எனவுளும் உள்ளம் இயன்றவர்தம்
அன்பே உலகின் அறவழி யென்றே அறிந்திடுவாய்
அன்பே சிவமென்(று) அறைந்திடு வாரே அவனியில்பின்
என்பே தமுந்தான் எதிர்நிலா(து) ஓடி இரிந்திடுமே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்