Nov 20, 2021

திருமுருகாற்றுப்படை - பகுதி - 1

புலவர்: வணங்குகிறேன் நக்கீரரே!

நக்கீரர்: வருக புலவரே! வணங்குகிறேன். நலந்தானே!

புலவர்: உடலம் நலமாயிருக்க உள்ளம் நலமாயிருக்க வேண்டுமன்றோ? உடலமும் உள்ளமும் நலமாய் இருந்தால்தானே நலம் என்று பொருள். அந்த உளநலத்தை அளிக்க வல்ல அருளாளனாகிய உம்மையே நாடி வந்தோம்.

நக்கீரர்: புலவரே! புகழ்ந்தது போதும். அந்த உளநலத்தை அளிக்க வல்லவன் யான் அல்லன். பேரொளி வடிவமாய் விளங்கும் எம்பெருமானே!

புலவர்: ஆம்… நக்கீரரே! அப்பெருமான் உமது வழியே எனக்கு அதை அருள்வான் என்று நம்புகிறேன். அதனால் அவ்வருளை அளிப்பவர் நீர்தாமே!

நக்கீரர்: புலவரே! போதும் போதும்! நீர் என்ன கேட்க வருகிறீர் என்பது எனக்குப் புரிகிறது. வாருங்கள் கடற்கரைக்குச் செல்வோம்.

புலவர்: கடற்கரையில் காலாற நடந்து செல்வது எவ்வளவு மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. சிந்தனை செம்மைப்படச் செவியினிக்கச் சேதி சொல்லும் ஐயனே!

நக்கீரர்: அதோ! குணகடலில் தோன்றிக் கதிர் வீசிக் கொண்டிருக்கும் அந்தக் கதிரவனைப் பாரீர்.

புலவர்: ஆம்.. அக்கதிரோன் இவ்வுலகத்து உயிர்கள் மகிழ்வதற்காகவே தோன்றி வலம் வருகின்றானே!

நக்கீரர்: ஆம்.. அந்த அழகிய காட்சியைப் பாரீர்! அவன் தன்னுடைய பேரொளியை இடைவிடாது வழங்கி இவ்வுலகத்தை இருளிலிருந்து மீட்டுக் கொண்டிருக்கின்றான்.

புலவர்: அது மட்டுமா? “எழுக! இவ்வுலகம் இனி உம் கையில்!” என்று நம்மை எழுப்புபவன் அவன்.

நக்கீரர்: இடைவிடாது உழைக்கச் சொல்லி நம்மை ஊக்குவிப்பவனும் அவனே!

புலவர்: அவனை யாவரும் புகழ வேறு கரணியம் வேண்டுமோ?

நக்கீரர்: அத்தகைய பேரொளி வடிவாய் விளங்கி, இடைவிடாது அருள்புரிந்து இவ்வுலகைக் காப்பவன் எம்பெருமான் முருகக் கடவுள்.

புலவர்: அடடா… என் மனக்கண்ணில் அவன் தோன்றும் செந்நிறக் காட்சி கண்டு மெய்ம்மறந்து போகிறேன். செந்நிறம் பொருந்தியவனாதனால் அவன் ‘சேயோன்’ எனப் பட்டானோ?

நக்கீரர்: சரியாகச் சொன்னீர்! செம்மை சேரச் சேரக் கருமை விலகுந்தானே. அகத்தில் அறிவு பெருகப் பெருக அறியாமை விலகுந்தானே.

புலவர்: ஆம். அடடா... அதைத்தான் காண்கிறேன். அக்கதிரவன் ஒளிபடக் கொஞ்சங் கொஞ்சமாய் இருள் விலகுவதுபோல என் மனத்துள் முருகனைச் சிந்திக்க என் அகத்திருளாகிய ஆணவம் அழிகிறது. ஆம்… அவன் எனக்குப் பேரின்பம் நல்குகிறான்.

நக்கீரர்: புலவரே! மற்றொரு காட்சியையும் கண்டீரா? கடலின் பசுமையும் கதிரின் செம்மையும் எப்படி நமக்குப் புலப்படுகிறதோ அவ்வாறே முருகனைக் கண்குளிரக் காணும் நமக்கு மயிலின் பசுமையும் அவனுடைய திருமேனிச் செம்மையும் விளங்குகின்றன அல்லவா?

புலவர்: அடடா! என்னே அருமையான காட்சி!

நக்கீரர்: தனக்குவமை இல்லாதான் முருகன். பிறகு ஏன் இவ்வாறு உவமையாக்கிக் கூறுகின்றேன்? புரிகிறதா உமக்கு?

புலவர்: புரிகிறது நக்கீரரே! இது புரியாமலா யானும் புலவனாகி விட்டேன்? வெறுமனே 'ஒளி வடிவானவன் முருகன்' என்று நீர் சொன்னாலும், என் மனக்கண்ணில் 'ஒளி எப்படி இருக்கும்' என்று நான் கற்பனை செய்துதானே ஆக வேண்டும். அப்போதுதானே அது விளங்கும். அதைத்தானே தாங்களும் விளக்கியுள்ளீர். அறிவேன் அறிவேன்.

நக்கீரர்: நன்று நன்று. உலக உயிர்களை மகிழச் செய்யப் பேரொளி வடிவந் தாங்கி இடைவிடாது ஒளிவீசிக் கொண்டிருப்பவன் சிவந்த திருமேனியன் முருகன்.

புலவர்: தங்களுடைய மொழியைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். என் உள்ளம் இனிக்கிறது.
(தொடரும்)

Nov 15, 2021

ஆற்று வளம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்பாடு (விளம், மா, விளம், மா, விளம், காய்)

மலையிடைப் பிறந்து மழைதர வளர்ந்து வழித்தடம் அமைத்தோடிச்
சிலபல கிளைகள் சேர்ந்தெனை யூக்கச் செருக்கொடு குதித்தெழுந்து
கலைபல கற்றுக் கலகல வென்று கலித்துவந்(து) எழில்கூட்டி
நிலைபல கடந்து நித்திலந் தேடி நெடுங்கடல் புணர்வேனே
                                              - தமிழகழ்வன் 

Nov 7, 2021

தமிழ்த்தாய்

அறுசீர் விருத்தம்

நெய்யவென் நெஞ்சில் நின்று
  நேர்வன எடுத்துக் கூறிச்
செய்யுதற் கின்பம் என்று
  செய்கையிற் புரிய வைத்துச்
செய்யுளால் இன்பந் தந்த
  செந்தமிழ்த் தாயைப் போற்றிக்
கையினைக் கூப்பு வேனே
  கண்களும் பனிக்கு மாறே

Oct 31, 2021

மழையே!

ஆசிரியத் தாழிசை

வாளும் வில்லும் வானவிற் கிணையோ?
மீளும் இயற்கை மேதினி செழிக்க
நாளும் பொழிக நல்ல மழையே!

முகந்த நீரினை முழுக்கரு வாக்கிப்
புகத்தந் தாற்றில் பொங்கும் வெள்ளம்
அகத்தில் மகிழ்வே ஆருயிர் மழையே!

மின்னும் பொன்னாய் விண்விளை யாட
இன்னும் எதுவோ இங்கு வேண்டும்
மன்னுக மழையே மன்னுக மழையே!
                                  - தமிழகழ்வன்.

Oct 16, 2021

நல்லாரா? பொல்லாரா?

சொல்லால் நடங்காட்டிச் சோகக் கதைநாட்டிப்
பொல்லாங்கு செய்வார்க்குப் போயுதவி செய்யாதீர்
நல்லார் எனவெண்ணி நம்பிக்கை கொண்டாரைப்
புல்லார் எனவெண்ணும் பொய்யர் மிகுந்துள்ளார்

Oct 5, 2021

உள்ளத் தனையது உயர்வு

தமிழ்வாழ்த்து

அள்ளக் குறையா அமிழ்த சுரபியாய்
உள்ளுதொறும் ஊறும் மணற்கிணறாய்த் - தெள்ளுதமிழ்த்
தாயே! விளங்கும் தனிச்சிறப் புற்றனை!
நீயே மகிழ்ச்சிக்கு நெய்

அவையடக்கம்

ஆசான் வரத ராசரை வணங்கினேன்
பேசாக் குழந்தை பேச விழைந்து
வீசா நின்ற விதைச்சொல் லுடையேம்
ஏசா தெம்மை ஏற்பீர் நன்றே

கவியரங்கின் நோக்கம்
நேரிசை ஆசிரியப்பா

அக்கினிச் சிறகுகள் ஆக்கி வைத்த
அன்பு மிகுந்த அறிவிய லாளர்
அன்னை நாட்டின் அரும்பெருந் தலைவர்
அப்துல் கலாஅம் ஐயா அவர்தம்
பிறந்த நாளை நினைவு கூர்ந்து                                 5
நிகழ்த்தப் பெறூஉம் நெடுநேரத் தொடராம்
பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் ஆகிய
இந்த நிகழ்வில் இனிதாய் இணைந்து
இந்தக் கவிதை அரங்கைத் தொடங்குவாம்
உள்ளத்து அனையது உயர்வெனக் கூறிய            10
வள்ளுவப் பெருந்தகை வாக்கை
உள்ளு வோமே உயர்வடை வோமே

தொடக்கக் கவிதை
நிலை மண்டில ஆசிரியப்பா

உள்ளத் தனையது உயர்வா கும்மே
உள்ளம் என்றால் என்னை? ஊக்கம்
வெள்ளம் வந்து மேலும் மேலும்
பள்ளம் நோக்கிப் பாய்தல் போலே
உள்ளத் தனையது உயர்வா கும்மே               5
உள்ளம் வேண்டும் உலையா முயற்சிக்கு
உள்ளம் வேண்டும் உடைய தொழிலுக்கு
உள்ளம் வேண்டும் உண்ணு தற்கும்
உள்ளம் இலையோ ஒன்றும் இல்லை
ஊக்கத் தளவே ஆக்கத் தளவாம்                     10
ஊக்கத் தளவே உலகம் உய்யும்
ஊக்கத் தளவே உண்மை விளங்கும்
ஊக்கம் இன்மை இன்மை வகுக்கும்
உள்ளத் தனையது உயர்வெனப் பாட
உள்ளத் துவகை யோடு மன்றம்                         15
ஏறி வந்தோம் ஏற்றம் உரைக்கப்
பதின்மர் இங்கே பங்கேற் கின்றோம்
உள்ளம் என்னும் ஊக்கம் பற்றிச்
சொல்லில் சுவைபடச் சொல்ல விழைந்தோம்
நல்ல கருத்தை நாடிக் கேட்டு                             20
வெல்லும் உலகை உருவாக் குவமே

1. வள்ளி முத்தே வருக வருகவே
முத்துக் கவிதை சொத்துக் குவிகை
பட்டுச் சிவிகை பாட்டுக் குவிதை
நட்டுக் காத்து நல்ல மரமாய்ச்
சொட்டுந் தேனாய்ச் சோலைக் குயிலே
வள்ளி முத்தே வருக வருகவே

சொல்லில் சொல்ல வியலாக் கருத்தும்
மெல்ல உருக்கி மெருகு தீட்டி
அள்ளித் தந்தீர் அருமை அருமை
வள்ளிமுத் தாரே வாழ்கபல் லாண்டே!

2. பால சுப்பிரமணியன் ஐயா
புதுவைத் தமிழ்ச்சங் கத்தின் செயலர்
புதுவது படைக்கும் புகழ்மிகு ஏணி
மதுவுக்குப் புதுவை என்பதை மாற்றி
மதுக்கவி தைக்குப் புதுவை என்று
மற்று மொருவர் வாய்ம லர்ந்தார்
பால சுப்பிரமணியன் ஐயா வருக
பாலன்ன நற்கவி படைத்துத் தருக

பாட்டுக்கு இங்கே போட்டியா என்ன?
காட்டுக் காட்டென்று காட்டி விட்டார்
அப்பப்பா
கட்டுக் கட்டாய்க் கவிதை மூட்டை
பட்டுத் தெறிக்குது பாரீர் பாரீர்
பால சுப்பிர மணியன் ஐயா
ஆல மரம்போல் ஆயிரங் கவிதை
மேலும் மேலும் தந்து தாங்குவீர்
வாழ்க வாழ்க வளமொடு வாழ்க

3. சதீஸ்குமார்
அருந்தமிழ் ஆற்றலை அகத்தில் புகுத்திப்
பெருமை கொள்ளப் பேரவா வோடு
புதுமை புகுத்த பிறந்த புயலே
மதுர மாயொரு கவிதை தருக
வருக வருக சதீஸ்குமார் வருக

தனித்திறங்கொள் சதீஸ்குமார் வாழ்க வாழ்க
சரஞ்சரமாய் அவர்தொடுத்த கவிதை வாழ்க
சாதனையைச் சடுதியிலே புரிந்தார் வாழ்க
தாதவிழ்பூ மலர்தல்போல் வாழ்க வாழ்க

4. பரமநாதன் ஐயா
இணுவில் என்னும் எழிலூர் பெற்ற
இனிய கவிஞர் பரம நாதரே!
முத்து முத்தாய்ப் பாடும் பைந்தமிழ்ச்
சொத்துக் குவையே! சோர்வுகள் நீக்கும்
முத்துப் ‘பரல்கள்’பட்டுத் தெறிக்கும்
வித்தகம் விளைக்கும் வீறுகொள் கவிஞரே!
வருக வருக அருங்கவி தருக

அழகாக ஒருகவிதை ஆக்கித் தந்தீர்
அதுவரமே என்கின்றேன் ஆகா ஆகா
மழைஇரண்டு வரமாக வாய்த்த தின்று
மகிழ்ச்சியிலே திளைக்கின்றோம் வாழ்க வாழ்க
வழங்குவதில் பெருங்குடமாய் வாய்த்தீர் வாழ்க
வாக்கினிலே இனியதையே வைத்தீர் வாழ்க
பழம்பெருமை மறவாத பண்பர் வாழ்க
பரமநாதன் ஐயாவே வாழ்க வாழ்க

5. விஜயலட்சுமி
உள்ளத் தனையது உயர்வே என்பதைத்
தெள்ளத் தெளிவாய்த் தேர்ந்த வாழ்வால்
அள்ளித் தருக அரங்கம் வருக
வெள்ளி மின்னல் உள்ளம் கொண்ட
விஜய லட்சுமி அம்மா வருக

சென்ற இடமெல்லாம் வெற்றி வெற்றி
சேர்ந்து வருமே செம்மை தருமே
அருங்கவி ஆக்கி அகிலம் தந்தீர்
பெருமை யோடு வாழ்க வாழ்க

6. கண்ணன்
இளைய சமுதாயம் இனிது வாழக்
களைவார் துன்பம் கவிதைக் கட்டால்
கண்ணின் மணியாய்க் கருத்துக் கொண்ட
கண்ணன் ஐயா வருக வருக
கனிச்சுவை தனிச்சுவை யாகத் தருக

இடிமுழக்கம் இதுவன்றோ எழுச்சிக் கவியே
இன்னும்யாம் கேட்பதற்கும் ஆவல் கொண்டோம்
படிமுறைமை நேரத்தைப் பார்த்துப் பார்த்து
பாயுமுளம் தேற்றியிருக் கின்றோம் ஐயா
விடியட்டும் உம்மாலே உள்ளம் வைத்து
விதைப்போமே ஊக்கத்தால் வீழ்ந்தி டாதே
நெடிதுபுகழ் நீர்பெற்று வாழ்க வாழ்க
நேயமுள பெருங்கவியே வாழ்க வாழ்க

7. அழகர் சாமி
பழகு தமிழின் செம்மையினைப்
பார்த்துப் பார்த்து நுண்ணறிந்தே
அழகு கவிதை படைப்பவரே
ஆற்றல் மிக்க பெரும்புலவர்
பழக இனியர் பண்பாளர்
பாக்கள் பாட வாருமையா
அழகர் சாமி அரங்கினிலே
அகிலம் போற்றும் அருங்கவியே

நன்றாய் நெய்த கவிதந்தீர்
நலமே விளைக்கும் கவிதந்தீர்
பொன்றாப் புகழொடு வாழியவே
பொங்கும் மகிழ்வொடு வாழியவே

8. ஷேக் அப்துல்லாஹ் அ
இறைமை இதயக் கோயிலில் இருத்தி
முறைமை தவறா முதுநல் லறிஞர்
நிறைமனம் கொண்ட நித்திலக் கவிஞர்
சிறுமை மனத்தார் சிறைவிட் டெழவே
ஷேக் அப்துல்லா
ஐயா வருக அருங்கவி தருக

உள்ளத் துணர்வை அடுக்கிக் காட்டிக்
கள்ளம் அகற்றிக் கனியாய் வாழ்வு
கொள்ளச் செய்தி சொன்னார் அன்னார்
வெள்ளம் போலே மகிழ்வொடு வாழ்க

9. விஜயகுமார் ஜனார்த்தனன்
கன்னி முயற்சியாய்க் களம்புகு காளையாம்
இன்னல் நீக்கியோர் இனிமையுள வாழ்வுக்குச்
சின்ன கவிஞனெனத் தேற்றி அவைவந்தார்
பென்னம் பெரிதான கவிதை தருவாரே
விஜயகுமார் ஜனார்த்தனன் அவர்களே வருக
வியக்கும் செந்தமிழ்க் கவிதை தருக

உள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணங் கட்கு
உருவத்தைத் தந்துவக்கும் நிலைக்குச் செய்தார்
உள்ளத்தின் ஊக்கத்தை உணர்ந்து கொள்ள
உண்மையினைத் தெரிந்துரைத்தார் வாழ்க வாழ்க

நிறைவு கவிதை
ஊக்குங் கவிதைகள் உளம்நிறை வுறவே
கேட்டோம் தெளிவோம் கேள்விக ளாலே
இயலாச் செயலென ஏதும் இல்லை
முயலாச் செயலால் முழுதும் வீணே
செயலாக் குவமே செம்மை சேரவே                       5
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் என்றார்
வள்ளுவப் பெருந்தகை வாழ்வில் ஊக்கத்து
அளவோ உயர உயர அவர்தம்
உயர்வும் மிகுமென உயர்ந்த கருத்தைத்
தெள்ளிதின் உரைத்த தெய்வம் அன்றோ           10
ஊக்கு விப்பார் ஊக்கு வித்தால்
ஊக்கு விற்பான் தேக்கு விற்பான்
என்பார் பெரியோர் எத்துணை உண்மை
உள்ளம் இலாதவர் எய்தார் செல்வம்
உள்ளுஞ் செயலை உறுதியாய்ச் செய்ய              15
விளங்கா திருந்ததும் பிடிபடும் அதனை
ஆய்ந்து நோக்கி அகம்சேர்ப் போமே
ஐயா அப்துல் கலாஅம் அவர்தம்
மெய்வழி நின்று மேன்மை யுறுவோம்
உய்வழி செய்வோம் உலகின் புறவே                       20

Oct 4, 2021

மலையன்ன துன்ப வகைத்து

நலந்தானா உள்ளம் நகைமுகத்தாள் கேட்க
நலமே எனநா நவிலும் உளமோ
மலையன்ன துன்ப வகைத்து

Oct 3, 2021

தேங்காஅ நின்ற நினைவு

ஏங்காநின் றாளுமவன் எப்போது காண்பனெனத்
தாங்காஅ உள்ளத்துச் சாரத் தவிப்பவட்குள்
தேங்காஅ நின்ற நினைவு

தூங்கா விழியிரண்டில் தூணாவான் நெஞ்சுறைத்து
நீங்கா மொழிதன்னால் நீர்மையிலாச் சொல்பிதற்றித்
தேங்காஅ நின்ற நினைவு

ஆங்கா வலனென்(று) அகமுரைத்துத் தான்நீங்கத்
தேங்காதல் சொல்மொழிந்து தேடிவரு வன்பொருள்
தேங்காஅ நின்ற நினைவு

Sep 30, 2021

கதிர்வேலன் தமிழகழ்வன் - பிறந்தநாள் வாழ்த்து

கதிர்வேலா செங்கதிர் வேலா
பொங்கும் கதிர்வேலா

ஆனந்தி பாலா அகழ்வன் தோளா
அந்தமிழ்க் கதிர்வேலா

சிந்தையினிக்கச் சிரிப்புக் காட்டும்
சின்ன கதிர்வேலா

தத்திநடை போட்டுப் போட்டுத்
தாவி ஏறும் பாலா

பின்னாலே கையைக் கட்டிப்
பிடித்தது கேட்கும் வேலா

கிள்ளைப் பிள்ளாய்
கிண்கிணி யாட்டச்
செல்லப் பிள்ளாய் நீயே

தாளம் போட ஆட்டம் போடும்
தங்க நட பாலா

Sep 5, 2021

அரசு


"பள்ளி தொடங்கி ஒரு மாதம் ஆச்சு... நல்லா படிக்காத பையனை எங்கேயும் சேர்த்துக்கொள்ளவில்லை என்று இங்க சேர்க்க வந்திருக்கீங்களா?" என்று கேட்டார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். திருவண்ணாமலை மாவட்டம் சின்னகாங்கியனுரில் அமைந்துள்ள ‘திரு.க.குப்புசாமி நினைவு உயர்நிலைப் பள்ளி’ அது.

"இல்லைங்க ஐயா... நாங்க நகரத்தைவிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கோம். அந்த முடிவு எடுக்குறதுல கொஞ்ச நாள் கடந்துபோச்சு. அதனாலத்தான் சீக்கிரம் வந்து சேர்க்க முடியல" என்று கூறினர் என் அப்பாவும் சித்தப்பாவும்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாத்தூரில் உள்ள ‘நகராட்சி நடுநிலைப் பள்ளி’யில் (தற்போது உயர்நிலைப்பள்ளி) நான் ஐந்தாம் வகுப்புப் படித்து முடித்தேன். விடுமுறை முடிந்து என் நண்பர்கள் ஆறாம் வகுப்பில் சேர்ந்துகொண்டிருந்தார்கள். நான்மட்டும் பள்ளியில் சேரவில்லை. ‘நல்ல வேளையாக ஐந்தாம் வகுப்போடு படிப்பு முடிந்துவிட்டது. இனிப் படிக்கத் தேவையில்லை. பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை’ என்று மகிழ்ச்சியாய் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, அவ்வளவு நாள் ஏன் பள்ளியில் சேரவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது. ‘அடடா.. மாட்டிக்கொண்டோமே’ என்று நடுங்கினேன்.

ஆறாம் வகுப்புச் சேர வந்திருந்த அப்போது, "இந்தா… இந்தச் செய்தித்தாளைக் கொஞ்சம் படித்துக் காட்டு" என்று என்னிடம் கொடுத்தார் தலைமை ஆசிரியர். நான் அந்த ஆங்கிலச் செய்தித்தாளை வாங்கிக் கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படித்துக் காட்டினேன். நேஷனல் (National) என்பதை நேடியனல் என்று படிக்கும் அளவில்தான் நான் அன்று இருந்தேன். ஆனாலும் பள்ளியில் அனுமதிக்கப் பட்டேன். அந்தத் தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து நல்லா படிக்காத பையன் என்று கூறிவிட்டாரே என்று மனத்துக்குள் ஒரு குத்தல் இருந்தது.

முதலாம் வகுப்பில் நான் எத்தனையாவது தரம் (Rank) என்று நினைவிலில்லை. இரண்டாம் வகுப்பில் முதல்தரம் பெற்றேன். மூன்றாம் நான்காம் ஐந்தாம் வகுப்பு என முன்னேறும்போது என் தரத்தின் எண்ணும் கூடிக்கொண்டே போனது. ஐந்தாம் வகுப்பில் நான் நான்காம் தரம். இப்போது எப்படிப் படிக்கப் போகின்றேன் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ற நிலை.

என்னை ஒருவரும் குறைசொல்லல் எனக்குப் பிடிக்காது என்பதால் படிக்கத் தொடங்கினேன். நகரத்தில் இருந்தவரை விளையாட்டுப் பிள்ளையாக இருந்த எனக்கு, இந்த ஊருக்கு வந்த பின் சூழல் மாறத் தொடங்கியது. புதிய ஊர்; நண்பர்கள் இல்லை; விளையாடும் வாய்ப்புக் குறைவு; படிப்பதற்கென்றே அமைந்த நல்ல சூழலாக அதனை ஏற்றுக் கொண்டேன். ஆறாம் வகுப்பில் சேர்ந்த நாள்முதல் நன்றாகப் படித்துவந்தேன். அந்த உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை அனைத்துத் தேர்வுகளிலும் நான் முதல் மதிப்பெண்ணே பெற்றுவந்தேன்.

வகுப்பில் முதல் மாணவன் என்பதால் அடிக்கடி தலைமை ஆசிரியர் கண்ணில்பட்டேன். அவர் எனக்கு வாய்ப்புகளைத் தந்தபோதெல்லாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். எட்டாம் வகுப்பு முடிக்கும்போது வந்த YSSP (இளம் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சி - Young Student Scientist Programme) வாய்ப்பு, கவிதைப் போட்டிக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது, ஒன்பதாம் வகுப்பில் பள்ளியளவில் நடந்த போட்டித் தேர்வில் பரிசு பெற்றது, பத்தாம் வகுப்பில் பள்ளியில் அதுவரை யாரும் எடுக்காத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தமை என்று இந்தப் பட்டியல் நீளும்.

பத்தாம் வகுப்பில் தலைமை ஆசிரியரே அறிவியல் பாட ஆசிரியராய் வந்தார். அவர் பாடம் நடத்தத் தொடங்கிய நாள்முதல் எனக்குள் கிளர்ச்சி. அவர் பாடம் நடத்தும் அமைப்பைப் பார்த்துக், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் அறிவு முதிர்ச்சியில் இருந்தால்தான் அவரது பாடம் புரியும் என்று பலநாள்கள் எண்ணியிருக்கிறேன். என்னுடைய மனத்து ஓட்டம், உள்வாங்கிக் கொள்ளும் திறன் அவ்வளவு குறைவு. அப்படி இருந்தும் எப்படி நான் முதல் மாணவன் என்றால் நாள்தோறும் நடத்தும் பாடங்களைத் தவறாமல் படிப்பதும் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்யும் பயிற்சியுமே ஆகும்.

ஒருமுறை அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ‘கால்சியம் கார்பனேட்டு’ பற்றிச் சொல்ல வந்தார். மாணவர்களைப் பார்த்துத் திடீரென்று, "அங்க போங்க, அங்க கொட்டி வச்சிருப்பாங்க, அதுதான் அது" என்றார். 'எங்க போகணும், என்ன கொட்டி வச்சிருப்பாங்க' என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு அறிவு எனக்கு.

பாடத்தில் இருவகையான மாணவருக்கு மட்டுமே ஐயம் ஏற்படாது என்று அவர் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. ஒன்றுமே படிக்காத, பின்தொடராத மாணவன் ஒருவகை. நன்றாகப் படிக்கும் மாணவன் இன்னொருவகை. நீங்கள் எந்த வகை என்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்பார். ஐயமே இருந்தாலும் கேட்பதற்குத் துணிவில்லாத அஞ்சும்வகை நான்.

பாடத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வரியையும் வினாவாக்கி அதற்கு விடைகாண முயலுங்கள் என்பார். அவர் சொன்னதை அப்படியே செய்துவந்தேன். ஒருநாள் என்னுடைய எழுதுபுத்தகத்தை வாங்கிப் பார்த்து மகிழ்ந்தார். மற்ற மாணவருக்கும் அதை எடுத்துக் காட்டினார். அதுதான் சொல்லின் செய்வனாக என்னை நான் உணர்ந்த சமயம்.

"நாளை சிறுதேர்வு. படித்துவிட்டு வாங்க" என்பார். “பாடத்தில் எந்தப் பகுதியில் தேர்வு?” என்று கேட்டால் எல்லாவற்றையுந்தான் படிக்க வேண்டும் என்பார். படித்துவிட்டு வருவோம். ஆனால் அவர் விடுமுறையில் சென்றிருப்பார். அடுத்த நாள் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவார். அப்பாடா.. அவர் தேர்வைப் பற்றி மறந்துவிட்டார் என்று எண்ணி மகிழ்வோம். திடீரென்று ஒருநாள், “எல்லாரும் தாளை எடுத்துக் கொண்டு வெளியே வாங்க” என்பார். போச்சுடா… அவர் தேர்வை மறக்கவில்லையா என்று அச்சத்துடனே எழுதுவோம். வினாக்களை எல்லாப் பகுதிகளிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டுவைப்பார். பள்ளி முடிய அரை மணி நேரமே இருந்தாலும் அவர்கொடுத்த வினாக்களுக்கான விடைகளை எழுதி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும். அவ்வளவு வினாக்களைக் கொடுத்துவிட்டுப் போவார். இதற்காகவே அவர் தேர்வு என்று சொல்லிவிட்டால் போதும். நாள்தோறும் ஒருமுறை புத்தகத்தையே திருப்பிப் பார்த்துவிட்டு வருவோம். தற்போது மாணவர்கள் கைப்பேசியை ஒருகையில் வைத்துப் பார்த்துக்கொண்டே தட்டிலுள்ள சாப்பாட்டைப் பார்க்காமல் மற்றொரு கையிலெடுத்துச் சாப்பிடுவதைப் போல, அப்போது என்னுடைய ஒரு கையில் புத்தகமும் மற்றொரு கையில் சாப்பாடும் இருக்கும். மனப்போராட்டம், நேர மேலாண்மை இவற்றிலெல்லாம் ஒரே விளையாட்டுத்தான் அப்போது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்றேன்.

ஒருநாள் பள்ளியில் தரப்படும் மதிய உணவை எத்தனை மாணவர்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்பதைக் கணக்கெடுக்கச் சொன்னார். நான் நினைத்திருந்தால் எத்தனை மாணவர்கள் என்பதை எளிதாக எண்ணிச் சொல்லியிருக்கலாம். உணவு வாங்கும் வரிசையில் நின்ற ஒவ்வொருவரின் பெயரையும் வகுப்பையும் கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் எப்படிக் கணக்கெடுக்க வேண்டும் என்று எளிதாகக் கேட்டிருக்கலாம். அதற்குத் தயங்கி, ‘அவர் புள்ளிவிவரமெல்லாம் கேட்டுவிட்டால் என்ன செய்வது?’ என்று எண்ணி அப்படிக் கணக்கிட்டேன். அப்போதுதான் என் தமிழாசிரியர் அடிக்கடி கூறும் '… பசிநோக்கார் கண்டுஞ்சார் … கருமமே கண்ணாயினார்' என்பதன் பொருள் எனக்குப் புரிந்தது. அன்றைய மதிய உணவை உண்ணாமலே அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.

சில நேரங்களில் அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது புரியாமலே கேட்டுக்கொண்டிருப்பேன். ஒருமுறை "இன்று மாலை பள்ளியில் வந்து உட்கார்ந்திரு. அவர் வருவார். அவரிடம் சொல்லிவிடு" என்று சொன்னார். யார் வருவார், அவரிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைக்கூடக் கேட்காமல் தலையாட்டிவிட்டு வந்து உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்குமேல் பள்ளியின் பாதுகாவலர் வந்தார். "என்ன பா, இன்னும் இங்கேயே இருக்க?" என்று கேட்டார். தலைமை ஆசிரியர்தாம் வந்து உட்காரச் சொன்னார். உங்களிடம் சொல்லச் சொன்னார்" என்றேன். "அப்படியா பா, சரிப்பா" என்று சொல்லிவிட்டு மின்விளக்கைப் போட்டுவிட்டு அவரும் சென்றார். வடிவேலு நகைச்சுவைக் காட்சிபோல, இன்றுவரை அது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

அவர் பள்ளியிலிருக்கும்போது அடிக்கடி அவ்வூரிலுள்ள சிலர் வந்து பேசிவிட்டுப் போவார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் விவசாயிகள் என்பதைப் புரிந்துகொண்டாம். அவர் அந்த விவசாயிகளுக்குத் தகுந்த ஆலோசனைகள் கூறும் விவசாயியும் ஆவார். எப்போதும் செயற்கை உரங்கள் போடாமல் இயற்கையாகவே விவசாயம் செய்யவேண்டும் என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார். சென்ற ஆண்டு (2020 சனவரி) ஆசிரியர்-மாணவர் கூடல்விழாவிற்கு அவர் வந்திருந்தபோது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட, சுமார் 6 மாதங்களாக எரிந்துகொண்டிருந்த, காட்டுத்தீயைப் பற்றிப் பேசிக் கவலைப்பட்டார். இயற்கையை நேசிக்கும் இனிய மனிதர் அவர்.

"அண்ணா, உங்களைத் தலைமை ஆசிரியர் கூட்டிட்டு வரச்சொன்னார்" என்று ஒரு மாணவன் என் வீட்டிற்கு வந்து சொன்னான். நான் பள்ளிக்குச் சென்றேன். பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருந்த அந்தச் சமயத்தில் "மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறாய்?" என்று கேட்டார். பொறியியல் அல்லது செவிலியர் பயிற்சிக்குப் படிக்கப் போவதாகச் சொன்னேன். இரண்டுக்கும் விண்ணப்பம் வாங்க உதவினார். மேலும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு அவரே என்னைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். கல்லூரியையும், துறையையும் அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். பின்னர் கல்லூரிக்கும் அழைத்துச் சென்று கல்விக் கட்டணம் பற்றிக் கேட்டறிந்து வங்கியில் கல்விக் கடனுக்கும் ஏற்பாடு செய்து அவரே கடனுக்கு உறுதியளித்துக் கையொப்பம் இட்டார். நான் கல்லூரியில் படிக்கும்போது கடினமாய் உணர்ந்த சமயங்களிலெல்லாம் எனக்காகப் படிக்கிறேன் என்பதை மறந்து என் தலைமை ஆசிரியர் என்மீது வைத்த நம்பிக்கைக்காகவே படிக்கிறேன் என மனத்திற்கொண்டு படித்து முடித்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன்.

அவ்வப்போது என்னைப் பற்றிக் கேட்டறிந்து எந்த வகையிலெல்லாம் உதவ முடியுமோ அந்த வகையிலெல்லாம் உதவி செய்திருக்கிறார். அவர்தான் உயர்திரு அர.சுப்பிரமணியன் அவர்கள். அவர்தன் கையொப்பத்தில் அரசு என்ற முதல் மூன்றெழுத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய ஆளுமையை எண்ணி எண்ணி மகிழ்வேன். ஒரு மாணவன் பள்ளியைவிட்டுச் சென்றாலும் அவனைப் பற்றிக் கேட்டு அவனை முன்னேற்றிப் பார்ப்பதில் பெருமகிழ்வு கொள்பவர். இந்த நன்னாளில் அவரை எண்ணிப் பார்த்துப் பெருமகிழ்வெய்துகிறேன்.
                                            - தமிழகழ்வன் சுப்பிரமணி