Feb 28, 2019

உண்டாக்கினேன் புதிய கவிதை என்பான் - எண்சீர் விருத்தம்

கண்மூடித் தனமாக மீண்டும் மீண்டும்
    கண்டுபிடிக் கின்றதுள்ளல் என்னென் றாலோ
தொண்டறிந்த சக்கரத்தைக் காணா மூடர்
    தோண்டியகழ்ந் தெடுத்தபினே சொல்வ தைப்போல்
பண்பட்ட இலக்கணத்தைக் காணா மற்றான்
    பாட்டெழுதும் இலக்கணத்தைக் காணா மற்றான்
உண்டாக்கி னேன்புதிய கவிதை என்பான்
    உருப்பட்ட ஒன்றினையே வேண்டா வென்பான்

Feb 16, 2019

ஆசுகவிச்சுழல்

பைந்தமிழ்ச்சோலையில்  ஆசுகவிச்சுழல் என்னும் இணைய ஆசுகவியரங்கம் 10.02.2019 அன்று நடைபெற்றது.

முதல் அமர்வு:
தலைவர்: மரபுமாமணி பாவலர் மா வரதராசன்
தலைப்பு: அன்பைப் பொழிகுவாய் நன்னெஞ்சே!

கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

பெரும்புகழ் சேர்க்கும் அன்பே
பேதைமை களையும் அன்பே
அரும்பிய குழந்தை காட்டும்
அரும்பெனும் முறுவல் கண்டே
திருந்துதல் வேண்டும் வையம்
செழிப்பினைக் கூட்டும் உள்ளச்
செருக்கினை அடக்கும் வெள்ளப்
பெருக்கெனத் திகழும் அன்பே 1

அன்பிலா உள்ளத் தாலே
அவலமே மிஞ்சும் மிஞ்சும்
இன்பிலா வாழ்க்கை எங்கே
எதனையும் ஈயார் தேடித்
துன்பமே சூழ வாழ்வார்
துணையென யாரு மில்லார்
நன்மைகள் சேர்க்க மாட்டார்
நானிலம் போற்ற வாழார் 2

வாழ்க்கையென் சக்க ரத்தில்
வண்டியை ஓட்டு தற்குக்
காழ்ப்புகள் நீக்க வேண்டும்
காதலைப் பொழிவ தற்குப்
பாழ்படச் செய்விக் கின்ற
பணமது வேண்டா வேண்டா
ஆழ்மனம் சொல்லும் உண்மை
அன்பொடு வாழ நன்மை 3

நன்மைசேர்த் தின்பம் நல்கும்
நயமிகு வாழ்வை நல்கும்
என்பையும் பிறருக் கீவார்
இணையிலா அன்பு கொண்டார்
வன்மைசேர் பாலை தன்னில்
வற்றிய மரந்த ளிர்த்தல்
அன்பகத் தில்லா வாழ்க்கை
அறிகுவீர் அகிலத் தோரே 4
                          ★★★

Jan 15, 2019

சோலைக் கவியரங்கம் - 8 இப்படித்தான் விடியும்.

கவியரங்கத் தலைவர்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

கவியரங்கத் தொடக்கக் கவிதை

தமிழ் வாழ்த்து

புலவர்க்குத் தனையீந்த பொற்றமிழே! ஊற்றமிழ்தே!
சொலவியலாச் செம்மையினைத் தொண்டுமுதல் கொண்டுள்ள
பலகலைகள் வளர்த்தெடுத்துப் பன்னெடுங்கால் சிறப்பாகத்
தலைமுறையைத் தழைக்கச்செய் தண்டமிழே! வாழியவே!

சோலை வாழ்த்து

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே

பைந்தமிழரசு மரபு மாமணி 
பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து

மாவரத மாமணியே மாங்காட்டுத் தமிழ்முனியே
பாவரத்தைத் தருகின்ற பருகுந்தேம் பாவணியே
தா’வரத்தை’ எனக்கேட்க நாவளரும் முன்பேநீர்
ஆவலினைக் கூட்டியுயிர் அரும்பசிக்குச் சோறூட்டி
‘நீவளர்க’ எனவந்து நிற்கின்ற தனிப்பெருமை
யாவளத்தால் யாமுரைப்பேன்? எவ்வாறென் உளமுரைப்பேன்?
பாவளர்க! நிலம்வாழப் பன்னெடுநாள் பைந்தமிழின்
காவளர்க! நலம்வாழ்க! கனியுள்ளம் வாழியவே!

அவையடக்கம்

பேரறி வுடையன் என்றெண்ணிப்
   பேதைமை செய்யும் மூடன்போல்
சீரறி வுடைய பெரியோர்முன்
   சிற்றறி வுடையன் வாய்திறந்தேன்
காரறி வேயென் அறிவாகும்
   கருத்தினில் கவியில் பிழைத்தாலோ
பேரறி வாளர் பொறுத்தருள்க
   பிழைகளைந் தென்னை வளர்த்தருள்க

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து

அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை
... ஐயன் வள்ளு வன்போற்றி
வழங்குதல் கண்டு வரவேற்போம்
... வருக வருக புத்தாண்டே

இன்பம் பொங்கும் புத்தாண்டோ
... இரண்டா யிரத்தோர் ஐம்பஃது
முன்னோர் போற்றி வாழ்த்துவமே
... முறைமை போற்றி வாழ்த்துவமே

பழகு செய்யுள் அக்காலப்
... பழமை போற்று! பொங்கட்டும்
வழங்கு செய்யுள் இக்காலப்
... புதுமை சாற்று! பொங்கட்டும்

பொங்க லோடு புத்தாண்டு
... போற்றிப் பாடி வாழ்த்துவமே
எங்கும் செய்யுள் நிறையட்டும்
... இன்பப் பொங்கல் பொங்கட்டும்

கவியரங்கத் தலைமைக் கவிதை

புவிநிலவும் நிலைமை சொல்லிப்
... புதுமையினைப் படைக்க வேண்டிக்
கவியரங்கம் வந்தோர் வாழ்க
... கவியின்பம் சுவைப்போர் வாழ்க
குவித்திருக்கும் குப்பை யன்ன
... கொடுந்துயரம் போக்கி வாழத்
தெவிட்டாத தமிழைக் கேட்போம்
... செவியேறத் தமிழைக் கேட்போம்

நல்லெழுச்சி உள்ளத்தில் நிகழ வேண்டும்
... நல்லவொரு குமுகாயம் மலர வேண்டும்
நல்லதமிழ் செந்நாவில் ஏற வேண்டும்
... நாடுநம தென்றெண்ணி வாழ வேண்டும்
வல்லவனாய்ச் செய்செயலில் திகழ வேண்டும்
... மண்காக்கும் வளம்காக்கும் மானம் வேண்டும்
பொல்லாத செயல்யாவும் அழிய வேண்டும்
... பொன்னுலகம் எனுமாறு போற்ற வேண்டும்

அறமில்லாச் செய்கையினைச் செய்ய வேண்டா
... ஆற்றலினை உள்ளொளித்துத் திரிய வேண்டா
சிறைப்பறவை எனும்நிலைமை நமக்கு வேண்டா
... செறுத்துமனம் வெறுத்தொதுக்கித் திரிய வேண்டா
வறண்டிருக்கும் பாலையென வாழ்க்கை வேண்டா
... வன்முறைகள் ஒருநாளும் வேண்டா வேண்டா
கறுத்திருக்கும் உளம்வேண்டா கவிதை செய்வோம்
... கனவெனவே இருப்பவற்றை நனவாய்ச் செய்வோம்

எப்படித்தான் விடியுமென எண்ணி எண்ணி
... எழுந்தவுளத்(து) ஆதங்கம் எடுத்துக் கொட்டி
இப்படித்தான் விடியுமெனின் விடிவெ தற்கோ?
... இப்படித்தான் விடிவதுவோ? தவறே அன்றோ?
இப்படித்தான் விடிவதுவே சரியே ஆகும்
... இப்படித்தான் விடியுமென இடித்து ரைப்பார்
இப்படியாய் இருபதின்மர் எழுச்சி பெற்றிங்(கு)
... எப்படித்தான் உரைக்கின்றார் எழுந்து கேட்போம்

கவியரங்க நிறைவு கவிதை

வாழ்த்து

அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
இன்பம் சூழத் துயர்தீர
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
நன்ன யங்கொள் நங்கவிஞர்
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
... விடியா நிலையும் உண்டு
விடையைத் தேடிப் போவோம்
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
படிக்காது பணியாது பண்படாது பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால்
... கால்வைக் கின்ற செயல்களிலே
வெற்றி பெற்று விடிவதுவும்
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
உற்ற உளத்துத் தன்மையினால்
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

நன்றி!

புவியறி வுறவே போற்றும் அறத்தைச்
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

Jan 14, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… பகுதி 2

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழிமுதல் எழுத்துகள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

சென்ற பகுதியில் மெய்ம்மயக்கம் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒவ்வொரு சொல்லும் எந்தெந்த எழுத்தில் தொடங்கலாம் என்பதைப் பற்றிக் கூறும் பகுதியே மொழிமுதல் எழுத்துகளாம்.

தொல்காப்பியம் காட்டும் மொழிமுதல் எழுத்துகள்:

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிமுதலாகும்.

மெய்யெழுத்துகள் மொழிமுதலாகா.

உயிர்மெய்யெழுத்துகளில் மொழிமுதலாகும் எழுத்துகளின் பட்டியலைக் கீழே காண்போம்.

க - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

த - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ந - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ப - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ம - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ச - வரிசையில் ச, சை, சௌ ஆகிய மூன்று எழுத்துகளைத் தவிர மற்ற ஒன்பது எழுத்துகள்

வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகள்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று எழுத்துகள்

ய - வரிசையில் யா என்னும் ஒரே எழுத்து

எந்த எழுத்தும் தன்னைக் குறிக்கும் இடத்து மொழிமுதல் ஆகி வரும்

நு - குற்றியலுகரமாகி மொழிமுதலில் வரும்

மேலே கூறப்பட்ட இலக்கண மரபிலிருந்து, வேறுபட்டுச் செய்யுளின்கண் திரிந்து முடிவனவும், இருவகை வழக்கின்கண்ணும் வழங்குமிடத்தான் மருவித் திரிவனவும் ஆகியவற்றை நல்லளவையாகிய ஆராய்ச்சியான் வழக்கு நடக்கும் இடத்தை உணர்ந்து, கூறப் பெற்ற இலக்கண நெறியோடு பொருந்த நடத்த வேண்டும் என்னும் தொல்காப்பியப் புறனடையை வழியாய்க் கொண்டு நன்னூலார் காலத்தில் சில மாற்றங்கள் எழுந்தன. அவையாவன:

ச - வரிசையில் மேலே குறிப்பிட்ட ஒன்பது எழுத்துகளோடு, ச, சை, சௌ ஆகியனவும் (பன்னிரண்டும்)

ய - வரிசையில் ‘யா’வுடன் ய, யு, யூ, யோ, யௌ ஆகியனவும்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்றோடு 'ஞ'கரமும் மொழிமுதல் ஆகி வரும்.

ங - அ, இ, உ, எ, யா ஆகிய எழுத்துகளின் பின், மொழிமுதல் ஆகி வரும்.

இனி, அவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காண்போம்.

உயிரெழுத்துகள்: அம்மா, ஆடு, இலை, ஈசல், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐந்து, ஒளி, ஓடம், ஔவியம்

மெய்யெழுத்துகள்: எந்தச் சொல்லும் தனித்த மெய்யெழுத்துகளை மொழிமுதாலாகக் கொள்ளாது. அது வடமொழியிலும் பிறமொழிகளிலும் மட்டுமே வரும். எனவே "க்ருபா, த்ருதி, ப்ரபு, ம்ருணாளினி, வ்யாசா" - போன்ற வட சொற்கள் "கிருபா, திருதி, பிரபு, மிருணாளினி, வியாசர்" என எழுதப்பட வேண்டும்.

உயிர்மெய்யெழுத்துகள்:

க - கடை, காக்கை, கிளி, கீரி, குயில், கூட்டம், கெண்டை, கேழல், கை, கொட்டை, கோட்டம், கௌவை

த - தன்மை, தாழை, திண்மை, தீது, துன்பம், தூக்கம், தென்றல், தேக்கம், தை, தொண்டு, தோண்டு, தௌவை

ந - நங்கை, நாடு, நிலம், நீலம், நுகர்ச்சி, நூல், நெல், நேற்று, நை, நொய், நோய், நௌவி

ப - பட்டம், பாடம், பித்தன், பீடு, புகழ், பூதம், பெண்மை, பேறு, பை, பொன், போட்டி, பௌவம்

ம - மண், மான், மின், மீன், முரண், மூடன், மென்மை, மேன்மை, மை, மொழி, மோதிரம், மௌவல்

ச - சருகு, சான்றோர், சிலை, சீற்றம், சுற்றம், சூழ்ச்சி, செற்றம், சேவல், சைகை, சொல், சோறு, சௌரம்

வ - வண்டு, வான், விடு, வீடு, வெற்று, வேல், வையம், வௌ

ஞ - ஞமலி, ஞாண், ஞெகிழி, ஞொள்கிற்று

ய - யவனர், யாறு, யுகம், யூகி, யோகி, யௌவனம்

நு - நுந்தை

ங - அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்

தன்னைக் குறிக்கும் இடத்து எல்லா உயிர்மெய்களும் மொழிமுதல் ஆகி வருதல் - ஙிகரம், டகரம், வுகரம், ரகரம், யீகாரம், வூகாரம், ஞைகாரம்

இவ்வாறு, மேலே குறித்த மொழிமுதல் எழுத்துகளைத் தவிர மற்ற எழுத்துகளில் தொடங்கும் எந்தச் சொல்லையும் ஆராய்ந்து ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, வடமொழியிலும் பிற மொழிகளிலும் பல்கிப் பெருகி வழங்கிவரும் பல சொற்கள் லகரம், ரகரம், டகரம் ஆகியவற்றையும் அவற்றின் வரிசை எழுத்துகளையும் மொழிமுதலாகக் கொண்டுள்ளன. அத்தகைய சொற்கள் தமிழுக்கு வரும்போது எப்படியெல்லாம் மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பேசும்போது, ஔவையாரின் ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும் நமக்கு நினைவில் வரும். (தொடரும்)

Jan 8, 2019

நித்திரை கலைந்தேன் தேவதையே!

என்
நெஞ்சம் குளிர்ந்தது நேசம் மலர்ந்தது
நித்திரை கலைந்தேன் தேவதையே!
உன்
செவ்விய சொல்லால் செம்மொழி யானேன்
சித்திரம் போல நின்றாயே!

என்
கண்ணில் பற்றிய காதல் தீ
நெஞ்சில் பற்றிய காட்டுத்தீ

மின்னலே! என் கண்ணில் தோன்றிய மின்னலே!
கன்னலே! என் சொல்லில் தோன்றிய கன்னலே!

காரிரு ளான காதல் காட்டில்
கண்ணைக் கட்டி விட்டாயே!
கண்கள் சிமிட்டி என்னைத் தூண்டிக்
கவிஞன் ஆக்கி விட்டாயே!

வண்ணப் பட்டங்கள் வானில் மட்டுமா?
எண்ணப் பட்டங்கள் ஏட்டில் மட்டுமா?

Dec 10, 2018

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… - பகுதி 1

தமிழகழ்வன் சுப்பிரமணி

இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிப்பர். அவையாவன: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல். இவற்றைச் செய்யுள் ஈட்டச் சொற்கள் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

1. வடசொற்கள் தமிழுக்குவரும்போதுஎப்படிஎழுதவேண்டும்?

வடசொற்களைத் தமிழில் எழுதும்போது இரண்டு வகையான முறைகளைக் கையாளலாம்.

தற்சமம்: தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்த வடசொற்களை அப்படியே தமிழில் எழுதிக்கொள்ளலாம். எ.கா. கமலம், காரணம்.

தற்பவம்: தமிழில் இல்லாத வடவெழுத்துகளால் அமைந்த சொற்களை, வடவெழுத்துகளை நீக்கித் தமிழின் இயல்புக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். எ.கா. ஹரிஹரன் – அரியரன்.

இவ்வாறு எழுதப்படும் சொற்களைத் தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள் எனலாம். வடசொற்கள் மட்டுமன்றிப் பிறமொழிச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொல் இல்லாதபோது அம்மொழிச் சொற்களையும் அவ்வாறே தமிழ்ப்படுத்துதல் சரியெனலாம்.

2. தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள் தமிழுக்குத் தேவையா?

தேவையில்லை. இணையான தமிழ்ச்சொற்களை எடுத்தாளுதலே சிறப்பு. ஆனாலும் வேற்றுமொழிச் சொற்கள் மக்களின் பயன்பாட்டில் தவிர்க்க முடியாமல் இயல்பாய் உள்நுழையும். எது தமிழ்ச்சொல்? எது தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்? என்ற தெளிவிருந்தால் போதும்.

3. எந்தெந்த இலக்கணப் பகுதிகள் சரியான தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களை உருவாக்க உதவும்?

• மெய்ம்மயக்கம்
• மொழிமுதல் எழுத்துகள்
• மொழியிறுதி எழுத்துகள்
• வடசொல்லைத் தமிழ்ச் சொல்லாய் மாற்ற நன்னூல் கூறும் வடசொல்லாக்கம்.

4. மெய்ம்மயக்கம் என்றால்என்ன?

மயக்கம் என்பதற்கு இணக்கம் எனப்பொருள் கொள்ளலாம். மெய்யெழுத்துகளோடு எந்தெந்த மெய்யெழுத்துகள் இணங்கிப் பக்கத்தில் வந்துசேரும் எனக்கூறுவதே மெய்ம்மயக்கம் ஆகும்.

எடுத்துக்காட்டாக,

அம்மா - அ+ம்+ம்+ஆ – இதில் மகரமெய்யை அடுத்து ஒருமகரமெய் வந்துள்ளது.

தங்கை - த்+அ+ங்+க்+ஐ - இதில்ஙகரமெய்யைஅடுத்துஅதன்இனமானககரமெய்வந்துள்ளது.

இவ்வாறு ஒருமெய்யை அடுத்து அதேமெய்யெழுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். ஒருமெய்யை அடுத்து வேறுஒரு மெய்யெழுத்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

மெய்ய்மயக்கத்தைப் பின்வரும் அட்டவணை மூலம் அறியலாம்.

க் - க்–பக்கம்
ச் - ச் - பச்சை
த் - த் - பத்து
ப் - ப் – உப்பு
ட் - ட்,க்,ச்,ப் - தட்டு,உட்கு,வெட்சி,நுட்பம்
ற் - ற்,க்,ச்,ப் - கற்றல்,கற்க,பொற்சபை,வெற்பு

மேற்கண்ட வல்லின எழுத்துகளில் க, ச, த, ப ஆகிய நான்கு மெய்களும் தன்னை அடுத்து வேறொரு மெய்யெழுத்தை வரவிடாது. டகர, றகர மெய்கள் தன்னை அடுத்துத் தன்னையும் க, ச, ப ஆகிய மூன்றையும் மட்டுமே இணங்கி ஏற்றுக்கொள்ளும். ஆக, இவ்விதியின்படி, தற்போது வழங்கிவரும் பக்தி, சக்தி, சப்தம், சகாப்தம், ரத்னா, ரத்நா – இவையெல்லாம் தமிழ்ச்சொற்கள் அல்ல. அவை பத்தி, சத்தி, சத்தம், சகாத்தம், இரத்தினம் எனத் தமிழ்ப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டியவை. பெட்ரோல் என்று தமிழில் எழுதுவதும் தவறு.

இவ்வாறே மெல்லின, இடையின எழுத்துகளோடு மயங்கும் மெய்யெழுத்துகளுக்கான பட்டியலைக் கீழேகாண்க.

ங–ங, க- அங்ஙனம், திங்கள்
ஞ–ஞ,ச,ய- மஞ்ஞை, மஞ்சள், உரிஞ்யாது
ண–ண,ட,க,ச,ஞ,ப,ம,ய,வ- வண்ணம், தண்டு, கண்கள், வெண்சாந்து, வெண்ஞாண்,வெண்பா, வெண்மை, மண்யாது, மண்வளம்
ந–ந,த,ய- செந்நா, வெந்தயம், பொருந்யாது
ம–ம,ப,ய,வ- அம்மி, அம்பு, திரும்யாது, நிலம்வலிது
ன–ன,ற,க,ச,ஞ,ப,ம,ய,வ - கன்னி, கன்று, என்க, இன்சுவை, இன்பம், இன்மை
ய–ய,க,ச,த,ப,ஞ,ந,ம,வ,ங - வெய்யோன், பொய்கை, செய்தான், வேய்ந்தான், மெய்ம்மயக்கம், தெய்வம்
ர–க,ச,த,ப,ஞ,ந,ம,ய,வ,ங – ஆர்கலி, வார்சடை, நேர்த்தி, பார்ப்பு
ல–ல,க,ச,ப,ய,வ- வெல்லம், வெல்க, வல்சி, கால்வாய்
வ–வ,ய- பவ்வம்,தெவ்யாது
ழ–க,ச,த,ப,ங,ஞ,ந,ம,ய,வ–வாழ்க, போழ்து, தாழ்பு, வாழ்ந்தான், அகழ்வான்
ள–ள,க,ச,ப,ய,வ–பள்ளம், கொள்கை, கள்வன்

இவற்றில் ரகரமும், ழகரமும் தன்னோடு இணங்காது. எனவே செர்ரி, மிர்ரர் – இவை தமிழின் ஒலிப்பு இயல்புக்கு மாறானவை.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் தனிச்சொல் மட்டுமன்றி, இருசொற்கள் புணரும்போதும் இதேவிதிகளைப் பின்பற்றுதலைப் பார்க்கலாம்.

(தொடரும்)

Oct 29, 2018

காலக் கணிதம்

தமிழகழ்வன்சுப்பிரமணி

தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?

ஆண்டுப் பெயர்கள் யாவும் வடமொழிச் சொற்களாய் இருக்கின்றன. அவை மட்டுமன்றி, அவற்றோடு தொடர்புடைய சோதிடக் கணக்குகள் யாவற்றையும் அலசிப் பாருங்கள். தமிழர் காட்டும் பெரும்பொழுது, சிறுபொழுது என்பன தவிர, எவையெல்லாம் சோதிடம் என்ற பெயரில் திணிக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரியும்.

வடசொல்
தமிழில் மீன்களின் பெயர்
தமிழில் திங்களின் பெயர்
சைத்ரம்
சித்திரை
சித்திரை
வைசாகம்
விசாகம்
வைகாசி
ஜேஷ்டம்
கேட்டை, மூலம்
ஆனி
ஆஷாடம்
பூராடம்
ஆடி
சிராவணம்
திருவோணம், அவிட்டம்
ஆவணி
பாத்ரபதம்
பூரட்டாதி
புரட்டாசி
ஆஸ்வீனம்
அஸ்வினி
ஐப்பசி
கார்த்தீகம்
கார்த்திகை
கார்த்திகை
ஆக்ரஹாயனம்
மிருகசீரிஷம்
மார்கழி
பௌஷம்
பூசம்
தை
மாகம்
மகம்
மாசி
பால்குணம்
உத்திரம்
பங்குனி

என்ற வரிசையில் சித்திரை, வைகாசி என்ற சொற்களுக்கெல்லாம், தமிழில் பொருள் சொல்ல முடியுமா? அவை தமிழ்ப்பெயர்களே என்று சாதிப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர்களா? தூய தமிழ்ப்பெயர்களா? என்ற ஐயத்தை ஆதாரத்தோடு விளக்குவார் யார்? அல்லது தமிழிலிருந்து அந்தச் சொற்கள் சென்று வடமொழிக்கேற்ப மாற்றம் கொண்டன என்றால், அவற்றின் தமிழ்ச்சொற்களின் வேரை ஆராய்ந்து சொல்பவர் யார்?

பின்வரும் பட்டியலை உற்று நோக்குக.

அஷ்டாங்கத்தில் முதற்பிரிவு :திரியாங்க விவரம்
· முதலாவது அங்கம் : சதுர்யுகங்கள் (4) – கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்
· இரண்டாவது அங்கம் : வருட நாமங்கள் (60) - பிரபவ முதல அக்ஷய வரை
· மூன்றாவது அங்கம் : மாத நாமங்கள் (12) - இவைதான் சித்திரை முதல் பங்குனி வரையிலான பெயர்கள்

இரண்டாவது பிரிவு: பஞ்சாங்க விவரம்
· முதலாவது திதி நாமங்கள் (15): பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அல்லது பௌர்ணமி வரை
· இரண்டாவது வார நாமங்களாவன (7): ஞாயிறு முதல் சனி வரை
· மூன்றாவது நட்சத்திரங்களாவன (27): அசுவினி முதல் ரேவதி வரை
· நான்காவது அங்கம் யோக நாமங்களாவன (27): விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை
· ஐந்தாவது கரணமும் அவற்றின் உருவ நாமங்களும் (11): பவம் – சிங்கம், பாலவம் – புலி, கௌலவம் – பன்றி, தைதுளை – கழுதை, கரசை – யானை, வனகை – எருது, பத்திரை – கோழி, சகுனி – காக்கை, சதுஷ்பாதம் – நாய், நாகவம் – பாம்பு, கிமிஸ்துக்கினம் – புழு

மேலும்
· நவக்கிரகங்கள் – சூரியன் முதல் இராகு, கேது வரை
· பன்னிரு இராசிகள் – மேஷம் முதல் மீனம் வரை
· சப்த வருஷங்கள் – பரதம், கிம்புருடம், அரி, இளாவிருதம், ரம்மியதம், ஐரணம், குரு
· எட்டு ஆப்தங்கள் – பாண்டவாப்தம், விக்கிரமாதித்தாப்தம், சாலிவாகன சகாப்தம், போஜராஜாப்தம், கொல்லமாப்தம், ராமதேவாப்தம், பிரதாப ருத்ராயாப்தம்
· இரண்டு அயனங்கள் – உத்தராயனம், தக்ஷணாயனம்
· சிறுபொழுதுகள் – மாலை, ஜாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
· பெரும்பொழுது இருதுக்கள் – வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சசிரம்.
· சூரியன் வீதி மாதங்கள் – மேஷ வீதி, ரிஷப வீதி, மிதுன வீதி
· சங்கற்ப மாதங்கள் – சைத்திரம் முதல் பால்குனம் வரை
· பக்ஷம் இரண்டு – பூர்வ பக்ஷம், அமர பக்ஷம்; சுக்கில பக்ஷம், கிருஷ்ண பக்ஷம்; வளர்பிறை, தேய்பிறை.
· நாளின் பகற்கூறு – பூர்வான்னம், பாரான்னம், மத்தியான்னம், அபரான்னம், சாயான்னம்
· திரிவித இராசிப் புணர்ச்சிகள் – சரம், ஸ்திரம், உபயம்
· முக்குண வேளை – சாத்துவீகம், இராசதம், தாமதம் (ஸத்வ (ஸாத்வீகம்), ரஜோ (இராஜஸம்), தமோ (தாமஸம்))
· அமிர்தாதி யோகங்கள் – அமிர்தம், சித்தம், மரணம், பிரபலாரிஷ்டம்
· அனந்தாதி யோகங்கள் – 27 (அனந்தம் முதல் வர்த்தமானம் வரை)

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவும் வடசொற்களால் ஆனவையே. பல சொற்களுக்குத் தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு பயன்படுத்தியும், பல சொற்கள் அப்படியே வடசொற்களாலேயே எடுத்தாளப்பட்டும்இருக்கின்றன.

அவ்வளவு ஏன்?
· சிறுபொழுதுகள், பெரும்பொழுதுகளுக்குத் தமிழ்ப்பெயர்களிருக்க, அவற்றுக்கு வடசொற்களைத் தமிழில் வழக்கத்துக் கொண்டுவந்து அழைப்பானேன்?
· தமிழ் இலக்கியங்கள்கூடச் சொல்லாத பல்வேறு கணக்குகளைச்சோதிடம் என்ற பெயரில் புகுத்தியது ஏன்? அவை யாவற்றுக்கும் வடசொற் பெயர்களே இருப்பது ஏன்?

‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூல், தமிழ்ச்செய்யுளால் செய்யப்பட்ட சோதிட நூல். இதன் ஆசிரியர், முடிந்த அளவு வட சொற்களைத் தமிழ்ப்படுத்தி அரும்பாடுபட்டிருப்பது தெரிகிறது. இன்னும் பல வடசொற்களைத் தமிழ்ப்படுத்த விரும்பாமல், தமிழ்ப்படுத்தினால் அவற்றின் அடையாளம் தெரியாமல் போய்விடுமே என்ற அச்சத்தால், அப்படியே பயன்படுத்தி இருப்பதும் தெளிவாக விளங்குகிறது.

இன்றைய தமிழர் நாட்காட்டி, பஞ்சாங்கங்கள் கூறும் 27 நட்சத்திரங்களும், அந்தந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மொழிமுதல் எழுத்துகளும் இங்கே காண்க.

நட்சத்திரம் - எழுத்துகள்
1. அசுபதி - சு, சே,சோ, ல
2. பரணி - லி, லு,லே,லோ
3. கிருத்திகை - அ, இ, உ, எ
4. ரோகிணி - ஒ, வ,வி, வு
5. மிருகசீரிஷம் - வே,வோ,கா, கி
6. திருவாதிரை - கு, க,ச, ஞ
7. புனர்பூசம் - கே,கோ,ஹ,ஹி
8. பூசம் - ஹூ,ஹே,ஹோ,ட
9. ஆயில்யம் - டி, டு,டே,டோ
10. மகம் - ம, மி,மு, மெ
11. பூரம் - மோ,ட, டி,டு
12. உத்திரம் - டே,டோ,ப, பி
13. அஸ்தம் - பூ, ஷ, ந, ட
14. சித்திரை - பே,போ, ர,ரி
15. சுவாதி - ரு, ரே,ரோ, த
16. விசாகம் - தி, து,தே,தோ
17. அனுஷம் - ந, நி,நு, நே
18. கேட்டை - நோ,ய, இ,பூ
19. மூலம் - யே,யோ,ப, பி
20. பூராடம் - பூ, த,ப, டா
21. உத்திராடம் - பே,போ,ஜ, ஜி
22. திருவோணம் - ஜூ,ஜே,ஜோ,கா
23. அவிட்டம் - க, கீ,கு, கூ
24. சதயம் - கோ,ஸ,ஸீ,ஸூ
25. பூரட்டாதி - ஸே,ஸோ,தா, தீ
26. உத்திரட்டாதி - து,ஞ,ச,ஸ்ரீ
27. ரேவதி - தே ,தோ, ச,சி

இவையெல்லாம் வடமொழியின் தாக்கம் என்பதைச் சொல்லித்தான் புரிய வேண்டுமா? இவற்றையெல்லாம் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இக்காலத் தமிழர்கள், எங்கே தமிழ்ப்பெயர்களைத் தம் பிள்ளைகளுக்கு இடப் போகிறார்கள்?

தொல்காப்பியமும், நன்னூலும் எடுத்துச் சொன்ன, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் விதிகளுக்கு உட்பட்டு இந்நூல் பல சொற்களைத் தமிழ்ப்படுத்தி நமக்கு வழங்கி இருக்கிறது.குழந்தைகளுக்குப் பெயரிடும்போது, சோதிடத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திற்கும் நந்நான்கு எழுத்துகளைக் கொடுத்து, மொழிமுதலாக வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், அவற்றில் வடவெழுத்துகளும் கலந்திருப்பதனால், தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்ட பட்டியலும் எழுந்துள்ளது.

அ, ஆ, இ, ஈ - கார்த்திகை
வ, வா, வி, வீ - ரோகணி
வெ, வே, வை, வௌ - மிருகசீரிடம்
கு, கூ - திருவாதிரை
கெ, கே, கை - புனர்பூசம்
கொ, கோ, கௌ - பூசம்
மெ, மே, மை - ஆயிலியம்
ம, மா, மி, மீ, மு, மூ - மகம்
மொ, மோ, மௌ - பூரம்
ப, பா, பி, பீ - உத்திரம்
பு, பூ - அஸ்தம்
பெ, பே, பை, பொ, போ, பௌ - சித்திரை
த, தா - சோதி
தி, தீ, து, தூ, தெ, தே, தை - விசாகம்
ந, நா, நி, நீ, நு, நூ - அனுஷம்
நெ, நே, நை - கேட்டை
யு, யூ - மூலம்
உ, ஊ, எ, ஏ, ஐ - பூராடம்
ஒ, ஓ, ஔ - உத்திராடம்
க, கா, கி, கீ - திருவோணம்
ஞ, ஞா, ஞி - அவிட்டம்
தொ, தோ, தௌ - சதயம்
நொ, நோ, நௌ - பூரட்டாதி
யா - உத்திரட்டாதி
ச, சா, சி, சீ - ரேவதி
சி, சூ, செ, சே, சை - அசுபதி
சொ, சோ, சௌ - பரணி

அம்முதலோர் நான்கதும் வவ்விரு நான்குள்ள துங்குவ்
   வாக விரண்டிரு மூன்று மெம்முதலாய் மூன்று
யம்முதலா றல்லதும் பந்நான் கிரண்டல்ல துந்தவ்
   வாக விரண்டே ழுநக ரத்ததுவா யாறு
நெம்முதலோர் மூன்றுயு யூவு கரமுத லைந்து
   நின்ற துமக்கவி னான்கு ஞம்முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றது நொம்முதன் மூன்றும் யாவு
   சொல்வி னான்கைந்தொரு மூன்றறு மின்றொட் டுளதே

மேற்கண்ட பட்டியல், வடவெழுத்துகளைத் தவிர்ப்பதற்காகச் ‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூலால் பரிந்துரைக்கப்பட்டது.ஆக, இந்தக் கணக்குகள் எல்லாம் வடமொழியையே சார்ந்திருக்கத் தமிழர்தம் காலக்கணிதம் எங்கே போனது?

Oct 28, 2018

நல்லினி யாளே! நல்லினி யாளே! - இதழகல் நேரிசை ஆசிரியப்பா

நல்லினி யாளே! நல்லினி யாளே!
இரீஇ இரீஇ யென்னத் தேடித் 
திரீஇத் திரீஇ தேனீ யல்லேன் 
இஞ்சி யன்ன காரங் காட்டி
இதழகன் றாஅல் இயைதல்
ஆகா தாகா தங்கயற் கண்ணே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

மனத்திட்பத்தை யறியவே! - வண்ணப்பா

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

தனத்தத் தத்த தனதனா 
     தனத்தத் தத்த தனதனா 

உனக்குட் பட்ட வெணமெலா(ம்)
     ஒழுக்கக் கட்டு முறையிலே
வனப்புக் குத்த வறலிலா
     வழிப்பட் டுற்ற வகையிலே
மனத்துத் தக்க செயலையே
     நடத்தித் திட்ப முறுகவே!
மனத்திற் பட்ட வலியெலா(ம்)
     மனத்திட் பத்தை யறியவே!

Oct 10, 2018

நல்லாசிரியர் திருப்பூர் பழனிச்சாமி ஐயா

திருப்பூர் நஞ்சப்பா மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஐயா அவர்கள் நல்லாசிரியர்  விருது பெற்றமைக்காக வாழ்த்து 


வெல்வேல் கைக்கொள் வேந்தன் என்னச்
சொல்வேல் செந்நா சோர்வு நீக்கக்
கல்வியும் ஒழுக்கமும் கற்பிக் கின்ற
உயர்திரு பழனிச் சாமி ஐயா
உயர்வழி காட்டும் ஒருபே ராளர்

அவர்
திருவிளங்கு பேரூர் திருப்பூர் தன்னில்
ஒருதனிச் சிறப்பின் ஓங்கிய பள்ளி
நஞ்சப்பா ஆண்கள் மேனிலைப் பள்ளி
ஆளும் தலைமை ஆசான் ஆவார்

அவர்
பாரத நாட்டின் பண்பைக் காக்கும்
வேரென விளங்கும் உயர்மா ணாக்கர்
ஆய அரும்பெரும் தூண்களைச் செதுக்கும்
பள்ளிகள் சிறக்கப் பண்பொடு கல்வி
ஊட்டி வளர்க்கும் உயர்ந்த ஆசிரியர்
தம்மைப் பாராட்டித் தனிச்சிறப்பு செய்யும்
அரசால் நல்லா சிரியர் விருது
பெற்றார் பெற்றார் பெருவாழ்வு வாழ்கெனக்

காற்றின் வழியே கடிதில் செல்லும்
தகவல் நுட்பம் வாய்கா லத்து
மெய்யே யன்றி மெய்ந்நிக ராகக்
கைகளைக் குலுக்கி வாழ்த்துகின் றேனே