Nov 27, 2011

சாம தான பேத தண்டம்

எதிரியைப் பணிய வைக்க நான்கு படிமுறைகளை வேதங்கள் சொல்லி வைத்திருக்கின்றன. அவை சாம, தான, பேத, தண்டம் என்பன. இவை சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி.

'தங்கமலை இரகசியம்' படத்தில் இவை கையாளப்பட்டன. ஒவ்வொரு முறையைக் கொண்டும் ஒவ்வொரு வகையான எதிரியைக் கையாள்வதாகக் காட்டியிருந்தார்கள்.

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைத்தல், தண்டனை கொடுத்தல், யுத்தம் செய்தல்

இவை நான்கும் தோற்றுப் போகுமா? என்பது என் ஐயம். 'மன் மதன் அம்பு' படத்தில் நான்கும் தோற்றுப்போய், தகிடு தத்தம் செய்து (நாடகமாடி, ஏமாற்றி) வெல்வதாகக் காட்டியிருந்தார்கள். 'தங்கமலை இரகசியம்' படத்தின்படி எதிரியிடம் பொய்சொல்லி, ஏமாற்றி வெல்வதாகச் சொல்லப்பட்டது பேத முறைப்படி.

Nov 12, 2011

என் நண்பன்

குறள் வெண்பா

பெருந்தொலை நண்பா! பொருந்தலை நண்பா!
வருந்தலை நான்வாழ் வினில்.
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பெருந்தொலை - பெருந்தொல்லை, பெரும் தொலைவு
பொருந்தலை - பொரும் தலை, பொருந்தவில்லை
வருந்தலை - வருந்தவில்லை

Nov 7, 2011

முருகேசன் - தேவி (திருமண வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

பொற்றேர் எழுந்து புறப்பட் டாற்போல்
பெற்றோர் சுற்றம் பேரன்புத் தோழர்
மிகுசூழ் மகிழ்நாள் முருகேசன் தேவி
தகுவாழ் பெறுக வீரெண் பேறாம்
கல்வி யாற்றல் வெற்றி யிளமை
நல்லூழ் ஆயுள்நோ யின்மை பெருமை
நெற்புகழ் அறிவு நுகர்ச்சிநன் மக்கள்
பொற்றுணிவு பொருளவை பெறுகென வாழ்த்தும்
தனவேல் அருள்சசி தமிழர சன்சிவா
மணியுறழ் வண்ணன் மாமணி கண்டன்
அணிமுகில் பிரபா அமலன் இரஜினி
பால சண்முகம் இராம மூர்த்தி
ஞாலம் உளவள நற்புகழ் பெற்று
வாழிய வளத்தொடும் நலத்தொடும் என்றே!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 31, 2011

தமிழே

நிலைமண்டில ஆசிரியப்பா

கொண்டு கொடுவாம் இடைக்குறை மதிக்க
மண்டலமா மண்தலமா மட்டல மாது?
கொண்ட திகட்டலில் கொண்டுவா வென்றே
உண்டுயிர்க் கின்ற இன்பொருள் தமிழே!
அண்டத் தளவிலை அண்டு மளவுளன்
தொண்டிருந் துள்ளன கொண்டில னெனினும்
தொண்டுசெய் துள்ள மகிழ்வேனே!
பண்டிருந் தோங்குஞ் செந்தமிழ்த் தேனே!
                              - தமிழகழ்வன்

Oct 7, 2011

கதிரவன் (பிறந்தநாள் வாழ்த்து)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சொல்லுமிதழ் சீர்சந்தம் சோலை மலரத்
    தோன்றுமொளிக் கதிர்பரவிச் சிவந்தி ருக்கும்
எல்லிறைவன் தேவையறிந் துலகு மேத்தும்
    இல்லாமல் யாதுமிவண் இல்லென் றாகும்
நில்லாநின் றிங்குநிலை நேயம் வளர்க்கும்
    நெறிநின்று நேர்செல்லும் கதிர வா!நீ
பல்லாண்டு வாழ்கநலம் பார்சுற் றத்தார்
    பல்லாண்டு வாழ்கவென வாழ்த்த வென்றே!
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Sep 30, 2011

மாலைமாற்றுக் குறள்வெண்பா

குறள்வெண்பா
மாலை மாற்று

யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா                                                          1

யாதி நலமா? வளமாவாய்! உரை! யுவ ஆம்! ஆள் அவ் அம் ஆல்! அ நதியா

என்ன நலமா? உரைப்பாயாக! இளமையுடைய அந்த அழகியவனால் ஆளப்பட வேண்டியவளாகிய அந்த நதியாவே!

நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா                                                       2

நாதடவு தேதமிழ் அ ஆசிரியராய் அரிசிவாழ் அமித தேவுடு அது அ நா.

நாவினிக்கத் தமிழைச் சொல்லிக்கொடுத்த அந்த ஆசிரியராகிய அத்தலைவர் இறைவனுக்கு நிகரானவர்.

அரிசி - அரியும் சிவனும்
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்



நலம் விரும்பி

நெஞ்சுலகில் உலவுகின்ற 
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில் 
வாஞ்சைமிக உள்ளவன்நான்
இனிய உளவாகும் 
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப் 
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தும் 
நீயே நலம்விரும்பி!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதலாளும் நுதற்றோன்றினோனும்

நேரிசை ஆசிரியப்பா

என்னே! கண்டேன் என்னே! கண்டேன்
உன்னில் அவனை உலவக் கண்டேன்
உன்பெயர்ப் பொருளில் அவன்றலை விளங்கும்

உன்னை நினைக்கின் அவன்முகம் தோன்றும்
நதியா றென்றே நவின்றிடின் விளங்கும்
உன்சொல் கேட்கின் உன்பெயர் விளங்கும்
அழகுத் தமிழன் முருகன்
பழகு மொழியாய்! காத லாளே!

               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 17, 2011

கார்த்திகேயன் - விஜயலட்சுமி (திருமண வாழ்த்து)

உளமார வந்தித்தோம்! விழியாரச் சந்தித்தோம்!!
திருவார்ந்த கார்த்திகைக் குமாரர்தம் வாழ்க்கையிலே
பெருவிஜயம் மனம்இணையும் அமுதவளத் திருவமலத்
திருநாளில் வாழ்த்தியோர்க்குப் பெருநன்றி பகர்வோமே!           (1)

நேரிசை வெண்பா


கார்திகையும் காற்றிகையும் காணுபிற நாற்றிகையும்
கார்த்திகையான் கார்த்திகேயன் கார்திகைய - ஆர்த்தபுகழ்
கார்த்திகைவா ளைக்குலம்வாழ் கார்த்திகைமீன் கண்சிமிட்ட
கார்த்திகைக்க திர்மறை கார்                                                                       (2)

கரவருடத் தாவணியில் காணுபதி னாறில்
விரவும் சுவாதிமதி யோடு - மரபுதவழ்
சுக்கிரனார் நன்னாளில் சுந்தர மன்றலுக்கு
மிக்கமகிழ் வோடுவாழ்த்து க.                                                                     (3)
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி  சேகர்

நடராஜன் - தனலட்சுமி (திருமண வாழ்த்து)

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொங்கும் உள்ள மகிழ்வுக் களவே இல்லை இப்போது
  புனலும் தடமும் போல நீங்கள் வாழ்க பல்லாண்டு
தங்கும் மகிழ்ச்சி என்றும் குறையாத் தனித்தன் மையோடு
  தனநடம் என்னும் செல்வம் பெற்று வீறு நடைபோடு
சங்கம் என்னும் நெஞ்சம் ஆளும் திறமை தன்னாலே
  சரித்திரம் சொல்லும் தனிப்புகழ் பெறுவீர் உலகின் முன்னாலே
குங்கும நுதற்கண் பார்வையால் காணும் தின்மைகள் இரியட்டும்
  குதூகலம் பொங்கும் இத்திரு நாளில் நன்மைகள் பெருகட்டும்
                                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்