Aug 2, 2020

மணிக்குறள் - 5. நடுவு நிலை நாடு

நடுநிலை நாடாது நாடுறுந் துன்பக்
கடுநிலை கண்முன்னே காண்                    41

நடுநிலை நாடா நயவஞ்சம் சேரக்
கெடுநிலை யாகும் கிடந்து                            42

நாடுதல் எல்லாம் நடுவு நிலையெனின்
வாடுதல் இல்லை மனத்து                               43

எடுக்குஞ் செயலில் இடைமயங்கல் இன்றி
நடுவொன்றே நாடு நலம்                                 44

ஒருதலையாய்ச் செல்லாமல் ஓர்ந்துணர்ந்து செல்க
பொருந்தும் இனிமைப் பொதி                       45

நேரிய பார்வைக்கு நேருந் துயருண்டோ?
கூரிய வேலென்று கொண்டு                           46

நடுக்கண் ணுடையாரை நாடேத்தும் நாளும்
இடுக்கண் இமியும் இலை                                47

எதுவந்த போதும் எதிர்நின்று வென்று
பொதுவொன்றே நாடு புரிந்து                        48

பாகுபா(டு) இல்லாத பார்வையே என்றென்றும்
ஆகுவழிக்(கு) ஆற்றல் தரும்                            49

நல்வாழ்க்கைக்(கு) என்றும் நடுநிலையே கைக்கொடுக்கும்
அல்வாழ்க்கை அல்லல் தரும்                         50

No comments:

Post a Comment