Jun 23, 2021

தந்தையே

சிறந்தன யாவும் சிந்தையில் எண்ணிச்
சிறகடிக்க வைத்துச் செழுமையை ஊட்டும்
திறமுடை யப்பனே! தெய்வம் போலவே
அறம்பொருள் நல்கி அகிலம் ஆனாய்!
உலகம் அறியா உணர்வுடை யவன்நான்
உன்னை விடவும் உயர்ந்து வளர
உலகம் உணர்த்தி உலகம் ஆனாய்!

Jun 13, 2021

மணிக்குறள் - 50. முப்பாலைப் போற்று

அருந்தமிழ் சொன்ன இலக்கணங் கட்குப்
பொருந்துநற் காட்டாங் குறள்                                 491

வாழ்க்கை முறையை வளமாய் நிறுத்தலான்
தாழ்வைத் தடுக்கும் மருந்து                                    492

நிலைதவறிப் போனாரை நின்றுதடுத் தாண்டு
மலையாக்கும் மாண்பை உடைத்து                     493

குறளடி யாலே குவலயம் ஆண்ட
அறம்பொருள் இன்பம் அது                                      494

ஒருபொருண்மேற் பத்தடுக்கி ஒவ்வொன்றும் முத்தாய்ப்
பொருள்பொதிந் தாக்கினார் போற்று                 495

எக்காலத் திற்கும் இனிதாய்ப் பொருந்துவழி
அக்காலத் தேவகுத்தார் ஆண்டு                             496

காலங் கருதி இடத்தாற் செயச்சொல்லிப்
பாலம் அமைத்தார் படிக்கு                                       497

ஐயனே! ஆற்றல் அளிக்கும் திருக்குறளை
உய்யவே தந்தாய் உலகு                                             498

துணைநின்று தாங்கும் சுடர்விளக்கின் கோலாய்
இணைத்தாய் இனியமுப் பால்                               499

சொல்லாக் கருத்துண்டோ? சொல்லிற் சுடரேற்றி
வெல்லக் கொடுத்தாய் விருந்து                              500

Jun 7, 2021

ஆறு முகனே வரந்தருமே!

ஆறு முகனே கொடுநுண்மி
  ஆட்டம் அறுப்பாய் அகத்துக்குத்
தேறுதல் தருவாய் தெருளகற்றித்
  தெளிந்து வினையை ஊக்குவிப்பாய்
மாறுதல் வேண்டும் மாயையிலே
  மாட்டித் தவிக்கும் மக்கட்கு
வீறு கொண்டு விளையாட
  வெற்றிக் கொடியோய் வரந்தருமே!

Jun 6, 2021

மணிக்குறள் - 49. வணிகத்தமிழ் வளர்ப்போம்

எண்ணம் சிறக்க எழிற்றாய் மொழிக்கல்வி
வண்ணம் பலவாக்கத் தேர்                              481

தமிழ்வழிக் கல்வி தகுவழி ஆற்றும்
அமிழ்தாய் இனிக்கும் அறிவு                          482

கல்வி யிலாது வணிகம் சிறக்காது
நல்வித் ததற்குத் தமிழ்                                       483

முத்தமி ழோடு முனைந்து வணிகமெனும்
அத்தமிழை ஆக்குவோம் ஆய்ந்து                 484

அறிவியலை ஆக்குக அந்தமிழில் சிந்தை
செறிவாய் வளரும் சிறந்து                                485

நிறுவனம் எல்லாம் நிலைகொள வேண்டும்
உறுதல் தமிழ்வழி என்று                                    486

அலுவல் மொழியாய் அருந்தமிழ் ஆக்கு
நிலைநன் னிறுவனம் நின்று                           487

கலைகள் அறிவியல் காலக் கணினி
நிலைகொள் தமிழில் நிறுத்து                         488

விண்ணொளிர் சோதிட வித்தைத் தமிழ்வழிக்
கண்ணொளியாய்க் கூட்டக் கனி                  489

மென்பொருள் வன்பொருள் மேதினி காண்கின்ற
நுண்பொருள் நந்தமிழில் நூல்                         490

May 30, 2021

மணிக்குறள் - 48. கூற்றங் கண்டு குலையாதே

உடலோம்ப நாளும் உயிரச்சம் இல்லாத்
திடவாழ்வு வாழ்வோம் திளைத்து                471

சரிவிகித மாயுணவு சார்ந்திருக்குங் காலை
வருங்காலன் கண்டஞ்சல் இல்                       472

உணவும் உடலின் இயக்கமும் ஓர்ந்தாய்ந்(து)
இணைப்போம் இயல்பு வழி                            473

உடம்பின்றி ஏதுமிலை உற்ற உயிர்க்கஃ(து)
இடமாதல் கண்டு தெளி                                    474

உடலியக்கம் ஊணுறக்கம் உற்றுணரல் நான்கும்
கடனாகக் காக்கும் கனிந்து                            475

இன்றுணர்ந்தார் நாளை இலையெனும் உண்மையை
நின்றுணர்ந்தார்க் கில்லை துயர்                 476

கொடுங்கூற்றம் என்று குலையா திருப்பாய்
தொடுமொருநாள் அஃதென்று உணர்        477

நம்பிக்கை யாலே நலம்வாழ்வோம் நம்பாமல்
ஏதும் நடப்ப திலை                                              478

உளஞ்சார்ந்த செய்தியால் உண்டாம் விளைவே
உளந்தெளிவோம் ஊக்க மொடு                  479

உடைமை எதுவெனின் உள்ள நலனே
உடைமை யதுவோ உடற்கு                             480

May 23, 2021

மணிக்குறள் - 47. அருவி அழகில் ஆழ்

அருவுதல் என்னும் அருந்தொழி லாலே
அருவியெனப் பட்டாள் அவள்                     461

நீருக்கு வீழ்ச்சியோ நீர்வீழ்ச்சி என்னாது
பேருண்மைப் பேர்கொண்டு போற்று     462

அடடாவோ என்னே அழகாய் அருவி
நடம்போட்(டு) ஒழுகலைப் பார்                  463

உள்ளம் செலுத்தி உயர்ந்த மலைமீது
கொள்ளையிடும் பேரழகைப் பார்           464

ஓங்குமலை மீதிருந்(து) ஓடிவரும் பாடிவரும்
ஆங்குநடம் ஆடிவரும் ஆர்ந்து                    465

மலைக்காட் டருவியின் மாமகிழ்வைப் பாங்காய்
உளங்காட்டக் காட்டும் உயிர்ப்பு              466

அருவி வருநீர் அகவொழுக்(கு) ஆய்ந்து
கருதக் கிடைக்கும் கரு                                  467

காண்டற்குப் பேரின்பம் காணாது போமுன்றன்
நீண்ட துயரமும் நீர்த்து                                  468

அருவி அழகை அகந்தோய்ந்து காண
இருமையும் துன்பம் இரிப்பு                        469

ஆற்றலும் ஆற்றலும் ஆறும் ஒழுக்கமும்
போற்றிக் கொளக்கிடைக்கும் பொன்    470

May 16, 2021

முருகாதலம் - காரிகை - பகுதி 3

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி 

தலையெழுத் தாவதென் றாலெழுத்  தாவதென் றானீன்றதாங்
கலையெழுத் தாவதென் காலெழுத் தாவதென் கானீன்றதாம்
நிலையெழுத் தாவதென் நீளெழுத் தாவதென் நீயென்னுடைத்
தலையெழும் அல்லலைத் தாளிடு மல்லலைத் தாருமையே                                 21

தருகென்று வேண்டித் தமிழ்பாடி னேனைத் தரமுயர்த்தி
முருகா தலமென் முனைப்பை யளிப்பாய் முழுமுதலே
உருகா உயிரும் உலகினில் உண்டோ உனையகலேன்
பொருந்து மறிவால் புரிவன தந்தழி பொய்ம்மையையே                                      22

பொய்யா யுலகில் பொழுதினைப் போக்கும் பொருளெனவோ?
செய்யத் தகாதன செய்யத் துணிவார் செயல்களெலாம்
ஐயோ கொடுமை அறமிலச் செய்கை அழிதலுக்கே
ஐயா அருள்வேலா! ஆறுத லீவாய் அகத்தினுக்கே                                              23

அகத்திற் பொருந்திணை அத்தும்பை ஆகலான் ஆறுறுத்திப்
பகலவ னாலே பனிபடும் பாடாய்ப் பணித்துறுமா
அகலாத் துயரெலாம் ஆட்டங் கொளச்செய் அருந்தமிழா!
துகளாய்த் தொடங்கி முயல்வான் துணையெனச் சூழ்ச்சியில                          24

சூழ்ந்தியான் செய்யத் துணிந்தன யாவும் துயர்விலக்கும்
ஆழ்ந்தியான் செய்ய அகத்தில் மகிழ்வால் அமைதியுளன்
தாழ்ந்துவ ணங்கித் தலைமேல் திருவடி தாங்குவனே
ஆழ்ந்தார்ந் திருக்கும் அடியர்தம் ஆர்வத் தருவிளக்கே                                          25

விளக்காய் விளங்கி வியனுல கெல்லாம் ஒளியருளும்
அளக்க வியலாப் பெரும்புகழ் கொண்ட அருந்தமிழைப்
பிளக்கும் வகையாய்ப் பிணக்குறு வார்தம் பிழைகளினை
உளங்களைந் தோட்டுக ஓரா நிலையவர் ஊழ்வினையே                                    26

ஊழ்வினை யாவும் உமதருட் பார்வை ஒளிபடவே
வாழ்வினை மேன்மை வழியிற் செலுத்தும் வளத்துடனே
ஆழ்வினை தன்னில் அகம்பொருந் தட்டும் அதுமகிழ்வு
பாழ்வினை யாற்றாப் பணிவுடை  நெஞ்சம் படைத்தருள்வாய்                         27

படைவீட் டெழுந்து பகைதீர்த் தருளும் பகலவனே!
தடைவீட் டிருந்து தடுத்தாண் டருள்க தமிழமுதம்
உடைவீட் டினிலே உவகை பெருக உமதடியார்
அடைவீட் டெழுக அவருளங் கொள்வதென் ஆழ்வதுவே!                                       28 

ஆழ்ந்தொரு செய்கை அகத்தில்  நிறைத்தியான் ஆற்றுதற்காய்ச்
சூழ்ந்து முனைவேன் சுடர்நெடு வேலோய்! துணையிருந்து
வீழ்ந்து விடச்செய் வினையெலாம் போக்குக மீப்பயனாய்
வாழ்ந்து மறைந்தார் வழிநிலை ஆய்ந்தெழ வாழ்த்துகவே                  29

வாழ்த்துக ஊக்குக வாய்மலர்ந் தென்னை வருவழியில்
தாழ்த்தும் உளமொடு தாக்கும் கருத்துறை தன்னலத்தார்
ஆழ்த்துமச் சூழ்வலை ஆயன வெல்லாம் அறுத்தெறிந்தவ்
வீழ்த்தும் நிலைகளை யான்கடந்  தேறும் விளைவருளே!        30                                                                 

------ நிறைவுற்றது-----

மணிக்குறள் - 46. மருத்துவச் சேவை

நோய்கண்டு நோயின் முதல்கண்(டு) அவையிரண்டும்
காய்வழி காண்பாரே காப்பு                          451

வருமுன்னர்க் காக்கும் வழிசொல்லும் வந்தும்
அருங்காப் பளிக்கும் மருந்து                        452

கொடுநுண்மி யாளக் குறையாத ஊக்கக்
கடுந்தவம் செய்வாரைக் காண்                   453

உடலாய்ந்து கூறி உறுநோயை நீக்கும்
கொடையாளர் தெய்வமே கொள்               454

எதிர்பாராத் தீநேர்ச்சிக்(கு) ஏற்பன செய்யும்
மதியாரைப் போற்றி மதி                               455

மருந்தும் கருவியும் மாறாத நுட்பம்
பொருந்தச்செய் வார்தம்மைப் போற்று 456

உற்றார் உழைச்சென்(று) உரிய மருந்தளிக்கும்
நற்றாய்க் கடனே கடன்                                 457

பதறி வருவார் பதற்றம் தணிக்கும்
இதமுளார் வாழ்வே இனிது                          458

விரைவூர்தி ஓட்டி உயிர்காக்கும் தோழப்
பெருந்தகை யாரை நினை                          459

ஆருயிர் காக்கும் அரும்பணி யார்தமக்(கு)
ஆரும் இணையில்லை ஆம்                        460

May 9, 2021

மணிக்குறள் - 45. வணிகமில்லாக் கல்வி

அடிப்படைக் கல்விக்கே ஆயிரமாய்க் கேட்பார்
அடிமடியில் கைவைப்பார் ஆண்டு              441

களர்நிலம் போக்குமக் கல்வி பொதுமை
உளதவ் வுரிமை உனக்கு                                   442
 
உலகச் சமநிலைக்(கு) ஒன்றும் படிப்பு
நிலைவரம் நீக்கு பணம்                                    443

நாட்டின் நிலையறிந்து நாணயம் வேண்டாது
கூட்டுக கல்வித் தரம்                                          444

கல்வித் தரமுயர்த்தக் காணா வழிசெய்வார்
சில்லறையால் சீர்குலைந்து போம்             445

கல்விக்குச் செல்வம் கணப்போதும் ஈடில்லை
சொல்லித் தெரிதலோ? சொல்                      446

முன்னேற்றம் காண்டற்கு முட்டாய் நிலைத்திருந்து
பின்னேற்றும் பேதைப் பணம்                      447

வளர்ந்தமையின் கல்வி வணிகமே நோக்காய்
வளர்ந்தமையல் இன்றுநல் வாழ்வு            448

வணிகமென வைக்காதீர் வாழ்வுரிமை யென்று
துணிந்துரைப்பீர் நேர்மை துணை            449

வணிகமாய் மாறாத வான்புகழ் கல்வி
துணிந்து பெறுதலே தூண்                             450

May 2, 2021

மணிக்குறள் - 44. தமிழ்நாடு தமிழருக்கே

மொழியாய்ப் பிரிந்தநா ளன்றே உரிமை
மொழியாருக் கென்றே மொழி                             431

ஒரேநா(டு) ஒரேமொழி யென்றுகொண் டாடல்
அரே!தர மின்றஃ(து) அழுக்கு                                 432

மொழிகாக்க வேண்டும் முதலான தேவை
அழிவில்லா வாழ்வுரிமை யே                                433

தன்னிலத்து வாழ்வுரிமை காக்கா(து) அயலானை
இந்நிலத்(து) ஆளவிடல் ஏன்?                                  434

தன்னிறைவு கொண்டுதான் தான்வழங்கல் வேண்டுமெனல்
பொன்னென் மொழியன்றோ? போற்று            435

தன்மக்கள் வாழ்வொழித்துத் தானளிப்பான் மற்றவர்க்கு
மன்னவனோ? மாற்றான் மகன்                            436

தமிழ்நாட்(டு) உரிமை தமிழர்க்(கு) உரித்தே
தமிழ்நாட்(டு) உரிமை தமிழ்க்கு                           437

தமிழ்நாட்ட வேண்டாது தானடிமை யாகல்
தமிழ்நாடும் வேண்டாது காண்                             438

அயலார்க் களித்தல் அயல்மொழி நாட்டல்
செயலார்க்கு? நில்லாதே! செல்!                           439

காவாதான் காவல் கடுந்துன்பம் உண்டாக்கும்
தாவாதான் கொண்டு தடு                                        440