Aug 15, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 1

ஆக்கம்:

● வாழ்த்து, அவையடக்கம், நூற்பயன் : பைந்தமிழரசு மரபுமாமணி பாவலர் மா. வரதராசன்
● வெண்பா (கண்) - மன்னை வெங்கடேசன்
● கட்டளைக் கலித்துறை (நாசி) - விவேக்பாரதி
● அகவல் (வாய்) - தமிழகழ்வன் சுப்பிரமணி
● விருத்தம் (மெய்) - சுந்தர ராஜன்
● வண்ணம் (செவி) - சியாமளா ராஜசேகர்

***
காப்பு

தூரிகை யாலேயித் தூய வுலகாளும்
காரிகையே வுன்றன்றாள் காப்பாகச் - சீரிதெனச்
செப்புமணி ஐந்து செழுநற் பனுவலைத்
தப்பின்றிச் செய்வாய் தடம்.

அவையடக்கம்

மைத்தடத்தில் காலொற்ற மாசில் பனுவலென
வைத்திழுத்த சுண்டெலிபோல் வந்துற்றோம் - மெய்த்தடத்தில்
நிற்கும் அவையீர் நெடுங்கான லிப்பனுவல்
கற்கும்வழி என்பீர் கனிந்து!

நூல்!
ஐம்புலனைந்தணி

வெண்பா
பூமலி தோட்டமும் பொங்கு மியற்கையும்
யாமன்றோ காட்ட வகங்குளிரும் - தீமையைக்
காட்டி மனத்தில் கனலூட்டும் கண்கள்யாம்
ஏட்டிலும் இல்லையெமக் கீடு (1)

கட்டளைக் கலித்துறை
ஈடென உண்டோ இலங்கும் மணங்கள் இருப்பறிந்து
காடெனச் சேறெனக் கார்மழை மண்ணெனக் காற்றெனுமோர்
ஊடகம் சேர்க்கும் உணர்வுகள் சொல்லி, உயிரியங்கும்
வீடகம் வாழ வினைசெயும் மூக்கின் வியப்பினுக்கே! (2)

அகவல்
வியந்து வாயைப் பிளந்து நோக்கிப்
பயந்தன எண்ணிப் பாரே பேசும்
சொல்லால் உண்மை பொய்ம்மை
நல்லாண் மைக்கு நான்கா ரணனே (3)

விருத்தம்
நானென தென்றே எண்ணம்
நானிலம் வாழ்வோர்க் குண்டாம்!
நானென தென்ப தென்னே?
நாடினால் மெய்யே தோன்றும்!
நானென தென்ப தான்மா!
நவில்வதோ ஞான மார்க்கம்!
நானென தென்று பாரோர்
நவில்வதோ வென்னைத் தானே! (4)

வண்ண விருத்தம்
தன்னத் தானா தனதந்தா

என்னைத் தானே செவியென்றீர்
என்னைக் கேளா தவருண்டோ?
கன்னத் தோடே உறவென்றேன்
கன்னற் பாவால் மகிழ்கின்றேன்
வன்னத் தோடா லொளிர்கின்றேன்
வண்ணத் தோடே வனைகின்றேன்!
உன்னிப் போடே உணர்கின்றேன்
உன்மத் தோனா யொலிதந்தே! (5)

வெண்பா
தேனோ தினையோ சுவைக்கப் பணம்வேண்டும்
ஆனால் அகன்றிருக்கும் எம்மூலம் - தேனாய்
இனிக்கும் இயற்கையைக் காணல் எளிதாம்
எனைத்தும் பணச்செல(வு) இல் (6)

கட்டளைக் கலித்துறை
செலவிலை ஆயினும் சேர்க்கும் இணையச் செழும்பரப்பில்
உலகவர் பார்த்திடும் ஒவ்வொன் றினுக்கு மொருவிலையாம்!
பலகணி நின்றுநம் பக்கத்து வீட்டார் படையுணவைத்
தொலைவில் நுகரத் தொடும்விலை இல்லை! துணையெனதே! (7)

அகவல்
துணையாய் வருமே தொழுது பாட
அணைக்கும் அந்த அருஞ்சொல் லமிழ்தம்
பிறக்கும் வாயாய்ப் பெருமை
சிறக்கும் படியென் சீரிய வாழ்வே (8)

விருத்தம்
வாழு வாழ்வதும் வாழ்வெனச் சொல்வதும்
வாழு மெய்யிவன் வாழ்ந்திடு மட்டுமே!
சூழு மேதுயர் சூடெனில் நீங்கிட!
ஏழு கூவிலும் என்னிணை யில்லையே! (9)

வண்ண விருத்தம்
தன்னன தானன தய்யானா

என்னிணை யாருளர் சொல்வீரே
எண்ணினும் வேறிலை மெய்யீதே!
இன்மொழி பேசமு யல்வீரே
என்னுரை யாயிது கொள்வீரே
பொன்மொழி யேதமிழ் நல்லோரே
புன்னகை யோடுப யில்வீரே!
சொன்னது காதென நுள்ளாதீர்
சின்னவ னோயிலை வல்லோனே! (10)

No comments:

Post a Comment