வெண்பா
அறிவீர் உலகினில் அன்பதனைக் காட்டப்
பொறியாம் விழியினைப் போலென்(று) - அறிவிப்பார்
கண்மணி என்றே களித்துரைப் பாரென்னில்
விண்வரை செல்லுமெம் பீடு (41)
கட்டளைக் கலித்துறை
பீடுடை என்றனைப் பேணிடும் செய்கை பெரியதன்று
நாடுள வெப்ப நிலைமை அறிந்து நலம்புனைந்து
மூடிய தேகம் முழுதும் குளிர்ச்சியை முன்படைப்பேன்
ஈடென மற்றோர் இருத்தல் பொதுப்பெயர் அவ்வளவே (42)
அகவல்
அவ்வள வெவ்வள வாகும்? எனக்குச்
செவ்வள வறியாச் செய்கை யுறவால்
துன்பமே மிஞ்சும் துணையாய்
இன்பமாய் மாற்றலை இனியான் பகர்வேன் (43)
விருத்தம்
பகரும் வாயெல்லாம் பாடட்டும் மெய்புகழே!
நுகரும் நாசியெலாம் நுகரட்டும் மெய்மணமே!
அகன்ற விழிசெவிகள் அருந்தட்டும் மெய்யேற்றம்!
இகத்தில் இவைதானே இன்பமிங்குப் புலன்கட்கே! (44)
வண்ண விருத்தம்
தனதான தய்யன தானனனா
தனதான தய்யன தானனனா
புலனாக மெய்யொடு கூடிடுவேன்
பொலிவான மெய்வழி யேவிழைவேன்
தலையாய செல்வமும் நானெனவே
சரியாக வள்ளுவம் பேசியதே
கலையாத கல்வியும் நாடிவரும்
கனிவாக நல்வழி கூறிவிடும்
நிலையாத இல்லற வாழ்வினிலே
நிறைவோடு நல்லற மேபுரிவேன்! (45)
வெண்பா
அறம்புரி வோரை அகமகிழ் வோடு
புறக்கணால் கண்டு புகழ்வர் - திறம்படக்
கண்ணிலையேல் ஆங்குக் களிப்பில் சிறுகுறையே
எண்ணினால் ஏற்கலாமெஞ் சீர் (46)
கட்டளைக் கலித்துறை
சீர்பெறும் மாலை நறுமணம் பெற்றால் சிலிர்ப்பதுவும்
போர்பெறும் ரத்த புலால்மணம் உற்றால் புளிப்பதுவும்
நேர்பெறும் என்றன் நிறையாற் றலில்தான் நினைவெனும்மா
ஊர்பெற் குற்ற உதவிகள் என்றன் உடைமைகளே (47)
அகவல்
உடைமை எதுவோ உண்மை வாய்மை
கடைமை நீக்கிக் கடமை போற்றிச்
செயற்கருஞ் செயற்குச் சொல்லாய்ப்
பயத்தல் யான்செய் பயனா கும்மே (48)
விருத்தம்
பயனிங் கென்னாற் பலவாங் கண்டீர்
பாரீர் செய்யும் வினையெல்லாம்
பயனாய் நிறையப் பலவாஞ் செயலும்
பண்ணு மென்றன் கரங்களதே!
பயணம் செல்லும் பாத மெனதே!
பயனும் பலநூ றதிலுண்டாம்!
வியக்கும் படியாய் விந்தை களெல்லாம்
விளைந்த தென்னாற் றானன்றோ? (49)
வண்ண விருத்தம்
தன்னா தானா தாத்தந்தா
தன்னா தானா தாத்தந்தா
என்னால் தானே கேட்கின்றீர்
என்னால் தானே பேச்சென்றீர்
நன்னா ளோடே பூக்கின்றீர்
நம்மோ டேதான் மூச்சென்றீர்
முன்னா லேபா ராட்டென்றால்
முன்னே றாதோ சாற்றுங்கள்
சொன்னே னேதோ சொற்கொண்டு
சும்மா யானே போற்றுங்கள்! (50)
No comments:
Post a Comment