Aug 22, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 8

வெண்பா
ஓடும் விழிப்பாவை ஒன்றதே வீழ்த்தாதோ
மாடு பிடிக்கும் மறவரை - ஆடும்
விழியழகில் வீழ்ந்தார் பலமன்னர் என்றே
மொழியாதோ முன்படைத்த நூல் (71)

கட்டளைக் கலித்துறை
நூலை அளக்கும் நெறியெனச் சான்றோர் நுவன்றிடுவார்
ஆளை அளக்கும் அருஞ்செயல் நானதை ஆற்றிடுவேன்
மேலில் மணக்கும் வியர்வையும் நாற்றமும் மேலறிந்து
நாளை அளக்கும் நயம்நான் படைப்பேன் நலம்நிறைத்தே (72)

அகவல்
நிறைவுறு நெஞ்சம் நெறிப்பட நிறுத்திக்
குறைவயி றுண்டு குடலைக் காக்கத்
தலைப்பட எண்ணின் தன்வாய் நாப்பல்
அலைபடல் நிறுத்தி ஆக்கிய சோற்றைப்
பகுத்துண்டு வாழ்தல் பண்பாம்
தொகுத்துண்டு வாழின் தீராப் பிணியே (73)

விருத்தம்
பிணியெப் புலன்றா னுற்றாலும்
  பேச்சில் கேட்பார் மெய்நோவா?
அணியெப் புலன்றா னுற்றாலும்
  அழைப்ப ததனை மெய்யழகே!
கணையை நோதல் தவறென்றும்
  கைவில் தனைச்சொல் வீரென்றும்
மணியாம் மொழியு முள்ளதுவே!
  மற்றவை கணையாம்! மெய்வில்லே! (74)

வண்ண விருத்தம்
தத்தன தனதன தனதானா
  தத்தன தனதன தனதானா

மற்றவர் பணியினை விடமேலாய்
  மட்டற உயர்பணி புரிவேனே
உற்றவ ருடனொலி வடிவாக
  ஒப்புர வொடுதரு செவியானே!
நற்றமி ழமுதினை நிதம்நாடும்
  நற்றவ முனிவரின் அருளாலே
பெற்றவ னிறைவனை மறவேனே
  பித்தென இசையினில் மலர்வேனே! (75)

வெண்பா
மலர்கின்ற கண்ணின்றி வஞ்சியெழில் எங்ஙன்
புலப்படும் ஆங்குப் புகல்வீர் - அலர்கின்ற
தாமரை யன்னமுகம் கண்டு திளைக்கையில்
ஏமம் பெருகல் இயல்பு (76)

கட்டளைக் கலித்துறை
இயல்பில் மகளிர் இழைகூந் தலதில் இருக்குமணம்
வியப்பாய் எழவே விரிஞன் புரிவிளை யாடலதில்
நயமாய் எழுவினா நானிலா தங்கு நடக்குமதோ?
மயலால் எழுந்து வளர்வினா என்றன் மகிழ்ச்சியதே (77)

அகவல்
மகிழும் வாழ்வாம் மனத்திற் காதலால்
நெகிழ்ந்த நேரம் மனைவியை வஞ்சப்
புகழ்ச்சியாய் ஒருசொல் புகன்றால் போதும்
வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டும்
மாயைப் பிடியில் மாட்டும்
நேய மன்றோ நீள்வாய்க் கொழுப்பே (78)

விருத்தம்
கொழுப்பைச் சேர்த்தால் கொழுத்திடுவேன்!
  குறியாய் நடந்தால் இளைத்திடுவேன்!
தொழுதற் காகப் பணிந்திடுவேன்!
  துடிப்பாய் விளையாட் டாடிடுவேன்!
விழுதாய்த் தொடருஞ் சந்ததியும்!
  மெய்களின் காத லதனாலே!
அழலேன் வீணே பிறபுலன்காள்?
  அண்ணன் சிறப்பில் பங்குறுவீர்! (79)

வண்ண விருத்தம்
தனத்தா தந்தன தாத்தனா
  தனத்தா தந்தன தாத்தனா

சிறப்பா யென்பணி யாற்றுவேன்
  சிரித்தே பண்பொடு போற்றுவேன்
குறட்பா வன்புட னூட்டுவேன்
  குறிப்பால் வென்றுளம் நாட்டுவேன்
அறத்தோ டின்பமும் மீட்டுவேன்
  அடுக்கா யின்சுவை கூட்டுவேன்
வெறுக்கு மன்பரை யாற்றுவேன் 
  விருப்பு டன்துயர் போக்குவேன்! (80)

No comments:

Post a Comment