போகுந் துயரிறையின் பொன்னடி போற்றுகையில்
ஆகும் திருவெல்லாம் அஃதறிவோம் - வாகாய்
விழியிரண் டுண்டாயின் வேத முதல்வன்
எழிலதும் கண்டுய்வோம் ஈண்டு (81)
கட்டளைக் கலித்துறை
ஈண்டொரு தெய்வத் திணையடி சேர்ந்தால் இறுகிடும்கண்
வேண்டிய தெல்லாம் விளம்பி விளம்பி வியந்திடும்வாய்
தூண்டிய வேர்வைத் துளியில் உடல்விழத் துள்ளும்செவி
ஆண்டிடும் தூப அமைதியில் ஆழ்தல் எனதுழைப்பே (82)
அகவல்
உழைப்பிரிந் துடன்சேர் நட்புப் போலத்
தழைத்த வாயின் தடங்கண் டோர்ந்து
சேரத் துன்பம் தேடி வாரா
என்னெனின் என்ன இல்லெனின் இல்லெனத்
தன்னள விருத்தும் தனிவாய்
பொன்னெனப் போற்றும் பொருள வாமே (83)
விருத்தம்
பொருளென்னுஞ் செல்வமது போனாற் கூடப்
பொருட்டாகக் கொள்ளாமல் மீள்வார் உண்டே!
இருளென்னும் நோயதனில் மெய்தான் வீழ்ந்தால்
இடர்ப்பாடு தான்கடத்தல் எளிதா காதே!
அருளென்னும் நெறிச்செல்வம் அதுபோ னாலோ
அத்தனையும் போனதுதான்! மீட்பே இல்லை!
கருமாலின் கருணையினை மெய்யாய்ப் போற்றிக்
கடைத்தேறல் நங்கடனே மெய்யாற் போற்றி! (84)
வண்ண விருத்தம்
தனத்தான தனன தனதானா
தனத்தான தனன தனதானா
கடைத்தேறும் வழியை உணர்வீரே
களிப்பான விசையில் நனைவீரே
மிடுக்கான செவியை அறியீரோ
விலக்காம லுணர முயல்வீரே
குடத்தோடு திறமை யொளியாமல்
குணத்தோடு வளர விடுவீரே
படித்தாலு மறிய முடியாத
படைத்தோனின் புகழை நினைவீரே! (85)
வெண்பா
நினைவினில் நிற்கும் கடந்தகால் ஓட்டம்
அனைத்தும் விழிகண்டால் அன்றோ - கனவெனினும்
காண்பதே இன்பமாம் கண்களின் சீர்பாட
வேண்டுமோ இன்னும் விரிப்பு (86)
கட்டளைக் கலித்துறை
விரித்துரை பேசிடும் வள்ளுவம் மூக்கின் விணையதனை
விருந்தின ரோடும் விளைகிற காதல் வியப்பினொடும்
பொருத்திடும் இன்னும் புகழுள தாமோ புவியுயிர்க்கு
மருந்தெனத் தன்னால் வளர்வதும் என்றன் மகத்துவமே (87)
அகவல்
மகத்துவம் அறிவாய் மன்னுஞ் செறிவாய்
அகத்துவக் கின்ற ஆற்றலும் கொள்ளும்
வாய்தான் காது வரையில் நீளப்
பேய்தான் என்று பெருமையும் உரைப்பார்
இடம்பொருள் ஏவல் இனிது பார்த்து
நடம்புரி வாயே நன்றாய்
வாழும் வாழும் வகையறி வீரே (88)
விருத்தம்
வகையாய்ப் பெருமை பலபேசும்
மற்ற புலன்காள்! நீங்களெலாம்
வகையாஞ் செய்கை ஒன்றிரண்டே
வழங்கு கின்றீர்! மெய்யெனிலோ
தகையும் கைகால் தோல்நரம்பு
தழைக்கும் இதயம் நீரகங்கள்
வகையாய்ப் பற்ப லுறுப்புகட்செய்
வகைபல செயலும் என்னுடைத்தே! (89)
வண்ண விருத்தம்
தனந்த தானா தனதானா
தனந்த தானா தனதானா
உடைந்து போவேன் செவிடானால்
உறைந்து நோவேன் புரியாமல்
குடைந்த தாலே பழுதானேன்
குமைந்து நானே தனியானேன்
முடிந்து போனா லொலியேது
முடங்க லாமோ வெனநானே
தொடர்ந்து கேளா நிலைமாறத்
தொடங்கு வேனே பணிநேரே! (90)
No comments:
Post a Comment