Aug 21, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 7

வெண்பா
மகிழுமோ உள்ளம் மணமொலியூண் பட்டென்(று)
அகன்ற விழியிலையேல் ஆங்குப் - பகிர்கின்ற
காட்சியை ஒட்டிக் களிப்பும் மிகுமன்றோ
மாட்சி வளக்கண்ணுக் கே (61)

கட்டளைக் கலித்துறை
கேட்பதும் பார்ப்பதும் கேடா யிருப்பினும் கீழுடல்மேல்
ஆட்படும் காற்றில் அழுக்கே இருப்பினும் ஆங்கவைதான்
நாட்பட நாட்பட நம்முள் பழகிடும் நானெனக்கோர்
ஊற்றமி லாவிடம் உற்றில் நகர்வேன் உதவியிதே (62)

அகவல்
உதவி வேண்டி ஒருவன் வந்தான்
சிதைக்கும் பசிப்பிணி தீர்க்க நாடிப்
பசிக்கிற தென்றன் பசியைப் போக்கப்
புசிக்க வென்னுள தென்றான் வாயால்
வாய்க்கா தவனின் வாயோ உரைத்தது
வாய்தா னுளது வந்தவனோ
நோய்தாக் காலே நொறுங்கி னானே (63)

விருத்தம்
நோய்தாக் காலும் பிறப்பினிலும்
  நொய்மை நல்கும் விபத்தினிலும்
போய்ச்சேர்ந் தாலோ பிறபுலன்கள்
  புழுவாய்த் துடிப்பார் வாடிடுவார்!
வாய்ப்பை எணிப்பின் மனந்தேறி
  வாழ்வார் மாற்றுத் திறனோடே!
போய்ச்சேர்ந் தாலோ பொன்னுடம்பு!
  போச்சுது! மாண்டார்! மீட்புண்டோ? (64)

வண்ண விருத்தம்
தந்தா தனத்தன தானதனா
  தந்தா தனத்தன தானதனா

உண்டோ எனக்கிணை மேனியிலே
  ஒன்றா யுழைப்பவர் வாழ்வினிலே
பண்பா யுயர்த்திட வேமுனைவேன்
  பந்தா யுருட்டிட வேநினையேன்
கண்டார் வருத்திய போதினிலும்
  கந்தா வெனப்புகழ் பாடிடுவேன்
நன்றா யிசைப்பவர் ரோடுறவாய்
  நன்றே வளத்துட னேயுறைவேன்! (65)

வெண்பா
வேண்டா தவரோ விருப்புக் குரியரோ
ஈண்டொரு பார்வை எடுத்துரைக்கும் - யாண்டும்
ஒருசொலு மின்றி உணர்த்தும் குறிப்பால்
புருவ முயர்த்தி விழி (66)

கட்டளைக் கலித்துறை
விழிக்கோர் உடைவின் விளியிலை ஆயினும் மூக்குடைந்தால்
பழிக்கோர் அடியெனப் பாரில் மனிதர் பதறிடுவார்
மொழிக்கோர் உளறல் செவிக்கோர் இடறல் திகழுடல
இழுக்கோர் அழிவாம் இழைவதென் மேலே இகழ்மணமே (67)

அகவல்
மணக்கும் மணக்கும் வாய்ம ணக்கும்
பிணக்கும் சுணக்கும் பிரிந்து வறக்கும்
செந்தமிழ்க் கதிரலை வேலனைச் சீரலைச்
செந்தூர்க் காரனைச் சேர்ந்தே
அந்தமில் ஆனந்தத் திருப்புகழ் பாடவே (68)

விருத்தம்
வேயாம் மெய்யென்னில் விதமாய் நவதுளைகள்
ஆய ரிளங்கோபன் அவன்கைக் குழலெனவே
மாயை யகன்றாங்கே மற்றோர் பிறப்பின்றித்
தோயு மிசையதனிற் றுலங்கித் திளைப்பேனே! (69)

வண்ண விருத்தம்
தனத்தா தய்யன தாத்தானா
  தனத்தா தய்யன தாத்தானா

திளைப்பேன் நல்லன கேட்டால்யான்
  திகைப்பே னல்லன கேட்டாலே
களைப்பால் மெல்லின நாற்றாவேன்
  கணக்காய் வல்லின ஊற்றாவேன்
வளைத்தே யள்ளிடு காற்றோடே
  மலைத்தே னுள்ளமு மீர்ப்பாலே
முளைத்தேன் செவ்விய பாட்டோடே
  முடிப்பேன் மெய்யதன் வீட்டோடே (70)

No comments:

Post a Comment