Aug 16, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 2

வெண்பா
வல்லான் எனைப்போல் வளவுலகில் யாருமிலை
எல்லாப் பொருளின் இயல்பையும் - வல்லதாய்க்
காட்டும் விழியென்னைக் கல்விக்(கு) உவமைசொலி
ஏட்டிலிடும் வள்ளுவம் இங்கு (11)

கட்டளைக் கலித்துறை
குறையுள தேகக் குறிப்பை உணர்த்தக் குழைந்திடுவேன்
நிறைவழி வாழ்ந்திட நிச்சய மூச்சை நிகழ்த்திடுவேன்
மறைபுகழ் யோக பிராணா யாம வழிக்குதவி
சிறப்புறு மென்போல் செயல்பட வல்லவர் செப்புமினே (12)

அகவல்
செப்புவீர் எதனால் செவ்வா யாலே
உப்பும் புளிப்பும் உள்ள பிறவும்
உணர வைப்ப(து) உறுவாய்
கணக்காய்க் கதுவாய் மெதுவாய் அரைக்குமே (13)

விருத்தம்
மேனிநான் பேச வந்தேன்!
மெய்யேதான் பேச வந்தேன்!
நானிலம் போற்றும் கண்வாய்
நாசியும் செவியும் வாழும்
மேனியின் பகுதி யன்றோ?
மெய்யின்றித் தனியே உண்டோ?
ஏனினும் வாதம் ஐயா!
எனக்கிணை யாருண் டிங்கே! (14)

வண்ண விருத்தம்
கேள்விக் குறியின் வடிவாவேன்
கேள்விக் குரிய புலனாவேன்
வேள்விக் கடலி னிசையோடே
வேர்விட் டொழுகு மொலியாவேன்
நீள்வட் டமொடு செவியானும்
நேர்வெற் றியதன் விளைவாக
தோள்முட் டியசை யணிபோலும்
தோல்விக் குவிடை தருவேனே (15)

வெண்பா
தருவேன் தளிர்மகிழ்வும் மனத்திற்கு நாளும்
உருக்காட்டி மேலுமும் உள்ளத்(து) - இருக்கின்ற
துன்பத்தை நீரூற்றித் தோன்றச்செய் வேனன்றோ
என்பங்கிங் கெப்போதும் உண்டு (16)

கட்டளைக் கலித்துறை
உண்டெனக் குள்ளே உருசிறு ரோம உயர்படைகள்
கண்டவை உள்ளே கடவா வணமவை காத்திருக்கும்
கொண்டுள வாழ்வின் குறியாய்க் கசட்டின் குணம்துலக்கி
அண்டுதல் நீக்கும் அறிவினில் யாருளர் ஈடெனக்கே (17)

அகவல்
எனக்கா இந்த ஊன்பொதி அடிசில்
நினைத்த போதே நீரூறும் வாயில்
உள்ளம் உள்ளிய உணவைக்
கள்ள மின்றிக் களித்துண் பேனே (18)

விருத்தம்
உண்ணுஞ் சோறும் உவக்கும்பற் காட்சிகளைக்
கண்ணின் வழியும் காதருந்தும் தேனிசையும்
நுண்ணி நாசி நுகரும்பல் நல்மணமும்
எண்ணிப் பார்த்தால் ஏகுமின்ப மெனக்காமே! (19)

வண்ண விருத்தம்
தந்த தனந்த தனத்தானா
தந்த தனந்த தனத்தானா

இன்ப விருந்து படைப்பேனே
என்று முணர்ந்த தளிப்பேனே
வென்று நிமிர்ந்து களிப்பேனே
விந்தை யறிந்து வியப்பேனே
அன்பி லொளிர்ந்து மிடுக்காக
ஐந்து புலன்க ளடுக்கோடே
நின்று விரிந்த உறுப்பாவேன் 
நெஞ்சம் மலர்ந்து சிறப்போடே! (20)

No comments:

Post a Comment