Aug 20, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 6

வெண்பா
போற்றலாம் மற்ற புலன்களையும் என்றாலும்
ஆற்றலில் மிக்கவர் யாமென்றே - ஏற்பீர்
இறையைத் தொழுபவர் இன்னருள் பார்வை
குறைவின்றிக் கோருவதைக் கொண்டு (51)

கட்டளைக் கலித்துறை
கொண்டுள கோபக் குறிப்பை உணர்த்திடக் கூறுவதென்?
அண்டிட வேண்டா அவருக்கு மூக்கில் அனல்கொதிக்கும்
மண்டிடும் கோபி யெனும்பத மன்றோ? வளர்சினமும்
பண்டுள வீரம் படைத்தவன் தந்த பலம்,புகழே (52)

அகவல்
புகழைப் புகலும் புலனாம் வாய்த்தமை
அகழ்ந்த சொல்லால் அளந்து சொல்வேன்
முனையும் எந்நா முயற்சிப் பிறப்பால்
வனையும் சொல்லே வாய்க்கும்
படியே ஒலிக்கும் படைப்புக் குரியனே (53)

விருத்தம்
படைப்புக் கிறைவன் பண்ணிய தென்னுரு!
விடையி லமர்வான் வீட்டுவ தென்னுரு!
நடையி லுயர்மால் நாட்டுவ தென்னுயிர்!
விடைவே றுண்டோ? வெல்புலன் மெய்யதே! (54)

வண்ண விருத்தம்
தய்யா தனன தனதனனா
  தய்யா தனன தனதனனா

மெய்யா மிறைவன் மலரடியை
  மெய்யா யுருகி வழிபடவே
செய்வே னமுத இசையுடனே
  செல்வே னொலியின் வடிவினிலே
பொய்யா துவர மருள்பவனால்
  பொல்லா தமன நிறைவுறுவேன்
மெய்யோ டுழலு மினியவனாய்
  வெல்வே னுலகு செவியெனும்நான்! (55)

வெண்பா
நாணமோ நல்லறச் சீற்றமோ நெஞ்செழும்
மாணமோ வல்ல கருணையோ - வீணதாய்ச்
சொல்லெடுக்க வேண்டா துணையாய் விழிகளே
நல்லமுறை காட்டும் நடித்து! (56)

கட்டளைக் கலித்துறை
நடித்திடும் கண்கள் நலமிலாப் பொய்வாய் நயந்துரைக்கும்
நொடிந்திடும் மேனி நெறியிலாக் காதுகள் நோக்கிழக்கும்
துடித்திடும் நல்லிறை தோதாய் வளர தொடர்ந்திருந்தே
அடிப்பினும் பொய்யாம் அழுக்கறி யாநான் அரியவனே (57)

அகவல்
அரியவன் யானே அறிய உரைப்பேன்
அரிசியை உண்ணும் அருஞ்சொல் பேசும்
வழியா கும்மே வாயென் றாலே
விழியா செவியா மெய்யா கும்மா
மூக்கா கும்மா முனைந்தும்
தாக்கா தீரும் கணைச்சொல் லாலே (58)

விருத்தம்
சொல்லுக்கு வேராகும் மொழியே கண்டீர்!
  சொற்கொள்ளுஞ் சிறப்பெல்லாம் மொழியைச் சேரும்!
நல்லானொன் றீகின்றா னென்றா லந்த
  நல்லமனம் வாழ்த்திடுவோம்! கரத்தை அன்றே!
சொல்லுவதைக் கேளுங்கள்! அதுபோற் றானே
  சொல்லுகின்ற பிறபுலனின் சிறப்பெல் லாமும்
எல்லாமுஞ் சேர்ந்திருக்கும் மெய்யைச் சேரும்!
  ஏதுபுகல் மெய்யில்லை என்றால் இங்கே? (59)

வண்ண விருத்தம்
தந்தா தனதன தனதனன
  தந்தா தனதன தனதனன

இங்கே கவிமழை பொழிகிறது
  இன்றோ புயலென விரிகிறது
அங்கே வருபவ ரெவரெனினும்
  அன்பா லுளமது நனைகிறது
செங்கோ லொடுதமி ழுலகமதில்
  செண்டாய் மணமது நிறைகிறது
இங்கே செவியென தொலிபரவ
  எங்கோ வொருமனம் மகிழ்கிறது! (60)

No comments:

Post a Comment